'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 23, 2019

நடுப்பக்க நயம்

பாவலர் மா.வரதராசன்

கம்பன் கவிநயம்! -4

வாலிவதை நல்வழியா? அல்வழியா?

கம்பராமாயணத்தில் மிகவும் புகழ்பெற்ற விவாதம். வாலியை இராமன் மறைந்து நின்று கொன்றது சரியான முறையா? தவறான முறையா?

பலரும் அது தர்மத்தின்பாற்பட்டதே என்பர். ஏறத்தாழ இராமன் செய்தது சரியே என்பதற்குப் பல காரணங்களை அடுக்குவர். அவன் கடவுளாயிற்றே!

சிலர் அதர்மமே என்பர். ஆனால் அதை நிறுவ ஏதேனும் சான்று கேட்டால் அவரிடம் இருக்காது. 

இப்போது நாம் விளக்கத்திற்குப் போகலாமா.!?

இல்லறம் துறந்த நம்பி      
    எம்மனோர்க் காகத் தங்கள்
வில்லறம் துறந்த வீரன் 
    தோன்றலால் வேத நன்னூல்
சொல்லறம் துறந்தி லாத 
    சூரியன் மரபும் தொல்லை
நல்லறம் துறந்த(து) என்னா 
    நகைவர நாணுக் கொண்டான்"
(கிட்; வாலிவதைப் படலம் : 76 : 1-2) 

தன் தந்தை காட்டுக்குப் போகச் சொன்ன காரணத்தால், தனது இல்லற தர்மத்தைத் துறந்து தவ வாழ்க்கையை மேற்கொண்ட  இராமன்,  குரங்கு இனத்தவராகிய எமக்காக, விற்போருக்கு என்று அமைந்துள்ள தர்மத்தைக் கைவிட்டு மறைந்து நின்று எம்மீது அம்பு எய்த வந்து பிறந்த காரணத்தால், பெருமைக்குரிய சூரிய குலமும் தனது நல்லறத்தைத் துறந்து விட்டதே என்றெண்ணி ஏளனமாக நகைத்த வாலி, எப்பேர்ப்பட்ட இராமன் தனது குலப் பெருமையையும், தனது விற்போர் தர்மத்தையும் குரங்கினத்தானாகிய தனக்காகக் கைவிட்டான் என்பதை நினைத்து வெட்கப்பட்டான்.

தேவியைப் பிரிந்த பின்னைத் 
   திகைத்தனை போலுஞ் செய்கை 
(கிட் ; வாலிவதைப்படலம் :78 :4) என்றும்.

வலியவர் மெலிவு செய்தாற் 
   புகழன்றி வுசையு முண்டோ 
(கிட் ; வாலிவதைப்படலம் : 80 : 4)

என்றெல்லாம் சரமாரியாகக் கேள்விக் கணைகளால் துளைக்கிறான் வாலி.

அதற்கு இராமனோ, தன் செயலைச் சரியெனக் காட்டுதற்குக் காரணங்களைக் கூறுகிறான்.

"தவறு செய்யாத தம்பியைத் தண்டித்தது, உன்னையே அடைக்கலமென்று அடைந்தவனைக் கொல்ல முயன்றது, அறத்துக்குப் புறம்பாக உன் தம்பியின் மனைவியைக் கவர்ந்தது ஆகிய காரணங்களாலும், சுக்ரீவன் எனது உயிருக்கு உயிரான நண்பன் என்பதாலும், நான் உன்னைப் பயிருக்கு இடையே வளரும் களையை எடுப்பது போல எடுத்தொழித்தேன்" என்றெல்லாம் வாலி செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி இராமன் பேசுகிறான்.

வாலி இவற்றை மறுத்து, "எங்களுக்கு மனம் போனபடி வாழ்கின்ற முறையும், குணமும் அமைந்தன. வேத நெறியும், கற்பு நிலையும் வானரர்களுக்குக் கிடையாது.  எனவே எங்கள் பிறப்புக்குரிய தன்மைகளின்படி, நான் யாதொரு குற்றமும் செய்தவனல்லேன். இதை நீ புரிந்து கொள்ள வேண்டும்" என்று வாலி கூறினான்.

வாலியின் இந்த பதிலைக் கேட்டு இராமன் கூறுகிறான், "வாலி! நீ தேவர்களைப் போல பிறந்து, அறங்களையும், சாத்திரங்களையும் நன்கு கற்று, நீதிகளை உணர்ந்தவன். ஆதலின் உன்னை மிருக இனமாகக் கருத முடியாது." என்று சமாளிக்கும் இராமனை நோக்கி இறுதியாக, இராமனை ஊமையாக்கும் கணையைத் தொடுக்கிறான் வாலி.

"நீ கூறிய அனைத்தும் உண்மையே ஆகட்டும். ஆனால் போர்க்களத்தில் நேருக்குநேர் நின்று போரிட வராமல், காட்டில் விலங்குகளை மறைந்து நின்று கொல்லும் வேடனைப் போல என்மேல் ஒளிந்து நின்று அம்பு எய்தது என்ன நியாயம்? சொல்!" என்றான்.

இதற்கு இராமன் பதில் சொல்லவில்லை, இளவல் இலக்குவன் இடையில் புகுந்து பதில் கூறுகிறான்: "முதலில் உன் தம்பி சுக்ரீவன் வந்து இராமனிடம் சரணாகதி என்று அடைக்கலம் புகுந்தான். முறைதவறி நடந்து கொண்ட உன்னைக் கொல்வேன் என்று சுக்ரீவனிடம் இராமபிரான் வாக்குக் கொடுத்தார். தீமைகளை அழித்து அறத்தை நிலைநாட்டவே இராமன் உறுதி பூண்டவர் என்பதும், அறத்துக்குப் புறம்பான எதையும் அவர் செய்யமாட்டார் என்பதையும் அடைக்கலம் என்று வந்தவரைக் காப்பதே தனது தலையாய கடனாகக் கொண்டவர் என்பதையும் நீ உணர்ந்து கொள்ள வேண்டும். உன்னோடு நேருக்குநேர் நின்று போர் செய்ய இராமன் வந்தால், நீயும் இராமனிடம் சரணடைந்து விட்டால், தனது வாக்குறுதியி லிருந்து மாறுபட நேருமென்பதால், சுக்ரீவனுக் களித்த வாக்குறுதிப்படி உன்னை மறைந்திருந்து கொன்றார்" என்றான்.

