'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்
Showing posts with label கவிதைப் பட்டிமன்றம். Show all posts
Showing posts with label கவிதைப் பட்டிமன்றம். Show all posts

Nov 16, 2019

கவிதைப் பட்டிமன்றம்


ஈரோடு தமிழ்ச்சங்கத்தின் 30-ஆவது ஆண்டு விழாவில் புதுமையான முறையில் பாவலர் மா.வரதராசனார் அவர்களின் தலைமையில் பைந்தமிழ்ச்சோலைப் பாவலர் குழுவினரின் கவிதைப் பட்டிமன்றம் நடைபெற்றது. இரண்டு மணிநேரம் மிகமிகச் சுவையாகச் சிறப்பாக நடைபெற்ற அந்நிகழ்ச்சி மன்றத்தில் இருந்தவர்களை மயக்கிக் கட்டிப் போட்டது.


சொற்சுவையே...
கவிஞர் மன்னை வெங்கடேசன்
கவிஞர் வள்ளிமுத்து
கவிஞர் தமிழகழ்வன்

பொருட்சுவையே...
கவிஞர் விவேக்பாரதி
கவிஞர் சாமிசுரேசு
கவிஞர் சுந்தரராசன் 


தொடக்கக் கவிதை - பாவலர் மா.வரதராசன்

(காப்பு)

ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையாள்
தாயே தயாபரி சங்கரியே = வாயாரப்
பாடுமிப் பாட்டரங்கில் பக்குவமாய் வந்தமர்ந்து
நீடுதுணை யாவாய் நிறைந்து

அம்மா கலைவாணி ஆக்குமிப் பாட்டரங்கில்
எம்மாத் தவறும் நிகழாமல் - நம்பியோர்
இன்னல் தொலைப்பாய் இருந்தமிழை எம்நாவில்
கன்னலென வைப்பாய் கவித்து

மூத்தவளே முன்பிறந்த முத்தமிழே எம்நாவில்
பூத்தவளே எம்மையென்றும் காத்தவளே - வேர்த்தபடி
வேண்டுகிறேன் உன்னருளை வீழாமல் என்பாட்டில்
நீண்டருளச் செய்வாய் நிறைந்து

******

(தமிழ் வாழ்த்து)

சூரியனும் சந்திரனும் தோன்றிவருங் காலத்தே
வீரியமாய் வந்து நின்றவள் - அவள்
வீழுமழை யாகி நின்றவள் - நல்ல
காரியமாய் இங்கவளைக் காப்பெனவே வேண்டுகிறேன்
நேரிழையா ளேவருகவே - வந்து
நேரிசையாய்ப் பாத்தருகவே!

உச்சிமுதல் பாதம்வரை ஒய்யாரப் பொன்னகையாய்
வச்சிருக்கும் நூல்க ளெடுப்பாய் - எங்கள்
வாயமர்ந்து சொற்கள் கொடுப்பாய் - மிகக்
கச்சிதமாய் இவ்வரங்கைக் கட்டிவைத்து வெற்றிபெற
நிச்சயமாய்க் காத்தருள்கவே - எங்கள்
நினைவில்சொல் பூத்தருள்கவே!

வாய்திறந்த நாள்முதலாய் வண்டமிழே உன்னையெங்கள்
தாய்மொழியே என்று பணிந்தோம் - உன்றன்
தாள்பணிந்து சிந்தை குளிர்ந்தோம் - பல
நோய்க்கொடுமை யாய்ப்புகுந்த வேற்றுமொழி வீச்சிருந்து
பாய்மரமாய்க் கட்டியாண்டவள் - அவள்
பாமரனின் வாய்பிறந்தவள்.

நெஞ்சமெனும் வீட்டினிலே நினைவென்னும் ஆசனத்தில்
வஞ்சிமகள் வந்தமர்ந்ததால் - எங்கள்
வாக்கினிலும் வந்துநின்றதால் - துயர்
கொஞ்சமுமி லாதபடி கோதையவள் இவ்வரங்கில்
கொஞ்சிவந்து சிந்துதருவாள் - நமைக்.கொஞ்சிமகிழ்ந் தன்பைத்தருவாள்!

கொட்டிவரும் பேரிகைகள் கூட்டிவருந் தூரிகைகள்
கொட்டித்தரும் வெற்றியென்றுமே - கை
கொட்டுதுபார் இந்தமன்றமே - அட
பட்டிதொட்டி எங்கும்புகழ் எட்டும்படி நின்றதமிழ்
கொட்டுகவே இந்தமன்றமே - கை
தட்டுகஎ ழுந்துநின்றுமே!

