'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 15, 2019

தமிழ்க்குதிர் - 2050 விடை மின்னிதழ்


ஆசிரியர் பக்கம்

அன்பானவர்களே வணக்கம்!

தமிழ்க்குதிர் ஆறாம் மின்னிதழ் வழியாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.

‘நாடும் மொழியும் நமது இரு கண்கள்’ என்பார் பாரதியார். இரண்டுமே இப்போது இடர்ப்பட்டு நம் கண்முன்னே காணாமல் போய்விடுமோ என்னும் அச்சம் நம்முள் குடிகொண்டு விட்டது.

‘குணம் நாடி வாழாது பணம் நாடி வாழும் போக்கில் காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது’ என்பதை மறுப்பதற்கில்லை. எல்லாவற்றையும் இழந்து பணத்தை மட்டும் வைத்து எப்படி வாழ முடியும்? இந்த அடிப்படைப் புரிதலாவது நாடாள்வோர்க்கும் நாட்டு மக்களுக்கும் வேண்டும். நம்மை நாம்தான் காக்க முடியும். தெளிவான தொலைநோக்குப் பார்வை நமக்கு வேண்டும். தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஆனால் நாடு தளர்ந்துள்ளது. அடிப்படை உரிமைகளுக்கும் கையேந்தும் நிலையில் நம்மை விட்டுவிட்டனர்.

பழம்பெருமை பேசிக் கொண்டிருப்பது மட்டும் பெருமையில்லை. அப்பழமையைக் காப்பதும் நம் கடமை. ஆங்கிலம் படித்து அழகான தமிழைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு முன்பே சமற்கிருதத்தைக் கலந்து கெடுத்துவிட்டோம். இலக்கணம் என்று ஒன்று இருப்பதால்தான் இன்னும் தமிழ் பாடுபட்டும் பிழைத்துக் கொண்டிருக்கிறது. இல்லையென்றால் எத்தனையோ மலையாளமும் கன்னடமும் தெலுங்கும் இங்கு உருவாகியிருக்கும். தமிழைக் கெடுக்கும் எம்மொழித் திணிப்பையும் எதிர்ப்பதே தமிழனின் கடமை. தமிழனின் உரிமை. மொழிப்போரெல்லாம் விளையாட்டுப் பொருளென எண்ணுவோர்க்கு எதுவும் புலப்படப் போவதில்லை.

நாட்டையும் மொழியையும் காப்போம். உரிமைகளை நிலைநாட்டி நலத்தொடும் வளத்தொடும் வாழ்வோம்.

நாய் விற்ற காசு

கவிஞர் ஜெகதீசன் முத்துக்கிருஷ்ணன்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்,  மீண்டும் முருங்கை மரத்தின் மீதேறி, வேதாளத்தை இறக்கித் தன் தோளின்மீது சுமந்துகொண்டு நடக்கலானான்.

அவனது விடாமுயற்சியைக் கண்டு வியந்த வேதாளம் பலமாகச் சிாித்தது. அது விக்கிரமனைப் பாா்த்து, “மன்னா! உனக்கு வழிநடைக் களைப்புத் தொியாமல் இருக்க ஒரு கதை சொல்கிறேன் கேள்! கதையின் முடிவில் நான் கேட்கும் கேள்விக்குச் சாியான பதில் கூறவேண்டும்; இல்லையென்றால் உன் தலை வெடித்துச் சுக்குநூறாகச் சிதறிவிடும்" என்று எச்சாித்தது.

"சாி! வேதாளமே! கதையைச் சொல்" என்றான் விக்கிரமன்.

முன்னொரு காலத்தில் காட்டூா் என்னும் கிராமத்தில் பூதபாண்டியன் என்னும் பெயருடைய வணிகன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் பெயருக்கு ஏற்றாற்போலப் பருத்த உடலும், பெருத்த வயிரும் கொண்டிருந்தான். அவன் ஒரு மளிகைக்கடை நடத்தி வந்தான். அவன் ஒரு பேராசைக்காரன். பொருட்களில் கலப்படம் செய்தல், போலியான எடைக்கற்களைப் பயன்படுத்துதல், அதிக விலைக்கு விற்றல் போன்ற குறுக்குவழிகளைக் கையாண்டு, மிகவும் குறுகிய காலத்தில் பொிய செல்வந்தன் ஆனான்.