இறுதியில் வாலி ஒருவாறாக மனம் அமைதியடைகிறான். . 

"தாயென உயிர்க்கு நல்கி 
   தருமமும் தகவும் சார்வும்
நீயென நின்ற நம்ப 
   நெறியினில் நோக்கும் நேர்மை
நாயென நின்ற எம்பால் 
   நவைஉறல் உணர லாமே
தீயன பொறுத்தி என்றான் 
   சிறியன சிந்தி யாதான்".
★★★

இதுவரையே அனைவரும் வாலிவதம் பற்றிய கருத்து எல்லைக்குள் நிற்பர். சிக்கலான இவ்விவாதத்தை ஒருசார்புடைத்தாய் ‘இராமன் செய்தது சரியே’ என்றும்,  கம்பரையும் ஒருசார்புடைத்தவராய்க் காட்டுவர்.

ஆனால், உண்மையிலேயே கம்பருக்கு அப்படிப்பட்ட உள்ளமில்லை. இராமன் செய்தது மிகப்பெருந்தவறு என்பதே கம்பரின் உள்ளம். 

உலகத்தார் என்னென்ன ஐயங்களை எழுப்புவர்? என்று எண்ணியெண்ணிப் பார்த்துத் தன் பனுவலை நகர்த்திய கம்பருக்கு, இராமனை நல்லவனாக்கி அவன் செய்த செயலைச் சரியென்று நிறுவி நடுவுநிலை தவறும் எண்ணம் இல்லாததால், இராமன் வாயாலேயே 'தான் செய்தது தவறு, அறமற்ற செயல்' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வைக்கிறார்.

ஆம். குற்றவாளியே தன் குற்றத்தை ஒப்புக் கொண்டால் தீர்ப்பு எவ்வாறு அமையும்? குற்றம் செய்தவன் குற்றவாளியென்றுதானே தீர்ப்பு அமையும்? 

இதோ அந்தக் காட்சி.

வாலிவதம் முடிந்தபிறகு சுக்ரீவனுக்கு முடிசூட்டியும் முடிந்தபின், "இராமா!  இன்னும் சிலகாலம் கிட்கிந்தையில் தங்கிச் செல்ல வேண்டுகிறேன்" என்கிறான் சுக்ரீவன். 

அப்போது இராமன் அவனுடைய வேண்டுகோளை மறுத்து அதற்கான காரணத்தைக் கூறுகிறான். ஆம். ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறான். பாருங்கள் அந்தப் பாடலை!

★ (ஏனோ தெரியவில்லை, இலக்கிய வல்லார்கள் எவருடைய பார்வைக்கும் இந்தப் பாடல் தெரியாமல் போனது வியப்புதான்!  நான் சொல்லவேண்டும் என்று இதுநாள் வரை இருந்ததோ? )★

இல்லறம் துறந்தி லாதோர்
   இயற்கையை இழந்தும், போரின்
வில்லறம் துறந்தும் வாழ்வேற்(கு)
   இன்னன மேன்மை இல்லாச்
சில்லறம்; புரிந்து நின்ற
   தீமைகள் தீரு மாறு
நல்லறம் தொடர்ந்த நோன்பின்
   நவையற நோற்பல் நாளும்”
(வாலி.வதை.  4137)

“இல்லறத்தைத் துறக்கக் கூடாத இயல்பான நிலையை இழந்தும் (இல்லறத்தை நீங்கியும்), போரில் மீறக் கூடாத வில்லறத்தைத் துறந்தும் (வாலியை மறைந்துநின்று கொன்றது), வாழ்விற்கு 'இவையிவை’ மேன்மையெனச் சொல்லப்பட்ட எவையும் செய்யாமல் சிறுமைபூண்டும், நானிழைத்த தீமைகளெல்லாம் தீர்ந்தொழிய வேண்டி நன்மை தரக்கூடிய நோன்பு நோற்கப் போகிறேன். எனவே, நான் இங்குத் தங்கவியலாது”. இதுதான் இராமன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்.

"போரில் தான்செய்தது அறமற்ற செயல்,  அந்தப் பாவம் தீரத் தவம் செய்யப்போகிறேன்" என்று "அறமே வடிவான இராமனே ஒப்புக்கொண்ட பிறகு நாம் என்ன முடிவுக்கு வருவது?

நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே!
★★★

கூடுதல் விளக்கம்
***********************
விசுவாமித்திர முனிவா், தாடகையைக் கொல்லுமாறு ஆணையிட்டபோது, இராமன் தயங்குகிறான். முதன்முதலில் ஒரு பெண்ணைக் கொல்வதா என்று நினைக்கிறான். தாடகை அரக்கியானாலும், அவள் ஒரு பெண்தானே?  என்ற எண்ணமே அவன் மனத்தில் ஓடுகிறது. முனிவாின் வற்புறுத்தல் காரணமாகவே அவளை, இராமன் கொல்கிறான். இதைக்கூட வில்லறம் துறந்த செயலாக இராமன் கருதியிருக்கக் கூடுமல்லவா? என்ற ஐயம் சிலருக்கு ஏற்படலாம்.

ஆம். நல்ல  ஐயம். தாடகையைக் கொல்ல இராமன் தயங்குகிறான். உண்மைதான். அவள் ஒருபெண் என்பது அதற்குக் காரணமே. ஆனால் முனிவரின் விளக்கத்தை ஏற்கும் இராமன் அவளைக் கொல்கிறான். எப்படி?

