'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்
Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Jun 14, 2021

கைம்மாறு!

மழையளிக்கும் முகிலினங்கள் பெய்வ தற்கு,

      மாற்றுதவி  எதிர்பார்க்கும் வழக்கம் உண்டோ?

குழையமுதைக் கொட்டுகின்ற நிலவும் அந்தக்

      குளிரொளியை விலைசொல்லி விற்ப  துண்டோ?

விழைவுடனே உலகமெலாம் சுற்றிச்  சுற்றி,

     வெம்மையுடன்  ஒளிபரப்பும் கதிரும் என்றும்

உழைகூலி கேட்பதுண்டோ? உயர்ந்த சான்றோர்,

     ஒருநாளும்  கைம்மாறு கருதல் உண்டோ?


பூக்களெலாம் பணம்வாங்கி மலர்வ துண்டோ?

     புவிநம்மை வாடகைதான் கேட்ப துண்டோ?

கூக்குவென வைகறையில் பாடு் தற்குக்

     குயிலினங்கள் பரிசிலெதும்  பெறுவ துண்டோ?

ஏக்கமின்றிக் கரிவளியை மரம்வி ழுங்கி

       எஞ்ஞான்றும்  உயிர்வளர்க்கும் வளிய ளிக்க,

ஊக்குதொகை  கேட்பதுண்டோ? உயர்ந்த  சான்றோர்,

     ஒருநாளும்  கைம்மாறு கருதல் உண்டோ?

                                        -- தில்லைவேந்தன்

அம்மா! மாறிலாப்பத்து!

 அம்மா! மாறிலாப்பத்து!

                           கவிஞர் சுந்தரராசன்

பிண்டமாய்ப் போந்துன் னுள்ளே

  பிரண்டுகால் நீட்டி எத்தி

உண்டியின் சத்தை எல்லாம்

  உறிஞ்சியென் வளர்ச்சி யாலே

மண்டிடும் மசக்கை வாந்தி

  மற்றுபற் கோடித் துன்பும்

கொண்டனை தாயே நீசன்

  கொடுத்திடக் கைம்மா றுண்டோ?


பத்திரண் டென்பு நையும்

  பாடெலாம் பட்டுப் பெற்றுக்

கத்திடும் போதி லெல்லாம்

  கண்விழித் திருந்து பார்த்து

நித்தமும் என்னைக் காத்த

  நிமலையே! பிள்ளை ஈடாய்

எத்திறம் மாறு செய்ய?

  ஏதுமீ டிலையே தாயே!


உன்னுடை உதிரந் தன்னை

  உவந்திவன் பாலாய்ப் பெற்றேன்!

என்பசி தூக்க மென்றே

  எனக்கென வாழ்ந்தாய் நீயே!

தன்னல மில்லா உன்றன்

  தகைமையின் எதிரே வைக்க

என்னிவன் செய்வேன் தாயே!

  ஏதுமே இலையே மாறே!


அகஞ்சுழித் தழுதே னானால்

  ஆதுரங் காட்டிச் சற்றும்

முகஞ்சுழிக் காதென் தூய்மை

  முந்தியே பேணிச் சுற்றுஞ்

சகஞ்சுழித் தோடிக் காக்கும்

  சலமதன் கருணை காட்டிச்

சுகஞ்சுழித் தாடச் செய்தாய்!

  சொல்லிவன் மாறென் செய்வேன்? 


கலைகளைக் கற்றுத் தந்து

  கவிதையில் ஆர்வ மூட்டி

பலவகைப் போட்டி யெல்லாம்

  பங்குறச் செய்து வெற்றி

நலமெனைச் சேரப் பின்னே

  நாளெலா முழைத்தற் கீடொன்

றிலையெனும் போதிற் பிள்ளை

  என்செயக் கூடு மம்மே!


உழைப்பிலாப் போழ்தை உன்னில்

  ஒருகணம் கண்டேன் இல்லை!

இழப்பெது நேர்ந்த போதும்

  இருக்கிறேன் அன்னை என்றே

முழக்கிநீ முன்னே நின்று

  முழுமையுங் காத்தாய் அவ்வப்

பழுக்கிலா அன்புக் கீடாய்

  அம்மையே மாறென் செய்வேன்?

 

மெய்யெலாஞ் சோர என்றன்

  மேன்மையே கருத்திற் கொண்டு

கையெலாங் காப்பு கைக்கக்

  கைத்தொழில் செய்தே பாரில்

உய்யலாங் கவலை இன்றி

  உயரலாம் என்றே சொன்ன

தையலா முனக்கோர் மாறு

  தருக்கனுஞ் செய்வ தென்னே? 


கேணிவாழ் வான்மேல் பத்திக்

  கிறுக்கிலே பாடல் யாக்கும்

வாணிவாழ்ந் திருந்த நாவால்

  வாஞ்சையாய் என்னைத் தூண்டிக்

காணிவாழ் வேண்டல் செய்தோன்

  காலடி தொடரச் செய்தாய்!

நாணிலேன் கைம்மா றென்றே

  நடத்தவொன் றிலையே தாயே!


ஆழியாய்க் கடைந்தே உன்னை

  அமுதெனக் கீந்தாய் அம்மா!

தோழியாய்த் தோளுந் தந்து

  துயர்துடைத் திருந்தாய் அம்மா! 

நாழிகைப் போழ்தும் என்றன்

  நலம்மறந் திலையே அம்மா!

