'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Mar 14, 2021

தமிழ்க்குதிர் - கும்பம் 2052 - மின்னிதழ்

 


ஆசிரியர் பக்கம்

அன்பானவர்களே! வணக்கம்.

செடிகளோடு களைகளும் வளர்வது செடிகளின் வளமைக்குத்தான் என்பது எப்படி ஏற்கத் தகாததோ அதுபோலத்தான் தமிழோடு பிறமொழிக் கலப்பும்.

இயற்கையாய் மரச்செக்கில் ஆடப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்தலே உடல் நலத்திற்கு ஏற்றது. அதைவிடுத்துத் தூய்மைப் படுத்தித் தருவதாக எண்ணிக் கொண்டு இருக்கின்ற சத்துகளை எல்லாம் எடுத்துவிட்டுத் தேவையற்ற கலப்படங்களை வணிக நோக்கிற்காகச் செய்து விற்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்துதல் உடல் நலத்திற் கேற்றது என்று நம்பிக் கொண்டிருப்பது போலத்தான் தமிழில் பிறமொழிக் கலப்பும்.

தமிழ் முதலில் தோன்றிய இயற்கை மொழி. இயல்பான ஒலிப்புகளைத் தாண்டிச் செய்யப்பட்ட எழுத்துகளால் உருவாக்கப் பட்டவை பிறமொழிகள்.

தமிழில் ஏன் கலப்புக் கூடாது? கலந்தால் அது தமிழாய் இருக்காது. மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்று பிற மொழிகளாய்த் திரிந்துவிடும்.

பேசுவது தமிழாம். அவன் தமிழனாம். ஆனால் பெயர் சூட்டுவது மட்டும் புதுமையாம். பிறமொழிக் கலவையாம். பெயருக்குப் பொருள் புரியவில்லை என்றாலும் அதுவே பொருத்தமாம். இப்படிப்பட்ட மனநிலையை என்னவென்று சொல்வது? இவர்கள் தமிழ்நாட்டினராயினும் தமிழறியாதவர்கள். அடிமைகள்.

வாயில் நுழையாத பெயர்களைச் சூட்டிவிட்டு வாய்க்கு வந்தபடி அழைப்பதில் என்ன பெருமை? இவ்வாறு வாயில் நுழையாத சொற்களைக் கொண்டு துன்பப்படுதல் இயல்பு ஒலிப்பினராகிய நமக்கு ஏன்? எண்ணிப் பார்த்துத் தெளிவு கொள்க.

நம்பிக்கையுடன்

பாவலர் மா.வரதராசன்

முருகாதலம் காரிகை - பகுதி – 1

 பைந்தமிழ்ச் செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணி

 

 அருவினை யாவும் அழிக்கும் வலனே அறுமுகனே!

வருவினை யாவும் வடிவேல் செலுத்தி வருத்துகவீங்(கு)

ஒருவினை என்னை உழலும் துயரில் உறுத்துவதோ?

மருவினை நீக்கு மருத்துவ மாமணி மாமுருகே!                                                      1

 

முருகைய! முத்தமிழ் முத்தைய! என்றும் முடிவிலனே!

உருவு மருவுமென் றோருதற் கேலா ஒருதனியே!

பெருவெளி எங்கிலும் பேரொளி யாயுள பேரிறையே!

அருவெளி என்றன் அகத்தினுக் குன்றன் அருளொளியே!                                             2

 

ஒளிர்ந்தெழுந் தோங்கி உலகினை ஊக்கும் ஒருதனியே!

தெளித்தருள் வாயே சிலைநாள் உறக்கத் திருந்தெழுந்து

தெளிந்த மனத்தொடு தேர்ந்தன செய்யத் துணையிருப்பாய்

துளிர்த்தநற் சூழ்ச்சி செயல்வழி நன்றாய்த் துலங்குகவே!                                                 3

 

துலங்கு கதிர்வேல் துணைசெயுந் தொட்டுத் தொடங்குவன

இலங்கும் வழிதரும் எங்கும் நிறைந்த எழிலவனைக்

கலங்கா திருந்து களிப்பொடு காண்பாய் கடம்பமலர்

அலங்குநல் லாரமும் ஆற்றுப் படையும் அகத்தாற்றவே                                  4

 

ஆற்றுப் படுத்தென் னகத்தைக் குளிர்வித் தருமணியே!

ஊற்றுப் படுத்தென் னுணர்வு பெருகி உயரருவி

காற்றுப் படுத்துங் கடிதெனத் தேடக் கழலிணைகள்

ஆற்றுப் படுத்தி அருள்வாய் முருகா அடியனுக்கே!                                                5

 

அடியார்க் கடியவர் அன்பருக் கன்பர் அகத்துறையும்

மடியா தனவெனும் மாத்துய ரெல்லாம் மடித்தருளும்

படியாய் விளங்கலின் பாடிப் பரவிப் பணிதலுக்கே

துடிப்பவர் நெஞ்சில் துளைத்தழிக் கின்ற துயரிலையே                                      6

 

துயரந் தொலைத்தெழுந் தோடத் துணைசெய் தருளுகவென்

றயக்கங் களையுந் தரந்தந் துயர்த்துக தான்விழைந்து

முயல முயல முதலென நின்று முனைதலுடைச்

செயலுக் குருவாய்ச் சிறப்பொடு நின்றருள் செவ்விறையே!                                             7

 

இறைவ னடிதொழு தின்புறு நெஞ்சே இடரெனவொன்

றுறைவ திலையுனை ஊக்குமவ் வாற்றல் உயிர்த்தெழுக!

சிறையென வாழ்வைச் சிதைத்தல் சிறப்போ சிறைவிரிக்க!

குறைபல போக்கும் குமரனைத் தேடுக குன்றினிலே                                       8

 

குன்றுகள் தோறும் குடியிருக் கின்ற குழக்குமரா!

இன்றெழுந் தேனென் இயற்கை எதிலும் இனிதிருப்பாய்!

பொன்றுந் துணையும் புதுக்குவாய் என்றன் புலன்றெளிய

வென்றுளம் வாழ்குவாய் வெற்றி யளிகொற் றவைமகனே!                                                 9

 

மகனே! களைவாய் மயக்கம் செயலை மகிழ்வுடனே

அகத்தில் பொருத்தி அணுவணு வாக்கி அவைதுணிக!

இகத்தில் செயலே இனிமை பயக்கும் இறுதிவரை

வகைப்படுத் தாற்றலின் மாச்செயல் எல்லாம் வழிப்படுமே                                       10

 

(தொடரும்)

இற்றைத் திங்கள் இவரைப் பற்றி

பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்


வண்ணம் பலபாடி வாகை பலசூடி

எண்ணம்போல் வாழ்வு மினிதாக - உண்ணிறை

அக்காஅய் பல்லாண் டகமகிழ் வெய்திடச்

சொக்கனைச் செய்வேன் துதி!

என மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் அவர்களால் வாழ்த்தப்படுபவர், சிறந்த மரபு பாவலர், எவ்வண்ணமும் பாடும் செவ்வண்ணத் தரசியாம் பைந்தமிழ்ச்செம்மல் சியாமளா ராஜசேகர் அவர்கள்.


அவர் 1960ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய பெற்றோர் சு.பாண்டியன் – பத்மாவதி அவர்கள். அவருடைய கணவர் ரா.ராஜசேகர் அவர்கள். இவர்களுக்கு மூன்று ஆண்பிள்ளைகள். மூவருக்கும் திருமணமாகிவிட்டது, 3 பேரன், 2 பேத்திகள் உள்ளனர். அவர் சென்னை இராயபுரத்தில் வசித்து வருகிறார்.

சிறுவயது முதலே இவருடைய தந்தை பக்தி இலக்கியங்களை ஊட்டி வளர்த்தார். இவருக்குள் இருக்கும் எழுத்துத் திறமைக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் திருமதி. ப்ரியா கிஷோர் அவர்கள். வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டிகளில் கலந்து கொண்டு எண்ணற்ற பரிசுகள் வாங்கியுள்ளார். பல வார, மாத இதழ்களிலும் பரிசுகள் பெற்றுள்ளார். இவர் எழுதிய சிறுகதைகள் பரிசுக்குரியனவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவரது கவிதைகளுக்குக் களம் தந்து வளர்த்தது எழுத்து.காம்(2013). அங்குக் கிடைத்த ஊக்கமே இவரைத் தொடர்ந்து எழுத வைத்தது. இதுவரையில் 1800-க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். முதலில் இவர் விளையாட்டாக  எழுதப் பழகியது வெண்பா! எழுத்து.காம் தளத்தில் நட்புகளின் ஊக்குவிப்பும், பாராட்டும் மரபின்மேல் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. மரபு கவிதை ஆர்வத்தை இவருள் விதைத்தது அன்பு மகன் பைந்தமிழ்ச் செம்மல் விவேக்பாரதி எனப் பெருமையோடு சொல்வார்.

முகநூல் இவரது மரபு ஆர்வத்தை மேலும் தூண்டியது. சந்தவசந்தம் என்ற குழுமத்தில் கவிவேழம் இலந்தை இராமசாமி ஐயா அவர்களிடம் பயிற்சி பெற்றார்.

பைந்தமிழ்ச்சோலை இவரை முழுமையாக ஆட்கொண்டது. பாவலர் மா. வரதராசன் அவர்கள் பயிற்றுவித்த பல்வகைப் பாக்கள், பாவினங்கள், முயன்று பார்க்கலாம், முடிந்தால் எழுதுங்கள் என்னும் தலைப்பிலான அரிதான பாக்கள், சிந்துப் பாக்கள், சந்தப் பாக்கள், வண்ணப்பாக்கள் என எல்லாவற்றிலும் சிறந்து விளங்கி மரபு பயின்று வருகிறார். வண்ண இலக்கணம் பயிற்றுவித்த குருவான பாவலரே வண்ணத்தரசி என்று அன்போடு அழைக்கும் அளவுக்கு அரிதின் அரிதான வண்ணமும் இவருக்கு வசமாயிற்று.  திருப்புகழில் மிகுந்த நாட்டமிருந்ததால் வண்ணப்பாடல்கள் இவரை எளிதில் ஈர்த்தன.

“என்கடன் பணிசெய்து கிடப்பதே” என்ற சான்றோர் வாக்கிற்கிணங்க ஓடோடித் தமிழ்ப்பணியாற்றுமிவர் பைந்தமிழ்ச்சோலை உறுப்பினராகவும், அதன் எண்பேராயத்தில் ஒருவராகவும், பயிற்றுவிக்கும் துணையாசிரியர்களுள் ஒருவராகவும் தமிழ்த்தொண்டு செய்து வருகிறார்.


பல நல்லோர்களின் நட்பு முகநூலில் கிடைக்கப் பெற்றதை வாழ்வின் வரமாகக் கருதுகிறார். ‘புலம் மிக்கவரைப் புலமை தெரிதல் புலம் மிக்கவர்க்கே புலனாம்’ என்பது உண்மையன்றோ? முகநூல் குழுமங்களில் பல கவியரங்கங்களில் கலந்து கொண்டுள்ளார். சிலவற்றில் தலைமை தாங்கியுள்ளார்.

திருப்பூரில் நடைபெற்ற பைந்தமிழ்ச்சோலை மூன்றாம் ஆண்டு விழாவில் தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல்முறையாகப் பாவலர் மா.வரதராசன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற சிந்துப் பாட்டரங்கத்துக்குத் தலைமையேற்று இனிமையாக நடத்திக் கொடுத்தார்.

பொதிகை தொலைக்காட்சியில் இசைக்கவி ரமணன் அவர்கள் தலைமையில் "வாழ்க நீ எம்மான்" என்ற நிகழ்ச்சியில் காந்தியடிகளின் கைத்தடியாகக் கவிதை பாடியுள்ளார்.

பம்மல் கண்ணதாசன் தமிழ்ச் சங்கமும், சிங்கப்பூர் லிஷா இலக்கிய மன்றமும் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கண்ணதாசன் விழாவில் கவி பாடியுள்ளார்.

2020-டிசம்பர் 11-ல் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற ஜதிபல்லக்கு நிகழ்ச்சியில் மகாகவிக்குப் போர்த்திய சால்வையும் பொற்கிழியும் இவருக்குப் போர்த்தப்பட்டது. 27 ஆண்டுகளில் இந்தப் பெருமையைப் பெறும் முதல் பெண் கவிஞர் இவர் என்று கவிமாமணி ரவி கல்யாணராமன் அவர்கள் தெரிவித்தார்.

கவிவேழம் இலந்தை இராமசாமி ஐயா அவர்களை நேர்க்காணல் கண்டுள்ளார். அது “மிட்டாய்ப் பெட்டி" என்னும் மின்னிதழில் வெளிவந்துள்ளது.

எண்ணங்களை வண்ணங்களால் இழைத்து அரும்புதையலாய் இவர் ஆக்கித் தந்துள்ள "வண்ணப்புதையல்" என்னும் முதல் நூல் 150 வண்ணப் பாடல்களுடன் விரைவில் வெளிவரவுள்ளது.

"நற்பாப்புனை நன்மணி" என்று முதலில் பட்டமளித்து ஊக்கப்படுத்தியவர் புதுவை அகன் என்னும்  முனைவர் அமிர்தகணேசன் அவர்கள்! இன்றும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர். தொடர்ந்து பல்வேறு முகநூல் குழுக்களில் பல விருதுகள் பெற்றுள்ளார். 


பட்டங்கள்:

·        பைந்தமிழ்ச் செம்மல் ( 2016)

·        ஆசுகவி

·        நற்றமிழ் ஆசான்

·        சந்தக் கவிமணி  ( 2019)

·        கவிச்சுடர் (படைப்பு)

·        வீறுகவியரசர் முடியரசனார் விருது ( 2019 )

மேலும் “தமிழன்பன் வாழ்நாள் சாதனையாளர் விருது” ( மரபு வகைமை ) பெறவுள்ளார்.

