'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்
Showing posts with label ஆய்வுக் கட்டுரைகள். Show all posts
Showing posts with label ஆய்வுக் கட்டுரைகள். Show all posts

May 16, 2021

இலக்கணப் பேழை

பேரா.கு.இராமகிருட்டினன்

தான், தாம், தாங்கள் எனும் பெயர்கள்:

தமிழில், தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூவிடம் உண்டு,

தன்மைப் பெயர்கள்: யான்( நான்) , யாம் (நாம்), நாங்கள் ,

முன்னிலைப் பெயர்கள்: நீ,நீர் நீயிர்( நீவிர்), நீங்கள்.

படர்க்கைப் பெயர்கள்: அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை, அவைகள் ( காண்க; நன்னூல்287).

இவை தவிர, 'தான், தாம், தாங்கள்' என்பனவும் படர்க்கைப் பெயர்களாக (படர்க்கைப் பெயர்ப் பதிலிகளாக- தெ.பொ.மீ.)) உள்ளன.

எழுவாயாகப் பயன்படுபவை: நான், நாம், நீ,நீர், நீயிர், நீவிர், தான், தாம், தாங்கள், இவை வேற்றுமை உருபுகளை அவ்வாறே ஏற்கா. திரிந்த வடிவங்களைப் பெற்று வேற்றுமை உருபுகளை ஏற்கும்.

இவை வேற்றுமை உருபேற்கத் திரிந்த வடிவங்களைப் பெறும்:

என், எம்( நம்), நின்,உன், நும், உம், உங்கள், தன், தம், தங்கள். (காண்க நன்னூல் 247.) என்பன.

எ.டு. என்னை, உன்னால்...

அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை

தன் நிலையிலேயே வேற்றுமை உருபுகள் ஏற்கும்.

எ.டு. அவனை, அவளால், அதை, அவைகளை (அவற்றை)...

தான், தாம், தாங்கள் எவ்வாறு பெயர்ப் பதிலிகளாக வரும் ?.

தான் அன்பது அவன், அவள், அது என்பனவற்றுக்கு மாற்றாக வரும்.

தாம் என்பது அவர்,அவை(அவைகள்) என்பனவற்றுக்கு மாற்றாக வரும். தாங்கள் என்பது அவர்கள் , அவை, அவைகள் என்பனவற்றுக்கு மாற்றாக
வரும்.

எ.டு: தான் நல்லவன் என்றான்,

தான் ஐந்தாவது படிப்பதாகக் கூறினாள்,

தான் படுத்தே இருக்கும் அந்த நாய்.,

தாம் பெரியவர் என்பதை அவர் புலப்படுத்தினார்.

தாங்கள் தமிழர் என்று அவ்வூரார் பெருமைப்பட்டனர்.

தான், தாம், தாங்கள் என்பன வேற்றுமை உருபுகள் ஏற்கும்பொழுது தன், தம், தங்கள் என முதல் குறுகி நிற்கும்.

எ.டு: தன், தன்னை, தன்னால், தனக்கு, தன்னிடம்...

தம் தாயை வழிபட்டார். ( தாங்கள் தங்கள் என்பன தற்காலத்தில் முன்னிலையிலும் பயன்படுத்தப்படுகின்றன. எடு: தாங்கள் யார்? தங்கள் பெயர் என்ன?

தம், நம், நும் ஆகியவை சாரியைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன(தெ.பொ.மீ. தமிழ் மொழி வரலாறு பக்.131)

மேலும் ' அவன்தான் கூறினான், அவர்தாம் செய்தார், அவர்கள்தாம் தமிழர்' எனும்பொழுது தான், தாம் என்பன ஒன்றை வலியுறுத்திக் கூறப் பயன்படுகின்றன.

சிந்துப் பாடல்களின் சீர்கள்

பாவலர் மா.வரதராசன்.

அன்புடையீர். வணக்கம்.


1.சிந்துப் பாடல்களின் சீர்கள் இரட்டைப்படையில்தான் வரும்....ஒற்றைப்படையில் வராது.

2.வளையற்சிந்து பாடலில் 24 சீர்கள்தாம் வரும். 15 சீர்கள் வரவே வராது.

3. இவற்றையறியாமல் முகநூலில் பிழையாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.(அலைபேசியில் கேட்டது)



"ஐயா....இது சரியா.? நீங்கள் சொல்வது சரியா? " எனப் பைந்தமிழ்ச்செம்மல் மன்னை வெங்கடேசன் என்னைக் கேட்டார்.

முதலிரு கருத்துகள் மட்டும் என்றால் இந்த விளக்கத்திற்கு தேவையேயில்லை. ஆனால், முகநூலில் என்னைத் தவிர வேறு யாரும் கடந்த ஐந்தாண்டுகளில் கற்பிக்கவில்லை என்பதாலும், ஒரு மாணவரின் ஐயத்தைப் போக்குவது ஆசிரியனின் கடமையென்பதாலும் நான் இவற்றிற்கு விளக்கம் சொல்லவேண்டியதாயிற்று.

சிந்துபாடுக என்னும் பயிற்சியைத் தொடங்கும்போதே இவ்வாறான வசவுகள் வரும் என்று எதிர்பார்த்தே ...

""இந்தப் பயிற்சிப் பகுதி புதிதாகப் பாப்புனைவோர் அஞ்சியொதுங்கா வண்ணம் எளிமையாகவும், பாப்புனைய தேவையான குறிப்புகளோடும் தொடரும்.

சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தப் பயிற்சியைக் கொண்டும் கூறப்படுகின்றன."

என்ற முன்குறிப்புடன் வழங்குகிறேன்.

என்சொந்தப் பயிற்சியென்பது அவ்விலக்கணத்தை நான் கற்கப்பட்ட பாட்டையும், பின் ஏற்பட்ட புரிதலையும் உணர்த்தும். அப்புரிதலின்
விளைவாக ஏற்பட்ட தெளிவே என் குழுவில் நான் பாடம் நடத்தும் முறையாகும்.

சிந்துப் பாவியல் நூலைப் படித்தாலோ அல்லது அப்படியே தொடர்ந்தாலோ யாரொருவரும் புரிந்துகொள்ளவியலாது. அதைப் புரிந்து தேர்ச்சிபெற எளிமையும், நல்லாசானும், அவருடைய வழிகாட்டலும் கட்டாயம் தேவை.

சான்றுக்குப் ...

பின்வரும் பகுதியைப் படித்துப் பாருங்கள்.

"சிந்துப் பாடல்கள் தாள அடிப்படையில் அமைக்கப்பட்டு உள்ளதால்தான் மற்ற பாக்களான இயற்பா, சந்தப்பா, வண்ணப்பாக்களுக்கான அசை, சீர், அடி, தொடை, மாத்திரை முதலியன இதற்கு ஒத்துவராமற் போகின்றன.

தாள அடிப்படையில் அமைந்த சிந்துப்பாடல்களில் உள்ள அசைகளையும், சீர்களையும் உணர வேண்டுமெனில் முதலில் தாளத்தையும் அதன் உள்ளுறுப்புகளையும் உணர வேண்டும். தாளம் ஏழு: அவை: துருவம், மட்டியம், ரூபகம், சம்பை, திருபுடை, அட, ஏக என்பனவாகும். இவற்றில்ன் உள்ளுறுப்புகள் மூன்று; அவை: கோல் (இலகு) - சுழி (திருதம்) - அரைச்சுழி (அனுத்திருதம்).

கோல் 1 என்றும், சுழி 0 என்றும், அரைச்சுழி அரைவட்ட வடிவிலும் குறிக்கப்பெறும்.

சுழி இரண்டு எண்ணிக்கையுடையது. அரைச்சுழி ஒர் எண்ண்ணிக்கை உடையது. இவையிரண்டும் எண்ணிக்கையில் மாறாதவை. கோல் மட்டும் இனத்தைப் பொறுத்து எண்ணிக்கை மாறக் கூடியது.

கோலும் இனங்களும் (சாதிகளும்):

மேற்குறித்த ஏழு தாளங்களுக்கும் இனங்கள் உண்டு. அவை மும்மை (திசிரம்), நான்மை (சதுசிரம்), ஐம்மை (கண்ட), எழுமை (மிசிரம்), ஒன்பான்மை (சங்கீரணம்) என ஐந்தாகும். இவற்றின் எண்ணிக்கை முறையே மூன்று, நான்கு, ஐந்து, எழு, ஒன்பது என்பனவாகும்.

ஒரு தாளத்தில் உள்ள கோல் இந்த ஐந்து இனத்துக்குரிய எண்ணிக்கைகளைத் தனித்தனியே பெறும்போது அத்தாளம் ஐந்து வகையாகிறது. இப்படியே ஏழு தாளங்களும் (7 தாளம் x 5 இனம்)= 35 வகையாகும். எடுத்துக்காட்டாகத் திரிபுடைத் தாளம் மும்மை இனமாயின் ‘மும்மையினத் திரிபுடை’ (திசிர சாதித் திரிபுடை) என்று பெயர்பெறும். அதனை ‘1300’ என்று குறிப்பார்கள். இதன் மொத்த எண்ணிக்கை (3+2+2) ஏழாகும். இதே திரிபுடைத் தாளம் நான்மை இனமாயின் நான்மைத் திரிபுடை (சதுசிர சாதித் திரிபுடை) என்று பெயர்பெறும். அதன் குறியீடு ‘1400’ ஆகும். இதன் மொத்த எண்ணிக்கை (4+2+2) எட்டாகும். இப்படியே முப்பத்தைந்து தாளத்துக்கும் கணக்கிட்டுக் கொள்ளவேண்டும்.

வட்டணை (ஆவர்த்தம்)

நான்மை இனத் திரிபுடைத் தாளத்திற்கு நடைமுறையில் ஆதி தாளம் என்று பெயர் வழங்கப்படுகிறது. ஒரு தாளத்தின் முழுநீளம் ஒரு வட்டணை எனப்படும்.

தாளம் போடும் முறை:

கோல் - ஒரு தட்டுத் தட்டி அதற்குரிய எண்ணிக்கை (தட்டுடன் சேர்த்து) எண்ண வேண்டும். சுழி - ஒரு தட்டுத் தட்டித் திருப்ப வேண்டும். அரைச்சுழி - ஒரு தட்டுத் தட்ட வேண்டும்.

சிந்துப் பாடல்களில் பெரும்பாலன ஆதி தாளத்தில் அடங்குமாறு அமைந்துள்ளன. அவற்றைப் பாடும்போது அடியின் முற்பகுதி ஒரு கோலிலும், 14 அடுத்தபகுதி இரண்டு சுழிகளிலும் ‘00’ அடங்குகின்றன. இப்படித் தாளத்தின் ஒரு வட்டணையிலோ, பல வட்டணைகளிலோ ஓரடி அடங்குகிறது.

1 2 3 4

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் . ப ரா சக்தி

5 6 7. 8

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் . . . . .

