'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2021

முருகாதலம்

பைந்தமிழ்ச் செம்மல் 
தமிழகழ்வன் சுப்பிரமணி

தலையெழுத் தாவதென் றாலெழுத் தாவதென் றானீன்றதாங்
கலையெழுத் தாவதென் காலெழுத் தாவதென் கானீன்றதாம்
நிலையெழுத் தாவதென் நீளெழுத் தாவதென் நீயென்னுடைத்
தலையெழும் அல்லலைத் தாளிடு மல்லலைத் தாருமையே 21

தருகென்று வேண்டித் தமிழ்பாடி னேனைத் தரமுயர்த்தி
முருகா தலமென் முனைப்பை யளிப்பாய் முழுமுதலே
உருகா உயிரும் உலகினில் உண்டோ உனையகலேன்
பொருந்து மறிவால் புரிவன தந்தழி பொய்ம்மையையே 22

பொய்யா யுலகில் பொழுதினைப் போக்கும் பொருளெனவோ?
செய்யத் தகாதன செய்யத் துணிவார் செயல்களெலாம்
ஐயோ கொடுமை அறமிலச் செய்கை அழிதலுக்கே
ஐயா அருள்வேலா! ஆறுத லீவாய் அகத்தினுக்கே 23

அகத்திற் பொருந்திணை அத்தும்பை ஆகலான் ஆறுறுத்திப்
பகலவ னாலே பனிபடும் பாடாய்ப் பணித்துறுமா
அகலாத் துயரெலாம் ஆட்டங் கொளச்செய் அருந்தமிழா!
துகளாய்த் தொடங்கி முயல்வான் துணையெனச் சூழ்ச்சியில 24

சூழ்ந்தியான் செய்யத் துணிந்தன யாவும் துயர்விலக்கும்
ஆழ்ந்தியான் செய்ய அகத்தில் மகிழ்வால் அமைதியுளன்
தாழ்ந்துவ ணங்கித் தலைமேல் திருவடி தாங்குவனே
ஆழ்ந்தார்ந் திருக்கும் அடியர்தம் ஆர்வத் தருவிளக்கே 25

விளக்காய் விளங்கி வியனுல கெல்லாம் ஒளியருளும்
அளக்க வியலாப் பெரும்புகழ் கொண்ட அருந்தமிழைப்
பிளக்கும் வகையாய்ப் பிணக்குறு வார்தம் பிழைகளினை
உளங்களைந் தோட்டுக ஓரா நிலையவர் ஊழ்வினையே 26

ஊழ்வினை யாவும் உமதருட் பார்வை ஒளிபடவே
வாழ்வினை மேன்மை வழியிற் செலுத்தும் வளத்துடனே
ஆழ்வினை தன்னில் அகம்பொருந் தட்டும் அதுமகிழ்வு
பாழ்வினை யாற்றாப் பணிவுடை நெஞ்சம் படைத்தருள்வாய் 27

படைவீட் டெழுந்து பகைதீர்த் தருளும் பகலவனே!
தடைவீட் டிருந்து தடுத்தாண் டருள்க தமிழமுதம்
உடைவீட் டினிலே உவகை பெருக உமதடியார்
அடைவீட் டெழுக அவருளங் கொள்வதென் ஆழ்வதுவே! 28

ஆழ்ந்தொரு செய்கை அகத்தில் நிறைத்தியான் ஆற்றுதற்காய்ச்
சூழ்ந்து முனைவேன் சுடர்நெடு வேலோய்! துணையிருந்து
வீழ்ந்து விடச்செய் வினையெலாம் போக்குக மீப்பயனாய்
வாழ்ந்து மறைந்தார் வழிநிலை ஆய்ந்தெழ வாழ்த்துகவே 29

வாழ்த்துக ஊக்குக வாய்மலர்ந் தென்னை வருவழியில்
தாழ்த்தும் உளமொடு தாக்கும் கருத்துறை தன்னலத்தார்
ஆழ்த்துமச் சூழ்வலை ஆயன வெல்லாம் அறுத்தெறிந்தவ்
வீழ்த்தும் நிலைகளை யான்கடந் தேறும் விளைவருளே!   30

------ நிறைவுற்றது-----

No comments:

Post a Comment