பாத்தமிழே எங்களுள்ளம் வாதமிழே என்றுவேண்டி
நாத்தழுக்க வேண்டினேனடி - என்றன்
நாவினிக்க. வேண்டினேனடி - அடி
காத்திருக்கும் இந்தமன்றம் கைகள்தட்டிக் கேட்டிருக்கக்
காத்திடுவாய் சொல்லைக்கொடுத்து - புகழ்
சேர்த்திடுவாய் தொல்லைதடுத்து!

******
(சேலம் பாலன் அவர்களுக்கு)

எட்டுத் திக்கிலும் வெற்றி கொட்டிட
இட்டுந டத்திடும் சீலன் - இவர்
எட்டும்பு கழ்பெறு தூயன் - தமிழ்
எட்டிப் பாரெலாம் சுற்றி யெங்கிலும்
இட்டுச் செல்கிற பாலன் - இவர்
ஏர்கவி மாமணி பாலன்

சேலம் தந்தவோர் செம்ம லாகிய
சீர்புகழ் மாமணி பாலன் - தனிச்
செம்மை விளைத்திடும் சீலன் - கொடும்
ஆலம் மிகுப்பினும் அச்சமி லாதவர்
ஆல மரமெங்கள் பாலன் - அட
ஆளும் சிவனெங்கள் பாலன்!

******
(அவையடக்கம்)
கவிதை பாட வந்தோம் - உங்கள்
கவலை தீர்க்க வந்தோம் செவியில் தேனை ஊற்றி - உங்கள்
சிந்த மகிழச் செய்வோம்!

சொல்லைப் பாட வந்தோம் -
பொருளின்
சுவையைப் பாட வந்தோம்
கல்லைப் போன்ற மனமும்- இளகிக்
கனியப் பாட வந்தோம்

தன்னை மூல மாக்கி - நின்ற.
தமிழத் தாயை வேண்டி
மன்றம் வந்த மர்ந்தோம் - உங்கள்
மனத்தில் வந்த மர்ந்தோம்

கோல வானி லுள்ள - அந்தக்
குளிரும் வெண்ணி லாவைத்
தாளம் போட வைக்கும் - நல்ல
தமிழில் பாட வந்தோம்

பட்டம் வேண்ட வில்லை - எந்தப்
பரிசும் வேண்ட வில்லை
தட்டும் உங்கள் கையின் - சத்தம்
தன்னை வேண்டு கின்றோம்

காசு கேட்க வில்லை - உங்கள்
காதைக் கொஞ்சம் கேட்டோம்
பேசும் தமிழைக் கேட்க - உங்கள்
பேச்சை குறைக்க வேண்டும்

பாடும் எங்கள் பாட்டில் - குற்றம்
பார்க்க நேர்ந்து விட்டால்
நாடும் பிள்ளை உளறல் - என்று
நயத்தைப் பார்க்க வேண்டும்

கையி லுள்ள பேசி - இயங்கும்
காதைத் திருகி வைப்பீர்
பொய்யில் லாத கவிதை - கேட்கப்
புலன்கள் திறந்து வைப்பீர்

*******

உள்ளத்தின் உணர்வுகளை ஒன்றாய்க் கூட்டி
   ஒப்பற்ற சொல்லெடுத்தே ஒழுங்காய்க் கட்டித்
தெள்ளுதமிழ் மிக்கோங்கப் பொருளைச் சேர்த்துத்
   தேனொழுகும் அணிசெய்து கவிதை செய்ய
அள்ளுவிதம் நெஞ்சத்தில் அமரும் பாட்டே
   அழகான கவிதையென ஆகு மப்பா
உள்ளபடி அக்கவியின் சிறப்பெ தென்ற
   ஒருதலைப்பை எங்களுக்குக் கொடுத்துள் ளார்கள்

சொற்சுவையே எனுமணியில் வெங்க டேசன்
   சொக்குகவி தமிழகழ்வன் வள்ளி முத்து
சொற்சுவையே வேண்டுமெனச் சொல்ல வந்தார்
   சுவைப்பதற்காய் உங்களுடன் நானும் உள்ளேன்
அற்புதமாய் அமைகின்ற பொருளே வேண்டும்
   அதுகவிதை எனச்சொல்ல விவேக்கோ டிங்குக்
கற்பூர கவிஞன்சாமி சுரேசும் மற்றும்
   கண்ணான சுந்தராசன் வந்துள் ளார்கள்