(அசை நீட்டங்கள் புள்ளிகளால் குறிக்கப்பட்டுள்ளன)

மேற்காட்டிய கோலிற்குரிய நான்கு எண்ணிக்கையில் முதல் அரையடியும், இரு சுழிகளுக்குரிய நான்கு எண்ணிக்கையில் அடுத்த அரையடியும் ஆக ஓர் ஆதிதாள வட்டணையில், இதன் ஓரடி முழுவதும் அடங்குவதைக் காணலாம். எட்டாம் எண்ணிக்கையில் எழுத்துகளே இல்லையென்றாலும் எழாம் இடத்தில் இறுதியாக வரும் அசை எட்டாம் சீராக நீண்டு இசைக்கிறது. இந்த இரண்டு வரிகளும் சேர்ந்து ஓரடி. எனவே இவ்வடியில் 8 சீர்கள் உள்ளன. இதனை எண்சீர்க் கழிநெடிலடி எனலாம். இந்தப் பாடலில் ஒவ்வோரடியும் ஓர் ஆதிதாள வட்டணையில் அடங்குகிறது.

இந்தப் பாடலில் கோடிட்டுக் காட்டியபடி 8 சீர்கள் உள்ளன. ஒற்று நீக்கிய உயிர்நெடில், உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் ஆகிய பதினெட்டு உயிரெழுத்துகள் (சிந்துப்பாடலில் உயிரும் உயிர்மெய்யும் உயிராகவே கொள்ளப்படும்) எட்டு சீர்களாக இசைக்கின்றன.



நண்பர்களே!

இதே முறையில் சிந்து இலக்கணத்தைக் கற்பித்தால் எத்தனை பேருக்குப் புரியும்.? இசைப்பயிற்சி வகுப்புக்குச் செல்வோர்க்கு மட்டுமே புரியும். அதைத்தான் நான் இயல்பாகவும் எளிமையாகவும் வடிவமைத்திருக்கிறேன்.

எப்படி...?

திசிரம் - மும்மை -

சதுசிரம் - நான்மை -

கண்ட - ஐம்மை -

மிசிரம் - எழுமை -

என்பனவற்றை,

மூன்றெழுத்து

நான்கெழுத்து

ஐந்தெழுத்து

ஏழெழுத்து

என்றவாறு எழுத்துக் கணக்கிலேயே புரியவைத்திருக்கிறேன். மேலும் ஒரெழுத்தையே அசையாகக் கொள்வது கற்பவர்க்கு குழப்பமுண்டாக்கும் என்பதால் அவற்றையும் நெறிப்படுத்தினேன்.

இரா.தி. இசையில் பயிற்சியுடையவர் என்பதாலும், இசையில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பதாலும் அவர் இசைநோக்கில் அணுகிய சிந்துப்பாடலை நான் சற்றே எளிமைப்படுத்தினேன். அவ்வளவே. மற்றபடி ...இலக்கணமேதும் இம்மியளவும் மாறாது.

அடுத்து...

சிந்துப் பாடல்களில் இரட்டைப்படையில்தான் சீர்கள் வரும்.ஒற்றைப்படையில் வராது.

ஆம். உண்மைதான்.

வளையற் சிந்து

. இதன் சீர் மும்மை நடையினதாக அமைந்திருக்கும். 1,5, 9, 13, 17, 21 ஆம் சீர்களில் மோனை அமைந்திருக்கும் 7, 11, 15, 23 ஆம் சீர்களில் இயைபுத் தொடை அமைந்திருக்கும்.

காட்டு : 24 சீர் அடி

வாரு மையா வளையல் செட்டி

வளையல் விலை கூறும் - சீர்

மகிழ்ந்து மேகை பாரும் - பசி

வன்கொ டுமை தீரும் - எந்த

மாந கரம் பேர்இ னங்கள்

வகை விபரம் கூறும்.

இப்பாடலை நன்கு நோக்குங்கள்.

23 சீர்கள் தாமே உள்ளன? ஏன் ஒற்றைப்படையில் வந்திருக்கிறது.? அப்படியானால் இப்பாடல் பிழையா?

இல்லை. பாடல் சரிதான். 24 ஆவது சீர் இசைநீட்டமாக அமையும். அஃதாவது 23 ஆம் சீரை இன்னும் இருமாத்திரையளவு நீட்டிப் #பாடிக்கொள்ளவேண்டும். ஆனால் எழுதும் போது அந்த இடத்தில் எந்த எழுத்தும் இருக்காது.

மேற்கண்ட விளக்கத்தை நன்றாகப் பாருங்கள்.

7, 11, 15, 23 ஆம் சீர்களில் இயைபுத் தொடை அமைந்திருக்கும்....

என்ற குறிப்பை நோக்குங்கள். 23 ஆவது சீருடன் பாடல் முடியும். 24 ஆவது சீர் எழுத்தேயில்லா இசைநீட்டம் மட்டுமே.

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் /// என்ற பாடலையும் அதன் விளக்கத்தையும் பார்க்க. அதிலும் 8 ஆவது சீரில் எழுத்தேயில்லா இசைநீட்டம் மட்டுமே வரும்.

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் . ப ரா சக்தி

5 6 7 8

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் . . . . .

(அசை நீட்டங்கள் புள்ளிகளால் குறிக்கப்பட்டுள்ளன)

எனவே, பயிற்சியின் எளிமைக்காக அந்த எழுத்தில்லாச் சீரைப் பற்றி நான் குறிப்பிடவில்லை.

இதனைச் சிந்துப்பாவியல் கூறுவதைக் காண்க.

"தனிச்சொல் முன்னரும் அரையிடை இறுதியும்

அடியின் இறுதியும் அமையும் அசைகள்

இரண்டிறந் திசைத்தலும் இயல்பா கும்மே."

(சி.பா. 10)

கருத்து : சிந்துப் பாடல்களில் தனிச் சொல்லுக்கு முன்னரும் அரையடியின் இறுதியிலும், அடியின் இறுதியிலும் அமைந்திருக்கின்ற அசைகள் இரண்டு அசை நீளத்திற்கு மேல் நீண்டு இசைத்தலுமுண்டு

காட்டு : ஓர் ஆதிதாள வட்டணையில் அடங்கும் அடி

ஓம் சக் தி ஓம் சக்தி ஓம் . ப ரா சக் தி

ஓம் சக் தி ஓம் சக்தி ஓம் . . . . .

(அசை நீட்டங்கள் புள்ளிகளால் குறிக்கப் பட்டுள்ளன.)

எட்டாம் எண்ணிக்கையில் எழுத்துகளே இல்லை என்றாலும் ஏழாம் இடத்தில் இறுதியாக வரும் அசை எட்டாம் சீராக நீண்டு இசைக்கிறது. இந்த இரண்டு வரிகளும் சேர்ந்து ஓரடி.

(சி.பா. 28 இன் விளக்கம்)



அடுத்து...

15 சீர்களில் வளையற்சிந்து அமையாது...என்பதற்கான விளக்கம்.

"வளையல் வாணிகம் வழங்கும் பாவகை

எண்சீர் அடிகள் இரண்டினும் மூன்றினும்

தனிச்சொல்லும் இயைபும் தான்மிகப் பெற்றே

ஓரடிக் கண்ணியாய் பேரளவியன்று

மும்மையின் விரைவில் செம்மையாய் நடக்கும்" (சி.பா. 37)


இந்நூற்பாவில்

எண்சீரடிகள் இரண்டினும், மூன்றினும்

என்னும் அடியைக் காண்க.

எண்சீரடிகள் இரண்டு - 16 அடிகள்

எண்சீரடிகள் மூன்று - 24 அடிகள்.

எனவே, 16 சீர்களிலும் வளையற்சிந்து அமையலாம் என்பதை அறிந்துகொள்க.

என்னுடைய பாடத்தில் 15 சீராகக் குறிக்கப்பட்ட ஈற்றசையை எழுத்தில்லா இசைநீட்டமாகப் பாடவேண்டும். வாருமையா வளையற்செட்டி பாடலின் 23 ஆவது சீரை நீட்டிப் பாடுவது போல்.

அவ்வாறாயின் என்னுடைய பாடல் 16 சீர்கள் கொண்டது தானே.?

அன்றியும்,

வாரு மையா வளையற் செட்டி // என்ற பாடலை என் பயிற்சியின்படி 15 சீர்களாகக் காட்டலாம். (எளிமையாகப் புரியும்படி)

1. வாருமையா

2. வளையல்செட்டி

3. வளையல்விலை

4. கூறும் -

5. சீர்

6. மகிழ்ந்துமேகை

7. பாரும் -

8. பசி

9. வன்கொடுமை

10.தீரும் -

11. எந்த

12. மாநகரம்

13. பேரினங்கள்

14. வகைவிபரம்

15. கூறும்.

இந்த முறையில்தான் என் பயிற்சிகள் அமைகின்றன.



அல்லது

என் பாடலை 24 சீர்களாகக் காட்ட முடியும்.

1. சதியெ

2. னவே

3. பிரித்த

4. னரே

5. சாதி

6. யினை

7. இங்கு -

8. மதச்

9. சாய்க்க

10.டையின்

11. பங்கு -

12. துயர்

13. சாய்த்தி

14. டவே

15. தங்கு -

16. நாம்

17.தகர்த்தெ

18.றிய

19.பலத

20.டைகள்

21.தழைத்தி

22.ருக்கு

23.மிங்கு.

24 ........

(24ஆவது சீர்க்குப் புள்ளிகள் வைக்கப்பட்டிருக்கும்)




ஒரு கணித ஆசிரியர் 22×10 என்பதை,

2×10 = 20

2×10= 20

--------

220

--------

என்று மாணவர்க்குச் சொல்லிக் கொடுப்பார்.

இன்னொரு ஆசிரியர் சற்றே எளிதாக, பத்தில் இருக்கும் சுழியத்தை 22 உடன் சேர்த்து

22×10= 220 என்று சொல்லிக் கொடுப்பார்.

வழிமுறை வேறுவேறு. ஆனால் பயனோ ஒன்றே.



நன்று...நண்பர்களே!

ஐயங்கள் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்.

தமிழன்புடன்

மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

Apr 18, 2021

நடுப்பக்க நயம்

கம்பனைப் போலொரு… பகுதி – 13

மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்


இராமாயணம் என்பது இரு மன்னர்களுக்குள் நடைபெற்ற நிகழ்வுதான் என்பதற்கும், லங்கா என்பது நீர்சூழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கும் வடநாட்டுச் சொல்வழக்கம் என்பதற்கும், இராமாயண லங்காவிற்கும், ஈழ இலங்கைக்கும் சற்றும் தொடர்பில்லை என்பதற்கும், தனுக்கோடி, சேதுபாலம், அனுமன் கடல்தாவியது, மகேந்தரமலை போன்றவை கம்பர் காலத்து நிகழ் உண்மைகளால் காப்பியத்துள் வைக்கப்பட்டன என்பதற்கும், அவற்றில் பலவும் இடைச்செருகல் என்பதற்கும், இராமாயண நிகழ்வு கங்கையின் இருகரைப் பகுதிகளுக்கிடையே நடைபெற்றது என்பதற்குமான புவியியல் வரைபடச் சான்றுகளுடன், வரலாற்று உண்மைகளுடன் விளக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட கட்டுரையை ஆழ்ந்து படிக்குமாறு தமிழர்களையும், திராவிட நண்பர்களையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய ஆய்வும் மிகமிகச் சரியாகவே சென்று கொண்டிருக்கிறது என்பதில் மிகுந்த மகிழ்ச்சியுடன், இந்தக் கட்டுரையைச் சான்றுகளுடன் வழங்கிய நண்பர் அ.மார்க்ஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.


