'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 23, 2023

சோலைக் கவியரங்கம் 2023

 நான் ஏணி பேசுகிறேன் - கவிதை

பைந்தமிழ்ச்சோலையின் ஆண்டுவிழாக் கவியரங்கில் வாசித்த எனது கவிதை.

சேலையின் உறவுகளின் பார்வைக்கும் கருத்துக்கும்.

------------++++++++++---------------++++++++++++

தமிழ்த்தாய் வாழ்த்து

குன்றா இளமையும்  கோணாச் செழுமையுங் கொண்டவளைத்

தின்றா லெமக்குத் திகட்டாத் தமிழின் திருவணங்கை

நன்றா யெனக்கு நயந்தரு பாடல் நவிலவேண்டி

மன்றா டியுந்தன் மலர்ப்பதம் போற்றி வணங்கினேனே!


தலைமைக் கவிஞர் வணக்கம் - கவிமாாணி சேலம் பாலன்

குவையினிற் குவித்த பொன்னாய்க்

    குழுமிய கவிகட் கெல்லாம்

இவையிவை உகந்த(து) என்று 

     எடுத்தெமக்(கு)  அளித்த அன்னல்

சுவைமிகு சேலத்து மாவின்

     சோலையில் பழுத்த பாலன்

அவையினைத் தலைமை தாங்க

    அவரது அடியைத் தாழ்ந்தேன்.

       

அவை வணக்கம்

பைந்தமிழ் மணக்குஞ் சோலை

   பழக்கிய கவிகள் எல்லாம்

செந்தமிழ் மணக்கும் பாடல் 

     சிறப்புற வடிக்கும் வண்மை

அந்தியில் அருந்திப் போக

     அழைப்பினை ஏற்று இங்கு

வந்தவர் மலரடி போற்றி

    வணங்கினேன் துணிந்து பாட.


   கவியரங்கக் கவிதை

நான் ஏணி பேசுகிறேன்

1.பொருள்நிறை பதவி யென்று

     புகழினை அடைந்த பின்னர் 

பொருட்டென  மதியா(து)  ஓரப்

    புழுதியில் எறிந்த மாந்தர்

கருனையின் திறத்தை எண்ணிக் 

      கவலையின் கடலில் மூழ்கி 

இருட்டினிற் கிடந்த ஏணி

    இயம்பிய கதையைக் கேளும் 


2.கருவினிற் தொடங்கி உன்னைக்

     கவனமாய்ப் பெரியோன் ஆக்கி

உருகிய மெழுகாய்த் தம்மை 

     உகந்ததை மறந்து பிள்ளை

பெருநிலை அடைந்த பின்னர்

    பெற்றவர் என்னும் இந்தத் 

தெருவினில்  எறிந்த ஏணி

      செப்பிய கதையைக் கேளும்


3.பேசிய பசப்புப் பேச்சுப்

       பெறும்பயன் அடைந்தாற் போச்சு!

கூசிய மனத்தை விட்டுக்

    குறைமிகு  ஆசான் என்று

வேசியர் பொருளைக் கண்டு

    வேற்றிடம் அடைதல் போல

வீசிய ஏணி இன்று

     வெதும்பிய விதத்தைப் பாரும் 


4.கதுப்பினிற் காலம் எல்லாங்

    கடினமாய்ப் பாடு பட்டுப்

பொதுப்பட வாழ்ந்து கெட்டுப்

    போலியாய் வாழாச் சொந்தம்  

சதுப்பினில் வீந்து சற்றுத்

    தன்னிலை தளர வாழ்வில் 

ஒதுக்கிய உறவின் ஏணி

    ஓதிய கதையைக் கேளும் 


5.தொட்டிலிற் தவழ்ந்த காலந்

        தொட்டது நட்பு என்பர்

சட்டியில் ஒன்றாய் உண்டு 

     சகலதும் பகிர்ந்த தென்பர்

கட்டிய மனைவி சொல்லக்

      கனவெனக் கலைந்து சென்ற

நட்பெனும் நல்ல ஏணி

         நவின்றநற் கதையைக்  கேளும் 


6.கற்பவர் ஆசான் என்பர்

       கல்வியைக் கற்கும் மட்டும்!

பெற்றவர் தன்னைக் கூடப்

      பேணிடப் பொருளைக் கேட்பர் !

உற்றவர் அயலார் என்பர்

      உதவிகள் செய்யும் மட்டும்!

சுற்றமும்  சூழ நிற்கும் 

    சொத்துடன் வாழும் போதே!


7.பற்றுவர் பணிந்து போற்றிப் 

     பலமொழி புகழ்ந்து பேசி

வெற்றியை அடைவர்! பின்னர்

      வேண்டிய(து)  இல்லை என்றால் 

எற்றுவர்! உதைப்பர்! காறி

     எச்சிலை உமிழ்வர்! நஞ்சைச்

சொற்களில் அள்ளி வீசிச்

      சுயநலப் புலியாய் வாழ்வர்!

  

8.எற்றுவர் என்று எந்த

     எழுத்தையும் மறைத்த(து) இல்லை

கற்றவை பயிலக் கூடிக்

     கைவரப் பெற்ற வித்தை

முற்றிய நுட்பம் என்று

     முழுவதுங் கூட்டி என்னை

விற்பனைப் பொருளாய் வாங்க

      வெகுமதி உலகில் உண்டோ?


9.ஏறிய ஏணி கூட

      இலக்கினை அடையத் தானே!

ஏறிய பின்னால் யாரும் 

      ஏத்தித் தொழுதார் உண்டோ?

ஏறிய பின்னர்க் காலால் 

     எற்றுவர் என்று பாதி

ஏறிய வழியிற் கீழே

      இறக்கிய கதைதான் உண்டோ?


10.சொந்தமாய் என்ன கொண்டாய்?

      சுயம்புவாய்ப் பூமி தன்னில் 

 வந்தவர் யாரும் உண்டோ?

       வாழ்ந்தவர் எவரும் உண்டோ?

வெந்தணல் வேகும் போதும் 

       வெட்டியான் வேண்டுங் கேளீர்!

  வந்தநம் வழியைப் போற்றி

     வாழ்வினை வாழ்தல் நன்றே!

ச.குகநாதன்

அகநானூறு களிற்றியானைநிரை பாடல் 2

 காணொலியைக் காண இழையைச் சொடுக்குக

https://youtu.be/7mlMRg4HFG8?si=owLi0QCgvqR7fu_C