ஒருநாள் அந்த ஊருக்கு முனிவா் ஒருவா் வந்தாா். அவா் ஒரு ஜடாமகுடதாாி. நீண்ட முடியைச் சடையாகப் பின்னித் தலையில் மகுடம்போலக் கட்டியிருந்தாா். அவா் ஒரு தபஸ்வி. திாிகால ஞானி. நெற்றியில் திருநீறு அணிந்திருந்தாா். காவி உடை  தாித்துக் கையில் கமண்டலம் ஏந்தியிருந்தாா். மக்கள் அவரை "ஜடைமுனி" என்று அழைத்தாா்கள். காட்டூாில் அவருடைய கால் பட்டவுடனேயே மழை "சோ"வென்று கொட்டியது. செடியிலுள்ள பூக்கள் அசைந்தாடி அவரை வரவேற்றன. பறவைகள் சந்தோச மிகுதியால் கிரீச்சிட்டுக் கத்தின. கன்றுக் குட்டிகள் துள்ளிக் குதித்தன. மக்கள் எதிா்சென்று அவரது குலாவு பாதம் விளக்கி மலா்தூவி அவரை வணங்கினா். முனிவரும் அவா்களுக்கு ஆசி கூறித் திருநீறு வழங்கினாா்.

ஜடைமுனி வந்திருப்பதைக் கேள்விப்பட்ட பூதபாண்டியன், அவரைத் தன் இல்லத்திற்கு அழைத்துவர விரும்பினான். முனிவரைக் கண்டு,  அவரது காலில் விழுந்து வணங்கினான். முனிவா் கொடுத்த திருநீற்றைத் தன் நெற்றியில் பூசிக்கொண்டான். பிறகு  முனிவரைப் பாா்த்து, "ஐயா! தாங்கள் அடியேனுடைய இல்லத்திற்கு வர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான் .

அதற்கு ஜடைமுனி, "தம்பி! நான் யாருடைய வீட்டிற்கும் போவதில்லை  என்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். எனவே உன்னுடைய வீட்டிற்கும் என்னால் வர இயலாது" என்றாா்.

"ஐயா! தாங்கள் அப்படிச் சொல்லக் கூடாது. வயதான என் அன்னையாா் நோயுற்றுப் படுத்த படுக்கையாகக் கிடக்கின்றாா்கள். அவரால் இங்கு வர இயலாது. தாங்கள் என் இல்லம் ஏகி என் அன்னையாரை ஆசீா்வதித்தால், அவா் குணம்பெற வாய்ப்புண்டு; ஆகவே மறுக்காமல் தாங்கள் என் இல்லத்திற்கு வரவேண்டும்" என்று பூதபாண்டியன் முனிவரைக் கேட்டுக் கொண்டான்.

"சாி வருகிறேன்; உன் அன்னைக்காக என் வழக்கத்தை மாற்றிக் கொள்கிறேன்" என்று சொல்லி, முனிவா், பூதபாண்டியனைப் பின் தொடா்ந்தாா்.

பூதபாண்டியன் இல்லத்தில் முனிவருடைய கால்பட்ட உடனேயே சில துா்ச்சகுனங்கள் தோன்றின. பூனை ஒன்று குறுக்கே ஓடியது; முனிவருடைய கால்விரலைக் கல் ஒன்று தடுக்கியது; வெள்ளைப் புடவை கட்டிய பெண்ணொருத்தி எதிரே வந்தாள். இதையெல்லாம் கண்ட  முனிவா் முகம் சுளித்தவாறே வீடடிற்குள் நுழைந்தாா். பூதபாண்டியன், முனிவரை, அவனுடைய அன்னை இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றான். வயதான அந்த மூதாட்டி, பாாிச வாயுவால் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாகக் கிடந்தாா். முனிவரைக் கண்டதும், அந்த மூதாட்டி எழுந்து உட்கார முயன்றாா். ஆனால் அவரால் முடியவில்லை.

