'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2020

குதிர்2-கதிர்7-மேழம் இதழ்

 குதிர்2-கதிர்7-மேழம் இதழ்

ஆசிரியர் பக்கம்


அன்பு நண்பர்களே! அருமைத் தமிழோரே!

அனைவரையும் அடுத்த மின்னிதழின் வழியாகச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடையும் அதே வேளையில், கொரோனா என்னும் நுண்மீயால் மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்து கொண்டிருப்பதை நினைந்து உள்ளம் நைந்துபோகிறது.

எங்குத் தோன்றியது? எவரால் தோன்றியது? என்பதையெல்லாம் விடுத்து, என்ன செய்ய வேண்டும்? என்பதில் முழுமூச்சுடன் ஈடுபட வேண்டிய கட்டாயச் சூழலில் நாமிருக்கிறோம். அரசு எத்தனை செயல்பாடுகளை முன்னெடுத்தாலும் அவை மக்களின் நடத்தையால்தான் வெற்றிபெற முடியுமென்பதை அனைவரும் உணர வேண்டிய தருணமிது. இந்நுண்மீயை அழிக்கும் மருந்தோ, தடுக்கும் மருந்தோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை நம் உள்ளத்தில் பதித்துக் கொண்டு அதன் தாக்கத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதே சிறந்தவழி என்பதை உணர்வோம்.

வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டிய தேவையேற்பட்டால் முகக்கவசம் அணிந்தும், கையுறையணிந்தும் தேவையான சமூக இடைவெளியைக் கடைபிடித்தும் நம்மைக் காத்துக் கொள்வதுடன் மற்றவர்க்கும் காவலாக இருப்போம். வீட்டிற்கு வந்தவுடன் முகக்கவசம், கையுறைகளை வெளியிலேயே வைத்துவிட்டு, முகம், கை, கால்களை நன்றாகச் சோப்பு போட்டுக் கழுவியோ அல்லது குளித்தோ நம்மையும், நம் வீட்டாரையும் கொரோனா தொற்றிலிருந்து காப்போம்.
விலகியிருப்போம்!
விழித்திருப்போம்!
தனித்திருந்து வெல்வோம்.
என்றும் தமிழன்புடன்,
பாவலர் மா.வரதராசன்

குறிஞ்சி நிலம்

பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்



வெற்பு நிறைந்த இடங்களெல்லாம்
    மெல்லப் பாயும் சுனையருவி
ஒற்றைப் பாதை வழியெல்லாம்
    ஓங்கி வளரும் மூங்கில்கள்
பற்றைப் பூக்கள் மலர்ந்திருக்கும்
    பார்க்கப் பார்க்க எழில்தருமே
பொற்றைக் காடு வரைகளுமே
    பொன்னாய் மின்னும் குறிஞ்சியிலே        1

ஏரி சுனைகள் பலவாகும் 
    எங்கும் அருவி பாய்ந்தோடும்
மாரிக் காலம் மாறியதும்
    மண்ணில் நீரும் வற்றிவிடும்
ஊரில் பஞ்சம் வருகையிலே
    உண்ண உணவு கிடைப்பதில்லை
சோரி யின்றி மக்களெல்லாம்
    சோர்ந்து விடுவார் கோடையிலே              2

ஏற்ற நிலத்தைத் தேர்ந்தெடுக்க
    ஏறு நிலத்தைப் பண்படுத்தும்
சேற்று மண்ணில் கால்வைக்கச்
    சேயோன் அருளை வேண்டுவார்கள்
நாற்றுப் போடும் வேளையிலே
    நாதம் இசைத்து மகிழ்வார்கள்
காற்றில் மிதக்கும் ஓசையிலே
    காதல் செய்யும் பைங்கிளிகள்                  3

கிளிக ளெல்லாம் வட்டமிட்டுக்
    கீச்சுக் கீச்சென் குரலெழுப்பும்
ஒளிந்து வாழும் பூச்சியெல்லாம்
    ஒலியைக் கேட்டு மகிழ்ந்திருக்க
நெளிந்து செல்லும் புழுக்களெல்லாம்
    நிரையாய் ஊர்ந்து நடனமாடும்
தொளியில் நடக்கும் காட்சியெல்லாம்
    துயரம் மறக்க வைத்திடுமே                       4