ஏழையேன் இவைக்கீ டாக

  என்னகைம் மாறு செய்வேன்? 


மாறுதல் ஒன்றே என்றும்

  மாறுதல் காணா தென்னும்

மாறிலா நீதி யாலே

  மாறிநீ வடிவு கொண்டு

மாறுதல் இல்லா அன்பை

  மழையெனப் பொழிவாய்! பிள்ளை

மாறிலேன் ஏதும் செய்ய!

  மறக்கிலேன் வாழு மட்டே

தவிப்பு

 தவிப்பு


அன்பே உன்னால் ஆசைத் தீயை
அகத்தில் வளர்த்து வாடுகிறேன்-அதை
முன்னே முகத்தில் மலரா வண்ணம்
முடியும் வரைநான் மூடுகிறேன்

புதிதாய் வந்தாய் பூத்துச் சொரிந்தாய்
புதுமை புரிந்தாய் பொன்னிலவே - நீ
எதுவோ செய்தாய் என்னை இழுத்தாய்
இயம்பாய் என்றன் இன்னிசையே

என்றோ ஒருநாள் எங்கோ பார்த்தேன்
எப்படிச் சொல்வேன் கனிமொழியே -அவன்
நன்றே எல்லாம் நாடிய அனைத்தும்
நாளும் நடக்கும் மணிமலரே

வந்தாய் வடிவே வரமே தந்தாய்
வளமாய் வாழ்வோ மென்றிருந்தேன்-
புதுச்
செந்தேன் வடியச் சிலநாள் நின்றாய்
சென்றாய் எங்கோ நின்றிருந்தேன்

உள்ளக் கமலம் உன்னால் தானே
ஊறுந் தேனில் நனைகிறது - அது
பள்ளம் நோக்கிப் பாயும் நீராய்
பாவை உன்னை நினைக்கிறது

தவியாய்த் தவித்துத் தலையும் பழுத்துத்
தனியே கிடந்து மாடுகிறேன் - நீ
தமிழாய் எழுந்து தருவாய் மலர்ந்து
சந்தக் கவிதை பாடுகிறேன்

காசு பணம் எதற்கு?

 காசு பணம் எதற்கு?


*********************

பறவைகளின் ஒற்றுமையைப் பார்க்கும் வேளை

படம்பிடித்து முகநூலில் பதிவர். ஆனால் 

உறவுகளின் கட்டமைப்பை ஒதுக்கி விட்டு

ஒண்டியென வாழ்வதற்கே ஊக்கம் கொள்வர்

சிறகடித்துப் பறப்பதற்கே சிந்தை தன்னில்

சிற்றின்ப வானத்தில் சேர்ந்து கொள்வர்

நிறம்மாறும் பச்சோந்தி நிலையில் நின்று 

நிதம்மாறும் குணமொன்றே  நெஞ்சில் வைப்பர்.

**

சுயநலத்தின் வழிசெல்ல சொகுசு வாழ்க்கை

சுதந்திரமாய் உள்ளதென்று சொல்லு வார்கள்

வியத்தகுவா னந்தபூக்கள் விளைந்து வாசம்

வீசுவதாய் வேறுசொல்லு வார்கள். மண்ணில்

பயமிகுந்த சூழலொன்று பாய்ந்து வந்து

படபடப்பை யூட்டுகின்ற பீதி வந்தால்

தயக்கமற்று உறவுகளைத் தாவிச் சென்று

தஞ்சமென்று கால்வீழ்ந்து தாங்கக் கேட்பர்.


**

விறகாலே எரிந்தோயும் வேட்கை கொண்டு

விளையாட்டாய் வளர்ந்துவிட்ட வெற்றுத் தேகம்

மறவாமல் ஒருநாளில் மண்ணில் சாயும்

மரபோடு இவ்வாழ்க்கை மறைந்து போகும்

திறவாமல் மனக்கதவை திடமாய்ப் பூட்டித்

திரிகின்ற கடும்போக்குத் தீயை மூட்டிப்

பிறவிக்குப் பயனற்றப் பேராய் வாழப் 

பிடிவாத மென்கின்றப் பீடை யேனோ?

**

எரிகின்ற தீபமென இருந்து நாளும்

இருளென்ற பேயகற்றி இடரும் நீக்கித்

திரிந்திட்ட மகிழ்ச்சிக்குத் தீமை செய்து

திக்கெட்டும் பதைபதைப்பைத் தேக்கி வைக்கத்

தெரியாத நோயொன்று தீண்டித் தீண்டித்

தினந்தோரும் பலபேரைத் தீர்க்கும் வாழ்க்கை

கரிகின்ற வேளையிலும் கருணை யற்று

கண்மூடிக் கிடப்பதற்கேன் காசு பணமோ?

**

மெய்யன் நடராஜ் 

வண்ணப்பாடல்

 வண்ணப்பாடல்


கவிதை

**********

தனத்தன தனத்தந் தனத்தன தனத்தந்

தனத்தன தனத்தந் தனதானா



கருத்துட னுருக்குங் கவித்துவ மிருக்குங்

களிப்பது மிகுக்குங் கனவாமே

கழித்தவ ரொதுக்குங் கருப்பொரு ளெடுக்குங்

களத்தினி லொலிக்குங் கனலாமே


குருத்துவ மளிக்குங் குறிப்பொடு சிறக்குங்

குணத்தினை நிறைக்குங் குரலாமே

குழப்படி யொழிக்குங் குலப்பகை யழிக்குங்

கொதிப்பதை நிறுத்துங் கனிவாமே


திருக்குறள் முழக்குந் திருட்டினை விரட்டுந்

திரட்டுவ தனைத்துந் திருவாமே

தெருக்களை யசைக்குந் தருக்களி லிசைக்குந்

திருப்புக ழினிக்குங் கடலாமே


சுருக்கமும் அருத்தந் திகைப்புற விரிக்குஞ்

சுருக்கென வுறைக்குஞ் சுடராமே

துலக்கமு மொளிர்க்குங் கலக்கமு மடக்குஞ்

சுரத்தொடை யணைக்குங் கவியாமே!