★★


இராவணனின் ‘லங்கா’ என்பதும் இன்றைய ஸ்ரீலங்காவும் ஒன்றா? வானரங்களின் உதவியோடு இராமனால் அன்று கட்டப்பட்ட ‘நளசேது’ என்பதும் தனுஷ்கோடியையும் இலங்கையையும் இணைக்கும் மணல் திட்டுத் தொடரான ‘ஆதம் பாலமும்’ ஒன்றா? என்பது குறித்து 1930களில் எழுதப்பட்ட ஓர் அரிய ஆங்கில நூல் பற்றியது இக்கட்டுரை. இன்றைய ‘இராமர் சேது’ பிரச்சினை முளைவிடாத ஒரு காலக்கட்டத்தில் எழுதப்பட்டது இந்நூல் என்பது குறிப்பிடத்தக்கது)


தான் படித்துக் கிளர்ச்சியுற்ற நூல்கள் குறித்து உடனடியாகத் தொடர்புகொண்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வார் நண்பர் ராமாநுஜம். ஓர் அரிய நூல் குறித்துச் சமீபத்தில் அவர் கூறியதோடு தமிழ்ச்சூழலில் அதை அறிமுகப் படுத்த வேண்டிய அவசியத்தை வற்புறுத்தி அதைப் பிரதி எடுத்து உடனடியாக அனுப்பவும் செய்தார். இன்றைய சூழலில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினை குறித்து, அந்த பிரக்ஞை எதுவுமற்றுச் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது இந்நூல். ‘Ramayana and Lanka’ என்கிற இந்த சுமார் 100 பக்கம் உள்ள ஆங்கில நூலை எழுதியவர் கூ.பரமசிவ அய்யர் என்ற ஒரு தமிழர்.


பெங்களூர் நகரத்திலிருந்து பெங்களூர் அச்சகத்தில் அச்சிடப்பட்டு 1940ல் வெளி வந்துள்ளது இந்நூல். தான் மிக மதிக்கும் தனது மூத்த சகோதரர் மறைந்த நீதிநாயகம் சர். கூ.சதாசிவ அய்யர், எம்.எல்., அவர்கட்கு மிக்க பணிவுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது இந்நூல். காலத்தின் தூசு படிந்து கிடந்த இந்நூலைக் கண்டு பிடித்து ராமாநுஜத்திடம் அளித்தவர் திரு. எஸ்.விஜயன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக இருந்த, எல்லோராலும் பெரிதும் மதிக்கப்பட்ட தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் (ஏ.பி) அவர்கள் நூலாசிரியர் பரமசிவ அய்யரின் தம்பி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.


நூலாசிரியர் பரமசிவ அய்யர் ஒரு நாத்திகரோ, இல்லை, அவரே சொல்வது போன்று காந்தியடிகளைப் போல ‘இராமாயணம் என்பது ஒரு வெறும் கற்பனைக் காவியம்’ என்று கருதுபவரோ அல்ல. சிறுவயது முதற்கொண்டு வால்மீகி இராமாயணத்தின் பால காண்டத்தையும், சுந்தர காண்டத்தையும் பலமுறை பயின்றவர். தனது வழிகாட்டியாகக் கருதிய அவரது தமயனாரோ வால்மீகி இராமாயணத்தைப் பாராயணம் செய்தவர். பரமசிவ அய்யர் அவர்களின் கருத்துப்படி, ‘பால காண்டம் சிறு பிள்ளைத்தனமான புராணிக சம்பவங்களின் தொகுப்பு; சுந்தர காண்டம் அதீத அலங்காரங்கள் மிகுந்த அழகிய விவரணக் கவிதை’.


1922ல் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தபோது அவர் இதர மூன்று காண்டங்களையும் ஆழமாகப் பயின்று இருக்கிறார். அயோத்தியா, ஆரண்யா மற்றும் கிஷ்கிந்தா காண்டங்களில் நம்பத்தகுந்த உண்மையான, வரலாறு பொதிந்துள்ளது என அவர் உணர்ந்தார். ‘ஆதிகாவ்யம்’ என இந்திய மரபில் போற்றப்படும் இராமாயணத்தில் அடித்தளமாக அமைந்த வரலாற்று நிகழ்வு குறித்த ஒரு விமர்சன பூர்வமான ஆய்வை உருவாக்குவதில் அவரது எஞ்சிய வாழ்நாள் கழிந்தது. அயோத்யா காண்டத்தில் (சர்கம்:8, பாடல்:16) ஒரு வரி: “கிரஹணத்திற்கு ஆட்பட்ட சூரியனைப் போலவும், உண்மையற்ற ஒன்றைச் சொல்ல நேர்ந்த ஒரு ரிஷியைப் போலவும் தசரதன் (திகைத்து) நின்றான்”. பொய் சொல்ல நேர்வது என்பது எத்தகைய ஒரு பேரவலம் என்று வால்மீகி கருதியது பரமசிவ அய்யரின் கவனத்தை ஈர்த்தது. வால்மீகி முனிவரின் உண்மையின் மீதான விசுவாசத்தை வியந்து ஏற்று அந்த அடிப்படையில் அவரது ஆதி காவ்யத்தின் புவியியலை ஆராயத் தொடங்கினார்.


மைசூரில் உள்ள சிவசமுத்திர நீர்மின் ஆற்றல் திட்டத்தை நிறுவிய புகழ்மிக்க பொறியாளர் சர்.கே.சேஷாத்ரி அய்யரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் பரமசிவ அய்யருக்கு கைகொடுத்தது. பிரிட்டிஷ் அரசு வெளியிட்டிருந்த புவியியல் நுண்விளக்க வரைபடத் தாள்களை (Coloured mile to inch Toppo Sheets) பார்த்துப் புரிந்து கொள்ளும் பயிற்சி இதன் மூலம் அவருக்கு வாய்த்திருந்தது. எனவே, அன்றைய பிரிட்டிஷ் இந்திய அரசின் ‘சர்வே’ துறையிலிருந்து 63ஆம் எண்ணுள்ள வரைதாளை (Survey of India Standard Sheet – 63) பெற்று அவர் ஆய்வு செய்தபோது வால்மீகி குறிப்பிடும் தமஸா, வேடஸ்ருதி, கோமதி, சயந்திகா, ஸ்சிறிங்கவேரபுரம் ஆகிய கங்கையின் வடகரைப் பகுதிகள் அனைத்தும் இன்றும் டோன் (தமஸா), பிஸ்வி (வேடஸ்ருதி), கும்தி (கோமதி), சாய் (சயந்திகா), சிங்ரார் (ஸ்சிறிங்கவேரபுரம்) என கிட்டத்தட்ட அதே பெயர்களில் நிலவுவது அவருக்கு வியப்பளித்தது.


தொடர்ந்து அவர் செய்த ஆய்வுகள் அயோத்தியிலிருந்து ‘லங்கா’ வரை ராமர் கடந்த பாதையைத் துல்லியமாகக் கண்டறிய வைத்தது. மிக விரிவான, பிரமாண்டமான வரைபடங்களின் உதவியோடு துல்லியமாக இதை நிறுவுகிறார் பரமசிவ அய்யர். தாமோ மாவட்டத்தின் 800 சதுர மைல்கள் பரப்புள்ள சோனார் ஆறு மற்றும் அதன் கிளை நதிகளான கோப்ரா, பிவாஸ் ஆகியவற்றால் வற்றாது வளமூட்டப்பட்ட ‘ஜனாஸ்தன்’ எனப்படும் வண்டல் படிந்த, மக்கள் செறிவுமிக்க பகுதிகளில் ‘கோண்டு’ பழங்குடியினருக்கும் பரவிவந்த ஆரியர்களுக்கும் இடையில் நடந்த போராட்ட வரலாறே இராமாயணம் என்கிற உறுதியான முடிவுக்கு வந்தார்.


இடையில் தமயனார் இறந்துபோன (1928) சோகத்தில் உறைந்து செயலற்றுப்போன பரமசிவர் 1934ல் நடைபெற்ற ஒரு சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து தனது அரிய ஆய்வு முடிவுகளை ஒரு நூலாக்கி வெளியிட வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். ‘இந்து’ நாளிதழில் வெளியான செய்திதான் அது. பரமசிவரால் பெரிதும் மதிக்கப்பட்ட பெரும் கவிஞரான ரவீந்தரநாத தாகூர் அவர்கள் சென்னைக் கூட்டம் ஒன்றில் பேசும் போது, “அயோத்தியின் அரசி (சீதை) ஒரு 10 தலை ராட்ஷசனால் கடத்திச் சென்று சிறை வைக்கப்பட்டது உங்களுடைய தீவில்தான் என நான் சிலோன் மக்களிடம் சொன்னேன்”, எனக் குறிப்பிட்டிருந்தார்.


“தெய்வீகப் பண்புகள் நிறைந்த அம்மாமனிதர் உதிர்த்த இச்சொற்கள் என்னை அதிர்ச்சியடைய மட்டுமல்ல, வேதனையுறவும் செய்தன” என்கிறார் பரமசிவ அய்யர். கவி தாகூர் மட்டுமல்ல, பண்டித நேரு, ஸ்ரீராஜாஜி ஆகிய பெரும் அறிஞர்களும் கூட இந்தக் கருத்தை அவ்வப்போது உதிர்த்தது பரமசிவ அய்யரைத் துன்புறுத்தியது. ஜுன் 1934ல் சிலோனில் பேசும்போது பண்டித நேரு ‘லங்கா’வையும் ‘சிலோனை’யும் ஒன்றாகவே குறிப்பிட்டார். திரும்பிவரும் வழியில் சென்னையில் நேருவுக்கு வரவேற்பு அளிக்கப் பட்டபோது, பண்டித நேரு “அனுமனைப் போல இலங்கையிலிருந்து பறந்து”, வந்ததாக ராஜாஜி குறிப்பிட்டார். இராமாயணப் ‘போர்’ இல்லாமலேயே தனது முயற்சிகளில் நேரு வெல்வார் எனவும் ராஜாஜி வாழ்த்தினார்.


அப்போது ராஜாஜி சென்னைப் பிரதமராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிகாரங்களில் உள்ளவர்கள், பொறுப்புமிக்க உயர் பதவிகளில் உள்ளவர்கள், அறிஞர் பெருமக்கள் இரு நாட்டு மக்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தக்கூடிய, தவறான தகவல்களின் அடிப்படையிலான வார்த்தைகளை உமிழ்வது பரமசிவரைத் துன்புறுத்தியது. “அப்படியானால் சர். பரோன் ஜெயதிலக (அன்றைய இலங்கைப் பிரதமர்?) இராவணனா?” என ஸ்ரீ.எஸ்.சீனிவாச அய்யங்கார் விமர்சித்ததும் பரமசிவரைக் கவர்ந்தது.


கிட்டத்தட்ட அயர்லாந்தை ஒத்த இலங்கைத் தீவில் இனத்தாலும், மதத்தாலும், மொழியாலும் வேறுபட்ட, ‘பவுத்த சிங்களர்களுக்கும், பிராமணியப்படுத்தப்பட்ட தமிழர்களுக்கும்’ இடையில் உருவாகியுள்ள பகை உணர்வுக்கு அடிப்படையாகச் சோழ, பாண்டிய மன்னர்கள் மேற்கொண்ட படையெடுப்புகள், அழித்த பவுத்த கலாச்சாரச் சின்னங்கள், நிறுவிய கட்டாயக் குடியிருப்புகள் ஆகியன பின்னணியில் உள்ளதை நினைவு கூறுகிறார் பரமசிவர். மஹா வம்சத்தில் இது பற்றிய குறிப்புகள் உள்ளன. அனுராத புரத்தையும் பொலனறுவையும், தீக்கிரையாக்கி ‘ஜனநாத மங்கலம்’ எனத் தன் பெயரை அவற்றிற்கு ராஜராஜ சோழன் சூட்டியதை நாமும் அறிவோம்.