மேட்டு நிலத்தில் தலையசைக்கும்
    வேங்கை மூங்கில் மரங்களெல்லாம்
காட்டில் குரங்கு கரடியெல்லாம்
    கலக்க மின்றித் திரியுமன்றோ
ஆட்டம் போட மயிலெல்லாம்
    அசைந்து களிக்கும் பைங்கிளிகள்
கூட்டி லிருக்கும் தேனீக்கள்
    குறிஞ்சி மலரில் மொய்த்திடுமே               5
  
மேவிச் செல்லும் மேகங்கள்
    மெல்லத் தூவும் மழைத்துளிகள்
காவிச் செல்லும் தேனீக்கள்
    காத்து நிற்கும் தேன்கூட்டை
நாவி லூறும் தேன்துளியை
    நாடும் குறிஞ்சி மக்களெல்லாம்
வௌவிச் செல்ல முனைவதற்கு
    வளைத்துக் கலைத்தே எடுப்பாரே            6

எடுத்த தேனில் விதவிதமாய்
    இன்ப மதுவும் வடித்திடுவர்
தொடுக்கும் நாணில் அம்பேற்றித்
    துரத்தி விலங்கை வேட்டையாடி
அடுப்பில் வைத்துச் சுட்டதனை
    ஆசை தீரப் புசித்திடுவார்
படுகல் லருகில் குடிசைகளைப்
    பாங்காய் அமைத்து வாழ்வாரே                7

வாழ்தல் வேண்டி வேளாண்மை
    வகையாய்ச் செய்வர் குறவர்கள்
சூழ்ந்து நிற்கும் குறமகளிர்
    சுழன்று சுழன்றோ டித்திரிந்து
மாழ்த லின்றித் தினைப்புனத்தை
    மகிழ்வு பொங்கப் பாட்டிசைத்துக்
கேழ்பு பயக்கும் நெல்வகையைக்
    கெடுத லின்றிக் காத்துநிற்பர்                    8

காக்கும் கந்தன் துணையிருக்கக்
    கலக்க மின்றிக் குறிஞ்சியிலே
தாக்கும் விலங்கை மோதிவீழ்த்தித்
    தயக்க மின்றி மனைவாழ்ந்தார்
ஊக்கம் கொடுக்கும் பெண்களெல்லாம்
    உதவி செய்தே இல்லறத்தை
ஓக்க நெறியில் என்றென்றும்
    உலகம் போற்ற வாழ்ந்தனரே                     9

வாழ்க்கை என்றால் குறைநிறைகள்
    வந்து மறையும் உலகினிலே
தாழ்தல் என்பது குறையல்ல
    சகிப்பு வேண்டும் உள்ளத்தில்
ஏழ்மை என்று கலங்காமல்
    எதிலும் நிறைவு கண்டதனால்
போழ்த லின்றிக் குறிஞ்சியினில்
    புதுமை வாழ்வு வாழ்ந்தாரே                       10

கால் முளைத்த கல்


(மாறுரையும் நேருரையும்)

கவிஞர்பொன். இனியன்

kuralsindhanai@gmail.com

8015704659

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப்  பேதை  புகல்                                840
என்னும் இக்குறள் பேதைமை அதிகாரத்தின் ஈற்றுப் பாடலாக அமைந்துள்ளது.

இக்குறட்பாவுக் கமைந்துள்ள உரைகள் யாவும் அறிவிலியான ஒருவன் அறிஞரவையுட் புகுதலை இழிபு காட்டுமாறாக(வே) அமைந்துள்ளன. இது வள்ளுவர் தம்  கருத்தாதல் கூடுமா என்பது குறித்த ஓர் அலசலாகவும் இக்குறட்பாவின் உட்கிடக்கை என்னாம் என்பதை அறியும் ஒரு முயற்சியாகவும் அமைகிறது  இக்கட்டுரை.

முதலில், சில உரைகளைத் தொகுத்து அவற்றின் கருத்துகள் எத்துணையளவு குறளின் நுவல்பொருட்கு  இயைபு காட்டியும் அல்லது முரண்படவுமாயுள்ளன என்பது  காண்போம்.