தேடித்தேடிக் கற்றுச் செந்தமிழைப் பிழையறப் பேசிப் பாடி உள்ளத்தில் வைத்துப் போற்றும் பைந்தமிழ்ச்செம்மல் சியாமளா ராஜசேகர் அவர்கள் எல்லா வளமும் நலமும் பெற்றுத் தமிழன்னையின் புகழைத் தரணியெங்கும் கொண்டு செல்லும் ஒப்பற்ற பணிசெய்ய நாமும் உவகையுடன் வாழ்த்துவோம்.

புது வீடு

 கவிஞர் இரா. இரத்திசு குமரன் 

கலகலப்பான பேச்சுகளுக்கு இடையில் "ஐயா... ஐயா..." என்ற நிதானக் குரல் அந்த மிடுக்கான தோற்றத்துடன் தடித்த மீசை, சவரம் செய்த கண்ணம், பாதி உதிரிய  மண்டை, கழுத்தில் கனத்த சங்கிலி, மூன்று விரல்களையும் எட்டிப்பிடிக்கும் அளவு அகண்ட பெரிய மோதிரம் மற்றும் தூய வெண்மை நிற ஆடை உடைய தலைவருக்குக் கேட்கவில்லை. சரியான இடைவெளிவிட்டு ஐயா என்ற வார்த்தை அலாரம் அடித்துக்கொண்டே இருப்பதுபோல் இருந்தது. அங்குக் கூடியிருந்த பத்து பதினைந்து பேரில் எத்தனை பேருக்குக் கேட்டது என்று தெரியவில்லை. ஆனால் ஒருவன் மட்டும் சட்டெனத் திரும்பி அடிப்பதுபோல் முகத்தைக் காட்டினான்.

"அதான் பேசிக்கிட்டு இருக்காங்க இல்ல.. தெரியாதா..?"  அவன் குரல் அதட்டும் பாணியில் இருந்தது.

"இது ஊருக்காகச் செய்கிற நல்ல காரியம். செலவு பத்திக் கவலைப்படக் கூடாது. காசுக்கு யாரையும் கட்டாயப்படுத்த வேண்டா. வேணும்னா வசூல் சீட்டுப் போடலாம். கொடுக்கிறவங்க கொடுக்கட்டும்." பெருந்தன்மையுடன் பேசிவிட்டதாய்த் தன் நெஞ்சை நிமிர்த்தி வேலைகளைப் பகிர்ந்து செய்யும்படி தன் வலக்கை இடக்கைகளுக்கு உத்தரவு பிறப்பித்துவிட்டு, மேலும் இரு கைகளுடன் தன் நடையை ஆரம்பித்தார் தலைவர்.

இப்போது பேசினால்தான் உண்டு. இல்லையென்றால் வேறு வேலை நிமித்தமாக எங்காவது சென்றுவிடுவார். இப்போதே கேட்க வேண்டும். ஆனால் மற்ற இருவர் பக்கத்திலேயே இருக்கிறார்களே என யோசித்துக்கொண்டிருந்த வேளையில் தலைவரும் அவர் கைகளும் சற்றுத் தூரம் கடந்துவிட்டதைப் பார்த்துச் சர சரவென நடந்து 'ஐயா, ஐயா' என அழைத்துக் கும்பிட்ட கைகளுடன் முன்பக்கம் சாய்ந்த கேள்வி குறிபோல நின்றான் ராஜாக்கண்ணு. வெடிப்பு நிறைந்த செருப்பு, புழுதி படிந்த கால்கள், சாயம்போன லுங்கி, ஒட்டுப்போட்ட சட்டை, சம அளவில் மீசையும் தாடியும், காய்ந்த மஞ்சம் புற்கள் கொண்ட தலை இவற்றையெல்லாம் சமீபத்தில் எப்போதோ ஒருமுறை பார்த்த ஞாபகம் தலைவருக்கு.

"முனுசாமி மகன்தானே நீ? என்ன இந்தப் பக்கம்? என்ன விஷயம்?" இவனெல்லாம் எதற்குத் தன்னைப் பார்க்க வருகிறான் என சந்தேக தொனியில் கேட்டார் தலைவர்.

"ஆமாங்க ஐயா, உங்ககிட்டதான் வந்தேன்". ஒருவிதச் சிரிப்புடன் கேள்விக்குறி நிமிர்ந்தது. "ஒன்னுமில்ல ஐயா, இந்த கவர்மெண்டு வீடு வந்துக்கிதுன்னு சொன்னாங்க. எனக்கும் ஒன்னு கட்டிக்கொடுத்தா உங்களுக்கு புண்ணியமா போகும்", என்ன பதில் வரப்போகிறது என்று தலைவர் முகத்தையே ஆர்வமாகப் பார்த்தான்.

"கவர்மெண்ட்  வீடா? இப்போதான் ரெண்டு நாளைக்கு முன்னாடி வார்டு வாரியா பிரிச்சிக் கொடுத்தேன். அப்புறம் வரும்போது பாக்கலாம்". முகத்தைத் திரும்பி நடக்கலானார்.

"ஒன்னோ ரெண்டோ இருக்குனு கேள்விப்பட்டேன். அதான் கேக்கறேன் ".

"டேய்ய்... அதான் இல்லனு சொல்லிட்டாருல்ல", குரலிலேயே அதட்டியது ஓர் கை.

தவறாகப் பேசி விட்டோமோ என்று குழம்பினான் ராஜாக்கண்ணு. என்ன பேசுவது என்று தெரியாமல் அங்கேயே சிறிது நேரம் நிற்கலானான் ராஜாக் கண்ணு. என்ன பேசுவது என்று தோன்றவில்லை. தோன்றினாலும் பலனில்லை. அவன் பேச்சைக் கேட்க அங்கு யாருமே இல்லை.

வீடு நோக்கி நடக்கலானான். கிராமத்தின் கடைசி வீடு என்றாலும் கிராமத்தை ஒட்டிய வீடுதான் அவன் குடிசை. கூன் விழுந்த வயதானவரைப் போல முழுமையை இழந்த பொலிவு இல்லாத தோற்றம். வேயப்பட்ட பனை ஓலைகளுக்கும்  வயதாகிவிட்டது. ஆங்காங்கே வெள்ளைக் கற்கள் தெரியுமளவுக்குக் கரைந்துபோன செம்மண் சுவர். இதுதான் அவனுக்கு ஓய்விடம், அவன் மனைவி தங்கத்துக்கு வீடு. இவர்கள் சிறு புத்திரனுக்கு, மாளிகை.

"என்ன சொன்னாரு தலைவரு?" குடிசையில் கணவன் நுழைவதைக் கண்டு கேட்டாள் தங்கம்.

"இப்போ எதுவும் இல்லையாம். அப்புறம் பாக்கலாம்னு சொல்லிட்டாரு."