இந்தப் பின்னணியில் பரமசிவ அய்யர் தனது நூலை அச்சிட்டு வெளியிடுகிறார் (1940). புவியியல் அடிப்படையில் கல்வி சார்ந்த ஆழமான அணுகல் முறையுடன் எழுதப்பட்ட இந்நூலைத் தமிழில் பெயர்த்து வெளியிடுவது இன்றைய சூழலில் மிக அவசியமான பணி, என்ற போதிலும் பரமசிவர் வந்தடைந்த சில முடிவுகளை மட்டும் இங்குத் தொகுத்துத் தர முயற்சிக்கப்படுகிறது.


கிருஸ்துவுக்கு முந்திய/பிந்திய சமஸ்கிருத இலக்கியங்கள் அனைத்திலும் போஜ மன்னனின் (கி.பி. 1010 – 1050) ஜம்பு ராமாயணம் வரைக்கும் சிங்களம் (சிலோன்) என்பது திரிகூட மலைமீது உள்ள இராவணனின் ‘லங்கா’வுடன் இணைத்துப் பேசப்பட்டதில்லை. குணாத்யாவின் காலம் தொடங்கி சாதவாகனர்களின் காலக் கட்டத்திலிருந்தே சிங்களம் என்பது நாகரீக மேம்பாடு அடைந்த ஒரு பவுத்த அரசாகக் குறிப்பிடப்படுகிறது. இரத்தினக்கற்களுக்குப் பேர் பெற்றதாக அது கருதப்பட்டது. கி.பி.330ல் சிங்கள அரசன் மேகவர்மன் பேரரசன் சமுத்ரகுப்தனுக்கு விலையுயர்ந்த பரிசு பொருளுடன் தூது ஒன்றை அனுப்பினான்.


புகழ்பெற்ற சீனப் பயணி பாஹியான் (கி.பி.5ம் நூற்றாண்டு) தமிழகத்திலிருந்து 14 நாள் பயணத்தில் சிலோனை அடைந்து புத்தரின் புனிதப் பல்லைக் காட்சிப்படுத்திய திருவிழாவில் கலந்து கொண்டார். ஹர்ஷ மன்னரின் (கி.பி.608-648) ‘இரத்னாவளி’யில் சிங்களம் பற்றிய குறிப்புகள் பல இடங்களில் உள்ளன. இராமாயணம் குறித்த அறிதல் ஹர்ஷருக்கு உண்டு. ‘இரத்னாவளி’யில் மேகநாதன் லட்சுமணனை வென்றது பற்றிய பதிவும் உண்டு. இருந்தபோதிலும் இராவணின் ‘லங்கா’வை அவர் சிங்களத்துடன் ஒன்றாக்கவில்லை.


வால்மீகி இராமாயணத்தில் ஒரே ஓரிடத்தில்தான் இராவணனின் இலங்கையும் இன்றைய சிலோனும் ஒன்று எனப் பொருள்படும் குறிப்பு உள்ளது (கிஷ்கிந்தா காண்டம், சர்கம்:41, பாடல்கள்:17-25). சிங்களம் என்கிற பெயர் குறிப்பிடப்படா விட்டாலும் மகேந்திரமலைக்கு எதிரே உள்ள தீவு எனப்படுகிறது. ‘பாண்டிய காவ்வதம்’ அல்லது கொற்கைக்கு அருகில் தாமிரபரணி கடலுக்குள் கலக்குமிடத்தில் அகஸ்தியர் அதை அமைத்தார் எனவும் குறிப்பிடப்படுகிறது. பின்னாளில் சிலோனையும் கொற்கைத் துறைமுகத்தையும் படையெடுத்து ஆக்ரமித்து, தலைநகர் அனுராதபுரத்தைக் கைப்பற்றி சிங்கள மன்னனை வீழ்த்திய இந்திய மன்னனை முகஸ்துதி செய்யும் நோக்குடன் இந்த வரிகளை இடைச்செருகலாகச் சேர்த்தனர் என்பதை விரிவான ஆதாரங்களுடன் பரமசிவர் நிறுவுகிறார்.


10ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழ மன்னர்கள் (ராஜராஜன், ராஜேந்திரன்) மிகப்பெரிய ஆற்றலாக வளர்ந்த காலத்தில்தான் இராமாயண ‘லங்கா’வும், இன்றைய சிலோனும் ‘ஒன்றாகப்பட்டது’. சுமார் 2 நூற்றாண்டுக் காலம் சூரிய வம்சத்தவர்களாகத் தங்களைக் கூறிக்கொண்ட சோழர்களின் ஆதிக்கத்தில் இலங்கை இருந்தது. தமிழ்க் கல்வெட்டுக்களில் சிலோன், ‘ஈழ’ என்றே குறிப்பிடப்படுகிறது. ‘ஈழ’ என்பது இலங்கை என்பதன் சுருக்கமாக இருக்கலாம். சோழ மன்னர்களின் காலத்தவரான கம்பர் தனது இராமாவதாரத்தின் கிஷ்கிந்தா காண்டம், நாடவிட்ட படலத்தில் ‘லங்கை’யைத் தமிழ்நாட்டிற்குத் தெற்கே உள்ளதாக ‘தெளிவாக’ வரையறுத்துவிடுகிறார்.


சற்று முன் குறிப்பிட்டடபடி போஜனின் காலம் வரை (கி.பி.1050) இராவணனின் ‘லங்கா’வும் இன்றைய சிலோனும் ஒன்றாக்கப்பட்டதில்லை. லட்சுமண சூரிதான் தனது யுத்த காண்டத்தில் முதன்முதலாக ‘சிங்களதீபம்’ என்கிற பொய்யை இடைச்செருகலாகச் சேர்த்திருக்க வேண்டும். “(திரிகூட) மலையுச்சி நகரமான லங்காவும் சிலோன் தீவும் மட்டுமல்ல. இராமேஸ்வரத்துக்கும் மன்னார் தீவுகளுக்கும் இடையில் அமைந்த மணற்திட்டுகளின் தொடரான ஆதம் பாலமும், கற்கள், மலைப்பிஞ்சுகள், மரங்கள், முட்புதர்கள் ஆகியவற்றால் இராமனின் உத்தரவின் பேரில் (யுத்தகாண்டம், சர்கம்:22, பாடல்கள்:50-70) வானரங்களால் அமைக்கப்பட்ட ‘நளசேது’வும் கூட இவ்வாறு ஒன்றாக்கப்பட்டது”.


ஒரு காலத்தில் ஆதம்பாலம் ஒரு தொடர்ச்சியான பூசந்தியாக இருந்து கி.பி.1480ல் புயல் ஒன்றில் சிதைக்கப்பட்டது என ராமேஸ்வரம் கோயில் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. வால்மீகி இராமயணத்தில் குறிப்பிடப்படும் மகேந்திர மலைக்கும் சுவேல மலைக்குமிடையில் 100 யோஜனை நீளமுள்ள வடக்குத் தெற்காகக் கட்டப்பட்ட ‘நளசேது’விற்கும் ஆதம் பாலத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரண்டையும் ஒன்றாக்கியதன் மூலம் இராமனின் படையெடுப்பைக் கொற்கைத் துறைமுகத்தி லிருந்து தனுஷ்கோடி என்பதாக மாற்றிய செயல், இராமேஸ்வரத்தில் லிங்கம் நிறுவப்பட்டு இராமேஸ்வரக் கோயில் கட்டப்பட்ட காலத்துடன் இணைத்திருக்க வேண்டும். ஆக ஆதம்பாலம் ‘நளசேது’வாக – ‘இராமர் சேது’வாக மாற்றப்பட்டது கி.பி.1000-1100 காலக்கட்டத்தில்தான் என்பது பரமசிவரின் உறுதியான முடிவு.


தொடர்ந்து இதையொட்டிப் பல கதைகள் கட்டப்பட்டன. கிழக்கிலங்கையில் அமிர்தகலி என்னுமிடத்திலுள்ள ஒரு குளம்தான் அனுமான் தீர்த்தம், அதாவது ‘லங்கை’யை எரித்தபின் தனது வால் நெருப்பை அனுமன் அணைத்த இடம் அது எனவும் குறிப்பிடப்படுகிறது. அமிர்தகலியில் உள்ள லிங்கத்தை பிரதிஷ்டை செய்தது இராமன் என்றும் கூறப்படுகிறது. ஆனால் வால்மீகி இராமாயணத்தில் (சுந்தரகாண்டம், சர்கம்:54, பாடல்:50) அனுமன் தன் வால்நெருப்பை சமுத்திரத்தில் அணைத்ததாகக் குறிப்பிடப்படுவது கவனிக்கத்தக்கது.


ஈஸ்வரன் அதாவது சிவன் ராட்சசர்களின் கடவுள். இராவணன்தான் லிங்கத்தை வணங்குபவன். திருமாலின் அவதாரமாகக் கருதப்படும், இராமன் சென்ற இடமெல்லாம் லிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாகக் கதை கட்டியது சமயவெறி பிடித்த சைவர்களின் வேலை என்கிறார் பரமசிவ அய்யர். கி.மு.180ல் ப்ருகத்ரதனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிய பார்ப்பனன் புஷ்யமித்ர சுங்கனின் காலத்தில் பவுத்தம் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு அழிக்கப்பட்டதை டாக்டர் அம்பேத்கர் விரிவாக எழுதியுள்ளதை நாம் அறிவோம் (‘பார்ப்பனியத்தின் வெற்றி’). சிரமண முனிவர்களின் தலைக்கு 100 தினார்கள் பரிசளிக்கப்பட்ட விவரத்தைப் பரமசிவரும் குறிப்பிடுகிறார்.


புஷ்யமித்ரனைப் புகழ்ந்து எழுதியுள்ள வடமொழியின் முக்கிய இலக்கண ஆசிரியன் பதஞ்சலி அசோக மன்னனைப் புறக்கணிப்பதையும், அவர் காலத்தில் உயிர்ப்பலிகள் தடுக்கப்பட்டதை மறைமுகமாகக் கண்டித்ததையும் குறிப்பிடுகிறார். இராமாயணத்திலும்கூட இராமனைப் பயன்படுத்தி புத்தரை இழிவு செய்யும் போக்கு மதவெறியர்களால் இடைச்செருகலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராமன் புத்தருக்கு முற்பட்டவன் என்பது யாவரும் ஏற்றுக் கொள்ளும் வரலாற்று உண்மை. ஆனால் அயோத்தியா கண்டத்தில் (சர்கம்:109, பாடல்:34) இராமன் புத்தரைத் திருடன் எனவும், நாஸ்திகன் எனவும் ஏசுகிறான். எல்லாம் புஷ்யமித்ரன் மற்றும் பதஞ்சலியின் காலத்திற்குப் பிந்திய செயல்கள் என்கிறார் பரமசிவ அய்யர். இப்படித்தான் சிங்கள தீபம், திரிகூட ‘லங்கா’வாகவும், மகேந்திர மன்னர்கள் இராவணர்களாகவும், பவுத்த சிங்களர்கள் ராட்சசர்களாகவும், புத்தர் திருடராகவும் கட்டமைக்கப்பட்டது. கி.பி.1000க்கு பின் இதுவே இந்திய வரலாறாக மாறியது. ‘இன்றைய தென்னிந்தியாவின் ஸ்ரீ ராமனான ராஜாஜிவாள்’, “இன்னொரு இராமாயண யுத்தத்தைத் தூண்டாதே”, என சிலோன் ஆட்சியாளர்களை எச்சரிக்கவும் நேர்ந்தது.


