'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2021

பாசமே பெரிது

பைந்தமிழ்ப் பாமணி
சரஸ்வதி பாஸ்கரன்

தாய்தந்த பாசத்தால் தரணி ஆளும்
------- தக்கதொரு குடும்பத்தை நாமும் காண்போம் .
காய்க்கின்ற மரம்கூட மறத்தல் உண்டு .
------- கனிவான தாய்க்குநிகர் எவரும் உண்டோ .
சேய்களையும் செம்மையாகக் காக்கும் போக்கில்
-------- செங்குருதிச் சிந்திடவும் தயக்க மின்றி
வாய்நிறைய தன்பெண்டு பெருமை யாவும்
-------- வாழ்வினிலே சொல்லிடவே ஆசை கொள்வாள் !

தந்தையரின் பாசத்தில் மூழ்கிப் போவோம்
-------- தன்னலமும் இல்லாது பிள்ளை தன்னை
விந்தைபல செய்திடுவார் உலகம் தன்னில்
------- வித்தகராய் வளர்த்திடவே பாடு பட்டு
முந்துகின்ற வாழ்வுநெறி முழுதும் போற்ற
-------- முத்தாக பிள்ளைகளைப் பேணு கின்ற
அந்தமிலா வாழ்வினிலே ஆண்மை யோடே
-------- அரவணைக்கும் தந்தையரை எங்கும் காண்போம் !

மகனுடைய பாசத்தால் மலரும் வாழ்வு
-------- மங்காத குடும்பத்தின் மகிழ்ச்சி வெள்ளம் .
அகவையிலே சிறியோனாய் இருந்தும் கூட
------- அகத்தினிலே அன்பினிலே ஆள்வான் வீட்டை .
நிகழ்கின்ற இன்பதுன்பம் அனைத்தும் சீராய்
------- நிறைகின்ற வாழ்வியலை கற்றும் தந்தே
முகவரியை குடும்பத்தில் பதித்தே நிற்பான்
-------- முகிலாகி வான்மழையாய்ப் பாசம் தன்னில் !

விஞ்சுகின்ற மகளினுடைப் பாசம் கண்டு
--------- வியன்பொருளாய்ப் பெற்றோரும் பெருமை கொள்வார் .
பஞ்சுமனம் நிகர்த்ததொரு மென்மை உள்ளம்
------- பரிதவிக்கும் பாசத்தால் கள்ள மின்றிக்
கொஞ்சுகின்ற மொழியாவும் நலத்தை நோக்கி
-------- கோமகளும் சொல்லிடுவாள் உறவை நோக்கி .
தஞ்சமென வாழ்வினிலே தரத்தைப் பார்க்கும்
-------- தாய்தந்தை மகனோடு மகளின் பாசம் !!

உடன்பிறப்பு வழங்குகின்ற பாசத் தாலே
------- உருவாகும் உணர்வான மனத்தின் நேசம் .
கடல்கடந்து வாழ்ந்தாலும் பாசம் தன்னைக்
------- கரைசேர்க்கும் உடன்பிறப்பும் உலகில் உண்டு .
மடல்களுமே வனைந்திடுவான் நலத்தை நாடி
-------- மலர்ந்திடுமே அன்பும்தான் மறுத்த லுண்டோ !
தடங்கல்கள் வந்தாலும் தாவி யோடித்
-------- தடுக்கின்ற அணையாக நிற்பா னன்றோ !

கூட்டாகப் பாசத்தால் வெல்வார் தம்மைக்
-------- குடும்பத்தின் உறவாக பார்ப்போம் நாமும்
தோட்டத்தில் மலர்களுமே பலவும் உண்டு .
-------- தோற்றுவிக்கும் நறுமணத்தில் மாற்ற முண்டோ .
நாட்டத்தால் நல்லறமும் நடப்ப துண்டு .
-------- நன்மைகளும் அதனாலே என்றும் உண்டு .
காட்டுகின்ற பாசத்தில் குறைவு மில்லை .
-------- காலத்தால் பிரிவினைகள் ஏது மில்லை !

No comments:

Post a Comment