செல்லையா வாமதேவன்

தமிழர்களே... தமிழர்களே!

ஆரியத்தை வெல்வதற்கு ஆங்கிலர்க்குத் தாழ்திறந்தாய்
பூரிய இந்தியைப் பூட்டிவிட்டாய்-சீரிய
சிந்தையின்றிச் சீழாந் திராவிடத்தை ஏன்கொண்டாய்
தந்தைதாய் இல்லாச் சருகாநீ-கந்தகமே
ஆயிரம் ஆண்டுகளாய் ஆரியத்தை வாளெடுத்துப்
பாயிரத்தெ றிந்ததெலாம் பைந்தமிழே-வாயிருந்தும்
கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தில் சேர்ந்தாயே
தாலிக் குகந்ததுவோ தாய்தமிழா-வேலியென
நின்றாரே மேய்ந்தகதை நீயறிந்தும் வெட்கமின்றிச்
சென்றவர்பால் சேருகின்றாய் தீதிலையோ-கொன்றழிக்கும்
தீப்பகைதாள் தாங்கத் திராவிடத்தார் போனதன்றிக்
காப்பில்லை என்பதனைக் காண்கிலையோ-மூப்பிலா
செந்தமிழச் சொந்தங்களே சேர்வீர் தமிழர்களாய்
எந்நோய்க்கும் இஃதே எதிர்ப்பு
                                                        -ஆதிகவி

நுளம்பு (கொசு) சூழ் உலகு.-

பைந்தமிழ்ப் பாமணி 
 சரஸ்வதி பாஸ்கரன்

உயிர்கொல்லும் நுளம்பழித்து வாழ்வினிலே என்றும்
    உயிரான இளந்தளிரைக் காத்திடுவோம் வாரீர்
பயிராகும் முன்னருமே கருகுகின்ற பாவம்
     பசுந்தளிரைப் பக்குவமாய்ப் பாதுகாத்தல் வேண்டும்
கயிர்கொண்டே இழுக்கின்ற எமனிடமும் நாமும்
     காப்பாற்ற வேண்டுமென்றே வேண்டுகின்றேன் நாளும்
உயிரெல்லாம் செத்துப்போய் இவ்வுலகில் என்றும்
     உறவுகளும் ஒப்பாரி வைப்பரிங்கே காண்பீர் !

கொஞ்சுகின்ற பிள்ளைகளின் கதியதுவும் பாரீர்
     கோலமயில் தாயவளின் கண்ணீரால் நாமும்
வஞ்சிக்கப் படுவதுவும் நிலைதானோ ஈங்கே
     வரமான வாழ்க்கையுமே இல்லைதானோ நமக்கே
அஞ்சனாவின் நிலைதன்னை அறிவோமே நாமும்
    அழுதாலும் தொழுதாலும் மீண்டிடுமா வாழ்வு
பஞ்சுபோன்ற பாலகரை இழந்தவர்கள் எல்லாம்
    பரிதவித்தல் பார்த்திருத்தல் கூடிடுமோ சொல்வீர் !

விழிப்படைவீர் எல்லோரும் ஈங்கின்றே கண்டு
    வியனெனவே தளிர்களையும் காப்பாற்ற ஒன்று
வழிதேடி நிலவேம்பின் சாற்றினையும் தேடி
    வாழ்விற்குத் தந்திடுதல் முறைதானே ஓர்க.
விழியாகக் குழந்தைகளைப் பேணிடுதல் வேண்டும்
    விலகாதும் அவர்நலனைக் காத்திடுதல் வேண்டும்
பழியில்லாச் சமுதாயச் செயலன்றோ இஃதும்
    பக்குவத்தின் மேன்மையதைப் புரிவீரே நீங்கள்

உதிர்கின்ற தளிர்களையும் காத்திடுவீர் சேர்ந்தே
     உதிரத்தில் நுளம்பழித்துப் பேணிடுவீர் சேர்ந்தே
கதிராகும் காலத்தில் பயிர்காத்தல் நன்றாம்
    கடமையென்றே எண்ணுதலும் அறிவீரே திண்ணம்
மதியிழந்து தவிக்காதீர் மண்ணுலகில் என்றும்
    மரணங்கள் நோய்நொடியால் வேண்டாமே என்றும்
விதியெனவே எண்ணாதீர் மானிடரே நீங்கள்
    விரைந்திடுவீர் எல்லோரும் நலன்நோக்கி வாழ்க !

எங்கே சென்றாய் பேரழகே!

நா.பாண்டியராசா

அன்பே உன்னை மறவேனோ
   அமுத மொழிமை மறப்பேனோ
இன்பச் சுவையை இழப்பேனோ
   இனியப் பொழுதை துறப்பனோ
மென்றுத் தின்ற இதழ்களைதான்
   மெல்ல நழுவ விடுவேனோ
உன்னால் இங்கே சாகிறேனே
   உயிரே நேரில் வருவாயா?

