'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8


கவிஞர் செல்லையா வாமதேவன்
• பிறப்பிடம் இலங்கை மட்டக்களப்பிலே பெரியகல்லாறு.
• உளநல மருத்துவராக மட்/போதனா வைத்தியசாலையிலே பணிபுரிகின்றார்.
• பதினேழு வயதிற் பாடசாலை மாணவனாயிருக்கும் போதிருந்து கவிதைகள் எழுதிவருகின்றார்.
• ஓசைநயத்தோடு ஆரம்பத்திலிருந்தே எழுதினாலும் கடந்த ஒருவருடமாக யாப்பிலக்கணப் பயிற்சி பெற்றுப் பிழையற மரபு கவிதைகள் எழுதுவதில் பெருவிருப்பம் கொண்டு முனைந்து வருகின்றார்.

*** *** *** ***

கவிஞரை வரவேற்றல்

அருந்தமிழ் ஆவல் தன்னைக் கடத்த 
... அருந்துயர் கடத்தல் எளிதாம் என்ப!
 
விருந்தெனத் தமிழைப் படைக்கும் திறமை
 
... விரும்பிய ஓசை பேசும் வளமை
 
கருத்துகள் பொதுமை புதுமை பொலியக்
 
... கனியெனத் தருவார் கருத்தில் கொள்வோம்
 
மருத்துவர் ஐயா வருக! மணியாய்
 
... வளங்கொழி இன்பக் கவிதை தருக!

ஆதியிற் சிவனார் அருளிய அமுதே
... அந்தமில் செந்தமிழ்த் தாயே!
நீதியின் மொழியே! நிறைமதி யழகே!
... நித்தமுன் தாள்பணி வேனே
மேதினி சிறக்க மேவிடும் அரங்க
... மேதகு தலைவரே வாழ்க!
சேதியை உரைக்கச் செவிவழி நிறைக்கச்
... சேர்ந்தநல் லுறவுகள் வாழ்க!

எப்படி விடியும் என்பதே வேண்டா
... இப்படித் தானது விடியும்
செப்படி வித்தை செய்துமே செல்வம்
... சேர்த்தவர் நாணவே விடியும்
தப்பதே வாழ்வாய்த் தரணியில் வாழ்வார்
... தவநெறி காணவே விடியும்
அப்படி அறமும் அறிவுடன் பணிவும்
... அகனிறை பரிவுடன் விடியும்

பணமது வொன்றே பலமெனக் கொண்டோர்
... பயனெது மின்றியே போவார்
குணமது கொண்டே குலமுறை கண்டோர்
... குதூகலங் கொண்டுமே வாழ்வார்
உணவது தந்த உழவரும் நாளும்
... உழைப்பவர் செல்வராய் ஆவார்
கணவனே தெய்வம் கற்பிரு தரப்புங்
... காணவே தமிழறந் தேர்வார்

கதிர்நிறை வயலும் கனிநிறை தருவும்
... கவிநிறை இயற்கையின் எழிலும்
மதிநிறை விழியும் மனனிறை மகிழ்வும்
... மதுபுகை கேடெனும் ஒளியும்
நிதிநிறை பதியும் நீர்நிறை நதியும்
... நிம்மதி நிறையுனல் லயலும்
துதியிறை கரமுந் துணிவுடன் ஒழுக்கம்
... துலங்கவே கதிரது விரியும்

மண்ணிலே முதியோர் மாசறு சிறுவர்
... மதிக்கவே மிடியது மடியும்
கண்ணெனக் கல்வி கற்றறங் காக்கக்
... காடெனும் போரது முடியும்
பெண்ணவள் பாரிற் பெருவரம் என்று
... பேணியே பாரது விடியும்
வண்டமிழ் பாட வாஞ்சையாய் நன்றி
... வாழ்த்துடன் கவியது நிறையும்.

வாழ்த்து

அறமும் அறிவும் பணிவும் பரிவும் 
உறவில் கலந்த உயர்ந்த உள்ளம்
 
நிறைந்து விடிய நேயக் கவிதை
 
அறைந்தீர் ஐயா வாழ்க வாழ்க!

No comments:

Post a Comment