அயோத்தியாவில் தொடங்கி சரபுங்க மற்றும் பைசுனி ஆறுகளின் சங்கமத்தில் அமைந்த சரபுங்க முனிவரின் ஆஸ்ரமம் வரைக்குமான இராமனின் பயண வழியைத் தெளிவாக வரைகிறார் பரமசிவர். கங்கையின் வடகரையில் உள்ள சிங்ரார் (ஸ்சிறிங்க வேரபுரம்) தொடங்கி அவரது பாதை வருமாறு:


1. பிரயாகை, 2. யமுனையின் தென்கரையிலுள்ள புனித ஆலமரம் (வடசியாமா), 3. சித்ரகூடமலை, 4. அத்ரியின் ஆஸ்ரமம், 5. ராட்சசன் விராடன் புதையுண்ட குழி, 6. சரபுங்க முனிவரின் ஆஸ்ரமம். இவற்றில் சிங்ராரும் சித்ரகூடமும் (இராமாயணத்தின் ஸ்சிறிங்கவேரபுரமும்) மாவட்ட கெஸட்டியரில் தெளிவாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன. பரமசிவர் விரிவான ஆதாரங்களுடன் பிரயாகை எனப்படுவது கங்கையும், யமுனையும் கலந்து உருவான ஒரு பெரிய ஏரி என நிறுவுகிறார்.


தேவலுக்கு அருகில் உள்ள கத்ராவில் (அட்சம் 250 15’, தீர்க்கம் 810 30’) வளர்ந்த புனித ஆலமரம் கஜினி முகமதின் படையெடுப்பின்போது அழிந்திருக்கலாம். அத்ரியின் ஆஸ்ரமம் சித்ரகூட மலையிலிருந்து, 9 மைல் தொலைவிலுள்ள அனசுயா மலைதான். ‘டோப்போ’ வரைபடத்தில் அனசுயா குன்றுகளுக்குத் தெற்கே 3 மைல்கள் தொலைவில் உள்ள பீரத் குண்டுதான் இராம-லட்சுமணர்களால் விராடன் புதையுண்ட குழி. பீரத் குண்டுக்குத் தெற்கே ஒரு யோஜனை தொலைவில் இரு நதிகளின் சங்கத்தில் அமைந்தது சரபுங்க ஆஸ்ரமம்.


விந்தியமலைக்கும், சைவலாவிற்கும் இடையில் உள்ளதாகக் கூறப்படும் தாண்டகவனம் (தண்டகாரண்யம்) பண்ணாதொடருக்கும் (வடக்கே) விந்தியத்திற்கும் (தெற்கே) இடைப்பட்ட பகுதி. பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட ‘கெஸட்டியர்’ மற்றும் சர்வே மேப்புகளின் உதவியுடன் பரமசிவர் வந்தடையும் முடிவுகள் இவை. ‘லங்கா’வை உச்சியில் கொண்ட சித்ரகூடமலை அட்சம் 250 10’ தீர்க்கம் 800 51’-ல் அமைந்துள்ளது. மகேந்திர மலையிலிருந்து சுவேல மலையில் உள்ள திரிகூட ‘லங்கா’வை வந்தடைவதற்கு இராவணன், அனுமன், வானரப்படை சகிதம் இராம-லட்சுமணர் ஆகியோர் 100 யோஜனை தூரமுள்ள சமுத்திரத்தைக் கடக்க வேண்டியிருந்தது. இவர்களில் யாரும் இடையில் நர்மதையைக் கடக்க நேரவில்லை. நர்மதையைத் தாண்டி இராமன் வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார் அறுதியாக பரமசிவர். எந்த வகையிலும் இன்றைய இலங்கை, மலையுச்சி நகரமான வால்மீகியின் ‘லங்கா’ அல்ல.


இராமாயணத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் இராமனின் பஞ்சவடியில் தொடங்கி இராவணனின் ‘லங்கா’வில் முடிகிறது. இராவணன் கழுதை பூட்டிய ரதம் ஒன்றிலேயே சீதையைத் தூக்கி வந்தான். குதிரை இந்திய மிருகமல்ல என்பது குறிப்பிடத்தக்கது. பம்பை ஏரி, சீதை தன் ஆபரணங்களை எறிந்த குன்று, இராவணன் சுபார்வாவைச் சந்தித்த மலைப்பிளவு ஆகியன இடையிலுள்ள முக்கிய நிலக்குறிகள். மகேந்திர மலையிலிருந்து அனுமன் கடலைக் கடந்தான் என்பதாகவும் குறிப்பு வருகிறது. ஆக மகேந்திர மலைக்கும் ‘லங்கா’ அமைந்திருந்த சுவேல மலைக்கும் இடைப்பகுதி இராவணனால் கழுதை பூட்டிய ரதத்தால் கடக்கப்பட்டது. அனுமன் அதை நீந்திக் கடந்தான். இராமனோ தனது வானரப் படையின் உதவியோடு தற்காலிகப் பாலம் அமைத்துக் கடந்தான்.


இடைப்பட்ட கடலைக் கடந்தது (லங்கண) பற்றிச் சொல்லுகையில் இராவணனைக் குறிக்கும்போது செல்லுதல் (கமண) எனவும், அனுமனைக் குறிக்கும்போது நீந்துதல் (பிளவண) எனவும் குறிப்பிடப்படுகிறது. எங்கும் ‘தயண’ (பறந்து கடத்தல்) எனக் குறிப்பிடப்படவில்லை. அதாவது மகேந்திர மலைக்கும் திரிகூடத்திற்குமுள்ள 100 யோஜனைத் தொலைவு என்பது வசந்த காலத்திலும் கோடை காலத்திலும் (மார்ச் – ஜூன்) கழுதை வண்டி ஒன்றால் கடக்கக்கூடிய ஒரு ஆற்று நீர் வற்றிய பகுதிதான் என்பது கவனிக்கத் தக்கது. பிற காலங்களிலேயே நீந்துதலோ, பாலமோ தேவைப்படுகின்றன.


“யோஜனை’ என்கிற தொலைவு குறித்து இரு விளக்கங்கள் வால்மீகியில் காணப்படுகின்றன. பொதுவாக ஒரு யோஜனை என்பது 4 குரோசாக்கள் அளவுடையது. 1 குரோசா என்பது 1000 வில்நாண் நீளமுடையது. 1 வில் நாண் என்பது 6 அடி நீளம். எனவே, 1 யோஜனை இந்தக் கணக்கில்படி 4 1/2 மைல்கள் என்றாகிறது. பிறிதோரிடத்தில் ‘யோஜனை’ என்பது ஒரு நூறு வில் நாண், அதாவது 600 அடி நீளமுடையது எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மகேந்திர கிரிக்கும், ‘லங்கை’க்கும் இடையே ‘கடலால்’ பிரிக்கப்பட்ட தொலைவு ஒரு கணக்கின்படி 450 மைல்கள், இன்னொரு கணக்கின்படி 11 1/2 மைல்கள். இந்த இரண்டுமே தனுஷ்கோடியையும் மன்னாரையும் இணைக்கும் 30 கல் தொலைவு நீளமுள்ள கடற்பகுதியுடன் பொருந்தி வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

உண்மையை அருளிய குருவின் முன் சீடன் வீழ்ந்து வணங்கியது போல இந்த உண்மைகளை விளக்கப் படுத்திய 55.M என்கிற எண்ணுள்ள வண்ண டிகிரி வரைபடத்தின் முன் தான் வீழ்ந்து வணங்கியதாக உணர்ச்சி ததும்பக் குறிப்பிடுகிறார் பரமசிவர். பரமசிவர் வந்தடைந்த முக்கிய முடிவுகளை மீண்டும் ஒருமுறைத் தொகுத்துக் கொள்வோம்.


மகாபாரதத்திலிருந்து இலியத் வரையிலான மகா காவியங்களின் அடித்தளமாக சில வரலாற்றுண்மைகள் உள்ளன. அவை குறிப்பிடக் கூடிய புவியியல் பகுதிகள் அடையாளம் காணக் கூடியன. அந்த வகையில் பரமசிவ அய்யர் இராமாயணத்தின் புவியியலைத் துல்லியாக வரைந்துவிடுகிறார்.


இராமேஸ்வரம் தீவிற்கும் மன்னார் தீவிற்கும் இடைப்பட்ட சுமார் 30 கல் தொலைவிலுள்ள மணல் திட்டுகளின் தொடரான ஆதம் பாலம் வடமேற்குத் திசையிலிருந்து வடகிழக்குத் திசையில் அமைகிறது. ஆனால் வால்மீகியில் குறிப்பிடப்படும், வானரப் படைகளின் உதவியோடு இராமன் கட்டிய பாலம் மகேந்திரகிரிக்கும் சுவேல கிரிக்கும் இடையில் 100 யோஜனைத் தொலைவு உடையது; வடக்குத் தெற்கு திசையில் அமைந்துள்ளது. இரண்டும் வேறு வேறு. இராவணனின் ‘லங்கா’ இன்றைய சிலோன் அல்ல.


‘லங்கை’ச் சுற்றியுள்ள ‘சாகரம்’ என்பது என்ன? திரிகூடம் என்பது இந்த்ரான மலை. 1932 அடி உயரம் உடையது. அதன் முப்புறங்களிலும் கிரண் நதி தழுவி ஓடுகிறது. ‘லங்கை’ திரிகூட மலையில் உச்சியில் உள்ளது. (ஆரண்ய காண்டம் – சர்கம்:47 பாடல்:29) ஜபல்பூர் கெஸட்டியர் கூறுவது: “பருவ மாதங்களில் ஹவேலிச் சமவெளி ஒரு மிகப்பெரிய ஏரியைப் போலத் தோற்றமளிக்கும். விந்தியமலை இந்தச் சமவெளியிலிருந்து மேலெழுந்தது போல் தெரியும். இந்த்ரான மலையின் மூன்று பகுதிகளிலும் தழுவிச்செல்லும் கிரண் நதி பனகர் – சிங்கள் தீபம் – மசோலி சாலையில் 15வது மைல்கல் வரை பழங்காலங்களில் ஒரு ஏரியைப் போல் பரவித் தோற்றமளித்திருப்பது சாத்தியம். இந்த மலையுச்சி அமைந்துள்ளது அட்சம் 23 டிகிரி 24’, தீர்க்கம் 79 டிகிரி 54’ல்”. ஆறுகளுக்கு இடையில் உள்ள திட்டுக்களை ‘லங்கா’ என்று அழைக்கும் மரபு இந்தியாவில் உண்டு என்பதைப் பல ஆதாரங்களுடன் பரமசிவ அய்யர் நிறுவுகிறார். உதாரணமாக கோதாவரி லங்கா, சோனா லங்கா, ரூப்யா லங்கா போன்றவையும், இதேபோல் தால் ஏரியில் உலார் ஏரியும் பரமசிவரால் குறிப்பிடப்படுகின்றன.