பாறையைப் போன்ற வைரம்போல் இறுகிய உடலைக் கொண்ட கொடிய அரக்கியாம் தாடகையில் மார்பில் பாய்ந்த அம்பு, கல்லாதவர் உள்ளத்தில் நில்லாத அறிவுரையைப் போல் அவளுடைய மார்பில் குத்தி நில்லாமல் துளைத்துக்கொண்டு மறுபக்கம் சென்றதாம்.  அவ்வாறாயின் எத்துணை வேகத்துடன், வலிவுடன் இராமன் கணையைச் செலுத்தியிருக்க வேண்டும்? தயக்கத்தை ஓட்டியபின் இராமனின் உள்ளத்தில் எந்தச் சலனமுமில்லை. எந்தத் தயக்க உணர்வும் குற்றவுணர்வுமில்லை என்று காட்டும் காட்சியிது.

அவன் தாடகையை வீழ்த்தியபின் தேவர்கள் பூமாரி பொழிந்து வாழ்த்துரைக்கிறார்கள்.

யாமுமெம் மிருக்கை பெற்றோம் 
   உனக்கிடை யூறு மில்லை

என்று முனிவரையும் இராமனை வாழ்த்துகிறார்கள். 
***
வில்லறம் எனில் வீரத்தைக் குறிக்கும்.  வீரமெனில் எதிரெதிர் நின்று போரிடலாகும். தாடகைப் போரில் இராமன் செய்தது போர். (காகுத்தன் கன்னிப்போர்)

ஆனால், வாலியிடம் செய்தது சூழ்ச்சி. எதிர்நில்லாமல், வில்லறத்தை நீக்கி மறைந்துநின்று அம்பெய்தியது வில்லறம் பிழைத்தலாம். 
***
தாடகையின் வதம் சிறப்பான இடம் பெற்றதாலன்றோ விசுவிமித்திரரையே கவர்ந்தது அந்தப் போர். அதுவும் எங்கே? அகலிகைப் படலத்தில்.

இராமனின் கால்பட்டு அகலிகை உரூக்கொண்டெழுந்ததும் விசுவாமித்திரர்  இராமனின் மாண்பை வியந்து,

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
    இனியிந்த வுலகுக் கெல்லாம் 
. . . . .
கைவண்ணம் அங்குக் கண்டேன்
   கால்வண்ணம் இங்குக் கண்டேன்.

என்று தாடகையை அழித்த செயலைக் 'கையின் ஆற்றலாகக்' காட்டுவார் கம்பர்.

தாடகையுடன் இராமன் நிகழ்த்தியது போர் என்கிறார் கம்பர். அது இராமனின் கன்னிப்போராம்.

வாசநாள் மலரோன் அன்ன 
   மாமுனி பணி மறாத,
காசுலாம் கனகப் பைம்பூண், 
   காகுத்தன் கன்னிப் போரில்,
கூசிவாள் அரக்கர் தங்கள் 
   குலத்(து)உயிர் குடிக்க அஞ்சி,
ஆசையால் உழலும் கூற்றும், 
   சுவைசிறி தறிந்த தன்றே. 

உயிரைக் குடிக்கும் கூற்றுவனும் அந்தப் போரினால் சிறிதளவு உயிரைக் குடித்துச் சுவை பார்த்தானாம். எப்பேர்ப்பட்ட அரக்கி. அவள் உயிரைக் கொன்றதே சிற்றளவுதானாம்.  

இங்குக்  'கன்னிப்போர்' என்று வாழ்த்தும் கம்பர், வாலி வதையை அவ்வாறு வாழ்த்தாமல், இராமன் செய்தது பெருங்குற்றமே என்ற மனவோட்டத்தாலேதான்.  . 

இல்லறந் துறந்தி லாதோர்.
..... 
 . . .. . புரிந்து நின்ற 
தீமைகள் தீரு மாறு. . .

என்று குறிப்பிடுகிறார்.

எனவே, வில்லறம் துறந்தும் என்று ஈண்டு குறித்தது வாலி வதையே. என்று நன்குணரலாம்.

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8


கவியரங்க நிறைவு கவிதை
தமிழகழ்வன் சுப்பிரமணி
வாழ்த்து
அன்பால் உலகம் மகிழ்வெய்த
... ஆளும் தலைமை சிறப்பெய்த
 
இன்பம் சூழத் துயர்தீர
 
... எண்ணி எண்ணிக் கவிசெய்த
 
நன்ன யங்கொள் நங்கவிஞர்
 
... நாளும் சிறக்க வாழ்த்துவமே!
இன்ன ருங்க னிச்சோலை
 
... என்றும் வாழ வாழ்த்துவமே!

இப்படித்தான் விடியும்.

விடியல் என்றால் என்ன?
... விடையாய் வருவ தென்ன?
விடுக்க வேண்டுவ தென்ன?
... வீடு பேறும் என்ன?
விடியும் நிலையொன் றுண்டு
 
... விடியா நிலையும் உண்டு
 
விடையைத் தேடிப் போவோம்
 
... விடியல் கண்டு வாழ்வோம்

துன்பநிலை கடப்பதுவே விடியல் ஆகும்
... துன்பநிலை துடைப்பதுவே விடியல் ஆகும்
 
அன்புவழி ஆளுவதே விடியல் ஆகும்
 
... ஆசைகளை விடுப்பதுவே விடியல் ஆகும்
சென்றநிலை நின்றநிலை தேர்ந்தெ டுத்துத்
 
... தேடுதலில் பெறும்விடையே விடியல் ஆகும்
இன்றுமுதல் ஒன்றெடுப்போம் என்னும் கொள்கை
 
... ஏற்றநிலை உளம்நிறுத்தல் விடியல் ஆகும்

குடியாலே விடியாத குடும்பங்கள் கோடி 
... குடிமகனாய்க் கடனாற்றாக் கோமான்கள் கோடி
 
மடியாலே விடியாத குடும்பங்கள் கோடி
... மற்றவரைக் குறைசொல்லும் மனத்தாராய்க் கோடி
விடியாதா? எனப்புலம்பி வீணிருப்பார் கோடி
 
... விதியென்று பேர்சொல்லி விளங்காதார் கோடி
 
படிக்காது பணியாது பண்படாது
 பற்றிப்
... பதிக்காது பயனெங்கே என்பாரும் கோடி

கற்றுப் பெற்ற மேன்மையினால் 
... கால்வைக் கின்ற செயல்களிலே
 
வெற்றி பெற்று விடிவதுவும்
 
... வெற்றுத் தனமாய் விடியாமல்
சுற்றித் திரிந்து போவதுவும்
 
... சுமையாய்ப் பூமிக்(கு) இருப்பதுவும்
 
உற்ற உளத்துத் தன்மையினால்
 
... உறுகு ளத்து நீர்ப்பூவாய்

                               நன்றி!
புவியறி வுறவே போற்றும் அறத்தைச் 
செவியறி வுறுத்தும் செம்மை நெறியைக்
 
கவியெனும் ஆற்றில் கடனாய் ஆற்றும்
 
கவிஞருக் கெல்லாம் கோடி நன்றி!