மணக்குடவர்: கழுவாத காலைப் பள்ளியின்கண் வைத்தாற் போலும், சான்றோர் அவையின்கண் பேதை புகுந்து கூடி யிருக்கை.
பரிமேலழகர்: சான்றோரவையின்கண் பேதையா யினான் புகுதல் தூயவல்ல மிதித்த காலை இன்பந்தரும் அமளியின்கண்ணே வைத்தாற் போலும். இவனால் அவ்வவையும் இழிக்கப்படும் என்பதாம்.
குழந்தை: சான்றோரது அவையின்கண் அறிவில்லாதவன் புகுதல் கழுவாத காலைப் படுக்கையின்மேல் வைத்தாற் போலும். அதனால் அப்படுக்கை இழிவுபடுவது போலப் பேதையால் சான்றோர் கூட்டம் இழிவு படும்.
காளிங்கர்: ஒருவன் மாசறக் கழுவாத காலைத் தூவெண்துகில் விரித்த சிறந்த படுக்கைமேல் வைத்த அத்தன்மைத்து; கல்வியால் மாசற விளங்கிய மனத் தூய்மையுடைய சான்றோர் அவையுள் நெஞ்சு அழுக்குடைய பேதை புகுதல்.
பாவாணர்: பேதையானவன் அறிவொழுக்கங்களால் நிறைந்த பெரியோரவையின்கண் புகுதல்; கழுவித் துப்புரவு செய்யாத காலை தெய்வநிலையமான கோவிலுக்குள் வைத்தாற் போலும்.
நாமக்கல் கவிஞர்: அறிவாளிகள் கூடியுள்ள சபையில்  ஒரு முட்டாள் புகுவது, கழுவாமல் அசுத்தமுள்ள கால்களைச் சுத்தமான ஆலயத்துக்குள் வைப்பது போல. (நல்லவர்கள் முட்டாளின் சகவாசத்தை அழுக்காகக் கருதுவர்).
வ சுப மாணிக்கனார்: அறிஞரின் அவைக்கு அறிவிலி போதல் கழுவாத காலைத் தவப் பள்ளியில் வைப்பது போல்.
து அரங்கன்: அறிவற்ற ஒருவன் கற்ற சான்றோர் அவையில் புகுதல் மிதிக்கத்தகாதவற்றை மிதித்துக் கொண்டு அக்காலைக் கழுவாமல் தூய்மையுள்ள பள்ளியில் புகுந்து மிதித்தல் போலாம்.
ச வே சுப்ரமணியன்: அறியாமை உடையவன் அறிவுடையோர் அவையில் இருத்தல் கால் கழுவாத ஒருவன்  நடுவீட்டுப் படுக்கையில் இருந்ததை ஒக்கும்.
ப முருகன்: கற்றோர் கூடிய சபையில் கல்லாத அறிவிலி ஒருவன் புகுதல் காலினைச் சுத்தம் செய்யாமல் படுக்கை யறைக்குள் புகுவதைப் போன்றது.
மேற்கண்ட உரைகள் எவ்வாறு குறளின் நுவல் பொருட்கு மாறுபடவும் இயைபின்றியும் அமைந்துள்ளன என்பது ஒன்றன்பின் னொன்றாகக் காண்போம்.

இவனால் அவ்வவையும் இழிக்கப்படும் என்பதாம் என்கிறார் பரிமேலழகர். அதனால் அப்படுக்கை இழிவுபடுவது போலப் பேதையால் சான்றோர் கூட்டம் இழிவு படும் என்பது குழந்தை உரை. கழுவாத கால் அதன் மாசினாலும் துர்மணத்தாலும் அறியப்படும். ஆனால் அவையுள் நுழைபவன் பேதை என்பது எதனால் / எவ்வாறு அறியப்படும் என்பது எவருரையிலும் காட்டப்படவில்லை.

நேர்ந்த இடங்களிலெல்லாம் இலக்கணக் குறிப்பு களையும் இலக்கிய நயங்களையும் குறளின் நுவல்பொருளுக்கான காரண நிமித்த வரையறை களையும் விரித்துச் சொல்லும் பாங்கினரான பரிமேலழகர் உரை உள்ளிட்ட எவருரையிலும் பேதை புகுவதால் சான்றோரவைக்கு நேரும் இடையூறு அல்லது இழுக்கு  என்னாம்  என்பது காட்டப்படவில்லை.

குறள் குறிப்பாகிய சான்றோன் மற்றும் பேதை என்பவற்றை எவரும் தக்கவாறு பொருள்படுத்திக் காட்டினாரில்லை என்றே தோன்றுகிறது.