உடனே முனிவா், "அம்மா! தாங்கள் எழுந்திருக்க வேண்டா; வாயைத் திறந்தால் போதும்" என்றாா். அந்த மூதாட்டி வாயைத் திறந்தவுடன், சில மந்திரங்களைச் சொல்லிக் கொஞ்சம் திருநீற்றை வாயில் போட்டாா்.

உடனே அந்த அற்புதம் நிகழ்ந்தது. சில நிமிடங்களில், அந்த மூதாட்டி பேசத் தொடங்கினாா். எழுந்து நின்று முனிவாின் காலில் விழுந்து வணங்கினாா். இதைக்கண்ட பூதபாண்டியன் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தான். அவனும் முனிவாின் காலில் விழுந்து வணங்கினான். சிறிதுநேரம் , அவனுடன் அளவளாவிய முனிவா், விடைபெற்றுக் கொள்வதாகச் சொன்னாா் .
அப்போது பணிப்பெண், இரண்டு குவளைகளில் பாலைக் கொண்டு வந்தாள். "ஐயா! பாலை அருந்துங்கள்" என்று சொல்லி  ஒரு குவளையை, பூதபாண்டியன் முனிவாிடம்  கொடுத்தான். மற்றொரு குவளையில் இருந்த பாலை, பூதபாண்டியன் அருந்தினான். முனிவா், பாலை அருந்த முற்படும் சமயத்தில், சுவாில் இருந்த பல்லி கத்தியது. அதைக்கேட்ட முனிவா்,  "பாவிகள் வீட்டில் நான் பால் அருந்தமாட்டேன்"  என்று சொல்லி விட்டுப் பால் குவளையைக் கீழே வைத்தாா்.

இதைக்கேட்ட பூதபாண்டியன் அதிா்ச்சி அடைந்தான். "ஐயா ! நான் பாவியா?" என்று கேட்டான். "ஆம்! நீ பாவிதான். பல்லி சாஸ்திரம் அறிந்தவன் நான்" என்று சொல்லி எதிா்சுவாில் இருந்த பல்லியைக் காட்டினாா் முனிவா். "ஐயா! பால் அருந்தாவிட்டால் பரவாயில்லை, இந்தப் பண முடிப்பையாவது எடுத்துக் கொள்ளுங்கள்; உங்கள் வழிநடைச் செலவுக்கு உதவும்" என்று சொல்லி, சிறிய பணமூட்டை ஒன்றை முனிவாிடம் நீட்டினான் பூதபாண்டியன்.

"இது பணமூட்டையல்ல; பாவத்தின் மூட்டை; இதைக் கையால் தொடுவதும் பாவம்" என்று சொல்லி அதை வாங்க முனிவா் மறுத்துவிட்டாா்.

"ஐயா! பாவம்செய்து, நான் ஈட்டிய பொருள் என்றாலும், அந்தப் பணத்திற்கு மதிப்பு உண்டு. நாய் விற்ற காசு குரைக்காது; மீன் விற்ற காசு நாறாது என்று தாங்கள் கேள்விப்பட்டதில்லையா? ஆகவே என்னுடைய பாவம் தங்களுக்குச் சேராது" என்று வாதிட்டான் பூதபாண்டியன்.

"ஓ! அப்படியா!" என்று சொன்ன முனிவா், அங்கிருந்த பணிப்பெண்ணிடம், மண்ணெண்ணெயில் எாியும் ஒரு விளக்கைக் கொண்டுவரச் சொன்னாா். அவ்வாறே அவள் கொண்டுவந்தாள். தனக்குக் கொடுத்த பாலை, முனிவா், அந்த விளக்கில் சிறிதுநேரம் சூடு படுத்தினாா். பிறகு அந்தப் பாலைப் பூதபாண்டியனிடம் கொடுத்து அருந்தச்சொன்னாா். அந்தப் பாலை அருந்திய பூதபாண்டியன் முகம் சுளித்தான். பாலை அருந்தாமல், குவளையைக் கீழே வைத்துவிட்டான்.