சோலைக் கவியரங்கம் - 8


01.                பைந்தமிழ்ச் சுடர்
பஃக்ருதீன் இப்னு அம்துன்

• பெயர்: ஹ. பஃக்ருத்தீன்
• புனைபெயர்: இப்னு ஹம்துன்
• பணி: விமான நிறுவனமொன்றில் முதுநிலை கணக்கு அதிகாரி
• வார இதழ்கள், மாத இதழ்கள், இணைய இதழ்களில் கவிதைகள் யாத்துள்ளார்.
• ரியாத் தமிழ்ச் சொல்வேந்தர்களுள் ஒருவர். ரியாத் தமிழ்ச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர். மேனாள் துணைத் தலைவர்.
• தமிழ் நுண்கலை மனமகிழ் மன்றத்தின் இணை செயலாளர்


கவிஞரை வரவேற்றல்

அள்ளக் குறையா அமிழ்தான செந்தமிழை 
அள்ளிப் பருகி அருந்தேன்கூ(டு) - உள்ளிருக்கும்
 
தேனீயாய்க் காக்கின்ற தேவா! தருவீர்கார்
 
வானீயும் வண்ணமரும் பா

பைந்தமிழ்ச் சுடர் பஃக்ருத்தீன் அவர்களே வருக
பண்முத்து பலவற்றைத் தருக

*** *** *** ***

இறை வாழ்த்து:

எல்லா உலகும் இயல்பாய்ப் படைத்தளித்து
நல்லவை கெட்டவை நாடவிட்டு - வல்லமையாய்
வாய்மையை ஈற்றில் வழங்கும் அருள்நிறை
தூய்மை இறைக்கே துதி.




தமிழ் வாழ்த்து:

தாய்மொழிக் கெல்லாமும் தாய்மொழி ஆனவளும்
வாய்மொழியாய் வல்லெழுத்தாய் வாழ்பவளும் - சேய்களெல்லாம்
மூத்தாலும் செந்தமிழாள் மூப்பின்றிப் பேரிளமை
காத்துப் புகழொளிர்வாள் காண்

தலைவர் வாழ்த்து:

அமிழ்தின் இனிதாம் அருந்தமிழ்ப் பேரால்
தமிழ்முழங்கும் நல்ல தலைவர் - அமைதியும்
ஆழமும் ஆற்றலும் ஆகத் தமிழகழ்வன்
வாழுங்கள் பைந்தமிழ் வார்த்து.

அவை வாழ்த்து

பூவனம் ஒன்றில் புதுமை மலர்களென
யாவரும் வாச(ம்)வர யாத்தனர் - ஆவலுறும்
பாவரங்கில் ஆழாக்குத் பூத்தேன் அளித்தார்க்குப்
பாவலனென் அன்புபா ராட்டு.

இப்படித்தான் விடியும்

எப்படித்தான் விடிந்திடுமோ என்றுறங்கும் ஏழை 
... எப்படியும் விடியட்டும் என்றேய்க்கும் ஏய்ப்பர்
அப்படியும் இப்படியும் அல்லாடுங் கோழை
... அரசியலால் மேலேறும் ஆதிக்க மேய்ப்பர்
தப்படிகள் வைக்கின்ற தன்னாய்வுத் தோழர்
... தவறுகளைச் செரித்துவிடும் தருக்கமில்லா மாந்தர்
செப்படியாய் வித்தைகளைச் செய்கின்ற மோழை
... சாற்றுகிறார் தன்னிலையைச் செய்திகளின் ஊடே..

கதிரெழுந்தும் விடியாமல் கண்மூடிக் கொள்வோர்
... காட்சிகளில் தன்னலமே காட்டுதற்கு நிற்போர்
புதிர்மனத்தால் பொல்லாங்கைப் பாசத்தில் சேர்ப்போர்
... புகழ்மணக்க யாதொன்றும் புரிகின்ற தீயோர்
விதிவசத்தில் தன்னிருப்பை வைத்துள்ள மற்றோர்
... விளங்கட்டும் தன்னுள்ளில் விடிவென்னும் தோற்றம்
நதியெனவே முன்னேற்றம் நம்போக்கில் கொண்டால்
... நாடெல்லாம் செழித்துவிடும் நம்பிக்கை கண்டே

ஆள்பலத்தால் பணபலத்தால் ஆட்டுவிக்கும் யாரும்
... அப்பலங்கள் மாறுவதை அறிந்திருத்தல் ஞானம்
தேள்கடித்து மாண்டவரும் தெருக்களிலே உண்டு
... தீக்குளித்து வென்றவரும் தேசத்தில் உண்டு
நாள்வகையால் முடங்குவதோ நல்லவரின் தொண்டு
... நாற்றிசையும் கொடிபறக்க நடப்பதுவே நன்று.
வாள்வலிமை ஆயுதங்கள் வைத்தவர்க்கும் தேடல்
... வாழ்வினிமை அறிந்தவர்க்காம் வையத்தின் ஏடே

ஆதலினால் வாழ்வினிக்க ஆகுவன செய்வோம்
... அடிப்படையில் பிறர்நலனை ஆராய்ந்து நெய்வோம்
மோதலெனில் தீமையினை மோதித்தான் சாய்ப்போம்
... முன்வந்து வெல்கின்ற முழக்கங்கள் காய்ப்போம்
காதலுடன் நன்மைகளைக் கைக்கொள்ளும் ஆள்கள்
... காலத்தில் தம்பெயரால் கலைசிற்பம் ஆவார்
நாதமுறும் இன்னிசையாய் நிறையட்டும் ஆறு.
... நலம்பெறவே செய்கின்ற நாட்டங்கள் பாடு
*** *** *** ***

வாழ்த்துரை

பேரழகில் மயக்குகின்ற பேதையென வருங்கவியைச்
சீரழகில் கோத்தளித்த செம்மையினைப் போற்றுகிறேன்
 
ஊரழகை உள்ளத்தில் ஒளிரவிட்டுக் கவிசொன்னீர்
ஆரழகி தமிழ்போல அகிலத்தில் வாழியவே!