பரிமேலழகர், அறவாணன், செம்பியன் நிலவழகன், சுப்பு ரெட்டியார், கோபால கிருட்டிணன், ஆ நா வாய்மை, ஆவெ இரா,  மு பெரி மு ராமசாமி, பாலசுப்ரமணியன் போன்ற பலரும் சான்றோர் என்பதற்குத் தக்கவாறு பொருள் காட்டாது குறள் மூலத்தில் உள்ளவாறே உரையில் வைத்தாண்டு கொண்டனர்.

பெரியோர், கற்றறிந்த அறிஞர், அறிவுடையோர் என்றெல்லாம் பிறர் பலவாறாக் குறித்திருக்கக் கல்வியால் மாசற விளங்கிய மனத் தூய்மையுடைய சான்றோர் எனக் காலிங்கரும் அறிவொழுக்கங்களால் நிறைந்த பெரியோர் எனப் பாவாணரும்  விரித்துக் காட்டுவர்.

பேதை எனும் குறள் குறிப்பை அறிவிலி என வ சுப மாணிக்கனாரும் அறிவில்லாதவன் எனக் குழந்தையும் அறியாமையுடையவன் என சா வே சுவும்  குறித்துள்ளனர். நெஞ்சு அழுக்குடைய பேதை என  விரித்துரைக்கிறார் காலிங்கர்.

மேற்குறித்த உரைகள் எல்லாம்  ஏதோ கற்றவர் மட்டுமே  மாசறு மனந்தூயராயும் ஒழுக்கமுடையராயும்இலங்குதல் போலவும் பேதையரெல்லாம் நெஞ்சழுக்குடையவர் என்பது போலவும் ஒரு பொருந்தாத பொய்யான  கற்பிதத்தைக்  காட்டுவனவாயுள்ளன.

கல்வியால் பெறுவது அறிவு; தான் பிறந்த குடியான் உறுவது ஒழுக்கம்.
காண்க:
கற்றனைத்தூறும் அறிவு (936),
இற்பிறந்தார் கண்ணல்ல(து) இல்லை இயல்பாகச் 
செப்பமும் நாணும் ஒருங்கு (951),
 இவை யெல்லாவற்றையும் விஞ்சியவாறாக,
அங்கண்  விசும்பின்  அகனிலாப்  பாரிக்கும்
திங்களுஞ் சான்றோரு  மொப்பர்மன் – திங்கள்
மறுவாற்றுஞ் சான்றோரஃ தாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமா சுறின்
எனும் நாலடியார்ப் பாடலைச் சுட்டிக் காட்டி, இதனால்     சான்றோரின் தெய்வத் தன்மை உணரப்படும் என்கிறார் பாவாணர். 

எப்படித் துருவினாலும் தெய்வத்தன்மை யெனுங்கருத்தை நாலடியாரில் நம்மால் காண முடியவில்லை. அப்படியே இருப்பதாகக் கண்ணை மூடிக்கொண்டு நம்புவதானாலும் அது நாலடியின் கருத்தாவதன்றி குறளின் குறிப்பாகவோ கூற்றாகவோ அதைக் கொள்ளக் கூடுவ தெப்படி?

அன்புடமை பண்புடைமை யிவ்விரண்டும் ஆன்ற குடிப்பிறத்தல் (992) ஒழுக்கமுடைமை குடிமை (133) என்பவற்றால் கல்லாதவரிலும் மனந்தூய்மையும் ஒழுக்கமும் உண்டென்பது பெறப்படும். ஓதியும் பிறர்க்குரைத்தும் தான் உணர்ந்தடங்காப் பேதையரும் (834) உண்டென்பது கொண்டு, கற்றது ஒழுகாதவரும் உண்டு என்பதை அறியலாம். அதனால் சால்புடைமையைக் கற்ற அறிவுடையார்மாட்டு மட்டும் தொடர்புபடுத்திக் காட்டுதல் பொருந்துவதின்றாம்.

சாலுதல் - நிறைதல்;  சால்புடைமை - நிறையுடைமை. சாலுவது சால்பு; சால்புடையவர் சான்றோர். சான்றோர் எனற்கு நேரிய பொருளாகச் சால்புடையவர் என எளிமையாகக் காட்ட இயலும். ஆனால் எவருரையிலும் இது காணப்படாதது வியப்பை அளிக்கிறது.