பூவைப் போன்ற உடலழகை
   பூட்டி வைத்தால் பயனுண்டோ?
பூவை நானும் தொட்டிடவே
   பார்வை மட்டும் போதிடுமோ?
தேவைத் தீர வழிச்சொன்னால்
   தேளைப் போல் கொட்டுவதேன்?
பாவை உன்னைக் காணத்தானே
   புவியில் ஆனாய் நான்பிறந்தேன்!

கன்னே உன்னால் உருகுகிறேன்
   கண்மணி பூவே வாயேன்டி
உன்றன் நினைவில் வாடுகிறேன்
   உயிலே சேதி சொல்லேன்டி!
என்றும் என்னை ஆள்பவளே
   எங்கே சென்றாய் பேரழகே!
என்று வருவாய் என்னருகில்
   என்றே நானும் ஏங்குகிறேன் !.

பாரதி..சமுதாயச் சாரதி

ஓசூர் மணிமேகலை

அறம்பாட வந்துதித்த ஆதவனாய்க் கண்டோம்!
   அகிலத்தைத் தன்கவியால் மாற்றியநற் தொண்டன்!
இறவாத புகழதுவைப் பெற்றிட்ட பேறே!
   இவ்வுலகில் புதுமைகளைப் புகுத்திட்ட வேரே!
திறமான உணர்வுகளைத் தீரமுடன் நெஞ்சில்
   திடமாகப் பதித்திட்ட வீரகவி நீதான்!
நிறம்மாறும் பூக்களல்ல நீயளித்த பாக்கள்!
   நிலையாக உள்ளத்தில் கனல்மணக்கும் பூக்கள்!

விடுதலையை உன்போலே விளம்பியவர் இல்லை!
   வீரத்தின் விளைநிலத்தில் விதைத்தாயே சொல்லை!
இடுகின்ற ஆணைகளோ இலக்கினதன் எல்லை
   இனபேதம் ஒழித்தாலே அச்சமொன்று மில்லை!
சுடுகின்ற சொல்லாலே சுதந்திரத்தீ மூட்டி
  சுற்றிவரும் பகைவிரட்டி வெற்றியைநீ காட்டி
தொடுத்திட்டக் கவிப்பூக்கள் அனலாக வீசி
  தொடர்ந்திடுமே காலமெல்லாம் வரலாற்றைப் பேசி!

பாரதியாம் தீப்பிழம்பைப் பக்குவமாய் ஓதி
  படைத்திடலாம் புதுமையினை இப்புவியில் யாரும்!
சாரதியாய்ச் சமுதாயத் தேரோட்டி னானே!
   சரித்திரத்தில் வாழ்கின்ற சத்தியமே வாழி!
ஓரணியாய் இணைந்துநாமும் ஒற்றுமையாய் வாழ
   ஒன்றுபடப் பாடியநம் சிந்துகவி வாழ்க!
காரணியாம் என்றுமவன் கருத்தினையே போற்றி
   கனல்பூத்த நெருப்பான கவிதைகளாய் வாழ்வோம்!

May 16, 2021

ஆசிரியர் நன்னாள்

பாவலர் தங்கமணி சுகுமாரன் 
(கட்டளைக் கலித்துறை)

நல்லுல கத்தினை நன்னெறி தன்னில் நடத்துவதும்
புல்லறி வாளனின் புத்தியைத் தீட்டிப் புதுக்குவதும்
சொல்லறி விப்பதும் நல்லறி விப்பதும் தொண்டெனவே
அல்லும் பகலும் அமைத்துக் கொளுதல் அவரறமே

பெற்றதும் பெற்றோர் பெருங்கடன் யாவும் பெரிதுடனே
முற்றின அத்துடன் முப்பொழு தும்தம் முயற்சியிலே
கற்றவர் ஆக்கக் கடமையை ஆற்றும் கருத்தமைந்தோர்
கொற்றம் புகழ்ந்து குவிவோம் கரங்களைக் கும்பிடவே

பிரம்பினைக் கையில் பிடித்துநல் மாணவப் பிஞ்சுகளைக்
கரம்பிடித் தேதங்கள் கண்மணி போலவே காத்திருந்து
வரம்போடு தங்களை வார்த்தறி வூட்டிதன் வாழ்க்கையிலே
வரம்தரு தெய்வங்கள் மண்மிசை ஆசானை வாழ்த்துதுமே

தொடராதொழிப்போம் தொற்று

பைந்தமிழ்ப் பாமணி இரா.அழகர்சாமி
குறள் வெண்பா


மூக்குடன் வாயையும் மூடினால் நோயதன்
தாக்கம் தணிவைத் தரும்

தருமருந் தெல்லாம் தகைமை தருமோ
அருமருந் தாமடங்கல் ஆம்

அறிந்தோ அறியாமலோ ஆபத்தைத் தீண்ட
உறுகண் பெறுவா யுடன்

உடனே உடலில் உண்டாக்(கு) எதிர்ப்பைத்
தொடராம லோடுமே தொற்று

தொற்றினைத் தொற்றா தொழிக்கலாம் சொல்வதைப்
பற்று படராது பார்

பார்வைக்குக் கிட்டாமல் பாயும் கிருமியினைத்
தீர்க்கத் தனிமையே தீர்வு

தீர்வு கிடைக்காமல் திண்டாடும் மக்களை
யார்வந்து காப்பார் இனி

இனியும் பயமின்றி எல்லோரும் கூடத்
துணியுமே தொற்றும் தொடர்ந்து

தொடர்ந்து நம்மைத் துரத்துமிந் நோய்நாம்
தொடுதல் அதற்கொரு தோது

தோதகன் விட்டவோர் தும்மலால் நோயுன்னை
மோதுமுன் மூடிவை மூக்கு

தோதகன்-ஒழுக்கமற்றவன்
உறுகண்-நோய்

அன்பு தெய்வம் அன்னை (வளையற் சிந்து)