சோலைக் கவியரங்கம் - 8


கவிஞர் காரைக்குடி கிருஷ்ணா

பட்டதாரி தமிழாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, கல்லூர், புதுக்கோட்டை மாவட்டம்
• கல்வித் தகுதி: எம்.ஏ.,பி.எட்.,எம்.ஃபில்
• பெற்ற விருதுகள்: 
1. கவியருவி
 
2. கவிச்சாகரம்
3. கவிமணி
4. கவிமாமணி
5. கவிச்சோலை
6. சங்கப் புலவர்
7. நல்லாசிரியர் விருது.
8. நகைச்சுவைப் பேச்சாளர்
கவிஞரை வரவேற்றல்

காரைக் குடியார் முகில்மழை பெய்தெனக்
காரைக் குடியார் கவிசெய்வார் - காரைத்
தகர்க்கின்ற மீனெனத் தன்னொளி கட்டிப்
பகர்வார்பார் ஓங்கும் படி

காரைக்குடி கிருஷ்ணா அவர்களே வருக 
கற்பனை மழைசொட்டக் கவிதை தருக

*** *** *** ***

இப்படித்தான் விடியும் (குறள் வெண் செந்துறை)

விண்ணவர் தொழுதிடும் வியத்தகு உலகம்
பெண்மை காக்கும் பெருந்தகை ஆடவர்

பொருள்கள் எல்லாம் பொதுவில் இங்கே
அருகனும் வந்தால் அதிசயம் கொள்வான்

கலைகள் நிறைந்த கவின்மிகு வீடுகள்
விலைகள் இல்லா வியத்தகு இயற்கை

சிட்டுக் குருவிகள் சிணுங்கும் ஓசை
பட்டுத் தெறித்தது பரிதியின் சுடரொளி

அருகில் வெள்ளிய ஆற்றின் ஓசை
மருண்டே ஓடும் மான்கள் கூட்டம்

உழைப்பைப் போற்றும் உழவர் மக்கள்
உழைப்பின் பயனை உதவி நின்றனர்

மரும மில்லை மறைத்தலு மில்லை
தரும மொன்றே தலைமைக் கடனாம்

அகில மெங்கும் அன்பாய் மக்கள் 
நெகிழிகள் இல்லா நெடிய வழிகள்

இயற்கை சார்ந்த இயல்பு வாழ்க்கை
வயல்வெளி எங்கும் விளைந்த நெற்கதிர்

கொத்தித் தின்னும் குருவிகள் கூட்டம்
எத்தனை கோடி இன்பம் இங்கே

காலை வேளை களைந்த(து) இருட்டு
கனவும் இங்கே கலைந்து போனது

விழிகள் இரண்டை வியப்பில் ஆழ்த்தி 
விழித்துப் பார்த்தேன் விடியவே இல்லை

*** *** *** ***

வாழ்த்துரை

இன்பம் கோடி இனிதே பாடித்
துன்பம் தீர்க்க வந்த கவிதை
 
கனவாய்ப் போனதில் கலக்கம் பிறக்க
நனவாய் மாற்றல் நங்கட னேயென
 
உணர்த்தும் உயர்ந்த கவிதை
 
வணக்கம் அம்மா வாழ்கபல் லாண்டே!

சோலைக் கவியரங்கம் - 8


கவிஞர் அதிராம்பட்டினம்
ஷேக் அப்துல்லாஹ் அ


கவிஞரை வரவேற்றல்

எல்லாம் வல்ல இறைவனைப் பற்றிச் 
சொல்லில் அடங்காச் செய்திகள் எல்லாம்
 
உள்ளே வைத்துப் போற்றி இன்பம்
 
கொள்ளும் கவிஞர் அபுதுல் லாஅ
வருக வருக செந்தமிழ்த் தேனைப்
பருகத் தருக பண்புயர்ந் தோரே

வாழ்த்து

உதிப்பாகு மெண்ணங்க ளுயரும் வண்ணம்
... உயிரான தமிழன்னை யருளாற் றிண்ணம்
பதிப்பிக்கும் பண்புடையோர் படையின் முன்னால்
... பாவலரின் தமிழகழ்வன் பார்வைப் பொன்னாள்
மதிமிக்க பாவலரின் பார்வை சூழ்ந்தே
... மாசற்ற வழிகாட்டும் மாண்பில் ஆழ்ந்தே
அதிவீரர் பட்டினத்திற் காளா யாக்கி
... ஆண்டவனே உன்கருணை மனத்தின் வாழ்த்தே !

இப்படித்தான் விடியும்

நடந்துவிட்ட நிகழ்வுகளில் நல்ல பாடம்
... நாம்கற்க வாழ்நாளில் நன்மை கூடும்
கடந்துவிட்ட காலங்களில் கற்ற வுண்மை
... கசப்புகளு மினிப்புகளும் காட்டும் தன்மை
தொடர்ந்துவரும் நாள்களிலே தூணாய்க் கொண்டு
... துவளாதே வாழ்தலிலே சொர்க்கம் காண்பாய்
சுடர்ந்துவிடும் வாழ்நாள்கள் சுகத்தைக் கொண்டு
... சுயத்தினிலே உணர்ந்திடவே சோக மேது ?