பொறையுடைமையைப் போற்றி யொழுகுபவரே நிறையுடையராவார் (154) ஆதலின் பேதையர்  தம் அவை புகினும் அதைச் சான்றோர் பொறுத்துக் கொள்ளுவர்  எனலாம்.

பள்ளி என்பதை மடப்பள்ளி தவப்பள்ளி பள்ளிக் கூடம் தேவாலயம் கோயில் அமளி படுக்கை என ஒவ்வொருவர் ஒன்றைக் குறித்திருக்க, வெ ராமலிங்கம் பிள்ளை, படுக்கை மடப்பள்ளி பள்ளிக்கூடம் தேவாலயம் முதலிய பரிசுத்தமான இடங்களெல்லாம் கொள்ளலாம் எனக் குறிக்கிறார்.

மேற்கண்ட உரைகள் யாவிலும் காணப்படுவதாகிய ஒரேயொரு ஒற்றுமை அறிவிலி சான்றோர் அவை புகுதலை இழிக்கத் தக்கதாகக் காட்டியிருப்பதேயாகும். முட்டாள் முன் பின் சொல்லாமல் புகுந்து விடுவது எனச் சற்று நீட்டுகிறார் க பா அறவாணன்.

இதிற் குறித்துள்ள பள்ளி எனற்குப் பலரும் குறித்துள்ளவற்றைக் கோயில் கருவறை, படுக்கையறை என இரு வகைப்படுத்தலாம். புகல் என்பதற்கு உட்புகுதல் நுழைதல் என்பதில் மட்டும் பலரும் ஒன்றுபட நிற்பாராயினர். வெகு அரிதாக ஞா மாணிக்க வாசகன் மற்றும் தங்க. பழமலை போன்ற ஓரிருவர் மட்டிலும் பேச முற்படுவது எனக் குறித்துள்ளனர். சான்றோர் என்பதைக்  கற்றார் எனவும் பேதை என்பதைக் கல்லாதவன் எனவும் பலருரைகளில் காட்டப்பட்டுள்ளது. பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை அதனால் ஒவ்வொருவனும் செய்க பொருளை என்றது போலவே, கற்றவரே கண்ணுடைய ராவர்; அதனால் கற்க என அனைவரையும் ஏவுகிறார் வள்ளுவர். உண்மை இவ்வாறிருக்கக் கற்றாரவை அவனுக்குக் கதவடைக்குமானால் எங்குப் போய்க் கேட்பான்? எவரிடம் போய்க்கேட்பான்? வாய்ப்பற்றவனைக் கற்றிலனாயினுங் கேட்க (414) எனப் பரிந்துரைத்த வள்ளுவரே கற்றாரவையில் கல்லாதவன் புகுவதை இழிவு காட்டுவார் எனக் கருதுதற் கிடமில்லை  என்க. குணநலனே சான்றோர் நலன் (982) என்பதும் சான்றோர்க்குக் கடன் என்ப நல்லவையெல்லாம் (981) என்பதும் கருதின் கல்லாத பேதையரைச் சான்றோர் இழிவுபடுத்தார் என்பதும் பெறப்படும்.

கல்லாத அறிவிலி கற்றாரவை புகலாகாது அல்லது புகுவது இழிக்கத்தக்கது எனுங்கருத்து திருக்குறள் நெறிக்கு மாறானதாகும். கல்லாதவன் கேட்டல் வேண்டிக் கற்றாரவை புகுதலை வள்ளுவர் தடைசெய்தாரில்லை.  கல்லாதவர் சொல்லின் வகை அறியார் (713), சொல்லின் நடைதெரியார் (712) அதனால் மன்ற பல சொல்லக்  காமுறுதல் (649) வேண்டா. கற்றார்முன்  சொல்லா திருக்கப் பெறு (403) எனக் கூறுகிறார்.
கற்றார் முன் சொல்லாதிரு என்றதன்றி கற்றாரவை செல்லாதிரு எனலன்றாம். புகல் என்பதற்குப் போகலாகாது என்பதைவிட போய்க் கிளத்தலாகாது எனப் பொருள் கொள்வதே பொருத்தமாகும்.