“நாம வீடு கட்டவும் தெறவு இல்ல. கவர்மெண்டு வீட்டுக்கும் வழி இல்ல. எப்போதான் வீடு கட்டுறதோ!? "

"கட்லாம், கட்லாம். அதான் பிறகு பாக்கலாம்னு சொல்லிருக்காங்களே." பதில் கூற வேண்டு மென்றே இவ்வாறு கூறினான். மற்றபடி நம்பிக்கை கொஞ்சமும் இல்லை.

“அப்பா இங்க வாயேன்." பிஞ்சு விரலைக் குடிசையின் வெளிப்பக்கம் காட்டியவாறே தன் அப்பாவைக் கூப்பிட்டான். சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்துத் தன் அப்பா பின் வராததைக் கண்டு மீண்டும் கூப்பிட்டான். "அப்பா இங்க வாயேன்" எனச் சிணுங்கிக் கொண்டே.". 

இருடா… நீ வேற" என சலித்துக்கொண்டே வேகமாக வெளியே நடை போட்டான்.

"என்ன ராஜா, தலைவரு கிட்டே வீடு கேட்கப் போறதா சொன்னியே, என்ன சொன்னாரு தலைவரு?" நண்பன் ஒருவன் அவனிடம் கேட்டான். ராஜாக்கண்ணு நடந்ததைக் கூறினான்.

"எப்படி தருவாங்க? நாம அவங்களை முதல்ல கவனிக்கணும்.  பில்லு முன்ன பின்ன லேட்டாக வரும், நாம முதல் போட்டு செய்ய வேண்டியது  இருக்கும். உன்னால முடியாது, அதனால அப்படிச் சொல்லி இருப்பாங்க." சகஜமான தொனியில் அனுபவமிக்கவன் போலக் கூறினான் அவன் நண்பன்.

எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தான் ராஜாக்கண்ணு. ஆனால் கிராமம் இப்போதுதான் பேசத் தொடங்கியது போல சலசலவென்று சத்தமிட்டுக் கொண்டே இருந்தது. திருவிழா தொடங்குவதற்காக அனைவரும் காத்திருப்பதைப் போல அங்குமிங்கும் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். எங்கெங்குத் தோரணங்கள் அமைக்க வேண்டும், எங்கெங்கு மின்விளக்குகள் கட்டப்பட வேண்டும், எங்கெங்கு ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட வேண்டும் என்றெல்லாம் விழாக்குழுவினர் முடிவு எடுத்துக் கொண்டிருந்தனர்.  திருவிழாவிற்கான நாளும் குறிக்கப்பட்டு விட்டது. ஏற்பாடுகள் தீவிரம் ஆனது.

“கடைசியா திருவிழா அப்போ மழை வந்ததுனு  கேள்விப்பட்டேன். அதன்பிறகு இப்பதான் நாம  திருவிழா எடுக்கப் போறோம். எப்படியும் இந்த முறையும்  மழையை எதிர்பாக்கலாம் ." நடுத்தர வயதுடைய ஒருவரின்  வார்த்தை நம்பிக்கை அளித்தது அங்குக் கூடி இருந்தவர்களுக்கு. ராஜாக்கண்ணுக்கு எதைப்பற்றியும் நம்பிக்கை வரவில்லை.

சோக முகத்துடன் வீடு திரும்பிய தன் கணவனின் பதிலை அறிந்த தங்கம் "சமாளிக்க முடிஞ்சவங்க ளுக்குத் தான் சலுகைகள் தருவாங்க போல" என்று குடிசைக்குள் செல்லக் குனிந்த அவள் தலையைச் சற்று மெதுவாகப் பதம் பார்த்தது தாழ்வாரத்தில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு கொம்பு.  இன்னும் சற்று வேகமாக அந்தக் கொம்பை மோதியிருந்தால் அந்தக் கொம்பு உடைந்து போயிருக்கும். அந்த அளவிற்கு அது மக்கிப் போய் இருந்தது.

"அப்பா இங்க வந்து பாரேன்" ஒரு கையால் தன் தகப்பனின் விரலைப் பிடித்து இழுத்துக் கொண்டு மறுகையை வேப்ப மரத்து அடியை நோக்கிக் காண்பித்தான் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி.

"உள்ளே வாடா" என்று தன் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வீட்டில் நுழைந்து  தங்கத்தின் தலையைத் தடவிக் கொடுத்தான்.

"மழை வரணும்னு ஊர்ல திருவிழா எடுக்கிறாங்களாம். ஞாயிற்றுக்கிழமை சாமி கும்பிடத் தேதி குறிச்சி இருக்காங்க." வேறு ஏதும் பேச அவன் விரும்பவில்லை.

ஞாயிற்றுக்கிழமை வந்தது. அந்த கிராமமே திருவிழாக்கோலம் பூண்டது. எங்கும் பக்திப் பாடல்கள் ஒலித்தன. மக்கள் அனைவரும் சந்தோஷமாகவே வாழ்வது போல் தோன்றியது, அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை என்பதுபோல். மழை மட்டும் தான் வரவில்லை. அதற்காகத்தானே இந்தத் திருவிழா. எல்லோரும் மழை வேண்டும் என அம்மனைப் பிரார்த்தித்தார்கள். ஆனால் தங்கம் மட்டுமே மழை இப்போது வரக்கூடாது என்று  வேண்டினாள். ஒருவேளை மழை வந்தால் அவள் குடிசை என்னவாகும் என்ற பயம் மனத்தில் இருந்தது. அன்று இரவு மழை பொழியவில்லை. தங்கம் வேண்டியது பலித்தது. ஆனால் வேண்டாதது நடந்தது. அது அவர்களுக்கு வேண்டாததாக அமைந்தது. அன்று இரவு காற்று சற்று வேகமாகவே அடித்துக் கொண்டிருந்தது. அவள்  குடிசையை உலுக்கிச் சேதத்தை ஏற்படுத்தியது.

ராஜாக்கண்ணும்  தங்கமும் காலையில் கவனித்தனர். இருவரின் முகத்திலும் கவலை எட்டிப்பார்த்தது. பிறகு  ராஜாக்கண்ணு கொடுவாளை எடுத்துப் பட்டை தீட்ட ஆரம்பித்தான். குட்டிச் சிறுவன் தூக்கம் கலைந்து குடிசையைப் பார்த்தான். சட்டென்று ஓடிச் சென்று வேப்பமரத்தடியில் 'ப' வடிவில் கற்கள் வைத்துத் தான் கட்டிய வீடு கலையாமல் இருப்பதைக் கண்டு சந்தோஷப்பட்டுப் புன்னகை செய்து கொண்டிருந்தான்.  "நீ கட்டினியா இந்த வீடு?" தன் ஆசை மகனை வாரி அணைத்து முத்தமிட்டுக் கொண்டே கூறினாள்." வா நாம அப்பா கூடப் போயிட்டு கொம்பு, ஓலைங்க எடுத்துட்டு வரலாம்".

