'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 14, 2021

கைம்மாறு!

மழையளிக்கும் முகிலினங்கள் பெய்வ தற்கு,

      மாற்றுதவி  எதிர்பார்க்கும் வழக்கம் உண்டோ?

குழையமுதைக் கொட்டுகின்ற நிலவும் அந்தக்

      குளிரொளியை விலைசொல்லி விற்ப  துண்டோ?

விழைவுடனே உலகமெலாம் சுற்றிச்  சுற்றி,

     வெம்மையுடன்  ஒளிபரப்பும் கதிரும் என்றும்

உழைகூலி கேட்பதுண்டோ? உயர்ந்த சான்றோர்,

     ஒருநாளும்  கைம்மாறு கருதல் உண்டோ?


பூக்களெலாம் பணம்வாங்கி மலர்வ துண்டோ?

     புவிநம்மை வாடகைதான் கேட்ப துண்டோ?

கூக்குவென வைகறையில் பாடு் தற்குக்

     குயிலினங்கள் பரிசிலெதும்  பெறுவ துண்டோ?

ஏக்கமின்றிக் கரிவளியை மரம்வி ழுங்கி

       எஞ்ஞான்றும்  உயிர்வளர்க்கும் வளிய ளிக்க,

ஊக்குதொகை  கேட்பதுண்டோ? உயர்ந்த  சான்றோர்,

     ஒருநாளும்  கைம்மாறு கருதல் உண்டோ?

                                        -- தில்லைவேந்தன்

அம்மா! மாறிலாப்பத்து!

 அம்மா! மாறிலாப்பத்து!

                           கவிஞர் சுந்தரராசன்

பிண்டமாய்ப் போந்துன் னுள்ளே

  பிரண்டுகால் நீட்டி எத்தி

உண்டியின் சத்தை எல்லாம்

  உறிஞ்சியென் வளர்ச்சி யாலே

மண்டிடும் மசக்கை வாந்தி

  மற்றுபற் கோடித் துன்பும்

கொண்டனை தாயே நீசன்

  கொடுத்திடக் கைம்மா றுண்டோ?


பத்திரண் டென்பு நையும்

  பாடெலாம் பட்டுப் பெற்றுக்

கத்திடும் போதி லெல்லாம்

  கண்விழித் திருந்து பார்த்து

நித்தமும் என்னைக் காத்த

  நிமலையே! பிள்ளை ஈடாய்

எத்திறம் மாறு செய்ய?

  ஏதுமீ டிலையே தாயே!


உன்னுடை உதிரந் தன்னை

  உவந்திவன் பாலாய்ப் பெற்றேன்!

என்பசி தூக்க மென்றே

  எனக்கென வாழ்ந்தாய் நீயே!

தன்னல மில்லா உன்றன்

  தகைமையின் எதிரே வைக்க

என்னிவன் செய்வேன் தாயே!

  ஏதுமே இலையே மாறே!


அகஞ்சுழித் தழுதே னானால்

  ஆதுரங் காட்டிச் சற்றும்

முகஞ்சுழிக் காதென் தூய்மை

  முந்தியே பேணிச் சுற்றுஞ்

சகஞ்சுழித் தோடிக் காக்கும்

  சலமதன் கருணை காட்டிச்

சுகஞ்சுழித் தாடச் செய்தாய்!

  சொல்லிவன் மாறென் செய்வேன்? 


கலைகளைக் கற்றுத் தந்து

  கவிதையில் ஆர்வ மூட்டி

பலவகைப் போட்டி யெல்லாம்

  பங்குறச் செய்து வெற்றி

நலமெனைச் சேரப் பின்னே

  நாளெலா முழைத்தற் கீடொன்

றிலையெனும் போதிற் பிள்ளை

  என்செயக் கூடு மம்மே!


உழைப்பிலாப் போழ்தை உன்னில்

  ஒருகணம் கண்டேன் இல்லை!

இழப்பெது நேர்ந்த போதும்

  இருக்கிறேன் அன்னை என்றே

முழக்கிநீ முன்னே நின்று

  முழுமையுங் காத்தாய் அவ்வப்

பழுக்கிலா அன்புக் கீடாய்

  அம்மையே மாறென் செய்வேன்?

 

மெய்யெலாஞ் சோர என்றன்

  மேன்மையே கருத்திற் கொண்டு

கையெலாங் காப்பு கைக்கக்

  கைத்தொழில் செய்தே பாரில்

உய்யலாங் கவலை இன்றி

  உயரலாம் என்றே சொன்ன

தையலா முனக்கோர் மாறு

  தருக்கனுஞ் செய்வ தென்னே? 