"ஏனப்பா! பாலைக் குடிக்கவில்லையா?" என்று முனிவா் கேட்டாா். "ஐயா! பாலில் மண்ணெண்ணெய் வாடை வீசுகிறது, அதனால் குடிக்க முடியவில்லை" என்றான் பூதபாண்டியன்.

"தம்பி! விறகு அடுப்பில் காய்ச்சிய பால் சுவையாக உள்ளது; ஆனால் மண்ணெண்ணெய் விளக்கில் காய்ச்சிய பால் வாடை வீசுகிறது. இதிலிருந்து என்ன தொிகிறது? தீயின் பொதுவான குணம் எாிப்பதுதான் என்றாலும், எாிபொருளின் தன்மைக்கு ஏற்றவாறு, எாிக்கப்படும் பொருளின் குணம் மாறுபடுகிறது. அதுபோலச் செல்வத்தின் பொதுவான குணம் துய்க்கப் பயன்படுவது என்றாலும், அது வந்த வழியின் தன்மைக்கு ஏற்பப் பாவ புண்ணியங்கள் துய்ப்பவரைச் சேருகின்றன. நல்வழியில் ஈட்டிய பொருள் நன்மை தரும்; தீய வழியில் ஈட்டிய பொருள் பாவத்தைச் சோ்க்கும்.

நன்றே தாினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.

என்பது ஐயன் வள்ளுவனின் வாக்கு. நன்மையே செய்தாலும், தீய வழியில் வந்த செல்வத்தை விரும்பாதே என்பது ஐயனின் ஆணை. ஆகவே இந்தப் பணம் எனக்கு வேண்டா" என்று சொல்லிவிட்டு முனிவா் வீட்டைவிட்டு வெளியே வந்தாா்.

அப்போது பூதபாண்டியன் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரன் ஒருவன், முனிவாின் காலில் விழுந்து வணங்கினான். முனிவரும் அவனுக்கு ஆசி கூறித் திருநீறு வழங்கினாா். அப்போது அந்த வேலைக்காரன் தன் கையிலிருந்த காசு ஒன்றை முனிவாிடம் கொடுத்து, "ஐயா! இந்த ஏழையின் அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்!" என்று சொன்னான். முனிவரும் அவன் கொடுத்த காசை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டாா்.

கதையைச் சொல்லிமுடித்த வேதாளம், விக்கிரமனைப் பாா்த்து, "மன்னா! பூதபாண்டியன் கொடுத்த பணமுடிப்பை வாங்க மறுத்த முனிவா், அவனிடம் வேலை  பாாக்கும் வேலையாள் கொடுத்த காசை ஏன் பெற்றுக்கொண்டாா்? அதுவும் பூதபாண்டியன் பணம்தானே? அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டால் பாவம் சேராதா?  இந்தக் கேள்விக்குச் சாியான பதிலைச் சொல்லாவிட்டால், உன் தலை சுக்குநூறாகச் சிதறிவிடும்" என்று சொன்னது.

"வேதாளமே! பூதபாண்டியன் முனிவருக்குக் கொடுத்த பணம் தீய வழியில் வந்தது. எனவே முனிவா், அதைப் பெற மறுத்துவிட்டாா். ஆனால், வேலையாள் முனிவருக்குக் கொடுத்த காசு, அது பூதபாண்டியன் பணம் என்றாலும், வேலையாளின் உழைப்பிற்காகக் கொடுக்கப்பட்ட ஊதியம் அது. நோ் வழியில் வந்தது. எனவே முனிவா், அதைப் பெற்றுக் கொண்டதில் எந்தத் தவறும் இல்லை" என்றான் விக்கிரமன்.

