'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 15, 2019

தமிழ்க்குதிர் - நளி 2050 - மின்னிதழ்

ஆசிரியர் பக்கம்


அன்பானவர்களே வணக்கம்!

மரபு கவிதைகள், இலக்கண, இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் எனப் பல பயனுள்ள தகவல்களைத் தாங்கிவரும் பைந்தமிழ்ச் சோலையின் தமிழ்க்குதிர் மின்னிதழ் வழியாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கவிஞரே ஆயினும் பிழைகளின்றிக் கவிதை, கதை, கட்டுரைகள் இயற்றல் இக்காலத்தில் அரிதாகி வருகிறது. இலக்கணம் என்பது ஒரு மொழி எப்படிப் பட்டது என்பதைப் புரிந்துகொள்ளவும் அம் மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் உதவுவதாகும். ஒரு மொழியின் இயல்புத்தன்மை கெடுவது அம்மொழியைச் சரியாய்க் கல்லாததாலும் பிறமொழிகளின் கலப்பாலும் ஏற்படுகிறது.

பைந்தமிழ்ச் சோலையின் நோக்கம் இவ்வாறு ஏற்படும் பிழைகளைக் களைந்து மொழியைக் கற்க உதவுவதாகும். பாட்டியற்றுக பயிற்சிகளின் மூலம் கவிஞர்களைச் செம்மைப்படுத்தி வருகிறது பைந்தமிழ்ச் சோலை. தமிழ்க்குதிருக்கு அனுப்பப்படும் படைப்புகளிளும் பிழைகள் திருத்தம் செய்யப்பட பின்னரே வெளியிடப்படுகின்றன. இது கவிஞர்கள் தம் படைப்புகளில் காணும் பிழைகளைத் திருத்திக் கொள்ள மேலும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

தமிழைத் தமிழாய்ப் பயன்படுத்துவது ஒவ்வொரு தமிழனின் கடமையும் உரிமையும் ஆகும். ஆகவே பைந்தமிழ்ச் சோலையோடும் அதன் மின்னிதழான தமிழ்க்குதிரோடும் இணைந்திருங்கள். தாய்மொழியாம் தமிழைப் பிழையின்றிக் கற்றுக்கொண்டு வளருங்கள். சமுதாயத்தைச் சீர்திருத்தும் நோக்கம் கொண்டு படைப்புகளை உருவாக்குங்கள். மகிழ்ந்திருங்கள்.

வாழ்க தமிழ்! பரவுக மரபு!

தமிழன்புடன்
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

அன்பால் உலகை வெல்லலாம்


பைந்தமிழ்ச்   செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்

சேர்த்து வைத்த பணமெல்லாம்
    சேற்றில் புதையு மொருநாளில்
கோத்து விட்ட மணிகள்போல்
    குறைகள் இடரும் பொழுதினில்
தீர்த்து வைப்பர் மனக்கவலை
    சிக்கல் தோன்றும் வேளையிலும்
பார்த்துப் பார்த்திங்(கு) உதவுவரே
    பாச முள்ளோர் அறிவாயே                         1

அறிவாய் அகிலம் சொல்லுமென்றும்
    அன்பால் உலகை வென்றிடலாம்
குறளில் சொன்னார் வள்ளுவரும்
    குறைகள் களைவர் உறவுகளே
சிறக்கும் இல்லம் என்றென்றும்
    தீங்கும் மறைந்து போய்விடுமே
நிறைகள் தருமே வாழ்வினிலே
    நெஞ்சம் மகிழும் ஆன்றோரால்                 2

ஆன்றோர் வகுத்த நெறிகளினில்
    அன்பின் மகிமை புலப்படுமே
சான்றோர் பாடிய பாக்களிலும்
    சான்று பலவும் காண்போமே
ஈன்ற தாயும் அன்பாலே
    என்றும் உன்னை ஆட்கொள்வாள்
மேன்மை நிலையை அடைந்திடவே
    மெய்மை என்றும் பகருமன்றோ               3

பகரும் வரிகள் சாற்றிடுமே
    பாசம் என்றும் மாறாது
அகமும் மலரும் அன்பாலே
    அச்ச மில்லா வாழ்வுவரும்
நகுதல் இல்லா உறவுகளில்
    நன்மை நடக்கும் என்றென்றும்
மகிமை பெருகும் வாழ்வினிலே
    மகிழ்ச்சி நிலைக்கும் அறிவாயே              4