வெற்றிபெறப் போவதுயார் பொருளா சொல்லா
வீசுகவி தனைக்கேட்டு முடிவு செய்வோம்

சொற்சுவையே... - கவிஞர் மன்னை வெங்கடேசன்



அணிக்கான தலைமைக்கவிதை:

தமிழ்வாழ்த்து

என்றுபி றந்தாய் எனவறி யோமே
இன்றமிழ் மொழியாளே
கன்றுப சுவினைக் காண்பபோல் உன்னைக்
கதியெனக் கண்டுகொண்டேன்
மன்றினில் பெரிய அறிஞர்கள் முன்னே
வந்தனன் கவிபாட
நன்றெனைக் காத்து நல்வழி காட்ட
நானுனைப் பணிந்தனனே                            1

அவை வணக்கம்
ஈரோட்டில் உள்ள இந்த
ஏர்மிகு பேர வையை
சீரோடு நடத்து கின்ற
திருசேலம் பால னையா
பாராட்டுக் குரிய ஏனை
பண்புடைய மற்ற வர்க்கும்
தாராகப் பாத்தொ டுத்துத்
தந்தேனென் நல்வ ணக்கம்!                          2

தலைமை வணக்கம்
பாவகை யெல்லாம் வளமொடு கற்கப்
பைந்தமிழ்ச் சோலையைத் தந்த
பாவலர் வரத ராசரே இந்தப்
பாட்டரங் கத்திலே தலைவா
ஆவலாய் வந்தேன் அறிஞர்கள் முன்னால்
அருந்தமிழ்ப் பாக்களைப் படிக்கப்
பாவையாள் தமிழ்மேல் பற்றுள உம்மைப்
பணிந்துநான் தொடர்கிறேன் இங்கே!       3
  
(சொற்சுவையே சிறப்பு)

சொல்லுக சொல்லிற் பயனுடை யென்ற
வள்ளுவன் சொல்லை வழியாய்க் கொண்டால்
சொல்லின் திறத்தைத் சொல்லா தறியலாம்
சொல்லதன் சீர்மையைச் சொல்ல வந்தவன்
இனியவை கூறென்றான் இன்னா தவிரென்றான்
கனிஉள்ளங் கையாகக் காட்டாதோ சொல்வீர்
செவியில் நுழைவதைச் சித்தமேற் றால்தான்
கவிதையின் பொருளைக் கண்டு சொல்லலாம்
சொல்லைக் கொண்டுதான் சொல்தரும் பொருளை
நல்ல விதமாய் நாமும் உணரலாம்
இவ்விதம் சொல்லே எதிலும் முன்னிற்க
எவ்விதம் பொருளை ஏற்றம் எனலாம்
மாற்றுத் கருத்தினர் வந்துளார்
சாற்றுங்கள் அவர்க்குத் தரமிங்குச் சொல்லென்றே!
வள்ளுவன் தன்னை வகையாய் மறந்தாலும்
சொல்வலன் கம்பனைத் துணையாய்க் கொளலாம்
அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்
இன்ன வகையில் இன்பக் காதலை
நன்றாய் உரைத்த நயமிகு பாடலை
நன்றாய் நோக்கினால் நமக்கெலாம் விளங்கும்
சொல்லே கூட்டுமாம் சுவையைப் பொருளது
அல்லவென் றிந்த அவனிக்குக் காட்டுமே                 4

(வேறு)
எவரும் அறிந்த ஒருகதைதான்
இனிய சொற்கொண்டு அமைந்ததனால்
உவப்பும் இங்குப் பெரிதன்றோ
உலகில் கம்பன் தருங்காதை
புவிக்குத் தெரிந்த ஒருகதையைப்
புதிதாய்ச் சொற்கட் டமைத்ததனால்
எவரும் படித்து மகிழ்கின்றார்
இந்தச் சிறப்புக் காவியத்தை                        5

எந்தக் கவிதை கண்டாலும்
இயம்பும் பொருளோ சிலவகையே
சிந்தை வளத்தைப் பெருக்கவொன்று
தீமை தன்னை ஒறுக்கவொன்று
பந்தம் பாசம் உரைக்கவொன்று
பாங்காய் அரசை அமைக்கவொன்று
பந்தம் பாசம் விடவொன்று
பக்தி ரசத்தைப் பிழியுமொன்றே                 6