மேலும், பேதைமை என்பது ஏதம் ஒன்று கொண்டு ஊதியம் போகவிடல் (831) என்பதனால், வேண்டத்தக்கன விலக்கத்தக்கனவற்றை அறியமாட்டாதவனாகி அவை யறிந்து இடையறிந்து சொல்ல வேண்டுவனவற்றைச் சொல்லத் தெரியாமல் கூடாதனவும் கூறுவானாதலின் அவன் அவையில் புகலுதல் விரும்பத்தக்கதன்றாயிற்று. அதாவது பேதை அவை புகுதலை ஊக்குவிப்பதும் அவையிற் புகலுதலை விலக்கச் சொல்வதுமே  குறள் நெறியாகிறது.

இப்பாடலின் மூலப்படியில்,
கழாஅக்கல் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப்  பேதை  புகல் 
என்றே இருந்திக்க வேண்டும்.

கழாக்கல் என்பது பாடம். இப்பாடலின் ஈற்றுச்சீர் புகல் என்றது கழறுதலை. புகலுதல் என்பதைப் புகுதலாகப் பிறழப் பொருள் கொண்டவாறாக உரையாசிரியர் எவராலோ (அது கால் கொண்டு் நிகழ்த்தப் பெறுதலால்) கல் என இருந்ததைக் கால் என மாற்றியிருக்கக் கூடும்  என எண்ண வேண்டியுள்ளது.

கழுவுதல் எனற்கு நீரூற்றித் தூய்மை செய்தல் என்பது நேர்ப்பொருளாயினும்,  துவைத்தல்,  துடைத்தல்,   மாசு நீக்கல், செம்மைப்படுத்தல் என்பன துணைப் பொருளுமாம். வட்டாக உருக்குதல் என்பதையும் இதற்குப் பொருளாக அகராதிகள் கூறுகின்றன. கழாக்கல் என்றது திருவுருவாகச் செம்மையாய் வடிக்கப்பெறாத வெறுங்கல் என்பதாகும்.
காண்க:
ஆங்கொரு கல்லை வாயிலிற் படியென்                    
றமைத்தனன் சிற்பி  மற்றொன்றை
யோங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்
றுயர்த்தினன்                            - பாரதியார்

தூவாத நீக்கியும் தொகுத்துச் சொல்லவும் வல்லவனல்லாத பேதை சான்றோரவையில் பேச முற்படுதலானது செவ்விதாய் தெய்வச் சிலையாய் வடிக்கப் பெறாத வெறும் கல்லைப் பள்ளியுள் வைத்தற்கு ஒப்பானதாகும் என்பது இப்பாடற் கருத்தாகிறது.

அன்னை அந்தாதி – 2


பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்


நின்னைச் சரணடைந்து நெஞ்சுருகி வேண்டியும்
இன்னு மிரங்காத தேனம்மா - நுண்மியால்
இம்மா நிலம்படு மின்னலைக் கண்டும்நீ
சும்மா விருப்பதேன் சொல்                                              1

சொல்லியழ யாருமில்லை துன்பந் தொடராமல்
வெல்லும் வழிகாட்டி மீளச்செய் - வல்லாளே
உன்னால் முடியாத தொன்றுண்டோ? தாமத
மின்னுமேன்? சூல மெடு                                                 2

எடுத்துன்ற னாட்டத்தை யின்றே தொடங்கு
நடுநடுங்கி யோடவிடு நச்சை - அடங்காமற்
குத்தாட்டம் போடும் கொரோனாவைச் சூலத்தால்
குத்தி நசுக்கியே கொல்                                                 3

கொன்று குவித்துக் குலைநடுங்கச் செய்யுமி(து)
என்று மடியுமென் றேங்குகிறோம் - உன்பதம்
பற்றி யுளமுருகிப் பாடினும் காவாக்கால்
தொற்றால் தொலையு முயிர்                                         4

உயிராய் உறவாய் உணர்வில் நிறைந்தாய்
தயைபுரிய வேனோ தயக்கம் - துயர்துடைப்
பாயோ? தவிக்கவிட்டுப் பார்ப்பாயோ என்செய்வோம்
நோயோடு போரிடுவோம் நொந்து                                 5

நொந்துமனம் வாடுமுன் நோக்கி யிதமளிக்க
முந்திவர வில்லையெனில் மூச்சடங்கும் - சந்ததமும்
உன்னைத் தொழுவோரை உய்விப்ப துன்கடனே
மின்னலாய்ப் பூத்துவந்து வெட்டு                                  6