எல்லா ஏழைத்தாய்களுக்கும் சிரித்துக் கொண்டு ஓடி ஆடி விளையாடும் தங்கள் மகன்களைப் பார்த்தால் வரும் நம்பிக்கை இப்பொழுது தங்கத்திற்கும் தன் மகனைப் பார்த்து இயல்பாகவே வந்தது. அவள் வேண்டுதல் பலித்தும் பலன் இல்லாமல் போனது. ஆனாலும் இப்போது புதிதாக ஒன்று வேண்டிக் கொண்டாள்.

நடுப்பக்க நயம்

                                    கம்பனைப் போலொரு… பகுதி – 12

                                  மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

  

கம்பராமாயணத்தைத் திராவிடர்கள் எதிர்க்கும் காரணங்களில் அடுத்தது...

 

“இராமனை ஆரியன் என்பதால் நல்லவனாகவும், இராவணனைத் தமிழன் என்பதால் கெட்டவனாகவும் காட்டினார்

 

இதற்கு விளக்கம் சொல்லப் புகுமுன்பு சில உட்செய்திகளையும் உற்றுநோக்க வேண்டியதா கிறது. இந்த விளக்கத்தை இரண்டாகப் பிரித்துக்கொள்வோம்.

1.       இராம / இராவணனின் இனம் எது?

2.       இராம / இராவணனின் பண்புகளைக் கம்பர் காட்டும் விதம்.

***

முதலில் இராம / இராவணனின் இனம் எது? என்பதைச் சிறிது ஆராய்வோம்.

 

மனுதர்மத்தில் குறிப்பிட்டுள்ளபடி,"சத்தியவிரதன்'' திராவிடர்களின் இறைவனாயிருந்தான். இந்தக் குறிப்பு பாகவதத்திலும் இருக்கிறது.

 

யசௌ சத்யவ்ரதோ நாம ராஜரிஷிர் த்ராவிடேஸ்வர:

ஞானம் யோதீத கல்பாந்தே லபே புருஷ சேவயா

வை விவஸ்வத:

புத்ரோ மனுர் ஆஸீத் இதி ச்ருதம் த்வத்தஸ் தஸ்ய சுதா:

ப்ரோக்தா இக்ஷ்வாகு ப்ரமுகா ந்ருபா:

(பாகவதம் 9.1.2 & 9.1.3)

 

வான்மீகியின் காட்டுப்படி இராமனின் வம்சாவழி.

1.       ப்ரம்ஹாவின் மகன் மரீசி

2.       மரீசியின் மகன் காஷ்யப்

3.       காஷ்யப் மகன் விவஸ்வான்

4.       விவஸ்வான் மகன் வைவஸ்வத மனு

5.       வைவஸ்வத மனு மகன் இக்ஷ்வாகு (இவர்தான் அயோத்தியை உருவாகினார்).

6.       இக்ஷவாகு மகன் குக்ஷி.

7.       குக்ஷி மகன் விகுக்ஷி

8.       விகுக்ஷி மகன் பான்

9.       பான் மகன் அன்ரன்யா

10.     அன்ரன்யா மகன் ப்ருது

11.     ப்ருது மகன் த்ரிஷங்கு (இவருக்காக விஸ்வாமித்ரர் ஸ்வர்கம் படைத்தார்)

12.     த்ரிஷங்கு மகன் துந்துமார்

13.     துந்துமார் மகன் யுவனஷ்வா

14.     யுவனஷ்வா மகன் மாந்தாதா

15.     மாந்தாதா மகன் சுசந்தி

16.     சுசந்தி மகன் துவசந்தி மற்றும் ப்ரசந்ஜீத்

17.     துவசந்தி மகன் பரத்

18.     பரத் மகன் அஸித்

19.     அஸித் மகன் ஸாகர்

20.     ஸாகர் மகன் அஸமஞ்ச

21.     அஸமஞ்ச மகன் அன்ஷுமான்

22.     அன்ஷுமான் மகன் திலீபன்

23.     திலீபன் மகன் பாகீரதன் (கங்கையை வானுலகிலிருந்து பூலோகம் தந்தவன்)

24.     பாகீரதன் மகன் காகுஸ்தன்

25.     காகுஸ்தன் மகன் ரகு (காளிதாஸன் ரகுவம்ஸம் )

26.     ரகு மகன் ப்ரவ்ருத்

27.     ப்ரவ்ருத் மகன் ஷம்கன்

28.     ஷம்கன் மகன் ஸூதர்ஷன்

29.     ஸூதர்ஷன் மகன் அக்னிவர்மன்

30.     அக்னிவர்மன் மகன் சிஹ்ராக்

31.     சிஹ்ராக் மகன் மேரு

32.     மேரு மகன் பரஷுக்ஷுக்

33.     பரஷுக்ஷுக் மகன் அம்பரீஷ்

34.     அம்பரீஷ் மகன் நகுஷ்

35.     நகுஷ் மகன் யயாதி

36.     யயாதி மகன் நபாங்

37.     நபாங் மகன் அஜ்

38.     அஜ் மகன் தஸரதன்

39.     தஸரதன் மகன் ராமன், லக்ஷமணன், பரதன், சத்ருக்னன்

40.     ராமன் மகன் லவன், குசன்

 

ஆக... ப்ரஹ்மாவின் 39ஆவது தலைமுறை இராமன்.

மூன்றாம் தலைமுறையான வைவஸ்த மனுவின் (சத்திய விரதன்) மகனான இக்குவாகுஇக்குவாகு’ வம்சத்தைத் தோற்றுவித்தவன்.

 

இதோ... வான்மீகி காட்டும் இராமனின் குலத்தைப் பற்றிய பாடல்.

 

வசிட்டோ பகவானே த்ய வைதேஹி மிதம்பர வீத் |

ராஜா தசரதோ ராஜன் க்ருத கோ துமங்களை: ||

- பால காண்டம்

 

இஷ்வாகு வம்ச ப்ரபவோ ராமோ நாம ஜனை : க்ஷுத: |

நியதாத்மா மகாவீர் போ த்யுதிமான் த்ரிதிமான் வஷி II

- ( சர்க்கம் 37 ) பால காண்டம்

 

இக்குவாகு வம்சத்தில் வந்தவன் இராமன் என்பது இராமாயணச் செய்தி. எனவே, இக்குவாகுவின் தந்தை சத்தியவிரதன்திராவிடக்கடவுள்என்பதால் அவ்வழி வந்த இராமனும் திராவிடனே என்பது பெறப்படுகிறது

 

சத்தியவிரதனைச் சத்திரிய குலத்தவனாகக் காட்டும் மனுவின்படி அவ்வழி வந்தவர்கள் மதிப்பிழந்த ஐதரேய பார்ப்பனர்கள் எனப்பட்ட விசுவாமித்திரர் குலத்தினராகப் பிரிக்கப் பட்டவர்கள்.