கேணிவாழ் வான்மேல் பத்திக்

  கிறுக்கிலே பாடல் யாக்கும்

வாணிவாழ்ந் திருந்த நாவால்

  வாஞ்சையாய் என்னைத் தூண்டிக்

காணிவாழ் வேண்டல் செய்தோன்

  காலடி தொடரச் செய்தாய்!

நாணிலேன் கைம்மா றென்றே

  நடத்தவொன் றிலையே தாயே!


ஆழியாய்க் கடைந்தே உன்னை

  அமுதெனக் கீந்தாய் அம்மா!

தோழியாய்த் தோளுந் தந்து

  துயர்துடைத் திருந்தாய் அம்மா! 

நாழிகைப் போழ்தும் என்றன்

  நலம்மறந் திலையே அம்மா!

ஏழையேன் இவைக்கீ டாக

  என்னகைம் மாறு செய்வேன்? 


மாறுதல் ஒன்றே என்றும்

  மாறுதல் காணா தென்னும்

மாறிலா நீதி யாலே

  மாறிநீ வடிவு கொண்டு

மாறுதல் இல்லா அன்பை

  மழையெனப் பொழிவாய்! பிள்ளை

மாறிலேன் ஏதும் செய்ய!

  மறக்கிலேன் வாழு மட்டே

தவிப்பு

 தவிப்பு


அன்பே உன்னால் ஆசைத் தீயை
அகத்தில் வளர்த்து வாடுகிறேன்-அதை
முன்னே முகத்தில் மலரா வண்ணம்
முடியும் வரைநான் மூடுகிறேன்

புதிதாய் வந்தாய் பூத்துச் சொரிந்தாய்
புதுமை புரிந்தாய் பொன்னிலவே - நீ
எதுவோ செய்தாய் என்னை இழுத்தாய்
இயம்பாய் என்றன் இன்னிசையே

என்றோ ஒருநாள் எங்கோ பார்த்தேன்
எப்படிச் சொல்வேன் கனிமொழியே -அவன்
நன்றே எல்லாம் நாடிய அனைத்தும்
நாளும் நடக்கும் மணிமலரே

வந்தாய் வடிவே வரமே தந்தாய்
வளமாய் வாழ்வோ மென்றிருந்தேன்-
புதுச்
செந்தேன் வடியச் சிலநாள் நின்றாய்
சென்றாய் எங்கோ நின்றிருந்தேன்

உள்ளக் கமலம் உன்னால் தானே
ஊறுந் தேனில் நனைகிறது - அது
பள்ளம் நோக்கிப் பாயும் நீராய்
பாவை உன்னை நினைக்கிறது

தவியாய்த் தவித்துத் தலையும் பழுத்துத்
தனியே கிடந்து மாடுகிறேன் - நீ
தமிழாய் எழுந்து தருவாய் மலர்ந்து
சந்தக் கவிதை பாடுகிறேன்

காசு பணம் எதற்கு?

 காசு பணம் எதற்கு?


*********************

பறவைகளின் ஒற்றுமையைப் பார்க்கும் வேளை

படம்பிடித்து முகநூலில் பதிவர். ஆனால் 

உறவுகளின் கட்டமைப்பை ஒதுக்கி விட்டு

ஒண்டியென வாழ்வதற்கே ஊக்கம் கொள்வர்

சிறகடித்துப் பறப்பதற்கே சிந்தை தன்னில்

சிற்றின்ப வானத்தில் சேர்ந்து கொள்வர்

நிறம்மாறும் பச்சோந்தி நிலையில் நின்று 

நிதம்மாறும் குணமொன்றே  நெஞ்சில் வைப்பர்.

**

சுயநலத்தின் வழிசெல்ல சொகுசு வாழ்க்கை

சுதந்திரமாய் உள்ளதென்று சொல்லு வார்கள்

வியத்தகுவா னந்தபூக்கள் விளைந்து வாசம்

வீசுவதாய் வேறுசொல்லு வார்கள். மண்ணில்

பயமிகுந்த சூழலொன்று பாய்ந்து வந்து

படபடப்பை யூட்டுகின்ற பீதி வந்தால்

தயக்கமற்று உறவுகளைத் தாவிச் சென்று

தஞ்சமென்று கால்வீழ்ந்து தாங்கக் கேட்பர்.


