'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Mar 14, 2021

குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 25

 

எழுசீர் விருத்தம்

 

1.       கவிஞர் பா.இந்திரன்

 

நீதி தவறாத ஊழி புகழ்கின்ற

    நேயன் றாளிணை நண்ணுவமே

பாதி யுடல்கொண்டு பாகம் தனைவென்ற

    பாவை உமையாளைப் போற்றுவமே

வீதி நிறைவாக விண்ணும் மகிழ்திடவே

    வீடும் அன்பதனைக் கொண்டிடவே

சாதி இரண்டெனவே சாரும் மனிதனென

    சான்றாய் வளர்ந்திட நிற்போமே/

 

2.       கவிஞர் வசந்தன்

 

ஆதி முதலான ஆய தலைவனாலே

    ஆகும் பணிகளும் அருமைதானே

ஏதி லாதவர்கள் ஈயும் நன்மைபெற்றே

    ஏகி வாழ்ந்திட எண்ணிநாமும்

சோதி யாயுலகில் தூவித் தொழுகின்ற

    சோக மேயிலாச் சுந்தரனாய்

நீதி தவறாத ஊழி புகழ்கின்ற

    நேயன் றாளிணை நண்ணுவமே

 

3.       கவிஞர் தில்லைவேந்தன்

 

மோதும் அலையாடும், மோன நிலைதேடும்,

    மூன்றும் கூடிடும் வீட்டுடனே.

கோதும் அகன்றோடும், கோளில் குணம்நாடும்.

    கோரும் யாவையும் வந்திடுமே,

மாதர் இருவோரும் சேர்ந்து மிசைமேவி

    வாழும் சீர்மிகு செந்திலிலே,       

நீதி தவறாத ஊழி புகழ்கின்ற

    நேயன் றாளிணை நண்ணுவமே!

 

( மூன்றும் - அறம், பொருள், இன்பம்)

 

4.       கவிஞர் நெடுவை இரவீந்திரன்

 

நீதி தவறாத ஊழி புகழ்கின்ற

    நேயன் றாளிணை நண்ணுவமே

காதி நெய்வானை ஆழி சுழல்வானை

    காணி உழுவானை எண்ணுவமே

வேதி அமர்வானை வேடம் இடுவானை

    வீணே திரிவானை விலக்குவமே

வாதி தொடுப்பானை வாய்மை மறுப்பானை

    வாழ்க்கை கெடுப்பானைச் சுளிப்போமே

                              வேதி - திண்ணை.

 

5.       கவிஞர் சின்னத்துரை உமாபாலன்

 

பாதி யொருமங்கை யாதல் முறையென்றே

    பாதை நாட்டிடுந் நாயகனே

யாதி யொருநாளில் காளி யொடுகூடி

    யாடல் காட்டிடுந் தாயவனாம்

சோதி யெனவாகி சொக்கத் திருவாகி

    சோகந் தீர்த்திடுஞ் செம்பொருளை

நீதி தவறாத ஊழி புகழ்கின்ற

    நேயன் றாளிணை நண்ணுவமே

No comments:

Post a Comment