எனவே, மனுவின்படியும், பாகவதத்தின்படியும் பார்ப்பனர்களில் தாழ்ந்தவனான இராமனைத் திராவிடப் பார்ப்பனர் குலத்தைச் சார்ந்தவன் என்பதே சரி. இவர்களின் வழிவந்த காரணத்தாலேயே ஞானசம்பந்தரும்திராவிடசிசு’ என்றழைக்கப்பட்டார் என்க.

 

அதே இராமாயணத்தில் காட்டப்படும் இராவணன் அந்தணர் குலத்தவனாகவே கம்பரால் காட்டப்படுகிறான்.

 

நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய்;

ஆயிரம் மறைப் பொருள் உணர்ந்து, அறிவு அமைந்தாய்;

(கம்ப. யுத்த.இராவணன் மந்திரப்படலம்.)

 

ஆனால் வான்மீகி இராவணன் தாழ்ந்த குலத்தவன் என்பதற்கும், இந்த இராமாயணக் கதை உண்மையில் இரு மன்னர்களுக்கிடையே நடைபெற்ற போர்ச்செய்திகளை உள்ளடக்கியது என்பதற்கும் பின்வரும் செய்தியைச் சான்றாகத் தருகிறேன்.

 

இராமாயணக் கதை நடந்ததாகச் சொல்லப்படும் பகுதி இன்றைய பீகாரின் சத்தீஸ்கர் மாநிலத்தில் கங்கையின் கிழக்குக் கரையிலிருந்து மேற்குக் கரைவரையாகும்.

 

கங்கையின் கிழக்குக் கரையிலிருந்த அயோத்தியை ஆண்ட இராமன் என்னும் மன்னனின் மனைவியான சீதையை, மேற்குப் பகுதியை ஆண்ட இராவணன் என்பான் கவர்ந்து கொண்டு சென்று தன் நாட்டில் சிறைவைத்தான்.

 

கங்கையின் மேற்குப் பகுதியில் (இன்றைய சத்தீஸ்கர் மாநிலத்தில்) மழைக் காலங்களில் வெள்ளம் புகுந்து தாழ்வான பகுதிகள் நீரால் நிரம்பி மேடான பகுதிகள் தீவுகள் போல் மாறிவிடும் நிலை இன்றைக்கும் நிகழ்கின்ற ஒரு செயலாகும்.

 

இப்படி நீரால் சூழ்ந்த பகுதியை அவர்களது மொழியில்லங்கா’ என்றழைப்பது இன்றைக்கும் உள்ள வழக்காகும். நீர் வற்றிய பின்பு கல்லையும், மண்ணையும் கொட்டிச் சமன்படுத்திப் பயன்படுத்துவதும் வழக்கமாகும்.

 

தமிழ்நாட்டு மன்னர்கள் எதிரி நாட்டுடன் போரிட அந்நாட்டுப் பசுக்களைக் கவர்வது வழக்கமாக இருந்ததுபோல், வடநாட்டில் அரசிகளைக் கவர்வதும், அவட்பொருட்டுப் போர் நிகழ்வதும் வழக்கமானதே. அப்படியான ஒரு வழக்கத்தால் கங்கையின் மேற்குப் பகுதி மன்னன் இராவணன் கங்கையின் கிழக்குப் பகுதி மன்னனான இராமனின் மனைவியைக் கவர்ந்து சென்று, நீர்சூழ்ந்த லங்காவில் (அவர்களது மொழியில் தீவு என்பது பொருள்) வைத்திருக்க, இராமன் பெரும்படை நடத்தி இராவணனை வென்று லங்காவிலிருந்து சீதையை மீட்கிறான்.

 

இவையே வான்மீகி இராமாயணத்தின் மூலம் பெறப்படுகின்ற செய்தியாகும். கூடுதலான இன்னொரு செய்தி... வான்மீகி இராவணன் உண்மையிலேயே தாழ்ந்த குலத்தவன்தான். அதுவும் பழங்குடி மக்களின் இறைவனாகவே இன்றைக்கும் போற்றப்படுபவன். தன் மன்னனின் மனைவி தாழ்ந்த குலத்தவனால் சிறைபிடிக்கப்பட்டதுபோல் காட்டினால் அது தங்கள் குலத்துக்கு இழுக்கு என்பதால் அவனை அந்தணனாகத் திரித்துக் காட்டினார்கள்.

 

இதற்கு வலுவூட்டும் விதமாகப் பின்வரும் செய்தியை இணைக்கிறேன்...

 

துர்கா பூஜையும், தசராவும் இந்தியாவின் பார்ப்பனிய இந்துக்களுக்கு வேண்டுமானால் கொண்டாட்டத்திற்குரிய ஒரு நாளாக இருக்கலாம். ஆனால் பழங்குடி மக்களுக்கு அல்ல! ஏனெனில் அது அவர்களின் முன்னோர்கள் - கடவுள் கொல்லப்பட்ட நாளாகும். அக்கொலையே கொண்டாடப் படுகிறது. ஆனால் இனி மேலும் அது நடைபெறாது. மஹிசாசுரவதம் கொண்டாடு பவர்களின் முகத்தில் அறைந்தாற் போல் அவர்கள் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக, கலாச்சார ரீதியாக பழங்குடி மக்கள்மஹிசாசுரவதம்கொண்டாடுவதை எதிர்த்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

கேன்கர் (Kanker) மாவட்டத்தில் உள்ள பகன்ஜோரில் (Pakhanjor), துர்கா பூஜை கொண்டாடுவது தங்கள் முன்னோரான மஹிசாசுரனை அவமதிக்கும் என்பதால், அதனை அனுமதிக்கக் கூடாதென்று பழங்குடிகள் அதிகாரிகளை எச்சரித்தனர். ஆனால் அந்த எச்சரிக்கை பலனளிக்காத நிலையில், ‘பழங்குடிகள்- மண்ணின் மைந்தர்கள்அமைப்பின் உறுப்பினர்கள் மஹிசாசுரன் மீதான அவமதிப்புக்கு எதிராக எஃப்..ஆர் ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.

 

கேன்கர் மாவட்ட எஸ்.சி-எஸ்.டி குழுவின் துணைத்தலைவர் லோகேஷ் சோரி தான் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளார். அவர் 153 (), 295 () மற்றும் 298 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். பகன்ஜோரில் துர்கா பூஜை கொண்டாட்டக் குழு உறுப்பினர்கள் மீது எஃப்..ஆர் பதிவானதை மாவட்ட ஆட்சியர் எம்.எல்.கோட்வானி உறுதி செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தற்போது தப்பிச் சென்றுவிட்டனர் என்றும், அவர்களது மொபைல் எண்களை வைத்து அவர்களைத் தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

கடந்த ஒரு வருடமாக பழங்குடி மக்கள் ஒன்றாகக் கூடி, உண்மையான வரலாறைப் பற்றித் தாங்கள் கற்றதையும், புரிந்து கொண்டதையும் பரிமாறிக் கொண்டனர். அதனையொட்டி, இந்த ஆண்டு அவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்தனர். முதல் செய்தி ராய்கார் பகுதியிலிருந்து வந்தது. அது, 10 பஞ்சாயத்துகளில் துர்கா பூஜை கொண்டாடக் கூடாதென்றும், இராவணனின் உருவ பொம்மையை எரிக்கக் கூடாதென்றும் பழங்குடிச் சமூகத்தினரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகும்.

