'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2021

அன்பு தெய்வம் அன்னை (வளையற் சிந்து)

கவிஞர் சொ. சாந்தி

ஐயிரண்டு திங்களாக
அன்னைக்கருக் கூட்டில் - பின்
அவளின்மடிச் சூட்டில் - கண்
அயர்ந்தோம்தா லாட்டில் - அந்த
அன்புமனம் கொண்டவளை
அலங்கரிப்போம் பாட்டில். !

பனிக்குடத்தில் சுமந்தபோதும்
பாசங்குறைய வில்லை - தாய்
பரிவுக்கேது எல்லை - அவள்
பார்வைக்குநாம் கிள்ளை - நாம்
பணியவேண்டும் அவளையன்றி
பாரில்தெய்வ மில்லை..!

காய்ச்சல்பிணி கண்டுவிட்டால்
கண்ணுறக்கம் விட்டு - நமைக்
காக்கப்பாடு பட்டு – அன்னை
காய(ம்) நலங் கெட்டு - உயிர்
கரைந்தாலும் காத்திடுவாள்
கடவுள்நிலைத் தொட்டு..!

கல்சுமப்பாள் மண்சுமப்பாள்
கண்ணீரோடு அன்னை - தன்
கடமையிலேத் தென்னை - நமைக்
கரைசேர்க்கத் தன்னை - தீயில்
கரைந்துருகி யாகினாளே
காலந்தோறும் வெண்ணெய். !

இல்லமதி லுள்ளகடவுள்
ஈடுயிணை யில்லை - அன்னை
இருக்கவுண்டோத் தொல்லை - அவள்
இருக்குமிடம் மல்லை - நாம்
எந்தநாளும் அவளன்பால்
ஈட்டுமின்பம் கொள்ளை..!

No comments:

Post a Comment