அறிவார் செல்வம் நிலையில்லை
    அன்பு மனத்தை ஆற்றிடுமே
நெறியில் பிறழா மகத்துவத்தை
    நிலையாய்க் கொள்ளும் நற்குணமே
சிறப்பைத் தேடித் தருமன்பே
    சிதறிச் செல்லா உறவுகளால்
குறைகள் தீரும் உலகினிலே
    குற்றம் மறையும் அணைப்பதினால்        5

அணைத்து முத்தம் கொடுப்பதினால்
    அன்பை உள்ளம் யாசிக்கும்
உணர்வில் என்றும் மகிழ்விருக்கும்
    உள்ளம் துள்ளிக் குதிக்குமன்றோ
குணத்தில் சிறந்த யாவருமே
    கூட்டு வாழ்வு வாழ்ந்திடுவார்
பணத்தால் அன்பைப் பெறலாமோ
    பண்பால் விலகும் துன்பமெல்லாம்           6

துன்பம் கொடுக்கும் செல்வங்கள்
    துயரைத் தீர்க்கும் அன்பொன்றே
இன்பம் கொடுக்கும் காலமெல்லாம்
    எதிலும் மகிழ்ச்சி பொங்குமன்றோ
மின்னல் போன்றே போம்பொருளும்
    மீட்டுத் தாரா இழந்தவற்றை
முன்னோர் கூறினர் பாக்களினில்
     முடிவில் அன்பால் துயர்மறையும்            7

துயரம் தீர்க்கும் அருமருந்தாய்
    துடிக்கும் உறவே அறிவீர்கள்
தயங்கி நிற்கக் கரங்கொடுக்கும்
    தஞ்ச மளித்து மகிழ்வுறுமே
உயர்வு கொள்ள எந்நாளும்
    உதவி செய்யும் அன்புள்ளம்
வியக்க வைக்கும் உலகினிலே
    விழுந்தால் தூக்கி நின்றுதவும்                    8

நின்று தவுமாம் இறுதிவரை
    நிலையை உயர்த்த வழிசெய்யும்
தொன்மை நூல்கள் பற்பலவும்
    தொல்லை யில்லா அன்பினிலே
நன்மை பலவும் உண்டென்றார்
    நாடும் மேன்மை அடையுமென்றார்
இன்னல் தீர்க்க உதவுபவர்கள்
    இன்ப உறவே செல்வமன்று                        9

செல்வம் நிறைவு காணுமன்றோ
    சிந்தை மகிழும் தருணத்தில்
இல்லம் சிறக்கும் புன்னகையால்
    இன்பம் பிறக்கும் இல்வாழ்வில்
மெல்ல மனத்தில் நம்பிக்கை
    மீட்டுத் தருமே அன்புள்ளம்
உள்ளம் மலரும் பண்பாலே
    உவகை யடையும் பாரினிலே                    10

கம்பனின் காவியம் – பகுதி 2


கவிஞர் சிதம்பரம் சு. மோகன்

ஆள் பாதி ஆடை பாதி’ என்கிறார்களே

அதன் மெய்ப்பொருள் என்னவென்று கேட்டால், சிலர் மட்டுமே சரியான விடையைச் சொல்வார்கள்.  ஆடை என்பது அந்தஸ்துக்கு உரியது என்ற எண்ணமே அனைவரிடமும் இருக்கிறது. ஆளும், ஆடையும் இணைந்த திருந்திய தோற்றமே உயர்ந்த மதிப்பைப் பெற்றுத்தரும் என்பார்கள். தமது செல்வத் தகுதியைத் தாம் உடுத்தும் ஆடைகளே பிரதிபலிப்பதாக நம்புவோரும் உண்டு. இதன் மெய்ப்பொருளைக் காண்பதற்குக் கம்பன் கூறும் ஒரு காட்சியைக் காண்போம்.

ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என் சேய் குலமாள்வது; சீதை கேள்வன் ஒன்றால் போய் வனமாள்வது” - என்பதே கைகேயி கேட்ட புகழ்பெற்ற இரண்டு வரங்கள். பின்னர் அவ்வரங்களை இராமனிடம் அவள் கூறும்போது, “ஆழி சூழுலக மெல்லாம் பரதனே யாள;  நீ போய் தாழிருஞ் சடைகள் தாங்கித் தாங்கருந் தவமேற்கொண்டு; பூழிவெங் கானம் நண்ணிப் புண்ணியப் புலன்க ளாடி; ஏழிரண் டாண்டின் வாஎன்று சொல்கிறாள். கானகம் செல்ல வேண்டும் என்பதே தசரதனிடமிருந்து அவள் பெற்ற வரம். ஆனால் "இப்படித்தான் செல்ல வேண்டும்" என்று வரையறை செய்து இராமனின் தோற்றத்தை மாற்றுவதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தால் ஒன்று விளங்கும்.