பொருளைச் செறிவாய் உணர்த்துதற்குப்
புதிதாய்ச் சொற்கள் தமைக்கண்டால்
அருமை என்றே மகிழோமோ
அதிலே நாட்டம் காணோமோ
கருவை எப்படி வைத்தாலும்
கட்டும் சொல்லில் சுவையிலையேல்
பெரிய ஏரி யுள்நீரை
பிடித்து வைக்கா நிலையன்றோ                 7

சுவரிலை யென்றால் ஆங்குத்
தூரிகை ஓவி யத்தைக்
கவினுற வரையும் ஆற்றல்
கடுகள வேனும் உண்டோ
சுவைபடப் பொருளைச் சாற்றும்
சொற்சுவை யில்லாப் போதில்
அவனியில் அந்தப் பாட்டை
அனுபவிப் பாரும் உண்டோ                          8

மகிழ்ச்சியைக் கருவாய்க் கொண்டால்
வரும்சொலால் மகிழ்ச்சி வேண்டும்
இகழ்ச்சியைக் கருவாய்க் கொண்டால்
இகழ்வது போல்சொல் வேண்டும்
முகிழ்கிற சொல்லே ஆங்கு
முனைகிற பொருளைத் தந்து
பகிர்கிற எல்லோ ருக்கும்
பயன்தரு மாறு வேண்டும்                              9

(வேறு)
சிலையானவர் உயிரோடெதிர்
வருமாயொரு கவியே
    செயலாமிக வெளிதாயொரு
செறிவானசொ லுறுமால்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செய லறவே
    குகைவாழொரு புலியேஉயர்
குணமேவிய தமிழா
கலைமேவிய கவிபாரதி
யவர்தாசனி னுரையே
    கணமேயிது விழிமூடிய
நிலையேசெவி புகுமால்
அலைமோதிடு கடல்போலுள
முணர்வேயது பெறுமே
    அறியாமையு மதுவோடிடு(ம்)
அறமேயுள முறுமே                                       10

(முடிவுரை)

பதமென்றால் சொல்லென்று
பொருளாகும் அறிவீரே
    பதமென்றால் பக்குவத்தின்
மறுசொல்லும் ஆகுமன்றோ
அதனால்தான் அவையோரே
சொல்கின்றேன் என்கருத்தை
    அழகுள்ள கவியொன்றை
யாரெழுத முயன்றாலும்
இதமாகச் சொற்சுவையே
வந்துதவும் என்கின்றேன்
    இயம்புகின்ற பொருளதுவும்
சொல்லாலே மேன்மையுறும்
இதையிங்கே யானுரைக்க
இனியதொரு வாய்ப்பீந்த
    எல்லோர்க்கும் என்நன்றி
மீண்டுமொரு முறைவருவேன்!                   11

பொருட்சுவையே... - கவிஞர் விவேக்பாரதி




அணிக்கான தலைமைக்கவிதை:

தமிழ் வணக்கம்

செந்தமிழ்த் தாய் சரணம் - அவள்
   செம்மை நலங்களே தாம்சரணம் - சற்று
முந்தியோர் மாநகரில் - சிவன்
   முன்புதன் வாதம் தனைநிறுத்தி
சிந்தை தெளிந்த கவி - எங்கள்
   சங்கத் தமிழ்க்கவி கீரனவன் - மிசை
விந்தை புரிந்த தமிழ் - அந்த
   வீரத் தமிழ்மொழி தாள்சரணம்!

வாதம் தருக்கமெனும் - செவி
  வாய்த்தநற் றுணிவெனும் தோடணிந்தாள் - எனக்
காதலில் பாரதியார் - புகழ்
  கலையின் அரசி பதம்பணிவேன்!
நீதி எவர்புறமோ - அதை
  நின்று வழங்கிடும் நந்தலைமை - உயர்
ஆதவன் நேர் தலைவர் - மரபு
  ஆசான் வரதரின் தாள்பணிவேன்!

ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை

ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை - இது
   இன்றமிழர் பாராட்டும் சீரவை - நல்ல
பேரோடு தமிழ்காக்கும் ஓரவை - அதன்
   பெருமைகள் வாழ்த்தியே பாடுவேன்! - கவிச்
சீராடும் பட்டிமன் றந்தனை - மிகச்
   சிறப்போடு செய்திறம் வாழ்த்துவேன்! - இனி
போராடத் தலைப்புள் புகுந்துயான் - என்
   பொறுப்பினைச் இனிதே தொடங்குவேன்!