கவிஞர் சொ. சாந்தி

ஐயிரண்டு திங்களாக
அன்னைக்கருக் கூட்டில் - பின்
அவளின்மடிச் சூட்டில் - கண்
அயர்ந்தோம்தா லாட்டில் - அந்த
அன்புமனம் கொண்டவளை
அலங்கரிப்போம் பாட்டில். !

பனிக்குடத்தில் சுமந்தபோதும்
பாசங்குறைய வில்லை - தாய்
பரிவுக்கேது எல்லை - அவள்
பார்வைக்குநாம் கிள்ளை - நாம்
பணியவேண்டும் அவளையன்றி
பாரில்தெய்வ மில்லை..!

காய்ச்சல்பிணி கண்டுவிட்டால்
கண்ணுறக்கம் விட்டு - நமைக்
காக்கப்பாடு பட்டு – அன்னை
காய(ம்) நலங் கெட்டு - உயிர்
கரைந்தாலும் காத்திடுவாள்
கடவுள்நிலைத் தொட்டு..!

கல்சுமப்பாள் மண்சுமப்பாள்
கண்ணீரோடு அன்னை - தன்
கடமையிலேத் தென்னை - நமைக்
கரைசேர்க்கத் தன்னை - தீயில்
கரைந்துருகி யாகினாளே
காலந்தோறும் வெண்ணெய். !

இல்லமதி லுள்ளகடவுள்
ஈடுயிணை யில்லை - அன்னை
இருக்கவுண்டோத் தொல்லை - அவள்
இருக்குமிடம் மல்லை - நாம்
எந்தநாளும் அவளன்பால்
ஈட்டுமின்பம் கொள்ளை..!

வண்ணப்பாடல்

அரசி.பழனியப்பன்

தனதன தத்தத் தத்தன தத்தத்
தனதன தத்தத் தத்தன தத்தத்
தனதன தத்தத் தத்தன தத்தத் தனதான

தலையெழு துற்றுப் பற்றொடு கொட்டத்
தரசிய லெட்டித் தப்பித முற்றத்
தனநிறை யுற்றுச் சத்தொடு சுற்றித் திரிவாராம்

தறிகெடு மெத்தர்க் குற்றிடு நட்புக்
களமதி லுற்றுப் பத்திமை முற்றித்
தமதுறு கட்சித் தற்குறி வெற்றிக் கலைவாராம்

கலைபல கற்றுச் சொற்றிற முற்றுத்
தலைமையை எட்டச் சத்தியு மற்றுக்
கவலையை உற்றுச் சித்தமொ டுக்கித் திகழ்மேலோர்

களிமன முற்றுக் கற்றது வைத்துத்
தொகுநிதி முற்றத் தெற்றென விட்டுக்
கனிவொடு மக்கட் பொற்பணி மெச்சப் புரிவாராம்

தலையுயர் வுற்றுப் பொற்றர மெட்டக்
களைகளு முற்றத் தட்டிய ழித்துத்
தகுதியில் மிக்கத் தக்கவ ருய்த்துத் துணையாகத்

தலமுறை நிற்றுச் சக்திகொ ழிக்கத்
தருமிறை மொத்தச் சக்திபெ ருக்கித்
தழையருள் கொட்டப் பொற்பினை யுற்றுச் சமுதாயம்

குலமுறை யற்றுப் பொற்றமிழ் வைத்துத்
தலைமுறை தொட்டுத் தக்கன வுற்றுக்
குடிமுறை மொத்தத் தொற்றுமை யுற்றுப் புகழ்சேரக்

கொடியுய ருச்சிக் குற்றிட வெற்பிற்
படைமற முற்றக் கொற்றவர் பற்றக்
கொழிதமி ழெச்சத் துத்திற லுற்றுத் திகழ்வோமே!


வண்ணப்பாடல் 2

தானா தானா தானா தானா
தானா தானத் தனதான

வீழா நாடாய் வாழ்வோர் பீடாய்
வீறாய் வாழத் தகுமாறு
மேலாய் ஆள்வோர் தானாள் வாரேல்
மேனாள் போலத் திகழாதோ?

நாளோ கோளோ வேறே தேதோ
நாடா தோடித் தொலையாதோ?
நாவார் தேனாய் மூவா தேவாழ்
தாய்நேர் வேதத் தமிழாலே

வாழ்வோ ரூடே மேல்கீழ் சாதீ
பாரா தோடித் தொலையாதோ?
மாதே ஆனார் தீதே வாழ்நாள்
வாரா தேமப் படுவாரோ?

மேலோய் !பாலா! சீலா! நூலோர்
மேலா யோதத் தகுகோவே!
வேலா! பாராய்! வேலால் தீராய்!
வேளே! தேவப் பெருமாளே!