விக்கிரமனின் இந்தச் சாியான பதிலால் வேதாளம் திருப்தியடைந்து மீண்டும் அவனைவிட்டு நீங்கி, முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

தமிழச்சி திருப்பள்ளியெழுச்சி

கவிஞர் ஆதி கவி (எ) சாமி.சுரேசு

(பாவை பாடல்கள் - இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா) - பகுதி – 2

மாத்திறங் கொண்ட மறத்தமிழ் தொன்னிலத்தில்
காத்திரங் குன்றியதே னென்று வினவுதற்கு
நாத்திற மில்லா நயவஞ்சர் வாழுகிறார்
ஆத்திரம் மீக்கொண்டே ஆண்மையுடன் கேட்டதிலர்
தோத்திரம் பாடியவர் மூத்திரம் மாந்துகிறார்
கோத்திரம் தோண்டிப்பின் சாத்திரம் பேசுகின்றார்
தூத்தறி என்றே உமிழ்ந்தெழுப்பத் தூயவளே
பூத்திரி கையமர்க்கண் பூக்கேலோ ரெம்பாவாய்.  11

கோட்ட கொடும்புருவம் கொண்டிலங்கு மீன்விழியே!
நாட்ட உறங்கதியோ நல்லபிள்ளை செய்கையடி
தேட்டந் தொழிலென்றே தேடித் திரிவார்கள்
மாட்சி மிகக்கொண்டே ஆட்சி புரிகின்றார்
வேட்ட விழைவதில்லை வென்றியெனுமாக்கனியும்
பூட்டுத் திறக்கின்ற பொற்கோலும் நீயேதான்
கூட்டு தமிழ்ப்படையைக் கொல்லத்தமிழ்ப்பகையை
வேட்டதிர் வேட்டாய் வெடியேலோ ரெம்பாவாய். 12

அக்கார் அடிசிலுடன் அன்பொழுக நிற்கின்றோம்
தக்கார் தகுகூட்டந் தாக்கத் தவிக்கின்றோம்
மிக்கார் உனையன்றி வீதியில் யாருமில்லை
செக்கர் அடிவானம் சேதிசொலும் பொன்விடியல்
ஒக்க வொருவரிலா ஒண்டமிழ் ஓவியமே
புக்கார் விழிதிறப்பப் புன்மனத்தார் புல்திறத்தார்
கொக்கார் உறுமீனை கொத்தவருங் காலமிதே
திக்கெட்டுந் தீப்பிடிக்கச் செற்றேலோ ரெம்பாவாய்.  13

உந்திக் கொடிவழியே ஊட்டிய ஊட்டமெலாம்
முந்திப் பிறந்ததிரு முத்தமிழின் வித்தன்றோ
சந்தி சிரிக்கின்ற சச்சரவம் கேட்டிலையோ
எந்திரிக்கும் எண்ணமின்றி ஏனிந்த கண்ணுறக்கம்
அந்திப் பரிதியை ஆன்றரவம் தின்பதுபோல்
நந்தாய் வளன்றன்னை நாய்நரிகள் தின்பதுவோ
அந்தோ! முலைக்காம் பறுக்கும் தருக்கிரிடை
நொந்தோ மெனவோட நோக்கேலோ ரெம்பாவாய்    14

உம்பர் முதற்றோன்றி ஊனுலர் சித்தர்களும்
கம்பர் இளங்கோவர் கண்திறந்த வள்ளுவரும்
நம்மண் தரைமீது நாட்டமுடன் வந்திலங்கிச்
செம்பொருள் செய்வித்துச் சேமமுறச் சொன்னதெலாம்
கம்பி இலாவுலர் காரைபோல் வீழ்வதற்கோ?
வெம்பிப் பழுத்துக்காய் வீணாக ஆவதற்கோ?
அம்பாரங் கண்மூட அங்கலாய்ப்(பு) ஈதென்ன
செம்மாந்த சீரா ளெழயேலோ ரெம்பாவாய்.    15

கொள்ளி எரிகுடிக்கண் கொற்றன் குழல்போலும்
முள்ளி எரிகுடியின் மூள உறங்கதியோ
அள்ளிக் குழல்முடித்(து) அன்றலர்ந்த பூமுடித்(து)
எள்ளி நகையாடி இன்பிருந்த நம்மாந்தர்
துள்ளி விளையாடும் தூமானை வன்புலிகள்
உள்ளி விருந்தாடி உண்பதுபோல் உண்டனவே
கள்ளி உனையன்றிக் காத்தருள யாருமிலர்
பள்ளித் துயில்களைந்து பார்க்கேலோ ரெம்பாவாய்  16