வெட்டித்தான் சாய்த்துவிடு வெந்தழலால் சுட்டுவிடு
கட்டுக்குள் பூட்டிவிடு காளியம்மா - சட்டென்று
செந்நாவை நீட்டிச் சினத்துடன் கண்ணுருட்டி
வந்தவழி யோட்டிட வா                                                  7

வாராது போனாலோ வையந் தனிலுன்னை
யாராரோ கண்டபடி யேசுவர் - பாராளுந்
தாயே! அதுகேட்டுத் தாங்கிடுமோ வென்னுள்ளம்
நீயே புகல்வாய் நெறி                                                     8

நெறியோடு வாழ்ந்தும் நிலத்தினைச் சுற்றும்
வெறிகொண்ட தொற்றை விரட்டி(டு) - அறியாமற்
செய்த பிழைபொறுத்துச் சீராக்க மாகாளி
தெய்வமே வாராய் சிலிர்த்து                                       9

சிலிர்த்த படிநீயும் சிம்மத்தி லேறி
உலகை வலம்வர வோடும் - நிலத்தை
உலுக்கிய தொற்று மொழிந்திட வெங்கும்
நிலைத்திடும் நிம்மதி நின்று                                     10

காதல் காதல் என்குதே


கவிஞர் மதுரா

எழுசீர் சந்த விருத்தம்

தென்ற லாக வீசுங் காற்று
    தேக மெங்கு மீர்க்குதே
மென்மை யாக மேனி மீது
    மின்ன லொன்று தீண்டுதே
சன்ன மாக நீல வானில்
    சந்தி ரன்மேல் தோன்றுதே
அன்பி லாடு முள்ள மொன்று
    ஆசை யோடு வேண்டுதே            1.

மாலை யோடு வந்தி ருந்த
    மன்ன னைக்கண் தேடுதே
காலை மாலை கண்டு பேசக்
    கன்னி யுள்ள மேங்குதே
சாலை யோரப் பூவு மெல்ல
    சாடை பேசிப் பார்க்குதே
சோலை யெங்கும் தேடிப் பார்த்து
    சோர்ந்து சோர்ந்து போகுதே       2

உள்ள மெங்கும் பொங்கு மாசை
    ஊஞ்சல் கட்டி ஆடுதே
வெள்ளம் போலப் பெருக்கெ டுத்து
    வேகம் கொண்டு பாயுதே
கள்ளம் கொண்ட நெஞ்ச மின்று
    காதல் காதல் என்குதே
பள்ளம் நோக்கிப் பாயு மாறாய்ப்
    பாச உள்ளம் ஏங்குதே                  3

நல்வழி காண்பீர்


கவிஞர் மெய்யன் நடராஜ் 

கயிறெடுத்துச் சுருக்கிட்டுக் கழுத்தினிலே மாட்டிக்
    காலனுக்(கு) அழைப்பிதழைக் கைநீட்ட லாக  
உயிரடங்கு மெனவறிந்தும் உல்லாச மாக
    ஊரடங்கு நேரத்தில் ஊர்சுற்று வோரே  
வயிறெரியும் பசிக்கொடுமை வாட்டுகின்ற ஏழ்மை  
    வந்துநிற்கும் போதினிலும் வாசலினைத் தாண்டா(து)
உயிர்காக்கும் எளியவர்கள் துணிச்சலறிந் திந்நோய்
    உடன்தொற்றிப் பரப்புதற்குத் துணைபோகா தீரே!

பாதுகாப்பு தனைவழங்கப் பாடுபடும் அரசின்
    பக்கபல மாயிருக்கும் படியும்மை ஆக்கும்
போதுவரும் நிம்மதிக்குப் பொறுப்பாளி என்றே
    பொதுநலத்திற் குதவிடுங்கள் புண்ணியமாய்ப் போகும்
காதுவழி கேட்டும்மைக் காப்பதற்குச் சொல்லும்
    கருத்துகளைக் கேட்டுணர்ந்து கவனமுறும் போது  
தூதுவிடும் காலனவன் தொடுவதில்லை பாரீர்
    தொல்லையஃ(து) அகல்வதற்கு நல்லவழி காண்பீர்