பாசமே பெரிது

பைந்தமிழ்ப் பாமணி
சரஸ்வதி பாஸ்கரன்

தாய்தந்த பாசத்தால் தரணி ஆளும்
------- தக்கதொரு குடும்பத்தை நாமும் காண்போம் .
காய்க்கின்ற மரம்கூட மறத்தல் உண்டு .
------- கனிவான தாய்க்குநிகர் எவரும் உண்டோ .
சேய்களையும் செம்மையாகக் காக்கும் போக்கில்
-------- செங்குருதிச் சிந்திடவும் தயக்க மின்றி
வாய்நிறைய தன்பெண்டு பெருமை யாவும்
-------- வாழ்வினிலே சொல்லிடவே ஆசை கொள்வாள் !

தந்தையரின் பாசத்தில் மூழ்கிப் போவோம்
-------- தன்னலமும் இல்லாது பிள்ளை தன்னை
விந்தைபல செய்திடுவார் உலகம் தன்னில்
------- வித்தகராய் வளர்த்திடவே பாடு பட்டு
முந்துகின்ற வாழ்வுநெறி முழுதும் போற்ற
-------- முத்தாக பிள்ளைகளைப் பேணு கின்ற
அந்தமிலா வாழ்வினிலே ஆண்மை யோடே
-------- அரவணைக்கும் தந்தையரை எங்கும் காண்போம் !

மகனுடைய பாசத்தால் மலரும் வாழ்வு
-------- மங்காத குடும்பத்தின் மகிழ்ச்சி வெள்ளம் .
அகவையிலே சிறியோனாய் இருந்தும் கூட
------- அகத்தினிலே அன்பினிலே ஆள்வான் வீட்டை .
நிகழ்கின்ற இன்பதுன்பம் அனைத்தும் சீராய்
------- நிறைகின்ற வாழ்வியலை கற்றும் தந்தே
முகவரியை குடும்பத்தில் பதித்தே நிற்பான்
-------- முகிலாகி வான்மழையாய்ப் பாசம் தன்னில் !

விஞ்சுகின்ற மகளினுடைப் பாசம் கண்டு
--------- வியன்பொருளாய்ப் பெற்றோரும் பெருமை கொள்வார் .
பஞ்சுமனம் நிகர்த்ததொரு மென்மை உள்ளம்
------- பரிதவிக்கும் பாசத்தால் கள்ள மின்றிக்
கொஞ்சுகின்ற மொழியாவும் நலத்தை நோக்கி
-------- கோமகளும் சொல்லிடுவாள் உறவை நோக்கி .
தஞ்சமென வாழ்வினிலே தரத்தைப் பார்க்கும்
-------- தாய்தந்தை மகனோடு மகளின் பாசம் !!

உடன்பிறப்பு வழங்குகின்ற பாசத் தாலே
------- உருவாகும் உணர்வான மனத்தின் நேசம் .
கடல்கடந்து வாழ்ந்தாலும் பாசம் தன்னைக்
------- கரைசேர்க்கும் உடன்பிறப்பும் உலகில் உண்டு .
மடல்களுமே வனைந்திடுவான் நலத்தை நாடி
-------- மலர்ந்திடுமே அன்பும்தான் மறுத்த லுண்டோ !
தடங்கல்கள் வந்தாலும் தாவி யோடித்
-------- தடுக்கின்ற அணையாக நிற்பா னன்றோ !

கூட்டாகப் பாசத்தால் வெல்வார் தம்மைக்
-------- குடும்பத்தின் உறவாக பார்ப்போம் நாமும்
தோட்டத்தில் மலர்களுமே பலவும் உண்டு .
-------- தோற்றுவிக்கும் நறுமணத்தில் மாற்ற முண்டோ .
நாட்டத்தால் நல்லறமும் நடப்ப துண்டு .
-------- நன்மைகளும் அதனாலே என்றும் உண்டு .
காட்டுகின்ற பாசத்தில் குறைவு மில்லை .
-------- காலத்தால் பிரிவினைகள் ஏது மில்லை !

பெற்றவர்க்கு ளொளிர்வாயே!

பைந்தமிழ்ச் செம்மல்
செல்லையா வாமதேவன்

வண்ணப்பாடல்

தனந்த தந்த தத்த தத்த
தனந்த தந்த தத்த தத்த
தனந்த தந்த தத்த தத்த தனதானா

மனஞ்சி னந்து புத்தி கெட்டு
மறந்த ரண்டு நட்ட முற்று
மலர்ந்து வந்த மொட்டு வெட்டி - எறியாதே

மனங்க னிந்து சத்தி பெற்று
மருங்கெ ழுந்த யுத்தி பற்றி
மறங்க லந்து கற்று முற்று - மறிவாயே

இனங்க டிந்து சுத்த மற்றும்
இழிந்த சந்தில் வட்ட மிட்டும்
இருண்டு பொன்ற ழித்து விட்டு - மலறாதே

இதங்க லந்து சுத்தி யுற்றும்
இலங்கு மன்பில் அட்டி தட்டி
இயங்கி முந்தி வெற்றி பெற்று = மெழுவாயே

வனந்தி ரிந்து வற்பு முற்று
வயின்பி ரிந்து தொற்று முற்று
வறந்தி ரண்டு பொற்பு மற்று - முழலாதே

வனஞ்சி றந்து பட்டி தொட்டி
வரங்க னிந்து நட்ட மிட்டு
வளங்கு விந்த வத்தி நித்த - முறுவாயே

தனஞ்சி றந்து சட்ட மிட்ட
தடம்பு ரண்டு கொட்ட மொட்டு
தரங்கு றைந்து கெட்டு முட்டி - யழியாதே

தவங்கி டந்து பெற்றெ டுத்த
தலந்தொ டர்ந்து பத்தி யுற்ற
தடம்பொ லிந்து பெற்ற வர்க்கு - ளொளிர்வாயே!

