'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2021

பெற்றவர்க்கு ளொளிர்வாயே!

பைந்தமிழ்ச் செம்மல்
செல்லையா வாமதேவன்

வண்ணப்பாடல்

தனந்த தந்த தத்த தத்த
தனந்த தந்த தத்த தத்த
தனந்த தந்த தத்த தத்த தனதானா

மனஞ்சி னந்து புத்தி கெட்டு
மறந்த ரண்டு நட்ட முற்று
மலர்ந்து வந்த மொட்டு வெட்டி - எறியாதே

மனங்க னிந்து சத்தி பெற்று
மருங்கெ ழுந்த யுத்தி பற்றி
மறங்க லந்து கற்று முற்று - மறிவாயே

இனங்க டிந்து சுத்த மற்றும்
இழிந்த சந்தில் வட்ட மிட்டும்
இருண்டு பொன்ற ழித்து விட்டு - மலறாதே

இதங்க லந்து சுத்தி யுற்றும்
இலங்கு மன்பில் அட்டி தட்டி
இயங்கி முந்தி வெற்றி பெற்று = மெழுவாயே

வனந்தி ரிந்து வற்பு முற்று
வயின்பி ரிந்து தொற்று முற்று
வறந்தி ரண்டு பொற்பு மற்று - முழலாதே

வனஞ்சி றந்து பட்டி தொட்டி
வரங்க னிந்து நட்ட மிட்டு
வளங்கு விந்த வத்தி நித்த - முறுவாயே

தனஞ்சி றந்து சட்ட மிட்ட
தடம்பு ரண்டு கொட்ட மொட்டு
தரங்கு றைந்து கெட்டு முட்டி - யழியாதே

தவங்கி டந்து பெற்றெ டுத்த
தலந்தொ டர்ந்து பத்தி யுற்ற
தடம்பொ லிந்து பெற்ற வர்க்கு - ளொளிர்வாயே!

No comments:

Post a Comment