நன்னடத்தை பேணுகின்ற நல்ல வுள்ளம்
... நாற்புறமும் பாதுகாவல் நன்றாய்க் கொள்ளும்
அன்னமிட்ட கைகளுக்கே அருளும் சூழும்
... அத்தனையும் கண்டுமனம் வைத்து வாழும்



புண்படாத செய்கையினால் புகழி லாளும்
... புரிந்துகொண்ட வுள்ளமதைப் போற்றும் நாளும்
கண்டுகொண்டும் கேடுசெய்யும் கள்வ ராட்டம்
... காலத்தில் துன்பத்தைக் காணும் கூட்டம் !

அடித்தபுயல் வந்தவழி யதனின் திட்டம்
... ஆராய்ந்து பார்த்திடவே யங்கு நுட்பம்
துடித்துமாண்டோ ரிழந்துவிட்டோர் துன்பம் கொண்டோர்
... தொலைவில்லா வன்மத்தோர் தொடாதே சென்றே
வடித்துவிட்ட கோலமதில் வகுத்துப் பாராய்
... வதைபட்டோர் படாதோர்கள் மண்ணில் யாரு ?
குடித்துவிட்டும் கெடும்புசெய்தும் குழப்பம் தந்தோர்
... கொண்டதுன்பம் தெரியாதிக் கொடுமை விந்தை!

நியாயநேர்மை பேணுவதால் நிலைக்கும் சாந்தி
... நினைவில்கொள் செயல்களிலே நிறுத்து வாய்நீ
அயராவன் பைப்பொழிந்தே அணைத்துக் கொள்வாய்
... மகவுணர்வும் மகிழ்ச்சியிலே மனத்தில் துள்ளும்
தயாளவழி வழக்கமாகின் தாக்கும் துன்பம்
... தலைவிட்டு நகர்ந்துபோகும் தன்னை யென்றும்
மயானமாகு முண்மைகளை மறுத்து வாழ !
... மறந்துவிட விப்படித்தான் விடியும் நாளே !



வாழ்த்துரை

கடந்த காலம் காட்டும் உண்மை 
தொடரும் நாளில் தூணாய்க் கொள்க!
 
நடக்கும் நிகழ்வி னின்று கற்க!
நடத்தும் நம்மை நல்ல வழியில்
 
மிடிமை நீக்கச் சுடராய் எழுக!
 
விடியல் இப்படி வேண்டும் என்று
 
கடமை உணர்த்திய கவிஞர் வாழ்க
 

சோலைக் கவியரங்கம் - 8


பைந்தமிழ்ச் சுடர் கவிஞர் "இளவல்" ஹரிஹரன் , மதுரை.


·         ஊர்: மதுரை
·         மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுநிலை வணிகவியல் படித்துள்ளார்.
·         ‘குரல்’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார் 
·         1980-ல் பத்திரப் பதிவு துறையில் சார்பதிவாளராகப் பணியில் சேர்ந்து, 2014-ல் மதுரை டி.ஐ.ஜி.யாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்
·         தாகூரின் கவிதைகளை மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டுள்ளார். 
12 நூல்களை வெளியிட்டுள்ளார்.

கவிஞரை வரவேற்றல்

அரியும் அரனும் ஒருவரே! உலகுக்(கு)
அறிவிக் கின்ற அரியர னாரே!
 
திரிவி ளக்காய்த் தெளிபொருள் காட்டி
 
இருளிரி விக்கும் இன்கவி செய்ய
 
வருவீர் வருவீர் வணங்குகின் றோமே!




கவியரங்கக் கவிதை

இறையவனே தமிழுக்கே என்றி ருக்கும்
... இறையவனே குறிஞ்சிக்கோ என்ற ழைக்கும்
இறையவனே மூதாட்டி ஔவை பாட்டி
... இறையவனே என்றழைக்கக் கிளைய மர்ந்த
இறையவனே நாவலினை உதிர்த்துப் போட்ட
... இறையவனே சுட்டதனைச் சுடாத தாக
நிறையவனாய் ஔவைக்குச் சுட்டிக் காட்டி
... நிறைதமிழை எடுத்தியம்ப நின்றான் காப்பே

இப்படித்தான் விடியுமெனில் விடிவெ தற்கோ!
... இங்கிருக்கும் குருடருக்கு விளக்கெ தற்கு
தப்படியாய்த் தடமெனிலோ பயணம் ஏனோ
... தாங்குதற்குத் துணையிலையேல் வாழ்வெ தற்கோ
எப்படியும் வாழ்வதெனில் என்ன வாழ்வோ
... ஏனிந்தப் பிறவியெனில் என்ன சொல்வோம்
முப்போதும் மனிதமிங்கு வாழு கின்ற
... முழுநாளே முதல்நாளாம் விடிய லுக்கே.

சகமனிதர் துயர்நீக்கும் திருநாள் பாரில்
... சாதியிலா நிலையாக்கும் பெருநாள் யாரும்
அகமதிலே வஞ்சமிலா மனங்கொள் நன்னாள்
... ஆணவக்கொ லைகளின்றி விடியும் இந்நாள்
உகந்தபடி விடியலினைக் கொணரும் முன்னால்
... ஊரெல்லாம் கொண்டாடும் வெளிச்சப் பூக்கள்
தகுந்தபடி இப்படித்தான் விடியும் என்னும்
... தத்துவத்தைக் களிப்புடனே வரவேற் போமே
தனித்துவத்தை யிழக்காத விடியல் வேண்டும்
... தமிழ்மொழியின் ஏறறமென விடியல் வேண்டும்
மனிதமன வுயர்வுக்காய் விடியல் வேண்டும்
... மாறாத சமத்துவமாய் விடியல் வேண்டும்
வனிதையரின் உணர்வுக்காய் விடியல் வேண்டும்
... வற்றாத நதிகளுக்காய் விடியல் வேண்டும்
இனியிங்கு விடிகின்ற விடியல் எல்லாம்
... இரைபோடும் விவசாயிக் கென்றே வேண்டும்.