மகிழ்ந்திருப்போம்

பைந்தமிழ்ச்சுடர்
மெய்யன் நடராஜ்

அடுப்பேறிய விறகானது அனலாவது போலே
   அடியோடெமை கரியாக்கிட அடிக்கோடிடும் நோயைத்
தடுப்பூசியை எடுத்தாயினும் தடுத்தேவிட வென்று
   தவித்தேயலை வதுவேயொரு தொழிலானது இன்று
கடுப்பேறிய மனதோடலை யெனவேயிதைத் தந்து
   கரையேறிட முடியாநிலை தனையேநமக் கிட்டு
எடுப்பாரினி நமக்கேதென இறந்தேயழி தற்கு
   இழிவாயொரு பெருநோயினை இறையேன்பரி சளித்தான்?

ஒருநாளிலை யொருநாளிது ஒழிந்தேவிடு மென்றால்
   உயிர்வாழ்வது சுகமேயெனவுளமோடொரு எண்ணம்
வருதேயிதை நிலையாக்கிட வரமாயொரு காலம்
   வருமோவினி யொருபோதிலும் வரலாறென வாழ்வில்
பெருநோயிது பலர்வாழ்வினை பிரியாவிடை செய்து
   பெரிதாகிய தொருசோதனை யிதுமாறிட விட்டு
உருவாகிடு மொருகால மதையேவர மாக்கி
   உயிரோடமை விடுமேயெனி லதுபோதுமெ மக்கே!

வருமோயிலை விடுமோவெனு மனநோயினை தந்து
    வரவானது குறைவாகிட செலவானதை நீட்டி
கருவாடென உயிர்வேரது கரியாகிடச் செய்து
   கரையேறிட முடியாநிலை யதையேதினம் காட்டி
உருவாகிய பிணியாமிது உலகாடிடு மின்றில்
   உறவானதும் பகையாகிட உயிர்வாடுது நாளும்
மருந்தேதெனு மிருந்தாலிதை மறந்தாடிட லாமே
   மறுவாழ்வினை யடைவோமென மகிழ்ந்தேயிருப் போமே!

முருகாதலம்

பைந்தமிழ்ச் செம்மல் 
தமிழகழ்வன் சுப்பிரமணி

தலையெழுத் தாவதென் றாலெழுத் தாவதென் றானீன்றதாங்
கலையெழுத் தாவதென் காலெழுத் தாவதென் கானீன்றதாம்
நிலையெழுத் தாவதென் நீளெழுத் தாவதென் நீயென்னுடைத்
தலையெழும் அல்லலைத் தாளிடு மல்லலைத் தாருமையே 21

தருகென்று வேண்டித் தமிழ்பாடி னேனைத் தரமுயர்த்தி
முருகா தலமென் முனைப்பை யளிப்பாய் முழுமுதலே
உருகா உயிரும் உலகினில் உண்டோ உனையகலேன்
பொருந்து மறிவால் புரிவன தந்தழி பொய்ம்மையையே 22

பொய்யா யுலகில் பொழுதினைப் போக்கும் பொருளெனவோ?
செய்யத் தகாதன செய்யத் துணிவார் செயல்களெலாம்
ஐயோ கொடுமை அறமிலச் செய்கை அழிதலுக்கே
ஐயா அருள்வேலா! ஆறுத லீவாய் அகத்தினுக்கே 23

அகத்திற் பொருந்திணை அத்தும்பை ஆகலான் ஆறுறுத்திப்
பகலவ னாலே பனிபடும் பாடாய்ப் பணித்துறுமா
அகலாத் துயரெலாம் ஆட்டங் கொளச்செய் அருந்தமிழா!
துகளாய்த் தொடங்கி முயல்வான் துணையெனச் சூழ்ச்சியில 24

சூழ்ந்தியான் செய்யத் துணிந்தன யாவும் துயர்விலக்கும்
ஆழ்ந்தியான் செய்ய அகத்தில் மகிழ்வால் அமைதியுளன்
தாழ்ந்துவ ணங்கித் தலைமேல் திருவடி தாங்குவனே
ஆழ்ந்தார்ந் திருக்கும் அடியர்தம் ஆர்வத் தருவிளக்கே 25

விளக்காய் விளங்கி வியனுல கெல்லாம் ஒளியருளும்
அளக்க வியலாப் பெரும்புகழ் கொண்ட அருந்தமிழைப்
பிளக்கும் வகையாய்ப் பிணக்குறு வார்தம் பிழைகளினை
உளங்களைந் தோட்டுக ஓரா நிலையவர் ஊழ்வினையே 26

ஊழ்வினை யாவும் உமதருட் பார்வை ஒளிபடவே
வாழ்வினை மேன்மை வழியிற் செலுத்தும் வளத்துடனே
ஆழ்வினை தன்னில் அகம்பொருந் தட்டும் அதுமகிழ்வு
பாழ்வினை யாற்றாப் பணிவுடை நெஞ்சம் படைத்தருள்வாய் 27

