'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2021

தொடராதொழிப்போம் தொற்று

பைந்தமிழ்ப் பாமணி இரா.அழகர்சாமி
குறள் வெண்பா


மூக்குடன் வாயையும் மூடினால் நோயதன்
தாக்கம் தணிவைத் தரும்

தருமருந் தெல்லாம் தகைமை தருமோ
அருமருந் தாமடங்கல் ஆம்

அறிந்தோ அறியாமலோ ஆபத்தைத் தீண்ட
உறுகண் பெறுவா யுடன்

உடனே உடலில் உண்டாக்(கு) எதிர்ப்பைத்
தொடராம லோடுமே தொற்று

தொற்றினைத் தொற்றா தொழிக்கலாம் சொல்வதைப்
பற்று படராது பார்

பார்வைக்குக் கிட்டாமல் பாயும் கிருமியினைத்
தீர்க்கத் தனிமையே தீர்வு

தீர்வு கிடைக்காமல் திண்டாடும் மக்களை
யார்வந்து காப்பார் இனி

இனியும் பயமின்றி எல்லோரும் கூடத்
துணியுமே தொற்றும் தொடர்ந்து

தொடர்ந்து நம்மைத் துரத்துமிந் நோய்நாம்
தொடுதல் அதற்கொரு தோது

தோதகன் விட்டவோர் தும்மலால் நோயுன்னை
மோதுமுன் மூடிவை மூக்கு

தோதகன்-ஒழுக்கமற்றவன்
உறுகண்-நோய்

No comments:

Post a Comment