புதுவெளிச்சம் பாய்ச்சுகின்ற விடியல் வேண்டும்
... பூமணக்கும் பாமணக்கும் விடியல் வேண்டும்
இதுவிடியல் என்றுசொல்லும் வண்ணம் வேண்டும்
... இப்படித்தான் வேண்டுமெனும் விடியல் வேண்டும்
மதுக்குளியல் இல்லாத விடியல் வேண்டும்
... மதுரமெனுந் தமிழெழுப்பும் விடியல் வேண்டும்
புதுவிடியல் ஒளிகாட்டும் வாழ்வைக் காட்டும்
... புன்னகையின் சுடரெனவே விடியும் நன்றே!

இப்படித்தான் விடியுமென்னும் கவிய ரங்கில்
... இன்கவிதை இயம்புதற்கு வாய்ப்பு நல்கிச்
செப்பரிய தமிழ்ஞான மரபைத் தந்த
... செந்தமிழர் பாவரசர் வரத ராசர்
கைப்பிடியில் அடங்கியவர் தமிழைக் கற்றுக்
... கவிதையாக்கித் தருவதற்கும் சொல்லித் தந்த
வைப்புநிதி தமிழாக்கி வழங்கும் வள்ளல்
... மரபுமணிக் கிருகரத்தால் நன்றி சொல்வேன்
வாழ்த்துரை

முத்து முத்தாய்ச் சொல்லெ டுத்து
முத்து மாலை கோத்துத் தந்தீர்!
முத்தத் தமிழே மூச்சாய்க் கொண்டு
 
தித்திக் கின்ற கவிதை தந்தீர்!
 
புத்தம் புதிய உலகைப் படைக்க
 
சித்தம் செய்தீர் வாழ்க வாழ்க!
 


சோலைக் கவியரங்கம் - 8


கவிஞர் வஜ்ஜிரவேலன் தெய்வசிகாமணி.

பெங்களூரில் தொழில்நுட்பம் பயின்றவர். 
• சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார்.
• பள்ளிப் படிப்போடு தமிழ்ப்படிப்பு நின்றுவிட்ட போதிலும், தமிழ்மீதுகொண்ட பற்றினாலும் ஆர்வத்தினாலும் நீண்ட இடைவெளிக்குப்பின், கடந்த இரண்டாண்டுகளாகத் தமிழ் பயின்றுவருகிறார்.

கவிஞரை வரவேற்றல்

துள்ளி விளையாடத் துணைவரு நண்பனைப் 
பள்ளிப் படிப்பொடு விட்டதைப் போலத்
தொழில்மேற் கொண்டு தொடர முடியாத்
தமிழின் நட்பைப் புதுப்பித் தின்ப
அமிழ்தம் பருக அள்ளி யணைத்தார்
பொற்றேர் எழுந்து புறப்படுந் தமிழை
 
நாவில் இருத்திப் பாடும் குயிலாய்
 
மரபு பாக்கள் நாடும்
வச்சிர வேலனார் வருக வருக

தமிழ்த்தாய் வாழ்த்து!

அகத்தியமும் காப்பியமும் அறியும் முன்பே
... ஆண்டுபல செழுமையுடன் வாழ்ந்து நின்றாய்
பகுத்தபல விலக்கணங்கள் பாகாய்க் கொண்டாய்
... பாரினிலே பலமொழிக்குத் தாயாய் நின்றாய்
தொகுத்துனது வயதினைத்தான் சொல்ல விங்குத்
... தொல்லியலும் தயங்குவது பொறாமை யாலோ
மகுடமுயர் செம்மொழியாய் மன்றம் வென்றாய்
... மகிதலத்தில் இணையிலையே தமிழ்த்தாய் வாழி!

அவை வாழ்த்து! (கட்டளைக் கலித்துறை)

மரபுத் தமிழ்ப்பா மறையா திருக்க வழிவகுத்துக்
கரத்தைப் பிடித்துக் கருத்தை அளித்துக் கவிபுனையச்
சிரத்தை எடுத்துத் திருத்தம் கொடுத்துத் திறம்வளர்க்க
உரத்தைக் கொடுக்கும் உயர்தமிழ்ச் சோலைக்கிங்(கு) ஒப்பிலையே.

இப்படித்தான் விடியும்: நன்மை (கும்மிச் சிந்து)

அன்பினில் யாவரும் சேர்ந்திருந்தால் - நம்மை
... அண்டுந்தீ மைகளைத் தாங்கிநிற் கும்...
அன்னையின் தந்தையின் தாள்பணிந்தால் - அவர்
... ஆசிகள் வாழ்வினைக் காத்துநிற் கும்...

பள்ளியில் ஓதிடும் பாடங்களைக் - கற்றுப்
... பக்குவ மாய்ச்சிந்தைக் கேற்றிவிட் டால்...
தெள்ளிய சிந்தனை மேவிவரும் - என்றும்
 
... தேடுபட் டம்பொருள் நாடிவ ரும்...


நல்லெண்ணச் சிந்தனை நெஞ்சினிலே - வைக்க
... நம்பிக்கை யாவையு மேலெழு மே...
பொல்லன விட்டுனைப் போய்விடுமே - இன்பம்
... புத்துயிர் பெற்றுடன் நின்றிடு மே...

நல்லுயிர் நண்பர்கள் வாய்த்திருந்தால் - உன்றன் 
... நன்மைதீ மைகளைக் கண்டுரைப் பார்...
இல்லத்தி லோருறுப் பாயிருப்பார் - என்றும்
... இன்பதுன் பத்திலுன் னோடிருப் பார்...

வள்ளுவன் சொல்பற்றி வாழ்ந்துநின்றால் - யார்க்கும்
... வாழ்க்கையி னிக்குமே மாற்றமில் லை...
உள்ளுவ தென்றுமு யர்நோக்கமென் றாலிங்(கு)
... ஒற்றுமை மேலெழும் வாழ்வுய ரும்...

இப்படித்தான் விடியும்: தீமை (வெண்பா)

கண்மூடித் தான்செய்யும் காரியங்கள் யாவுமே
மண்மூடிப் போகும் மறவாதே - பொன்மூடி
போட்ட் பெருநகையும் பொய்யுரையும் ஓர்நாளில்
காட்டிவிடும் தன்நிறத்தைக் காண்.