படைவீட் டெழுந்து பகைதீர்த் தருளும் பகலவனே!
தடைவீட் டிருந்து தடுத்தாண் டருள்க தமிழமுதம்
உடைவீட் டினிலே உவகை பெருக உமதடியார்
அடைவீட் டெழுக அவருளங் கொள்வதென் ஆழ்வதுவே! 28

ஆழ்ந்தொரு செய்கை அகத்தில் நிறைத்தியான் ஆற்றுதற்காய்ச்
சூழ்ந்து முனைவேன் சுடர்நெடு வேலோய்! துணையிருந்து
வீழ்ந்து விடச்செய் வினையெலாம் போக்குக மீப்பயனாய்
வாழ்ந்து மறைந்தார் வழிநிலை ஆய்ந்தெழ வாழ்த்துகவே 29

வாழ்த்துக ஊக்குக வாய்மலர்ந் தென்னை வருவழியில்
தாழ்த்தும் உளமொடு தாக்கும் கருத்துறை தன்னலத்தார்
ஆழ்த்துமச் சூழ்வலை ஆயன வெல்லாம் அறுத்தெறிந்தவ்
வீழ்த்தும் நிலைகளை யான்கடந் தேறும் விளைவருளே!   30

------ நிறைவுற்றது-----

பாலையில் பாடுகிறேன்

பைந்தமிழ்ச்சுடர் 
அபூ முஜாகித்

பாலையில் பாடுகிறேன்
பாடம் படிக்கையிலே உனது
பார்வை படம்பிடித்தேன்
கூடச் சுவரிலெலாம் உனது
கோலம் வரைந்துவைத்தேன்

வேதத் திருக்கையிலும் உனது
பாதம் பணிந்திருந்தேன்
சீதத் தமிழழகே உன்னில்
சிந்தை பறிகொடுத்தேன்

சோலைப் பசுங்கிளியே துயிலும்
சோகக் கதைசொல்லவா
பாலைப் பெருவெளியில் எனது
பாதை தொடர்கதையா

ஆனந்த மோகனமே என்னை
ஆளும் மலர்ச்சரமே
ஏனிந்த மௌனமன்பே என்னை
இன்னலில் வாட்டுவதேன்

மோகனம் பாடுகிறேன் உன்னை
மூச்சிலும் வாங்குகிறேன்
தாகத் துடன்தமிழை என்றும்
தாங்கியே வாழுகிறேன்

சித்திரைக் குயிலெனவே உந்தன்
சித்தத்தில் கூவுகிறேன்
சத்தமிலா திருந்தால் எந்தன்
சங்கதி என்னவென்பேன்

உருளும் விழிகளினால் எழிலாய்
ஓவியம் தீட்டுகிறாய்
அருளுமுன் ஆசியினால் அதிசய
ஆனந்தம் பாடுகிறேன்

பூமழை போலஉந்தன் புதிதொரு
புன்னகை பார்த்திருந்தேன்
பாமக ளோடிவிட்டாய் அதனால்
பாலையில் பாடுகிறேன்

காத்திருத்தல்

பைந்தமிழ்ச் செம்மல்
நிர்மலா சிவராசசிங்கம்

நெஞ்சத்தில் வந்தவளே என்னைநீ நித்தமும்
கெஞ்சிட வைப்பதே னோ

காதலின் தீபத்தை ஏற்றிய பெண்ணே
நோதலில் மாய்ப்பதே னோ

நானுன்னைச் சந்திக்க ஆர்வத்தால் வந்ததும்
நாணத்தால் கண்களை மூடிவிட் டாய்

நடமாடிடும் அழகேதினம் வருவாயென மனமேகிட
நல்வாக்குச் சொல்லாமல் ஓடிவிட் டாய்

கன்னியுன் எண்ணமே என்றனின் நெஞ்சத்தில்
காற்றாய்த் தீண்டவே மாள்கின்றே னே

கனியேதினம் மனவாசலில் ஒளிவீசிட வருவாயென
கற்பனை வாழ்வினில் வாழ்கின்றே னே

என்றனின் காதலை ஏற்றதும் உன்றனின்
எண்ணத்தில் என்றென்றும் நானிருப்பேன்

இனியாவது மகிழ்வாயெனை நலமேதினம் தருவாயென
இன்பத்தில் நானென்றும் காத்திருப்பேன்

Apr 18, 2021

மழை வரமாமே!

பைந்தமிழ்ச் செம்மல்
செல்லையா வாமதேவன்

தான தனதன தான தனதன
தான தனதன தனதானா

கோடை யெழுகதி ரோடு படமிடு
கோர வெயிலது கொடிதாமே
கோப முறுவிழி யோடு முகிலுறு
கோல மெரிதழ லுருவாமே

வாடை வருவழி யோடு குளிரையு
வாரி வருவது சுகமாமே
வாதை ஒருவழி யாக விடைபெற
வான மொழியது திருவாமே

பீடை குறையவு மோடை நதியொடு
பீடு நிறையவு முருகாதோ
பீலி நடமிடு பீலி தருவிடை
பேடை யிணையுடன் இதமாமே

மூடை நிறைவுறு மாறு வயலுறு
மூடு விளைவொடு கனியாமே
மோடு நிலையுற மோதி இடியொடு
மோலி யணிமழை வரமாமே!

( பீலி - மயில், மலை
மூடை - தானியக்கோட்டை
மோடு - பெருமை, மேடை
மோலி – கிரீடம் )