அடுத்ததாக ராட்சசர்கள் என்பது யார்? வானரர்கள் என்பது யார்? கிட்கிந்தை எங்கே இருக்கிறது? இராம – இராவண யுத்தம் எதைக் குறிக்கிறது? என்கிற கேள்விகள் எழுகின்றன. கோண்டுகள் என்னும் பழங்குடியினரே ராட்சசர்கள். பார்ப்பனிய மயமான விபீஷணனும் அவனது வழியில் வந்தவர்களும் ராஜ கோண்டுகள் எனப்படுவர் என்றும், சாதாரண கோண்டுகள் (துர்கோண்டுகள்) இன்றும் மத்திய மாகாணங்களில் இராவண வம்சிகள் என்று அழைக்கப்படுவதாகவும் பரமசிவ அய்யர் குறிப்பிடுகிறார். திரிகூட மலை ஒரு காடு நிறைந்த பகுதி. “தாண்டவ வனத்தின் காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிவோம் (ஆரண்ய காண்டம், சர்கம்:17, பாடல்:28)” என சூர்ப்பனகை இராமனை அழைப்பது குறிப்பிடத்தக்கது.


வன மாமிசங்களில் மிகவும் வேட்கையுடையவர் களாகவும், அழுகிய மாமிசமானாலும்கூட விரும்பி உண்ணுபவர்களாகவும் இவர்களைப் பற்றி மாண்டியா கெஸட்டியர் குறிப்பிடுகிறது. நிமரிலிருந்து ஹசரிபாக் வரை பரவியுள்ள சாத்பூரா, சோட்டா – நாக்பூர் பீடபூமியின் காடுகள் அடர்ந்த பகுதியில் கோண்டுகளோடு வசிக்கக் கூடியவர்கள் கோர்க்கர்கள் (குறவர்கள்). இவர்களைப் பற்றி வழிப்பறி செய்யும் குற்றப் பரம்பரையினர் என்ற வகையில் கெஸட்டியர்கள் குறிப்பிடுகின்றன. கோண்டுகள் ‘கோண்டி’ எனப்படும் திராவிட மொழியைப் பேசுபவர்கள், கோர்க்கர்கள் ‘முண்டா’ மொழி பேசுவோர். இவர்களே வால்மீகி குறிப்பிடும் வானரர்கள் என்பது பரமசிவ அய்யரின் முடிவு.


வால்மீகி இவர்களை எங்கும் ஆடையுடுத்தாத அம்மணர்களாகக் குறிப்பிடவில்லை. சுக்ரீவன் தன்னைப் பற்றிச் சொல்லும்போதுகூடத் தனது சகோதரன் வாலி எல்லா மக்களையும் அமைச்சர் களையும் அழைத்துத் தன்னைப்பற்றி ஒரு விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்து ஒற்றைத் துணியுடன் நாடு கடத்தியதாகக் குறிப்பிடுவான். (கிஷ்கிந்தா காண்டம், சர்கம்:10, பாடல்:26). சுக்ரீவனும், வாலியும் போரிடுவதற்கு முன் தங்கள் இடைக்கச்சுகளை இறுக்கிக் கட்டிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது (கிஷ்கிந்தா காண்டம், சர்கம்:6, பாடல்:26,27). வளமான ஜனஸ்தானத்தைக் கோண்டுகளிடமிருந்து ஆரியர்கள் கைப்பற்றிய தற்கான போரே இராம-இராவண யுத்தம்.


விரிவான வரைபடங்கள், இராமாயணத்தில் காணப்படும் புவியியற் பகுதிகளைக் குறிப்பிடும் சர்வே வரைபடங்களின் எண், அட்ச, தீர்க்கக் குறிகள் ஆகியவற்றைக் காட்டும் அட்டவணைகள் ஆகியவை நூலில் பிண்ணினைப்பாகத் தரப்பட்டுள்ளன. நூலின் இரண்டாம் பாகத்தில் இராமன் 11000 ஆண்டுகள் வாழ்ந்தது உண்மையா? இராமன் நாடு கடத்தப்பட்டதற்கான உண்மையான காரணம் என்ன? லட்சுமணன், பரதன் இவர்களில் யார் மூத்தவர்? வால்மீகியின் மானுடப் பின்புலம், பெண்கள் குறித்த அவரது பார்வை, சீதை லட்சுமணனை அவமானப் படுத்தியது உண்மையா? காயத்ரி இராமாயணம் என்பது என்ன? ஆகிய பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு தமது விளக்கங்களையும் ஆய்வு முடிவு களையும் முன் வைக்கிறார் பரமசிவர்.


வால்மீகியின் ‘லங்கை’ வட இந்தியாவில்தான் உள்ளது என்கிற உண்மை புதிதல்ல. மார்க்சிய அறிஞர்களும் வேறு பல வரலாற்று ஆசிரியர்களும், இதனை நீண்ட காலமாகச் சொல்லி வருகின்றனர். கங்கைச் சமவெளியின் அரசு உருவாக்கத்திற்கும் இனக்குழு மக்களுக்குமிடையேயான முரணே இராமாயண வரலாறு என்பதும் முன்பே பேசப்பட்டுள்ளன (பார்க்க: அ.மா.வால்மீகி ராமாயணம் சில குறிப்புகள், விலகி நடந்த வெளிகள்- கருப்புப்பிரதிகள்).


பரமசிவ அய்யர் அதிர்ச்சியடையக்கூடிய புதிய உண்மை எதனையும் சொல்லிவிட்டார் எனக் கூற முடியாது. எனினும் அவர் எழுதிய காலம், சூழல், இதற்கென அவர் எடுத்துக் கொண்ட பிரயாசை ஆகியன மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. விரிவான ஆய்வு ஆதாரங்களுடன் தனது முடிவுகளை நிறுவும் பாங்கு குறிப்பிடத்தக்கது. பிறப்பால் பார்ப்பனர் ஆயினும் அவரது நேர்மையும், அறிந்த உண்மைகளை அது தமது கருத்தியலுக்கு எதிரானதாக இருந்தபோதிலும், சொல்லத் துணிவதும் நாம் வணங்கத்தக்க பண்புகளா கின்றன. நேர்மை, அறம், அன்பு ஆகியவற்றைக் காட்டிலும் வேறென்ன பண்பு மானுடமாக இருக்க முடியும்?


பரமசிவ அய்யர் எந்தச் சூழ்நிலையில் இதை எழுத நேர்ந்தார் என்பது நம் அனைவரது மனச்சாட்சியையும் உரசிப் பார்க்கக் கூடிய ஒரு நிகழ்வாக அமைகிறது. பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட வரலாற்று திரிபுகள் ‘உண்மை’களாகவே இறுகி நாமறியாம லேயே நமது ஓர்மையின் ஓரங்கமாகிவிட்ட நிலையில் அதன் வெளிப்பாடுகள், சமகாலத்தில் மானிடர்களுக்கிடையே வெறுப்பையும், பகையையும் ஏற்படுத்திவிடலாகாது என்கிற பதைபதைப்பு… ஓ! எத்தனை உன்னதமானது.


நன்றி.

Ramayana and lanka (K.Paramasiva Iyar)

மற்றும் கட்டுரையாளர் அ.மார்க்ஸ்


Mar 14, 2021

நடுப்பக்க நயம்

                                    கம்பனைப் போலொரு… பகுதி – 12

                                  மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

  

கம்பராமாயணத்தைத் திராவிடர்கள் எதிர்க்கும் காரணங்களில் அடுத்தது...

 

“இராமனை ஆரியன் என்பதால் நல்லவனாகவும், இராவணனைத் தமிழன் என்பதால் கெட்டவனாகவும் காட்டினார்

 

இதற்கு விளக்கம் சொல்லப் புகுமுன்பு சில உட்செய்திகளையும் உற்றுநோக்க வேண்டியதா கிறது. இந்த விளக்கத்தை இரண்டாகப் பிரித்துக்கொள்வோம்.

1.       இராம / இராவணனின் இனம் எது?

2.       இராம / இராவணனின் பண்புகளைக் கம்பர் காட்டும் விதம்.

***

முதலில் இராம / இராவணனின் இனம் எது? என்பதைச் சிறிது ஆராய்வோம்.

 

மனுதர்மத்தில் குறிப்பிட்டுள்ளபடி,"சத்தியவிரதன்'' திராவிடர்களின் இறைவனாயிருந்தான். இந்தக் குறிப்பு பாகவதத்திலும் இருக்கிறது.

 

யசௌ சத்யவ்ரதோ நாம ராஜரிஷிர் த்ராவிடேஸ்வர:

ஞானம் யோதீத கல்பாந்தே லபே புருஷ சேவயா

வை விவஸ்வத:

புத்ரோ மனுர் ஆஸீத் இதி ச்ருதம் த்வத்தஸ் தஸ்ய சுதா:

ப்ரோக்தா இக்ஷ்வாகு ப்ரமுகா ந்ருபா:

(பாகவதம் 9.1.2 & 9.1.3)

 

வான்மீகியின் காட்டுப்படி இராமனின் வம்சாவழி.

1.       ப்ரம்ஹாவின் மகன் மரீசி

2.       மரீசியின் மகன் காஷ்யப்

3.       காஷ்யப் மகன் விவஸ்வான்

4.       விவஸ்வான் மகன் வைவஸ்வத மனு

5.       வைவஸ்வத மனு மகன் இக்ஷ்வாகு (இவர்தான் அயோத்தியை உருவாகினார்).

6.       இக்ஷவாகு மகன் குக்ஷி.

7.       குக்ஷி மகன் விகுக்ஷி

8.       விகுக்ஷி மகன் பான்

9.       பான் மகன் அன்ரன்யா

10.     அன்ரன்யா மகன் ப்ருது

11.     ப்ருது மகன் த்ரிஷங்கு (இவருக்காக விஸ்வாமித்ரர் ஸ்வர்கம் படைத்தார்)

12.     த்ரிஷங்கு மகன் துந்துமார்

13.     துந்துமார் மகன் யுவனஷ்வா

14.     யுவனஷ்வா மகன் மாந்தாதா

15.     மாந்தாதா மகன் சுசந்தி

16.     சுசந்தி மகன் துவசந்தி மற்றும் ப்ரசந்ஜீத்

17.     துவசந்தி மகன் பரத்

18.     பரத் மகன் அஸித்

19.     அஸித் மகன் ஸாகர்

20.     ஸாகர் மகன் அஸமஞ்ச

21.     அஸமஞ்ச மகன் அன்ஷுமான்

22.     அன்ஷுமான் மகன் திலீபன்

23.     திலீபன் மகன் பாகீரதன் (கங்கையை வானுலகிலிருந்து பூலோகம் தந்தவன்)

24.     பாகீரதன் மகன் காகுஸ்தன்

25.     காகுஸ்தன் மகன் ரகு (காளிதாஸன் ரகுவம்ஸம் )

26.     ரகு மகன் ப்ரவ்ருத்

27.     ப்ரவ்ருத் மகன் ஷம்கன்

28.     ஷம்கன் மகன் ஸூதர்ஷன்

29.     ஸூதர்ஷன் மகன் அக்னிவர்மன்

30.     அக்னிவர்மன் மகன் சிஹ்ராக்

31.     சிஹ்ராக் மகன் மேரு

32.     மேரு மகன் பரஷுக்ஷுக்

33.     பரஷுக்ஷுக் மகன் அம்பரீஷ்

34.     அம்பரீஷ் மகன் நகுஷ்

35.     நகுஷ் மகன் யயாதி

36.     யயாதி மகன் நபாங்

37.     நபாங் மகன் அஜ்

38.     அஜ் மகன் தஸரதன்

39.     தஸரதன் மகன் ராமன், லக்ஷமணன், பரதன், சத்ருக்னன்

40.     ராமன் மகன் லவன், குசன்

 

ஆக... ப்ரஹ்மாவின் 39ஆவது தலைமுறை இராமன்.