காடு மலையழித்துக் காசு பொருட்சேர்க்க
நாடு வளமிழக்கும் நம்பிடுநீ - ஓடும்
நதியாவும் வான மழையின்றி நாளும்
கதிரோன் பொசுக்கிடுவான் காண்.

கள்ளுண்ணும் போதுன்றன் கண்மயங்கிக் காலிடரும் 
பள்ளத்தி லேவிழநீ பார்ப்போரங்(கு) எள்ளுவரே
 
உள்ளமதி கெட்டொழுக்கந் தானிழக்க ஊரிலுனைக்
கள்ளுகுடி காரனென்பர் காண்.

கள்ளவழி நாடிக் கவரும் பொருள்யாவும் 
உள்ளபடி யோர்நாள் உனைத்தாக்கும் - கள்ளக்கோல்
வைக்கும் கடையதனின் வாணிகமும் காலத்தே
கைக்கூடா மற்போமே காண்.

வாழ்த்து: வெண்பா

அன்புவழி நின்(று)ஆன்றோர் ஆய்ந்தளித்த பாதையிலே
உன்போல் உயிர்யாவும் ஒப்பெனவே கொண்டுள்ளம்
மண்ணுமுயர் வானின் மகிமையதைத் தான்வணங்கி
கண்ணெனக் காத்திடநல் வாழ்த்து.

வாழ்த்துரை

யாப்பினைக் கற்றறிந்து யாவையும் சீர்துக்கிப் 
பாப்புனையும் வச்சிர வேலரே - நாப்பழகு
 
நல்லதமிழ்ப் பாவால் நனிமகிழ்ந்து வாழ்கவே
வல்லதமிழ் வாழ்விக்க வே

சோலைக் கவியரங்கம் - 8


பைந்தமிழ்ச்சுடர் மதுரா

• புனைபெயர்: மதுரா
• இயற்பெயர்: தேன்மொழி ராஜகோபால்
• குடும்பத்தலைவி
• படிப்பு: முதுகலை ஆங்கில இலக்கியம்
• மரபு கவிதை, புதுக்கவிதை, நவீன மீமொழிக் கவிதை, ஹைக்கூ, தெலுங்கு வடிவ நானிலு என எல்லா வகைக் கவிதைகளும் எழுதிவருகிறார்
 
• சிறுகதைகள் பல எழுதியிருக்கிறார். கோகுலம், மங்கையர்மலர், தினமலர் போன்ற பிரபல இதழ்களிலும் சிற்றிதழ்களிலும் மின்னிதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன.
• இவருடைய நாற்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் தற்போது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கவிஞரை வரவேற்றல்

நனிதேன் அருந்தும் வண்டாக
... நாந யக்கும் தமிழுண்டு
பனியாய் உள்ளப் பாங்கோடு
... பண்பில் ஓங்கும் சிறப்போடு
கனிப்பா பலவும் கைக்கொண்டு
... காப்பி யங்கள் படைக்கின்றார்
இனிக்க வினிக்கப் பாவியற்றும்
... இனிய கவிஞர் வாழியவே

பைந்தமிழ்ச்சுடர் மதுரா அவர்களே வருக!
பைந்தமிழ்க் கனிச்சுவையைத் தருக!

தமிழ் வாழ்த்து (எழுசீர் விருத்தம்)

பொன்னாய் மணியாய்ப் பொலிவாய்ச் சிறந்து 
... புதிதாய் மிளிரும் தமிழே
என்னில் கரைந்தென் இதயம் நிறைந்த
 
... எழிலாம் இனிய மொழியே
மண்ணில் செழித்து மனிதம் வளர்க்கும்
 
... மகத்து வமேநீ வருவாய்
உன்றாள் பணிந்தேன் உணர்வில் கலந்தேன்
 
... உயர்வை உடனே தருவாய்


இப்படித்தான் விடியும் (எழுசீர் விருத்தம்)

எண்ணஞ் சிறந்திங் கேற்றம் பெறவே 
... எளிமை வாழ்வு சிறப்பாம்
திண்ணங் கொண்டு திறமாய் வாழத்
 
... தெளிவு வேண்டு மென்றும்
வண்ணங் காட்டும் வாழ்வில் கூட
 
... வறுமை மெல்ல வரலாம்
மண்ணி லெதுவும் மடியா தில்லை
... மரித்துப் பிறக்கு மெல்லாம்.

காற்றும் கூடக் கடுமை காட்டிக்
... கதற வைக்கும் உயிரை!
தேற்றும் உதவி தேடும் மனிதம்
 
... தெளிவாய்ப் புரியும் மனமே
சீற்ற மென்றும் சிறப்பு தருமோ
 
... சினமும் நம்மை அழிக்கும்
போற்ற வேண்டும் புவியை நாளும்
 
... பொறுமை காத்தல் இனிதே

இயற்கை வழியில் இடரைத் தவிர்த்தே 
... இனிதாய் வாழ நினைத்தால்
செயற்கை மறுத்துச் செய்யும் செயல்கள்
 
... செழிக்கச் செய்யும் புவியை
உயர்வைத் தேடி உழைக்க விழைந்து
 
... உண்மை நேர்மை கொண்டால்
பெயரைக் காத்துப் பெருமை பெறலாம்
 
... பேறாய் வாழ்வும் சிறக்கும்.
பணத்தை மறுத்துப் பதவி வெறுத்துப் 
... படைப்போம் புதிதாய் உலகை!
குணத்தை உயர்த்தக் குன்றி லேறும்
 
... குலமும் தழைக்கும் நன்றாய்
கணக்காய் வாழ்ந்து கடமை செய்து
 
... காப்போம் புவியைக் கருத்தாய்
சுணக்க மின்றிச் சுழலும் பூமி
 
... சுடராய் விடியும் பொழுதும்


வாழ்த்துரை

சுடர்கொண் டெழுந்த விளக்காக
இடர்தீர்க் கின்ற இன்பாவால்
மடமை கொளுத்தும் மாமதுரா!
படரும் ஒளியாய்! வாழியவே!