உடை என்பது ஒருவர்பால் நன்மதிப்பை உண்டாக்குவதேயெனினும், ஒவ்வொரு உடையும் ஒவ்வொரு விதமான சிந்தனைகளை அவரவர்களுடைய உள்ளத்தில் விதைக்கும். போருக்கான உடை அணிந்தால் மனத்தில் வீரம் கொப்புளிக்கும். காவலர்கள் தமது சீருடையால் மனத்திலே துணிவும் எண்ணத்தில் ஊக்கமும் பெறுகிறார்கள். பல்வேறு தொழில்துறை சார்ந்த பணியாளர்கள் தமக்குரிய சீருடை அணிந்த  நிமிடம் முதல் அவர்கள் உள்ளத்தில் அவர்கள் செய்யும் தொழிற்குறித்த சிந்தனையே மிகும். அலுவலக உடை அணிந்த பின்னர் மனையாள் பேசும் எதுவுமே செவியில் ஏறாது சிலருக்கு.  எது சொன்னாலும் சரி சரி என்பார்கள். ஆனால் என்ன சொன்னாள், என்ன கேட்டோம் என்பதெல்லாம் மனத்தில் ஏறாது. பள்ளிச் சீருடைகளுக்கான நோக்கமும் இது போன்றதே. இளஞ்சிறார்களின் மனத்தில் ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ எண்ணத்தைத் தோற்றுவிப்பதற்காக.

எனவே, இளவரசனுக்கு உரிய உடையோடு இராமன்  கானகம் சென்றால், ஒருவேளை அவன் உள்ளத்தில் நாடாள வேண்டும் என்ற ஆசை இருந்துகொண்டே யிருந்தால் அது பரதனுக்கல்லவா தீமையாக முடியும்? அதன் காரணமாக மிகவும் கஷ்டப்பட்டு வாங்கிய வரங்கள் பயனற்றுப் போகுமோ என்று எண்ணுகிறாள் கைகேயி. மரவுரி அணிகின்ற நிலையில் அறச் சிந்தனைகளும், துறவு மனப்பான்மையுமே ஓங்கும். நாட்டாசை வாரா. பற்றற்ற உள்ளத்தை ஆழமாக விதைத்துவிட்டால், தான் பெற்ற வரத்திற்கு எந்நாளும் கேடில்லை என்று அவளுக்குப் புரிந்திருக்கிறது.

ஏய வரங்கள் இரண்டில் ஒன்றினால் என்சேய் அரசாள்வதுஎன்று கேட்காமல், குலமாள்வது என்று முன்யோசனையுடன் கேட்ட வரத்தின்படி வழிவழியாகப் பரதனின் மைந்தர்களே ஆள வேண்டுமாயின் அதற்கு என்றுமே எந்தவிதமான   குறுக்கீடும் இராமனால் தோன்றக் கூடாதல்லவா? ஆகையால் பணிப்பெண்கள் மூலமாக வற்கலை  கொடுத்தனுப்பி, உடுக்கச் செய்து அரசுரிமையின் மீதான ஆளுமை எண்ணத்தை அங்கேயே கிள்ளி அழித்து அனுப்புகிறாள். அன்னை தந்த சீதனமாக வந்த "சீரத்தை" மகன்கள் இருவருமே பெற்றுக் கொள்கிறார்கள். சீதை உடுத்திக் கொண்டதும் அதுவே என்பது நம் உள்ளத்தை நெகிழச் செய்வது.

எனவே, உடை என்பது  இன்றுமுதல் நமது எண்ணத்தை வளர்ப்பதாகவும் உயர்த்துவதாகவும் இருக்கட்டும், சிந்தனையில் ஏற்றத்தைத் தருவதாக இருக்கட்டும். “கந்தலானாலும் கசக்கிக் (தூய்மையாக்கி) கட்டிக்கொள்” என்று ஒளவையார் கூறியது உயர்வான தோற்றம் பெற வேண்டும் என்பதற்கு மட்டுமன்று.  உள்ளத்திலும் தூய சிந்தனை பிறக்க வேண்டும் என்பதற்கே.

“வானுயர் தோற்றம் எவன்செய்யும்; தன் நெஞ்சம் 
தானறி குற்றப் படின்?”
என்று கேட்டார் வள்ளுவர். சிந்திப்போம்.