ஏழ்பரியோன் தங்கரத்தை எட்டி உயர்த்துகிறான்
தாழ்திறவாய் தண்ணிலவே தங்கத் தளிருடலே
ஆழ்பனியின் கீழ்வெம்மை ஆட்டுதடி ஆரணங்கே
வீழ்படிவாய் நீகிடந்தால் மீள்வதெங்கே மீன்கொடியும்
கூழ்காய்ச்சும் நன்மகளிர் கூடிக் குடம்போந்தார்
சீழ்க்கை யொலிசிந்திச் சில்வண்டும் ஆர்ப்பரிக்கும்
பாழ்துயில் பாய்களைந்து பார்க்கா தொருக்களித்(து)
ஊழ்வலிபோல் கண்வளர்த்தல் ஊடேலோ ரெம்பாவாய்  17

செவ்வானம் பொன்னொளியைச் சிந்த முயலுதடி
செவ்வாய் நிறத்தழகு செம்பொன் மேனியளே
அவ்வியான் ஆக்கம் அவர்க்கும் பயமின்றித்
தவ்வை தனக்கென்று தாங்கோளும் பொருண்மன்ற
நுவ்வாய் கிடக்கின்றோம் நுண்ணியளே சோர்வுற்றோம்
அவ்வைத் திருக்கரத்(து) அன்புடையாள் வேண்டுகிறோம்
வவ்வுந் தெருநாயும் வாடி ஒடுங்குதெனத்
தவ்வி யவளெழுப்பித் தாரேலோ ரெம்பாவாய்  18

தார்தாங்கும் மென்முலையாள் தண்ணீர்மை உண்மனத்தாள்
போர்தாங்கிச் செல்வாருள் பொல்லாக் கொடுங்கரத்தாள்
சேர்வார்கள் யார்யாரும் தேய்க்கின்றார் தாய்நிலத்தைக்
கூர்வாள் கொணர்ந்திலையோ கொற்றவளே! தொல்குடிப்
போர்வாள் தமிழ்தரும் போற்றித் தொழுதற்கண்
சீர்மிகு நம்மன்னைத் தீந்தமிழ் நன்கருளும்
கார்மழை அன்னாள் கருச்சுமந்தாள் சேவித்தால்
வேர்மழை பெய்தருளும் வேண்டேலோ ரெம்பாவாய் 19

பாடித் தொழத்துலங்கும் பைந்தமிழ்த் தாய்க்கோயில்
நாடி வருகின்றோம் நற்பிள்ளை நாங்களென்று
ஓடித் திறவீரோ ஒண்டமிழின் காவலர்காள்!
தேடி வருவாரைத் தென்றலெனத் தாலாட்டுங்
கோடி மொழிக்குழவி பெற்றாலும் வற்றாளைக்
கூடித் தலைவணங்கிக் கும்பிட்டுத் தாள்தொழு(து)
ஆடிப் பெருக்கன்ன அன்னையருள் வேண்டுதற்கே
சேடியுடன் வந்தோம் திறக்கேலோ ரெம்பாவாய்  20

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ…

பைந்தமிழ்ச்செம்மல்
தமிழகழ்வன் சுப்பிரமணி

பகுதி – 4

தமிழ்ப்பற்றுடையோரே! வணக்கம்!

இக்கட்டுரையின் முந்தைய பகுதிகளில் மொழி முதலில் அமையும் எழுத்துகள், மொழியிடையில் அமையும் மெய்யெழுத்துகள் (மெய்ம்மயக்கம்), மொழியீற்றில் அமையும் எழுத்துகள் பற்றிப் பார்த்தோம். இவற்றால் ஒருவாறு சொற்கள் தமிழில் எவ்வாறு அமையும் என்பதையும் எவையெல்லாம் பிழையாகும் என்பதையும் அறிந்தோம்.

இப்பகுதியில் வடசொற்கள் தமிழில் வந்து அமையும் போது எவ்வாறெல்லாம் திரியும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

வடசொற்கள் தமிழில் எப்போது வரும்? வடமொழிக் காப்பியங்களைத் தமிழுக்குப் பெயர்க்கும்போது அம்மொழிப் பெயர்களைத் தமிழில் எழுத, வடசொல்லாக்கம் உதவும். மக்களின் அன்றாட வாழ்க்கையில் இக்காப்பியங்களின் தாக்கம் ஏற்படும்போது அவற்றைத் தமிழ்ப்படுத்திச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது தமிழுக்குப் பெருந்தொண்டாகும்.