 

இந்த 10 பஞ்சாயத்துகளின் தலைவர்களும் ராய்காரில் உள்ள காவல் நிலையத்திற்கு ஒன்றாகச் சென்று மனு கொடுத்தனர். ராஜநாந்த்கான் மாவட்டத்திலுள்ள மொஹ்லா மன்பூர்-இல், ‘சர்வ ஆதிவாசி முல்னிவாசி சமாஜ்சார்பாக சத்தீஸ்கர் ஆளுநருக்கு மனு கொடுக்கப் பட்டது. டவுண்டி-லோகாரா பகுதியின் முன்னாள் எம்.எல்.. ஜனக்லால் தாக்கூர் உட்பட 20 பேர் கையொப்பமிட்ட அந்த மனுவில் உள்ளவை:-

 

“பழங்குடி - மண்ணின் மைந்தர்களாகிய நாங்கள், இந்து மதத்தின் பழக்க வழக்கங்களையும் சடங்குகளையும் பின்பற்றுவதில்லை. எங்களுக் கென்று ஓர் பண்பாடும், கலாச்சாரமும் உள்ளது. அதன் படி, இராவணனும், மஹிசாசுரனும் எங்கள் மூதாதையர்கள். எனவே, நாங்கள் அவர்களை வணங்குகிறோம். இருப்பினும், இந்து மத வேதங்களில் அவர்களை இராட்சதர்களாக (அரக்கர்களாக) விவரித்து, காலங் காலமாக அவமதித்து வருகின்றனர். ஆகையால், ஆதிவாசி மூல்னிவாசிகளின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, இராவணனின் உருவ பொம்மையை எரிப்பதையும், மஹிசாசுரனை அவமதிப்பதையும் பட்டியலிடப்பட்ட பகுதிகளில் (Scheduled areas) உடனடியாகத் தடை செய்யும்படி நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள எமது உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு இது அவசியமானதாகும்.” என்று குறிப்பிட்டிருந்தனர்.

 

சுக்மா மாவட்டத்தில், அனைத்து கிராமங்களின் தலைவர்கள் சார்பாக ஒன்றியத் தலைவர் மஞ்சுகாவாசி ஒரு மனு அளித்துள்ளார். தங்களுக்குள் விரிவான விவாதத்திற்குப் பிறகு தான் அம்மனுவை அளித்துள்ளனர். அம்மனுவில்,

 

“நாங்கள் இந்தியாவின் பழங்குடி மக்கள். மண்ணின் மைந்தர்கள். எங்கள் நம்பிக்கையானது, இயற்கை வழிபாடு மற்றும் மூதாதையர் வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது. நாங்கள் இந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து பின்பற்றுகிறோம். இந்தியா ஒரு மதச்சார்பற்ற தேசமாக இருப்பதால், அனைத்து சமய, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைச் சேர்ந்த மக்கள் இங்கே வாழ்கின்றனர். ஆனால் பழங்குடிகள் இந்துக்கள் அல்ல. இது நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. பழங்குடி மக்கள் இந்துக்கள் அல்ல என்பதால், அச்சமூகத்தின் முன்னோர்களான இராவணன், கும்பகர்ணன் மற்றும் மஹிசாசுரனை எரிப்பதென்பது அவர்களை அவமதிக்கும் செயலாகும். ஒரு சமூகத்தின் மதம் மற்றும் நம்பிக்கைகளை அவமதிக்கும் செயல்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தடை செய்யப் பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், பத்தாம் பாகத்தின் கீழ் உள்ள பிரிவு 244-இன் படி, ஐந்தாவது அட்டவணையில் பழங்குடிகளுக்குச் சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்கள் இராட்சதர்கள் (அரக்கன்) எனக் குறிப்பிடப்படும் இராவணன், கும்பகர்ணன் மற்றும் மஹிசாசுரன் ஆகியோரைத்தான் பட்டியலிடப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் வழிபடுகின்றனர். இந்துக்கள் எங்கள் மூதாதையர்களை எரித்துக் கொல்வதென்பது எங்கள் சமுதாயத்தின் கலாச்சாரத்தைக் காயப்படுத்தும் செயல் மட்டுமல்ல. அது தேசத்துரோக செயல் ஆகும்.

 

ஐந்தாவது அட்டவணையின்படி, எஸ்.சி, எஸ்.டி சட்டம் மற்றும் பிரிவு 124ஏ ஆகியவற்றின் கீழ் இச்செயலை எதிர்த்து நடவடிக்கை எடுக்கலாம். அத்தகைய குற்றத்தை ஆதரிக்கும் அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்யவும் விதிகள் உள்ளன. ஆகையால் பழங்குடிகளின் கலாச்சார பூமியில் எங்கள் மூதாதையர்களை எரிக்க அனுமதியளிக்க வேண்டா என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தனர்

 

பழங்குடி மக்கள் தங்கள் கடவுளை வெளிப்படையாக வணங்க முடியாத நிலையில், ஒரு பெரிய வெற்றி இது. ஜாஞ்கிர்-சம்பாவில் உள்ள ரோக்டா கிராமத்தில் பழங்குடிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபடுவதற்கு மஹிசாசுர சன்னதி உள்ளது. பல்வேறு தருணங்களில் பயத்தினால் பழங்குடி மக்கள், தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதில்லை. அசுரப் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் என்று ஆதிக்க ஜாதியினரால் உடனடியாக அடையாளம் காணப்படுவதால், தங்கள் சமூகத்தினர் மீது ஏற்படும் விளைவுகளை எண்ணி அஞ்சுவர். அரசு நிறுவனங்கள் அவர்களை அரக்கர்களாகக் (குற்றவாளிகள்) கருதித் தாழ்வாக எண்ணிப் புறந்தள்ளி விடும் என்ற அச்சத்தால் தங்கள் வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றி வெளிப்படுத்தாமல் இருந்தனர்.

 

சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பழங்குடி மக்கள், இராவணன் உருவ பொம்மையை எரிப்பது தங்கள் மத உணர்வுகளைக் காயப்படுத்து மென்பதால் அதனை அனுமதிக்கக் கூடாது என்று அரசை எச்சரித்தனர். சத்தீஸ்கரில் முதல் முறையாக பழங்குடிகள் அரசுக்கெதிராக இப்படியொரு தைரியமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 

பல கிராமங்களில் மக்கள், குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் துர்கா பூஜை மற்றும் தசராவை இனி கொண்டாடப் போவதில்லை என்று தீர்மானித்தார்கள். இதற்கு இணையாக, சமூக அமைப்புகள், “மஹிசாசுரன் யார்? ராவணன் யார்? ஒவ்வொரு வருடமும் ஏன் அவர்கள் கொல்லப்படுகிறார்கள்?” போன்ற கேள்விகளைப் பற்றிய விவாதங்களில் ஈடுபட்டன. குறிப்பாக இளைஞர்கள் இந்த கேள்விகளை மூத்தவர்கள், தலைவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பிற நபர்களிடம் எழுப்பத் தொடங்கினர். இந்த இளைஞர்களும், பெண்களும் தங்கள் சொந்த வரலாற்றைப் பார்ப்பனரல்லாத கண்ணோட்டத் தைக் கொண்டு படிக்கத் தொடங்கினர். அவர்கள் மஹிசாசுரன் மற்றும் இராவணன் யார் என்று ஆராயத் தொடங்கினர்.

