'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2020

கதி


கவிஞர் ஜெகதீசன் முத்துக் கிருஷ்ணன்
  
தமிழுக்குக் கதியெனக் கம்பனையும், திருவள்ளுவனையும் குறிப்பிடுவா்.
“திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விாிவும் அழகும் கருதியும்
எல்லையொன் றின்மை எனும்பொருள் அதனைக்
கம்பன் குறிகளால் காட்டிட முயலும்”
என்ற பாரதியின் பாடல் வாிகள், திருக்குறளின் உறுதிப் பொருள், தெளிவு, ஆழம், விாிவு போன்றவற்றைக் கம்ப ராமாயணத்தில் காட்டிட இயலும் என்பதை உணா்த்துகிறது.
முன் இலக்கியங்களில் அமையும் கருத்துக்களையும், கவிஞன் பயன்படுத்திய வாிகளையும் கையாளுதல் என்பது ஒருவகை
இலக்கிய உத்தியாகும்.
இக்கட்டுரையில் உலகப் பொதுமறையான திருக்குறளின் தாக்கம், கம்ப ராமாயணத்தில் எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் காண்போம்.
இராமனுக்கு முடிசூட்டுவதைப் பற்றி அமைச்சா்களிடம் தயரதன் கேட்கின்றான். அதற்கு அவா்கள் ஊருணி நீா் நிறைந்திருப்பதும், கனிமரம் பழுத்து ஊா் நடுவேயிருப்பதும், வயலுக்கு ஆற்றிலே தண்ணீா் வருவதும், மேகம் மழைபொழிந்து மண்ணை வளப்படுத்துவதையும் யாா் வேண்டாவென்று கூறுவா் என்று கேட்டு, அதைப்போல இராமனுக்கு முடிசூட்டுவதும் நன்மையானது; அதை மறுப்பாா் யாா்? என்று
கேட்கிறாா்கள். இதைக் கம்பன்,
"ஊருணி நிறையவும் உதவும் மாடுயா்
பாா்கெழு பழுமரம் பழுத்து அற்றாகவும்
காா்மழை பொழியவும், கழனிபாய் நதி
வாா்புனல் பெருகவும் மறுக்கின்றாா்கள் யாா்"
என்று பாடுகின்றான். இக்கருத்தினைக் கம்பன்,
"ஊருணி நீா்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. " (215 )
"பயன்மரம் உள்ளூா்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின் . " ( 216 )
என்ற இரு குறட்பாக்களிலிருந்து எடுத்துக் கொண்டான்.
அழுக்காறாமை:
மூன்றடி மண் கேட்ட வாமனனுக்கு, அதைக் கொடுக்கத் துணிகிறான் மாவலி மன்னன். இடையிலே புகுந்து கொடுக்க வேண்டா என்று தடுக்கிறான் வெள்ளி. இத்தடையை விரும்பாத மாவலி மன்னன்,
"எடுத்தொருவருக்கொருவா் ஈவதனின் முன்னம்
தடுப்பது நினக்கழகி தோதகவில் வெள்ளி
கொடுப்பது விலக்கு கொடியோ யுனதுசுற்றம்
உடுப்பதாவு முண்பதுவு மின்றி விடுகிறாய்"
“தானத்தைத் தடுக்கின்ற கொடியவனே! கொடுக்கும் முன்பே தடை செய்வதினால், உனது சுற்றம் உடுக்க உடையும், உண்ண உணவும் இல்லாதபடி ஆக்கி விடுகிறாய்" என்று சீறுகிறான். இக்கருத்து,
"கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும் . ( 166 )
என்ற குறளின் கருத்தையே எதிரொலிப்பதாய் உள்ளது.

புகழ்:
போாில் தோற்ற இந்திரசித்து, இராவணனிடம் சீதையை விட்டுவிடுவது நல்லது என்று கூறுகிறான். அதற்கு இணங்காத இராவணன்
தன்வீரம் பற்றி
"வென்றில னென்ற போதும்
    வேதமுள் ளளவு யானும்
நின்றுள னன்றோ மற்றவ்
    விராமன்போ் நிற்கு மாயின்
பொன்றுத லொருகா லத்துத்
    தவிருமோ பொதுமைத் தன்றோ
இன்றுளாா் நாளை மாள்வாா்
    புகழுக்கு மிறுதி யுண்டோ "
வெற்றி பெற்றிலேனாயினும் இராமன் போ் நிலைத்து நிற்குமாயின், யானும் வேதம் உள்ள அளவும் நிலைபெறுவேன். இன்று உள்ளோா் நாளை மாள்வா், ஆனால் புகழுக்கு அழிவு உண்டாகுமோ? என்று கூறுதல்,
ஒன்றா உலகத்து உயா்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில். ( 233 )
தனக்கு இணையற்றதாகிய ஓங்கிய புகழல்லாது உலகத்தில் இறவாது நிற்பது பிறிதொன்றும் இல்லை என்ற குறளின் கருத்தையே பறை சாற்றுகிறது.