கவிதையின் வெற்றி - பொருளே

எதிரணித் தலைவர் இயம்பிய தெல்லாம்
   ஏதோ சரியாய்ப் படுகிறது
புதிரிடும் வண்ணம் சொன்ன கருத்துகள்
   புகையென நம்முன் விரிகிறது!
பதறிட வேண்டா பக்குவ மாகப்
   பாடம் சொல்லிட நான்வந்தேன்!
எதில்பலம் என்றே நீங்கள் சொல்வீர்
   ஏற்றுக் கொள்வார் நம்நடுவர்!

நல்ல தீர்ப்பினை நாடி வழங்கிடும்
   நடுவர் அவர்களே - எதில்
வல்லமை என்பதை நன்கு தெளிந்தநம்
   வளமை நடுவரே! - இங்கே
வெல்கிற கவிதையில் பொருளே உயர்வென
   விளங்கும் போதிலும் - வெறும்
சொல்லே உயர்வெனச் சொல்லிக் குழந்தைகள்
   தொடர்ந்து வருகிறார்!

கவிதை எப்படிப் பிறக்கிறது? - எந்தக்
   கணத்தில் அதுவும் உயிர்க்கிறது? ஒரு
கவிஞன் எப்படித் தோன்றுகிறான் - இக்
   கருத்தை எண்ணிப் பாருங்கள்!

முன்னர் நமக்கு முன்னோர்கள் - தமிழ்
   முறையாய் வளர்த்த சான்றோர்கள்
பொன்னாய்க் கற்ற கல்விதனைப் - பலர்
   புகழ்ந்திடச் செய்யுள் தனில்வடித்தார்!

அதனைப் படித்தார் அதன்வழியே - தாம்
   அறிந்த வற்றைக் கவிதைகளாய்ப்
பொதுவில் தந்தார் அதுவேதான் - இப்
   போது வரைக்கும் தொடர்கிறது!

பொருளில் லாமல் சொல்கொண்டு - முன்
   போனவர் எழுதி வைத்திருந்தால்
திருவே டெனநாம் அதைப்படித்து - மதித்
   திரட்டை எப்படிப் பெற்றிருப்போம்?

பொருளில் லாமல் கவியில்லை - இந்தப்
   பொருளறி யாமல் எதிர்த்தலைவர்
வரியில் காட்டிய கம்பனையும் - குறள்
   வள்ளுவன் பாட்டையும் மக்களின்னும்

பாடிப் பரவுதல் பொருளாலே - அவை
   பாருக் குகந்தவை யதனாலே
வேடிக்கைதான் அவர் பேச்சு - மழை
   வீதியில் வெடித்த பட்டாசு!

கொழுக்கட்டைப் பலகாரம் விரும்பி உண்போம்!
  கொழுக்கட்டைக் கெதுசிறப்பு? வெளியில் உள்ள
தழுதழுப்பு வெளுந்தோலா? உள்ளி ருக்கும்
  தரமான பூரணமா? பலாப்ப ழத்தில்
அழகாக எதிரிருப்போர் வெளித்தோல் உண்டு
  அதிலிருக்கும் சுளைவேண்டா என்றா சொல்வார்?
குழந்தைகள் எனமுன்னம் சொன்ன கூற்றைக்
  குறையின்றி நிரூபிக்க மன்றம் வந்தார்!

“தாதிதூதோ தீதுதத்தை தூதோ தாது”
   தனிப்பாட்டில் இக்கவியைப் படித்த துண்டா?
சாதித்த தென்னிந்தக் கவிதை? உள்ளே
   தரமான பொருளிலையேல், தகரச் சொற்கள்
மோதிப்பல் அடிவாங்கும் நிலைமை நேரும்!
   முழுதாக இதையாரும் படிப்பா ருண்டோ?
வாதிக்க வந்திட்டார் சிறு பயல்கள்
   விளையாட்டுச் சிறுவர்கள் வேடிக்கைதான்!

எதுகைக்கும் மோனைக்கும் ஆசைப்பட்டு
   ஏமாந்து போகாதீர்! இறைமை நோக்கிப்
பொதுப்பொருளில் கவிபாடச் சொல்லிக், காதல்
   புகுந்ததனால் உயிர்போன கவிஞன் உண்டு!

கட்டுரையை வரிவரியாய் மடக்கிப் போட்டு
   கலைச்சொற்கள் பலவற்றை அடுக்கிப் போட்டு
எட்டுணையும் பொருளின்றி வெற்றுச் சொல்லாய்
   எழுதியவோர் கவிதைநீர் நினைப்ப துண்டா?

