11. பைந்தமிழ்ப் பாமணி மதுரா
புனைப்பெயர்..மதுரா
இயற்பெயர்.தேன்மொழி
சோலை விருதுகள் : பைந்தமிழ்ப்பாமணி, காரிகை வேந்தர்
எழுதிய நூல்கள்: 
சொல் எனும் வெண்புறா, 
முல்லை முறுவல், 
பெண் பறவைகளின் மரம் (விரைவில் வெளியீடு)
மின்னூல்: சிதறும் முத்துகள் (தன்முனைக்கவிதைகள்)
பிராயசித்தம் (சிறுகதை தொகுப்பு)
கவிஞர் அழைப்பு
உள்ளக் கதவில் மறைந்திருக்கும் 
  உள்ளக் குமுறல் சிதறட்டும்
அள்ளித் தெளித்துச் சிந்துங்கள் 
  ஆன்றோர் அவையும் சிறக்கட்டும்
துள்ளி வருக தேன்மொழியே 
  சுடராய்க் கவிதை ஒளிரட்டும்
கிள்ளை மொழியால் பேசுங்கள் 
  கேட்கும் அவையும்  மகிழட்டும்  
பைந்தமிழ்ப் பாமணி மதுரா வருக வருக
தமிழ் வாழ்த்து
உயிரில் கலந்த உயர்ந்த மொழியே
மயக்க மறுத்துநல் மாண்பை யளித்துத்
தயக்கங் களைந்து தடையை நீக்கிப்
பயப்பா யினிய பயன்.
தலைமை வாழ்த்து
சோலையின் பூக்கள் நாங்கள்
  சுகந்தரும் பாக்கள் யாக்க
மாலையில் எம்மைக் கோத்த
  மன்றலின் தலைக்கு வாழ்த்து
கோலமாய்க் கவிஞர் கூடிக்
  குறைவிலாக் கவிதை பாடும்
ஆலமாம் சோலை யென்னும்
  அவைக்குமென் அன்பு வாழ்த்து.
கதவைத் திறந்து வை
உலகினில் பிறக்க வைத்தும்
  உறவெனச் சிலரைச் சேர்த்தும்
நிலையிலா வாழ்வைத் தந்தும்
  நிம்மதி யற்று நாளும்
அலைகடல் போல உள்ளம்
  அலைகழித் தரற்று மிந்தத்
தலையெழுத் தெழுதி நம்மைத்
  தவித்திட வைத்தார் யாரோ?
இறையெனச் சொல்வா ருண்டே
  இயற்கையாய்க் கொள்வா ருண்டே
அறிவினால் பகுத்துப் பார்க்க
  அவசிய மேது மில்லை
குறையிலா அன்பு கொண்டு
  குவலயம் வாழ வேண்டும்
நிறைவினால் நெஞ்ச மென்றும்
  நிம்மதி கொள்ள வேண்டும்.
கவலைக ளற்று மாந்தர்
  கண்ணியம் காக்க வேண்டும்
அவனியி லுயிர்க ளெல்லாம்
  அமைதியாய் வாழ வேண்டும்
துவண்டிடா நெஞ்சம் வேண்டும்
  தூய்மையா யுள்ளம் வேண்டும்
தவநெறி ஏது மின்றி
  தரணியும் தழைக்க வேண்டும்.
வஞ்சமே யில்லா வாழ்வு
  வஞ்சியர்க் கமைய வேண்டும்
நஞ்சிலா உணவு வேண்டும்
  நல்லதாய்க் காற்றும் வேண்டும்
பஞ்சமோ பிணியோ யின்றிப்
  பாரது செழிக்க வேண்டும்
எஞ்சிய நாளி லேனும்
  இன்பமாய் வாழ வேண்டும்.
இதற்கொரு வழியைச் செய்யும்
  எவரையும் இறையாய்க் கொள்வோம்.
மதமென எதையும் கொள்ளோம்
  மனிதமே போது மென்போம்
உதவிடும் கரங்கள் கோப்போம்
  உறுதுணை யாக உள்ளக்
கதவினைத் திறந்து வைப்போம்
  கடவுளை நம்முள் காண்போம்.
வாழ்த்து
இறைவனை வணங்கி நாளும் 
  இழிசெயல்  செய்யும் கூட்டம்
அறிவினைப் பெற்றால்  நாட்டில்
  அறமது நிலைக்கு  மென்றார்  
குறைவிலாக்  கவிதை பாடிக் 
  குறைதனை எடுத்துக் கூறும்
நிறைமதி மதுரா பாக்கள் 
  நிறைவென வாழ்த்து வோமே
No comments:
Post a Comment