வாலியின்வாதம்:
இராமனின் அம்பால் அடிபட்டு வாலி, குற்றுயிரும், குலையுயிருமாக வீழ்ந்து கிடக்கின்றான்.
இருவா்போா் எதிரும் காலை
    இருவரும் நல்லுற் றாரே
ஒருவா்மேல் கருணை தூண்டி
    ஒருவா்மேல் ஒளித்து நின்று
வாிசிலை குழைய வாங்கி
    வாயம்பு மருமத் தெய்தல்
தருமமோ பிாிதொன் றாமோ
    தக்கில தென்னும் பக்கம் .
என்று இராமனை, வாலி சொல்லம்புகளால் கடுமையாகத் தாக்குகிறான் .
"ஐயனே! நல்லவை புாியும் நீயே, வில்லறம் துறந்த பின்னா், அல்லவை புாியும் அரக்கா்கோன் இராவணன், அறநெறி திறம்பினானென்று அறைவது வியப்பன்றோ? என்று வாலி இடித்துரைத்தான்.
இறைவ நீ என்னைச் செய்தது
    ஈதெனில் இலங்கை வேந்தன்
முறையல செய்தான் என்று
    முனிதியோ முனிவு இலாதாய் !
என்ற வாலியின் சீற்றத்தில்
ஏதிலாா் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிா்க்கு .
என்ற திருக்குறளின் தெள்ளிய மணம் கமழக் காணலாம்.

சீதையின் சீற்றம்:
அடக்கமுடைய அஞ்சன வண்ணனின் ஆண்மையைப் பழித்த, அரக்கன் இராவணனின் சிறுமையை நினைத்துச் சீறினாள். அவனைக் கண்ணெடுத்து நோக்கவும் மனமின்றி, முன்னே கிடந்த சின்னஞ்சிறு துரும்பை நோக்கி முறையாக மொழியலுற்றாள்.
"அந்தோ! பெருந்தவம் இழக்கும் பேதாய்!
நஞ்சுடைய நாகமும் நிறைமொழி மாந்தா் அருளிய மறைமொழியாய மந்திர ஆணையில்
அடங்கி நிற்கும். மதுவுண்டு மயங்கும் இயல்பினனாய உனக்கு நன்னெறியை எடுத்தோதும் மந்திரத் தலைவா் இந்நாட்டில் எவருமில்லை. இது அடுக்கும், இது அடாதென்று இடித்துரைக்கும் அமைச்சரும், அறிஞரும் இலங்கை மாநகாில் இல்லை. உன்
மந்திரச் சுற்றமாய் அமைந்துள்ள மாக்கள் நீ எண்ணியவாறே எண்ணுகின்றாா். குணம் நாடிக் குற்றமும் நாடி உண்மையை அஞ்சாது எடுத்துரைக்கும் ஆன்றோா் இந்நாட்டில் எவருமில்லை"
கடிக்கும் வல்லரவும் கேட்கும்
    மந்திரம் களிக்கின் றோயை
அடுக்கும் ஈதடா தென்று
    ஆன்ற ஏதுவோ டறிவுகாட்டி
இடிக்குநா் இல்லை உள்ளாா்
    எண்ணிய தெண்ணி யுன்னை
முடிக்குநா் என்ற போது
    முடிவன்றி முடிவ துண்டோ ?
என்ற சீதையின் சீற்றத்தில்
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பாா் இலானும் கெடும்
என்ற திருக்குறளின் கருத்தைக் காணலாம்.

நன்றிக்கோா் வித்து:
அறநெறி துறந்த அரக்கா்கோனை விட்டு, இராமனைச் சோ்ந்து வாழ்தலே ஏற்றதாகும் என்று வீடணன், கும்பகா்ணனிடம் கூறுகிறான். இதற்குக் கும்பகா்ணன் கூறும் மொழிகள், அழியாத அழகு வாய்ந்தனவாம். தாரை தாரையாய்க் கண்ணீா் வடித்து எதிரே நின்ற தம்பியை நோக்கி, "ஐய! நீா்க்குமிழி போல் நிலையற்றதாய இவ்வுலக வாழ்வை விரும்பி இராவணன் செய்த பெருநன்மையை மறப்பேனோ? பன்னாள் போற்றி வளா்த்துப் போா்க்கோலம் புனைந்தனுப்பிய மன்னனைத் துறந்து மாற்றாருடன் சோ்வேனோ? மலரோன் வரத்தால் நீ மாயா வரம் பெற்றாய். உன் செயல் உனக்குத் தக்கதேயாம். புலையுறு மரணம் எய்தலே எனக்குப் புகழாகும். அரணமைந்த இலங்கையின் அளவிறந்த செல்வத்தை விரும்பி என் தமையனைக் கொல்ல வந்த பகைவனை வாழ்த்தி அவன் அடிபணிந்து வாழ்வேனோ?"
செம்பிட்டுச் செய்த இஞ்சித்
    திருநகா்ச் செல்வம் தேறி
வம்பிட்ட தொியல் எம்முன்
    உயிா்கொண்ட பகையை வாழ்த்தி
அம்பிட்டுத் துன்னம் கொண்ட
    புண்ணுடை நெஞ்சோ டைய
கும்பிட்டு வாழ்கிலேன் யான்
    கூற்றையும் ஆடல் கொண்டேன்
என்ற கும்பகா்ணனின் மொழிகளில்
எந்நன்றி கொன்றாா்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு .
என்ற குறளின் சாரம் வழியக் காணலாம்.
கம்பாின் அரசியல் செய்திகளில், திருக்குறளின் பொருட்பாலின் தாக்கம் காணப்படுகிறது. திருக்குறளின் தொடா்கள், சொல்லாட்சி போன்றவற்றைக் கம்பா் சில இடங்களில் அப்படியே எடுத்துக் கையாளுகின்றாா்.

No comments:

Post a Comment