**

விறகாலே எரிந்தோயும் வேட்கை கொண்டு

விளையாட்டாய் வளர்ந்துவிட்ட வெற்றுத் தேகம்

மறவாமல் ஒருநாளில் மண்ணில் சாயும்

மரபோடு இவ்வாழ்க்கை மறைந்து போகும்

திறவாமல் மனக்கதவை திடமாய்ப் பூட்டித்

திரிகின்ற கடும்போக்குத் தீயை மூட்டிப்

பிறவிக்குப் பயனற்றப் பேராய் வாழப் 

பிடிவாத மென்கின்றப் பீடை யேனோ?

**

எரிகின்ற தீபமென இருந்து நாளும்

இருளென்ற பேயகற்றி இடரும் நீக்கித்

திரிந்திட்ட மகிழ்ச்சிக்குத் தீமை செய்து

திக்கெட்டும் பதைபதைப்பைத் தேக்கி வைக்கத்

தெரியாத நோயொன்று தீண்டித் தீண்டித்

தினந்தோரும் பலபேரைத் தீர்க்கும் வாழ்க்கை

கரிகின்ற வேளையிலும் கருணை யற்று

கண்மூடிக் கிடப்பதற்கேன் காசு பணமோ?

**

மெய்யன் நடராஜ் 

வண்ணப்பாடல்

 வண்ணப்பாடல்


கவிதை

**********

தனத்தன தனத்தந் தனத்தன தனத்தந்

தனத்தன தனத்தந் தனதானா



கருத்துட னுருக்குங் கவித்துவ மிருக்குங்

களிப்பது மிகுக்குங் கனவாமே

கழித்தவ ரொதுக்குங் கருப்பொரு ளெடுக்குங்

களத்தினி லொலிக்குங் கனலாமே


குருத்துவ மளிக்குங் குறிப்பொடு சிறக்குங்

குணத்தினை நிறைக்குங் குரலாமே

குழப்படி யொழிக்குங் குலப்பகை யழிக்குங்

கொதிப்பதை நிறுத்துங் கனிவாமே


திருக்குறள் முழக்குந் திருட்டினை விரட்டுந்

திரட்டுவ தனைத்துந் திருவாமே

தெருக்களை யசைக்குந் தருக்களி லிசைக்குந்

திருப்புக ழினிக்குங் கடலாமே


சுருக்கமும் அருத்தந் திகைப்புற விரிக்குஞ்

சுருக்கென வுறைக்குஞ் சுடராமே

துலக்கமு மொளிர்க்குங் கலக்கமு மடக்குஞ்

சுரத்தொடை யணைக்குங் கவியாமே!


செல்லையா வாமதேவன்

கடலிலே செந்தூள்!

விவேக்பாரதி - இலக்கியக் கட்டுரை

மிகவும் சுத்தமான வெண்மை நிறம் கொண்ட பாற்கடல் மீது அன்று திடீரெனச் சிவப்பு நிறத்தில் துகள்கள் பறந்தன. "அவை ஏன் பறந்தன அதுவும் கடலுக்கு நடுவில் திடீரென எப்படிப் பரவின?" என்று அனைவரும் ஐயம் கொள்ளக் கூடும் அதற்கான காரணத்தைக் கவிஞர் பின்னால் இப்படிக் கூறுகின்றார்.

மத்தகத்தைக் கொண்ட ஒரு ஆண் யானையைக் கொன்று அதன் தோலினை உரித்துப் போர்த்திய சிவபெருமான் தன்னுடன் சண்டையிட வந்த அழகில் சிறந்த ஆடவனான மன்மதனோடு போரிட்டு வென்று முப்புரத்தில் அவனை நெற்றிக் கண்ணன் சுடரால் எரித்தான். இந்தச் செய்தி எட்டு திக்கும் பரவி அண்டம் முழுவதும் நிறைந்தது.

இதிகாசங்கள் கூறுவதாவது மன்மதன் நாரயணனின் பிள்ளை ! ஆகையால் தனது மகன் இறந்து போன புத்திர சோகத்தால் அறிவின் வித்தகம் நிறைந்த அந்தப் பேதையான இலக்குமி தேவி தனது களபம் தழுவப் பெற்ற மார்பில் அடித்துக் கொண்டு அழுதிடத் துவங்குகின்றாள் அந்த இடத்தில் காற்றோடு கலந்த அவளது மார்பின் செந்தூரத் துகள்கள் கடலின் மேலே பறந்த செந்தூள் ஆயின. அதுவும் திருமால் துயிலும் பாற்கடல் மேலே பறக்கும் செந்துள்கள் ஆயின.