மூன்றாம் தலைமுறையான வைவஸ்த மனுவின் (சத்திய விரதன்) மகனான இக்குவாகுஇக்குவாகு’ வம்சத்தைத் தோற்றுவித்தவன்.

 

இதோ... வான்மீகி காட்டும் இராமனின் குலத்தைப் பற்றிய பாடல்.

 

வசிட்டோ பகவானே த்ய வைதேஹி மிதம்பர வீத் |

ராஜா தசரதோ ராஜன் க்ருத கோ துமங்களை: ||

- பால காண்டம்

 

இஷ்வாகு வம்ச ப்ரபவோ ராமோ நாம ஜனை : க்ஷுத: |

நியதாத்மா மகாவீர் போ த்யுதிமான் த்ரிதிமான் வஷி II

- ( சர்க்கம் 37 ) பால காண்டம்

 

இக்குவாகு வம்சத்தில் வந்தவன் இராமன் என்பது இராமாயணச் செய்தி. எனவே, இக்குவாகுவின் தந்தை சத்தியவிரதன்திராவிடக்கடவுள்என்பதால் அவ்வழி வந்த இராமனும் திராவிடனே என்பது பெறப்படுகிறது

 

சத்தியவிரதனைச் சத்திரிய குலத்தவனாகக் காட்டும் மனுவின்படி அவ்வழி வந்தவர்கள் மதிப்பிழந்த ஐதரேய பார்ப்பனர்கள் எனப்பட்ட விசுவாமித்திரர் குலத்தினராகப் பிரிக்கப் பட்டவர்கள்.

எனவே, மனுவின்படியும், பாகவதத்தின்படியும் பார்ப்பனர்களில் தாழ்ந்தவனான இராமனைத் திராவிடப் பார்ப்பனர் குலத்தைச் சார்ந்தவன் என்பதே சரி. இவர்களின் வழிவந்த காரணத்தாலேயே ஞானசம்பந்தரும்திராவிடசிசு’ என்றழைக்கப்பட்டார் என்க.

 

அதே இராமாயணத்தில் காட்டப்படும் இராவணன் அந்தணர் குலத்தவனாகவே கம்பரால் காட்டப்படுகிறான்.

 

நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய்;

ஆயிரம் மறைப் பொருள் உணர்ந்து, அறிவு அமைந்தாய்;

(கம்ப. யுத்த.இராவணன் மந்திரப்படலம்.)

 

ஆனால் வான்மீகி இராவணன் தாழ்ந்த குலத்தவன் என்பதற்கும், இந்த இராமாயணக் கதை உண்மையில் இரு மன்னர்களுக்கிடையே நடைபெற்ற போர்ச்செய்திகளை உள்ளடக்கியது என்பதற்கும் பின்வரும் செய்தியைச் சான்றாகத் தருகிறேன்.

 

இராமாயணக் கதை நடந்ததாகச் சொல்லப்படும் பகுதி இன்றைய பீகாரின் சத்தீஸ்கர் மாநிலத்தில் கங்கையின் கிழக்குக் கரையிலிருந்து மேற்குக் கரைவரையாகும்.

 

கங்கையின் கிழக்குக் கரையிலிருந்த அயோத்தியை ஆண்ட இராமன் என்னும் மன்னனின் மனைவியான சீதையை, மேற்குப் பகுதியை ஆண்ட இராவணன் என்பான் கவர்ந்து கொண்டு சென்று தன் நாட்டில் சிறைவைத்தான்.

 

கங்கையின் மேற்குப் பகுதியில் (இன்றைய சத்தீஸ்கர் மாநிலத்தில்) மழைக் காலங்களில் வெள்ளம் புகுந்து தாழ்வான பகுதிகள் நீரால் நிரம்பி மேடான பகுதிகள் தீவுகள் போல் மாறிவிடும் நிலை இன்றைக்கும் நிகழ்கின்ற ஒரு செயலாகும்.

 

இப்படி நீரால் சூழ்ந்த பகுதியை அவர்களது மொழியில்லங்கா’ என்றழைப்பது இன்றைக்கும் உள்ள வழக்காகும். நீர் வற்றிய பின்பு கல்லையும், மண்ணையும் கொட்டிச் சமன்படுத்திப் பயன்படுத்துவதும் வழக்கமாகும்.

 

தமிழ்நாட்டு மன்னர்கள் எதிரி நாட்டுடன் போரிட அந்நாட்டுப் பசுக்களைக் கவர்வது வழக்கமாக இருந்ததுபோல், வடநாட்டில் அரசிகளைக் கவர்வதும், அவட்பொருட்டுப் போர் நிகழ்வதும் வழக்கமானதே. அப்படியான ஒரு வழக்கத்தால் கங்கையின் மேற்குப் பகுதி மன்னன் இராவணன் கங்கையின் கிழக்குப் பகுதி மன்னனான இராமனின் மனைவியைக் கவர்ந்து சென்று, நீர்சூழ்ந்த லங்காவில் (அவர்களது மொழியில் தீவு என்பது பொருள்) வைத்திருக்க, இராமன் பெரும்படை நடத்தி இராவணனை வென்று லங்காவிலிருந்து சீதையை மீட்கிறான்.

 

இவையே வான்மீகி இராமாயணத்தின் மூலம் பெறப்படுகின்ற செய்தியாகும். கூடுதலான இன்னொரு செய்தி... வான்மீகி இராவணன் உண்மையிலேயே தாழ்ந்த குலத்தவன்தான். அதுவும் பழங்குடி மக்களின் இறைவனாகவே இன்றைக்கும் போற்றப்படுபவன். தன் மன்னனின் மனைவி தாழ்ந்த குலத்தவனால் சிறைபிடிக்கப்பட்டதுபோல் காட்டினால் அது தங்கள் குலத்துக்கு இழுக்கு என்பதால் அவனை அந்தணனாகத் திரித்துக் காட்டினார்கள்.

 

இதற்கு வலுவூட்டும் விதமாகப் பின்வரும் செய்தியை இணைக்கிறேன்...

 

துர்கா பூஜையும், தசராவும் இந்தியாவின் பார்ப்பனிய இந்துக்களுக்கு வேண்டுமானால் கொண்டாட்டத்திற்குரிய ஒரு நாளாக இருக்கலாம். ஆனால் பழங்குடி மக்களுக்கு அல்ல! ஏனெனில் அது அவர்களின் முன்னோர்கள் - கடவுள் கொல்லப்பட்ட நாளாகும். அக்கொலையே கொண்டாடப் படுகிறது. ஆனால் இனி மேலும் அது நடைபெறாது. மஹிசாசுரவதம் கொண்டாடு பவர்களின் முகத்தில் அறைந்தாற் போல் அவர்கள் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக, கலாச்சார ரீதியாக பழங்குடி மக்கள்மஹிசாசுரவதம்கொண்டாடுவதை எதிர்த்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

கேன்கர் (Kanker) மாவட்டத்தில் உள்ள பகன்ஜோரில் (Pakhanjor), துர்கா பூஜை கொண்டாடுவது தங்கள் முன்னோரான மஹிசாசுரனை அவமதிக்கும் என்பதால், அதனை அனுமதிக்கக் கூடாதென்று பழங்குடிகள் அதிகாரிகளை எச்சரித்தனர். ஆனால் அந்த எச்சரிக்கை பலனளிக்காத நிலையில், ‘பழங்குடிகள்- மண்ணின் மைந்தர்கள்அமைப்பின் உறுப்பினர்கள் மஹிசாசுரன் மீதான அவமதிப்புக்கு எதிராக எஃப்..ஆர் ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.

 

கேன்கர் மாவட்ட எஸ்.சி-எஸ்.டி குழுவின் துணைத்தலைவர் லோகேஷ் சோரி தான் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளார். அவர் 153 (), 295 () மற்றும் 298 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். பகன்ஜோரில் துர்கா பூஜை கொண்டாட்டக் குழு உறுப்பினர்கள் மீது எஃப்..ஆர் பதிவானதை மாவட்ட ஆட்சியர் எம்.எல்.கோட்வானி உறுதி செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தற்போது தப்பிச் சென்றுவிட்டனர் என்றும், அவர்களது மொபைல் எண்களை வைத்து அவர்களைத் தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

கடந்த ஒரு வருடமாக பழங்குடி மக்கள் ஒன்றாகக் கூடி, உண்மையான வரலாறைப் பற்றித் தாங்கள் கற்றதையும், புரிந்து கொண்டதையும் பரிமாறிக் கொண்டனர். அதனையொட்டி, இந்த ஆண்டு அவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்தனர். முதல் செய்தி ராய்கார் பகுதியிலிருந்து வந்தது. அது, 10 பஞ்சாயத்துகளில் துர்கா பூஜை கொண்டாடக் கூடாதென்றும், இராவணனின் உருவ பொம்மையை எரிக்கக் கூடாதென்றும் பழங்குடிச் சமூகத்தினரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகும்.

 

இந்த 10 பஞ்சாயத்துகளின் தலைவர்களும் ராய்காரில் உள்ள காவல் நிலையத்திற்கு ஒன்றாகச் சென்று மனு கொடுத்தனர். ராஜநாந்த்கான் மாவட்டத்திலுள்ள மொஹ்லா மன்பூர்-இல், ‘சர்வ ஆதிவாசி முல்னிவாசி சமாஜ்சார்பாக சத்தீஸ்கர் ஆளுநருக்கு மனு கொடுக்கப் பட்டது. டவுண்டி-லோகாரா பகுதியின் முன்னாள் எம்.எல்.. ஜனக்லால் தாக்கூர் உட்பட 20 பேர் கையொப்பமிட்ட அந்த மனுவில் உள்ளவை:-

 

“பழங்குடி - மண்ணின் மைந்தர்களாகிய நாங்கள், இந்து மதத்தின் பழக்க வழக்கங்களையும் சடங்குகளையும் பின்பற்றுவதில்லை. எங்களுக் கென்று ஓர் பண்பாடும், கலாச்சாரமும் உள்ளது. அதன் படி, இராவணனும், மஹிசாசுரனும் எங்கள் மூதாதையர்கள். எனவே, நாங்கள் அவர்களை வணங்குகிறோம். இருப்பினும், இந்து மத வேதங்களில் அவர்களை இராட்சதர்களாக (அரக்கர்களாக) விவரித்து, காலங் காலமாக அவமதித்து வருகின்றனர். ஆகையால், ஆதிவாசி மூல்னிவாசிகளின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, இராவணனின் உருவ பொம்மையை எரிப்பதையும், மஹிசாசுரனை அவமதிப்பதையும் பட்டியலிடப்பட்ட பகுதிகளில் (Scheduled areas) உடனடியாகத் தடை செய்யும்படி நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள எமது உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு இது அவசியமானதாகும்.” என்று குறிப்பிட்டிருந்தனர்.