எடுத்துக்காட்டாக, இராமாயணம், மகாபாரதம் முதலிய காப்பியங்கள் தமிழில் பெயர்க்கப்பட்ட போது அவற்றை இயற்றிய புலவர்கள் தமிழெழுத்து ஒலிகளுக்கு ஏற்றவாறு சொற்களை அமைத்துத் தந்தனர். ஆனால், பிற்காலத்தில் வடசொற்களின் தாக்கம் தமிழில் நிறைந்துவிட்டது. அது தவறு என்று உணராதவர்களாலும், சமற்கிருதம் படித்த சிலர் அதைத் தேவபாடை என்று கதை கட்டி விட்டதாலும், மக்களின் பயன்பாட்டில் எளிதாக அச்சொற்கள் புகுந்துவிட்டன. அதுவும் வடசொற்களை எழுதுவதற் கென்றே சில எழுத்துகளை உட்புகுத்தும் செயல்களும் நடந்தேறின. ஆனாலும் நந்தமிழ் இலக்கணம் அவற்றை நீக்கித் தமிழைக் கட்டிக்காக்கப் பெரிதும் உதவுகிறது.
வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
என்றார் தொல்காப்பியர். அஃதாவது, செய்யுட்சொல் நான்கனுள் வடசொல்லாகி வரும் சொற்களாவன சமற்கிருத மொழிக்குரிய எழுத்தொலிகளை நீக்கித் தமிழெழுத்திற்குரிய ஒலியோடு புணர்ந்து அமையும் சொற்களாகும்.

நன்னூலார் இன்னும் ஒருபடி மேலே போய் அந்நூற்பாவை விரித்து எந்தெந்த வடவெழுத்துகளை எந்தெந்தத் தமிழெழுத்துகளாக மாற்றலாம் என்று ஒரு பட்டியலே போட்டுவிட்டார். அவர்வழி நின்று இவ்வடசொல்லாக்கத்தைக் கற்போம்.

நன்னூலார் காலத்தில் ஆரிய மொழியில் 16 உயிரெழுத்துகள், 37 மெய்யெழுத்துகள் என மொத்தம் 53 எழுத்துகள் உண்டு. தமிழுக்கும் ஆரியத்துக்கும் பொதுவான ஒலிப்பு உடைய எழுத்துகள் தமிழ் எழுத்துருவிலும், ஆரியத்துக்கு மட்டுமே அமைந்த  ஒலிப்புடைய எழுத்துகள் இலத்தீன் எழுத்துருவிலும் கீழே குறிக்கப் பெற்றுள்ளன.

உயிரெழுத்துகள்
1
2
3
4
5
6
7
(r/ru)
8
(r/ruu)
9
Lu
10
luu
11
12
13
14
15
Am
16
ah



மெய்யெழுத்துகள்
1

1
2
kha
3
ga
4
gha
5
2

6
7
chha
8
ja
9
jha
10
3

11
12
tta
13
da
14
dda
15
4

16
17
ttha
18
dha
19
ddha
20
5

21
22
pha
23
ba
24
bha
25
6

26
27
28
29
30
sa
7

31
Sha
32
ssa
33
ha
34
35
Ksha
8

36
shka
37
Shpa





உயிரெழுத்துகளில் தமிழுக்கு உரியவையல்லாத எழுத்துகள் ஆறும் தமிழ் ஒலிப்பிற்கு ஏற்பத் திரிந்து வழங்கப் பெறும்.

அவற்றுள் ஏழாம் உயிரெழுத்து இகரமாகவும் இருவாகவும் திரியும்.

rshabam – இடபம்,
mrgam - மிருகம்.

மெய்யெழுத்துகளில் தமிழுக்கு உரியவை யல்லாத 22 எழுத்துகளும் தமிழ் ஒலிப்பிற்கு ஏற்பத்  திரிந்து வழங்கப்பெறும்.