கவியெழுதச் சொல்வேண்டும் மறுக்க வில்லை!
   கனல்போலச் சொல்வேண்டும் ஒப்புக் கொள்வோம்!
கவியெழுதச் சொல்வேண்டும் என்ப தைப்போல்
   கவிதோன்றப் பொருள்வேண்டும் மறுப்பா ருண்டா?
புவியினிலே புதுமையையோர் கவிஞன் கண்டாற்
   புறப்படுமே புதியபொருள் அவனுக்குள்ளே!
கவிபிறக்க வப்புதிய பொருளே வேண்டும்
   காற்றாடி விடத்தேவை நூல்கண் டன்றோ!

ஆம்பொருளை நூல்கண்டென் றாலும் ஒக்கும்!
   அதுமறைந்து பின்னால்தான் இருக்கும்! ஆனால்
நாம்பார்க்கும் பட்டமெனும் சொல்லை, மேலே
   நல்லவிதம் இயக்கிடுநூல் பொருளே! காலம்
போம்சொற்கள் போம்பொருளோ நிலைத்து நிற்கும்!
   பொருளின்றிக் கவிதைகள் வெற்றுக் கூடு!
தாம்தகிட தீம்தகிட கூடச் சொல்தான்
   தகுந்தபொருள் அற்றவிதைக் கவியென் போமா?

எதிரணித் தலைவர் ஏதோ
   எக்கவி சொல்லும் போதும்
பொதுவினில் சிலபொ ருள்தான்
   புகல்வதாய்ச் சேதி சொன்னார்!
புதுவிதப் பொருளில் பாட்டு
   பூமியில் பிறப்ப தால்தான்
குதித்தெழுந் டோடும் நந்தாய்
   குவலயம் ஆளு கின்றாள்!

தீயெனச் சொல்லி விட்டால்
   திசையெலாம் சூடு தோன்றும்!
காயெனச் சொல்லி விட்டால்
   கடையிதழ் கசப்பு நேரும்!
பாயெனச் சொன்னால் தேகம்
   படுக்கவோர் இடத்தைக் கேட்கும்!
நோயெனச் சொன்னால் உள்ளம்
   நடுங்குமே இவையெல் லாமும்

சொல்லினால் வந்த வொன்றா
   சொல்லுவார் குறிக்கும் அந்த
நல்லதோர் பொருளின் தன்மை
   நல்கிய உணர்ச்சி அன்றோ!
கல்லினைக் கல்லே என்போம்
   கருவறை புகுந்து விட்டால்
ஒல்லையில் கடவுள் என்போம்
   உணர்ந்திடும் பொருளால் அன்றோ!

நடுவரே அதனா லும்மை
   நாடியே வந்த வர்க்குச்
சடுதியில் புத்தி சொல்லி
   தேற்றுக! இன்னும் வாதம்
தொடுத்திடச் செய்தி உண்டு
   தொடர்ந்துயாம் செய்தால், சின்னப்
பொடிசுகள் அஞ்சும்! பின்னர்
   பொறுப்பிலை அழுகைக் கெல்லாம்!

பொருளறிந்து கற்பவரே கற்றார் - அன்றி
   போகுபோக்கில் கற்பவர்கள் வெற்றார் - சூழும்
இருளறிந்து விளக்கேற்ற வேண்டும் - பகல்
   இளிக்கையிலே விளக்கிலென்ன லாபம்? - இதை
ஒருபொழுது நினைத்திடவும் இல்லை - வந்து
   ஓயாமல் சொல்சொல்சொல் என்பார் - அவர்
வருவதும் தருவதும் சொல்தான் - அதில்
   வாதாடி நிற்பதெலாம் பொருள்தான்!

ஆதலினால் நானுமிதைச் சொல்வேன் - உயிர்
   அமைந்திருக்கும் பொருளுடைய பாட்டு! - அன்றி
ஏதுமிலா ஓர்சடத்தைக் கண்டு - அதை
   உயர்ந்தகவி என்றுசொல்லல் மடமை! - கவிக்
காதலரே கவிபொருளால் வெல்லும் - அது
   காலங்கள் தாண்டிக்கதை சொல்லும் - என்று
வாதமிதை யாம்நிறைவு செய்வோம் - இனி
   வருங்கதையும் பதில்கதையும் காண்போம்!!