 

சுக்மா மாவட்டத்தில், அனைத்து கிராமங்களின் தலைவர்கள் சார்பாக ஒன்றியத் தலைவர் மஞ்சுகாவாசி ஒரு மனு அளித்துள்ளார். தங்களுக்குள் விரிவான விவாதத்திற்குப் பிறகு தான் அம்மனுவை அளித்துள்ளனர். அம்மனுவில்,

 

“நாங்கள் இந்தியாவின் பழங்குடி மக்கள். மண்ணின் மைந்தர்கள். எங்கள் நம்பிக்கையானது, இயற்கை வழிபாடு மற்றும் மூதாதையர் வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது. நாங்கள் இந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து பின்பற்றுகிறோம். இந்தியா ஒரு மதச்சார்பற்ற தேசமாக இருப்பதால், அனைத்து சமய, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைச் சேர்ந்த மக்கள் இங்கே வாழ்கின்றனர். ஆனால் பழங்குடிகள் இந்துக்கள் அல்ல. இது நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. பழங்குடி மக்கள் இந்துக்கள் அல்ல என்பதால், அச்சமூகத்தின் முன்னோர்களான இராவணன், கும்பகர்ணன் மற்றும் மஹிசாசுரனை எரிப்பதென்பது அவர்களை அவமதிக்கும் செயலாகும். ஒரு சமூகத்தின் மதம் மற்றும் நம்பிக்கைகளை அவமதிக்கும் செயல்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தடை செய்யப் பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், பத்தாம் பாகத்தின் கீழ் உள்ள பிரிவு 244-இன் படி, ஐந்தாவது அட்டவணையில் பழங்குடிகளுக்குச் சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்கள் இராட்சதர்கள் (அரக்கன்) எனக் குறிப்பிடப்படும் இராவணன், கும்பகர்ணன் மற்றும் மஹிசாசுரன் ஆகியோரைத்தான் பட்டியலிடப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் வழிபடுகின்றனர். இந்துக்கள் எங்கள் மூதாதையர்களை எரித்துக் கொல்வதென்பது எங்கள் சமுதாயத்தின் கலாச்சாரத்தைக் காயப்படுத்தும் செயல் மட்டுமல்ல. அது தேசத்துரோக செயல் ஆகும்.

 

ஐந்தாவது அட்டவணையின்படி, எஸ்.சி, எஸ்.டி சட்டம் மற்றும் பிரிவு 124ஏ ஆகியவற்றின் கீழ் இச்செயலை எதிர்த்து நடவடிக்கை எடுக்கலாம். அத்தகைய குற்றத்தை ஆதரிக்கும் அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்யவும் விதிகள் உள்ளன. ஆகையால் பழங்குடிகளின் கலாச்சார பூமியில் எங்கள் மூதாதையர்களை எரிக்க அனுமதியளிக்க வேண்டா என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தனர்

 

பழங்குடி மக்கள் தங்கள் கடவுளை வெளிப்படையாக வணங்க முடியாத நிலையில், ஒரு பெரிய வெற்றி இது. ஜாஞ்கிர்-சம்பாவில் உள்ள ரோக்டா கிராமத்தில் பழங்குடிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபடுவதற்கு மஹிசாசுர சன்னதி உள்ளது. பல்வேறு தருணங்களில் பயத்தினால் பழங்குடி மக்கள், தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதில்லை. அசுரப் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் என்று ஆதிக்க ஜாதியினரால் உடனடியாக அடையாளம் காணப்படுவதால், தங்கள் சமூகத்தினர் மீது ஏற்படும் விளைவுகளை எண்ணி அஞ்சுவர். அரசு நிறுவனங்கள் அவர்களை அரக்கர்களாகக் (குற்றவாளிகள்) கருதித் தாழ்வாக எண்ணிப் புறந்தள்ளி விடும் என்ற அச்சத்தால் தங்கள் வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றி வெளிப்படுத்தாமல் இருந்தனர்.

 

சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பழங்குடி மக்கள், இராவணன் உருவ பொம்மையை எரிப்பது தங்கள் மத உணர்வுகளைக் காயப்படுத்து மென்பதால் அதனை அனுமதிக்கக் கூடாது என்று அரசை எச்சரித்தனர். சத்தீஸ்கரில் முதல் முறையாக பழங்குடிகள் அரசுக்கெதிராக இப்படியொரு தைரியமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 

பல கிராமங்களில் மக்கள், குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் துர்கா பூஜை மற்றும் தசராவை இனி கொண்டாடப் போவதில்லை என்று தீர்மானித்தார்கள். இதற்கு இணையாக, சமூக அமைப்புகள், “மஹிசாசுரன் யார்? ராவணன் யார்? ஒவ்வொரு வருடமும் ஏன் அவர்கள் கொல்லப்படுகிறார்கள்?” போன்ற கேள்விகளைப் பற்றிய விவாதங்களில் ஈடுபட்டன. குறிப்பாக இளைஞர்கள் இந்த கேள்விகளை மூத்தவர்கள், தலைவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பிற நபர்களிடம் எழுப்பத் தொடங்கினர். இந்த இளைஞர்களும், பெண்களும் தங்கள் சொந்த வரலாற்றைப் பார்ப்பனரல்லாத கண்ணோட்டத் தைக் கொண்டு படிக்கத் தொடங்கினர். அவர்கள் மஹிசாசுரன் மற்றும் இராவணன் யார் என்று ஆராயத் தொடங்கினர்.

 

அத்தேடலில், அசுரர்கள் தங்களின் மூதாதையர்கள் என்றும், ஆரியப் படையெடுப்பிற்கு எதிராகத் துணிச்சலான போராட்டங்களை மேற்கொண்ட வர்கள் என்றும் அறிந்து கொண்டனர். ஆரியப் படையெடுப்பிற்கு எதிராகப் போராடியவர்கள் தான் உண்மையில் தங்கள் சமுதாயத்தின் சுதந்திரப் போராளிகள்; அவர்கள் வானத்தில் நட்சத்திரமாக மாறிவிட்டனர் என்ற கோட்பாட்டையும் அறிந்தனர். இந்த நம்பிக்கைகளின் படி, அந்த மூதாதையர்கள் தான் அவர்களுக்குக் கடவுள்! அவர்களைத் தான் காலங்காலமாக அரக்கர்கள், பேய்கள் மற்றும் தீய சக்தியென சித்தரிக்கின்றனர். ஆனால், அவர்கள் உண்மையில் ஆரிய மற்றும் மற்ற படையெடுப்புகளை எதிர்த்துப் போராடிய நல்லவர்கள் ஆவர். இந்தியாவின் வடக்கிலிருந்து தெற்கு வரை பல பகுதிகளில் இன்று வரை அவர்கள் வணங்கப்பட்டு வருவதற்கு இதுவே முக்கியக் காரணமாகும்.

 

- டாக்டர் கோல்டி எம்.ஜார்ஜ்

தமிழில்: யாழ்மொழி

நன்றி. கீற்று

 

“மத்தியப் பிரதேசத்திலுள்ள ஆதிவாசிச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ராவணனைத் தங்கள் தெய்வம் என்று கூறித் தங்கள் தெய்வத்தைக் கொளுத்துவது தங்கள் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள். தசராவின்போது ராவணன் உருவத்தைக் கொளுத்துபவர்கள்மீது வழக்குத் தொடரப்படும் என்றும் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். “விஜயதசமியின்போது ராவணன் உருவ பொம்மைகளைக் கொளுத்துவது குறித்து ஆதிவாசி மக்கள் மத்தியில் முன்பும் எதிர்ப்பு இருந்தது என்றாலும், மாநிலத்தின் ஒரு பகுதியில் வலுவான, ஒருங்கிணைக்கப்பட்ட பரப்புரை இயக்கம் ஒன்று முதன்முறையாக எழுந்திருக்கிறதுஎன்று ஹஃப்பிங்டன் போஸ்ட்டில் வெளியான செய்தி குறிப்பிடுகிறது. மத்தியப் பிரதேசத்தில் பெதுல் மாவட்டத்தில் இந்தஆண்டு இந்த எதிர்ப்பு வலுவாக இருந்திருக்கிறது.

 

“உருவ பொம்மைகளை எரிப்பதைப் பார்க்கும்போது எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. நாங்கள் ராவணனையும் மேகநாதனையும் வழிபடுகிறோம். எங்கள் தொல் மரபு, எங்கள் உணர்வுகள் புண்பட்டுள்ளனஎன்று ஆதிவாசிகளின் தலைவர்களில் ஒருவரான திலீப் துருவே ஊடகத்தினரிடம் தெரிவித்திருக்கிறார். அதை ஆமோதித்திருக்கிறார்கள் பிற ஆதிவாசித் தலைவர்களான ஆர்.எஸ்.உய்கே, பிரேம் சிங் சலம் போன்றோர்.

 

ராவணன் உருவ பொம்மைகளைக் கொளுத்துவது என்பது இரு சமூகங்களுக்கு இடையில் பதற்றத்தை அதிகரிக்கிறது என்று ஆதிவாசி விகாஷ் பரிஷத் என்கிற அமைப்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறது.

 

திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கோண்டு பழங்குடியினருக்குத் தனி மாநிலம் வேண்டும் என்று போராடி வருகிறது கோண்டுவானா கண தந்திரக்கட்சி. கோண்டுவானா என்பது தமது ஆதி நிலம் என்பதையும் இந்தியாவின் பூர்வீக நாகரிகங்களில் அதுவுமொன்று என்பதையும் வலியுறுத்திவரும் இந்தக் கட்சி, ராவணனைக் கொண்டாடும் கலாச்சாரம் தம் மக்களிடம் நெடுங்காலமாகவே உண்டு என்று கூறுகிறது. ஆரியர்கள் தங்களைத்தான் அசுரர்கள் என்று கூறுகிறார்கள் என்று இவர்கள் நம்புகிறார்கள். ஆதிவாசிகளின் அரசியல் உணர்வு அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் ராவணனைக் கொண்டாடும் அரசியல் உணர்வு பரவிவருகிறது.

 

அயோத்திக்கும் லங்காபுரிக்கும் இடையிலான தொலைவு குறைவு என்பது மட்டுமல்ல; அவ்விரு ராஜ்ஜியங்களும் இப்போது மோதலிலும் இருக்கின்றன. மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒரிசா, ஜார்கண்டு, பீஹார் பகுதிகளில் உள்ள பழங்குடி மக்கள் தங்களுடைய அரசியல் அதிகாரத்துக்காகவும் மொழி உரிமை உள்ளிட்ட இன உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மாவோயிஸ்ட்களின் தாக்கத்தால் தீவிர அரசியல் அவர்களிடம் நுழைந்து இரு பல்லாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், பழங்குடி மக்களிடமிருந்தே நேரடியான அரசியல் அமைப்புகள் தமது வரலாற்றை மீட்டுருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளன.

(நன்றி.மின்னம்பலம்)

 

எனவே அடிப்படையிலேயே இவர்களுடைய கூற்று தவறாகிறது.

 

ஆக, கங்கையின் கரைப்பகுதிகளில் நடைபெற்ற ஒரு போர் பற்றிய கதையில் வரும் தலைவன் திராவிட இராமன் என்பதும், கேடன்(வில்லன்) இராவணன் தாழ்ந்த சாதியினன் என்பதுமிருக்க, பெரியார் மற்றும் அவருடைய தொண்டர்கள் இராமனை ஆரியன் என்றும், இராவணனை திராவிடன் என்றும் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற செய்திகளாகும்.

...தொடரும்...

 

(வான்மீகி பாடலைக் கொடுத்துதவிய விஜயகல்யாணி அவர்களுக்கு நன்றி)