 முதல் வரிசையில் இடைநின்ற மூன்று எழுத்துகள், அஃதாவது 2, 3, 4 ஆகிய எழுத்துகள் முதலாம் எழுத்தாகத் திரியும்.

Sakhi – சகி
Naaga – நாகம்
Moha - மோகம்

இது போன்றே 2, 3, 4, 5-ஆம் வரிசைகளில் அமைந்த எழுத்துகள் திரியும்.

சலவாதி, விசயம் சருச்சரை
பீடம், சடம், கூடம்
தலம், தினம், தரை
பலம், பந்தம், பாரம்

அவற்றுள் எட்டாம் மெய்யெழுத்து மொழியிடையில் யகரமாகவும் திரியும். 

Pankajam - பங்கயம்.

முப்பதாம் மெய்யெழுத்து, மொழி முதலில் சகரமாகவும் இடையில் சகரமாகவும் யகரமாகவும் திரியும்.

Sankaran - சங்கரன்,
Pasam - பாசம்,
Desam - தேயம்.

முப்பத்தொன்றாம் மெய்யெழுத்து, மொழி முதலில் சகரமாகவும் இடையிலும் கடையிலும் டகரமாகவும் திரியும்.

Shanmuga - சண்முகன்,
Visham - விடம்,
Bashai - பாடை

முப்பத்திரண்டாம் மெய்யெழுத்து, மொழி முதலில் சகரமாகவும் இடையில் சகரமாகவும் தகரமாகவும் திரியும்.

Ssabha - சபை
Vassam - வாசம்,
Maassam - மாதம்.

  முப்பத்து மூன்றாம் மெய்யெழுத்து, மொழி முதலில் அகரமாகவும் இடையிலும் கடையிலும் கரமாகவும் திரியும்.

Haran - அரன்,
Moha - மோகம்,
Mahi - மகி

  முப்பத்தைந்தாம் மெய் இரண்டு ககரமாகத் திரியும்.

Paksha - பக்கம்.
Ksheera - கீரம்.

முப்பத்து மூன்றாம் மெய் மொழிக்கு முதலில் அகரமாகத் திரியும் என்றல் பொருந்தாது; கெடும் என்றலே பொருந்தும், அரன், ஆடகம், இமம், ஏரம்பன், ஓமம், ஒளத்திரி என வரும். இவைகளிலே h எனும் மெய் கெட, அம் மெய் மேல் ஏறி நின்ற உயிர் நிற்றல் காண்க.

  வடசொற்களைத் தமிழ்ப்படுத்தும்போது ஆகார ஈற்றுச் சொற்களை ஐகார ஈற்றுச் சொற்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

நன்னூல்: ஆஈறு ஐயும்.

அகல்யா - அகலிகை
அம்பா - அம்பை
அம்பாலிகா - அம்பாலிகை
அம்பிகா - அம்பிகை
ஆருத்ரா - ஆதிரை
ஊர்மிளா - ஊர்மிளை
குணமாலா - குணமாலை
கோசலா - கோசலை
சபா - சபை
சீதா - சீதை
சுபத்ரா - சுபத்திரை
சுமித்ரா - சுமித்திரை
சூர்ப்பனகா - சூர்ப்பனகை
தாடகா - தாடகை
தேவசேனா - தேவசேனை
ப்ரியா - பிரியை
மாலா - மாலை
மிதிலா - மிதிலை
மேனகா - மேனகை
யசோதா - யசோதை
ரம்பா - அரம்பை
ராதா - இராதை
லங்கா - இலங்கை
விசயா – விசயை

வடசொற்களைத் தமிழ்ப்படுத்தும்போது, ஈகார ஈற்றுச் சொற்களை இகர ஈற்றுச் சொற்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

நன்னூல் : ஈஈறு இகரமும்.

மாதுரீ - மாதுரி
மாலதீ - மாலதி
த்ரௌபதீ - திரௌபதி
தில்லீ - தில்லி
பாஞ்சாலீ - பாஞ்சாலி
மைதிலீ - மைதிலி

                       (தொடரும்)