Nov 15, 2018

திருநிலைப் பெரியாண்டவர் திருப்பதிகம்

மன்னை வெங்கடேசன்

புவியில் அரக்கர் புரிந்தபற் றொல்லை பொசுக்கவெண்ணி
அவனியைக் காத்திட ஆவல்கொண் டோர்பெரி யாண்டவனே
இவிடத்து வந்தாய் எளியோர் மனம்புகும் எம்மிறையே
தவிக்கும் எனக்குத் தருவாய் உனதருள் தண்ணிழலே!        1

நிழலை மறந்து நெருப்பெனும் பாவம் நிறையவேசெய்(து)
அழுமோர் அடியேன் அணுகினன் என்பெரி யாண்டவனே
மழலையின் குற்றத்தை மன்னிக்கும் தாயாய் மனமிறங்கிக்
கழலிணை காட்டிக் கடுந்துயர் போக்கிநீ கண்டுகொள்ளே!     2

கண்டதைக் கற்றுக் கசடனாய் ஆகிக் களையடியேன்
அண்டமே போற்றும் அரன்மறந் தேன்பெரி யாண்டவனே
பிண்டமாம் என்னைப் பிறவித் துயரெனும் பேரிடர்தான்
அண்டகில் லாதே அருடரு வாயே அருமருந்தே!                          3

மருந்தென வான வருக்காக அற்றைநாள் மாவிடத்தை
அருந்தினை ஆலம் அமர்ந்தவா அம்பெரி யாண்டவனே
துரும்பினும் கீழாய்த் துளியும் பயனிலாத் தொண்டனெனை
விரும்பி வருவாயோ மேன்மைக் கழல்கொண்ட விண்ணவனே!          4

வன்கொடும் பாவம் மலிந்து செயல்செய்தே மானிடனாய்
அன்பிலா னாயிவண் ஆழ்ந்தொழிந் தேன்பெரி யாண்டவனே
நன்றெனத் தொண்டரை நாடி யருள்செய் நனிமனத்தாய்
என்குணம் மாற்றி எனக்கருள் செய்வாய் இறையவனே!               5

இறையவன் உன்னை இமியும் நினையா இழிபிறவி
அறமறி யாத அடியேனுக் காய்ப்பெரி யாண்டவனே
திறப்பாய் உனது திருவருள் நெஞ்சைச் சிறுவனுக்குப்
பிறப்பிலா வாறு பெருவரம் தந்தால் பிழைப்பனிங்கே!                  6

இங்கிவ் வுலகில் இருக்கும் பொருள்மேல் இணக்கமுற்றேன்
அங்கிங் கெனாதவா றெங்கும் உளபெரி யாண்டவனே
தங்கம் தவிர்த்துத் தகரம் விரும்பும் தரமிலேனை
அங்கையை நீட்டி அரவணைப் பாயெனில் ஆறுதலே!         7

ஆறு தலையில் அரவம் கழுத்தில் அணிசெயவே
ஆறு தலையோன் அருந்தந்தை யேபெரி யாண்டவனே
மாறுதல் இல்லாது மண்மேல் பிறவி மரணமெனும்
சேறெனைச் சேராச் சிறப்பைத் தருவாய் செழுமணியே!     8

மணியே உடையே வளச்செல் வமேயென்று மண்ணுலகில்
அணியே விரும்பி அயர்வடைந் தேன்பெரி யாண்டவனே
பிணியாம் பிறவி பெறாதுன் னடியாம் பெருவுலகை
இனியேனும் என்றனுக் கீவாயோ தேவர்க் கிறைதிருவே!            9

திருநிலை பாலுறை தேவனே உன்றன் திருவடியின்
அருமை அறியா அரும்பாவத் தேன்பெரி யாண்டவனே
ஒருகதி யில்லா(து) உனையடைந் தேன்யான் உலகிலினிக்
கருப்புகா வாறெனைக் காத்தருள் என்று கதித்தனனே!              10

                 நூற்பயன்:

கதித்தேன் உனையே கடவுளே என்று கதறியவா(று)
உதித்த பதிகம் உளமாறக் கொண்டே உமையவளின்
பதியாம் திருநிலை பால்பெரி யாண்டவன் பாதமதை
நிதியாய்க் கொளுவோர் நிலையான வாழ்வினில் நீந்துவரே
                            ★★★

No comments:

Post a Comment