May 16, 2021

ஆசிரியர் நன்னாள்

பாவலர் தங்கமணி சுகுமாரன் 
(கட்டளைக் கலித்துறை)

நல்லுல கத்தினை நன்னெறி தன்னில் நடத்துவதும்
புல்லறி வாளனின் புத்தியைத் தீட்டிப் புதுக்குவதும்
சொல்லறி விப்பதும் நல்லறி விப்பதும் தொண்டெனவே
அல்லும் பகலும் அமைத்துக் கொளுதல் அவரறமே

பெற்றதும் பெற்றோர் பெருங்கடன் யாவும் பெரிதுடனே
முற்றின அத்துடன் முப்பொழு தும்தம் முயற்சியிலே
கற்றவர் ஆக்கக் கடமையை ஆற்றும் கருத்தமைந்தோர்
கொற்றம் புகழ்ந்து குவிவோம் கரங்களைக் கும்பிடவே

பிரம்பினைக் கையில் பிடித்துநல் மாணவப் பிஞ்சுகளைக்
கரம்பிடித் தேதங்கள் கண்மணி போலவே காத்திருந்து
வரம்போடு தங்களை வார்த்தறி வூட்டிதன் வாழ்க்கையிலே
வரம்தரு தெய்வங்கள் மண்மிசை ஆசானை வாழ்த்துதுமே

No comments:

Post a Comment