 

அத்தேடலில், அசுரர்கள் தங்களின் மூதாதையர்கள் என்றும், ஆரியப் படையெடுப்பிற்கு எதிராகத் துணிச்சலான போராட்டங்களை மேற்கொண்ட வர்கள் என்றும் அறிந்து கொண்டனர். ஆரியப் படையெடுப்பிற்கு எதிராகப் போராடியவர்கள் தான் உண்மையில் தங்கள் சமுதாயத்தின் சுதந்திரப் போராளிகள்; அவர்கள் வானத்தில் நட்சத்திரமாக மாறிவிட்டனர் என்ற கோட்பாட்டையும் அறிந்தனர். இந்த நம்பிக்கைகளின் படி, அந்த மூதாதையர்கள் தான் அவர்களுக்குக் கடவுள்! அவர்களைத் தான் காலங்காலமாக அரக்கர்கள், பேய்கள் மற்றும் தீய சக்தியென சித்தரிக்கின்றனர். ஆனால், அவர்கள் உண்மையில் ஆரிய மற்றும் மற்ற படையெடுப்புகளை எதிர்த்துப் போராடிய நல்லவர்கள் ஆவர். இந்தியாவின் வடக்கிலிருந்து தெற்கு வரை பல பகுதிகளில் இன்று வரை அவர்கள் வணங்கப்பட்டு வருவதற்கு இதுவே முக்கியக் காரணமாகும்.

 

- டாக்டர் கோல்டி எம்.ஜார்ஜ்

தமிழில்: யாழ்மொழி

நன்றி. கீற்று

 

“மத்தியப் பிரதேசத்திலுள்ள ஆதிவாசிச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ராவணனைத் தங்கள் தெய்வம் என்று கூறித் தங்கள் தெய்வத்தைக் கொளுத்துவது தங்கள் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள். தசராவின்போது ராவணன் உருவத்தைக் கொளுத்துபவர்கள்மீது வழக்குத் தொடரப்படும் என்றும் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். “விஜயதசமியின்போது ராவணன் உருவ பொம்மைகளைக் கொளுத்துவது குறித்து ஆதிவாசி மக்கள் மத்தியில் முன்பும் எதிர்ப்பு இருந்தது என்றாலும், மாநிலத்தின் ஒரு பகுதியில் வலுவான, ஒருங்கிணைக்கப்பட்ட பரப்புரை இயக்கம் ஒன்று முதன்முறையாக எழுந்திருக்கிறதுஎன்று ஹஃப்பிங்டன் போஸ்ட்டில் வெளியான செய்தி குறிப்பிடுகிறது. மத்தியப் பிரதேசத்தில் பெதுல் மாவட்டத்தில் இந்தஆண்டு இந்த எதிர்ப்பு வலுவாக இருந்திருக்கிறது.

 

“உருவ பொம்மைகளை எரிப்பதைப் பார்க்கும்போது எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. நாங்கள் ராவணனையும் மேகநாதனையும் வழிபடுகிறோம். எங்கள் தொல் மரபு, எங்கள் உணர்வுகள் புண்பட்டுள்ளனஎன்று ஆதிவாசிகளின் தலைவர்களில் ஒருவரான திலீப் துருவே ஊடகத்தினரிடம் தெரிவித்திருக்கிறார். அதை ஆமோதித்திருக்கிறார்கள் பிற ஆதிவாசித் தலைவர்களான ஆர்.எஸ்.உய்கே, பிரேம் சிங் சலம் போன்றோர்.

 

ராவணன் உருவ பொம்மைகளைக் கொளுத்துவது என்பது இரு சமூகங்களுக்கு இடையில் பதற்றத்தை அதிகரிக்கிறது என்று ஆதிவாசி விகாஷ் பரிஷத் என்கிற அமைப்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறது.

 

திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கோண்டு பழங்குடியினருக்குத் தனி மாநிலம் வேண்டும் என்று போராடி வருகிறது கோண்டுவானா கண தந்திரக்கட்சி. கோண்டுவானா என்பது தமது ஆதி நிலம் என்பதையும் இந்தியாவின் பூர்வீக நாகரிகங்களில் அதுவுமொன்று என்பதையும் வலியுறுத்திவரும் இந்தக் கட்சி, ராவணனைக் கொண்டாடும் கலாச்சாரம் தம் மக்களிடம் நெடுங்காலமாகவே உண்டு என்று கூறுகிறது. ஆரியர்கள் தங்களைத்தான் அசுரர்கள் என்று கூறுகிறார்கள் என்று இவர்கள் நம்புகிறார்கள். ஆதிவாசிகளின் அரசியல் உணர்வு அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் ராவணனைக் கொண்டாடும் அரசியல் உணர்வு பரவிவருகிறது.

 

அயோத்திக்கும் லங்காபுரிக்கும் இடையிலான தொலைவு குறைவு என்பது மட்டுமல்ல; அவ்விரு ராஜ்ஜியங்களும் இப்போது மோதலிலும் இருக்கின்றன. மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒரிசா, ஜார்கண்டு, பீஹார் பகுதிகளில் உள்ள பழங்குடி மக்கள் தங்களுடைய அரசியல் அதிகாரத்துக்காகவும் மொழி உரிமை உள்ளிட்ட இன உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மாவோயிஸ்ட்களின் தாக்கத்தால் தீவிர அரசியல் அவர்களிடம் நுழைந்து இரு பல்லாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், பழங்குடி மக்களிடமிருந்தே நேரடியான அரசியல் அமைப்புகள் தமது வரலாற்றை மீட்டுருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளன.

(நன்றி.மின்னம்பலம்)

 

எனவே அடிப்படையிலேயே இவர்களுடைய கூற்று தவறாகிறது.

 

ஆக, கங்கையின் கரைப்பகுதிகளில் நடைபெற்ற ஒரு போர் பற்றிய கதையில் வரும் தலைவன் திராவிட இராமன் என்பதும், கேடன்(வில்லன்) இராவணன் தாழ்ந்த சாதியினன் என்பதுமிருக்க, பெரியார் மற்றும் அவருடைய தொண்டர்கள் இராமனை ஆரியன் என்றும், இராவணனை திராவிடன் என்றும் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற செய்திகளாகும்.

...தொடரும்...

 

(வான்மீகி பாடலைக் கொடுத்துதவிய விஜயகல்யாணி அவர்களுக்கு நன்றி)