மாரனைக் கண்ணால் எரித்த செய்தியினைக் கேட்ட அந்தத் திருவானவள் என்னதான் அறிவுடையவளாக இருந்தாலும் புத்திர சோகத்தால் புத்தி இழந்து மாரில் அடித்துக் கொண்டதாய் விளக்கும் இந்தப் பாடல் முழுக்க முழுக்கக் கற்பனைப் பாடலே என்று நினைக்கையில் நெஞ்சம் இனிக்கின்றது.

ஆம்! "கடல் நடுவிலே செந்தூள்" இருப்பதாகப் பாடல் புனைய இயலுமா என்றொரு புலவர் அவரது சவாலுக்கு விடை கொடுக்கக்

காளமேகப் புலவன் கற்பனையில் புனைந்த பாடல் எத்துணை இனிமையுடையதாகத் திகழ்கின்றது.

வெறும் கடல் நடுவில் செந்தூள் என்றொரு தலைப்புக்கு அழகான ஒரு காட்சியைக் கண்முன் விரித்த காளமேகக் கவிஞரின் பாடல் இதோ ! கறபனையில் உதித்த தேன் துளி !

பாடல் :

சுத்தபாற் கடலின் நடுவினில் தூளி

தோன்றிய அதிசயம் அதுகேள்

மத்தகக் கரியை யுரித்ததன் மீது

மதன்பொரு தழிந்திடும் மாற்றம்

வித்தகக் கமலை செவியுறக் கேட்டாள்

விழுந்துநொந் தயாந்தழு தேங்கிக்

கைத்தல மலரால் மார்புறப் புடைத்தாள்

எழுந்தது கலவையின் செந்தூள் ! - காளமேகம

இற்றைத் திங்கள் இவரைப் பற்றி

ஆசிரியராகத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு அதற்குள் அடங்கிவிடாமல் ஆன்மீக சொற்பொழிவாளராக, பட்டிமன்ற நடுவராக, தொகுப்பாசிரியராக, வானொலி வருணணையாளராக, எழுத்தாளராக, நனிசிறந்த மரபு கவிஞராக இன்னும் இன்னும் எண்ணற்ற தனித்திறமையின் மூலமாக எட்டுத்திக்கும் புகழ்பல கொட்டிக் குவிக்கும் இருபத்தோராம் நூற்றாண்டின் தவிர்க்க முடியாத மாபெரும் மனிதர்தான், இந்தமாத நமது தமிழ்க்குதிரின் கதாநாயகராக வலம்வரும் ஐயா திருமிகு முனைவர் இரா.மாது அவர்கள்...


இற்றைத் திங்கள் இவரைப்பற்றி அறிந்துகொள்வோம் வாருங்கள்.


நெல்வளமும், நீர்வளமும், பல்வளமும் மிகுத்துச் செல்லும் காவிரிக் கரையோரமான திருச்சிராப்பள்ளி என்னும் ஊரில், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும், பல இளந்தலைமுறையினரைப் பேச்சுக்கலையில் உருவாக்கியவரும் மேனாள் திருச்சி தேசியக்கல்லூரியின் தமிழ்ப்பேராசியருமான இரா.இராதகிருஷ்ணன் அவர்களுக்கும் திருமதி இரா.புவனேஸ்வரி அம்மையாருக்கும் தவப்புதல்வராகப் பிறந்தவர்தான் முனைவர்.இரா.மாது அவர்கள்.


இளம் வயதிலேயே கல்வி கேள்வியில் வல்வராய்த் திகழ்ந்த அவர் தமிழின் மீது ஆர்வம்கொண்டு முதுகலைத் தமிழையும் மேலும் இளங்கலை கல்வியியல் (பி.எட்) பட்டங்களைப் பெற்று திருச்சி உருமு தனலட்சுமி வித்யாலயாவில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.


மேலும் தனது தீராத கல்வி ஆவலால் "கம்ப ராமாயணத்தில் ஒருமைப்பாடு" என்னும் தலைப்பில் ஆய்வு செய்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் (P.hd) பட்டம் பெற்றுள்ளார்.


பட்டிமன்றம், ஆன்மீக சொற்பொழிவு, மற்றும் கவியரங்கம் எனத் தமிழகத்தின் பல பக்கங்களுக்கும் செல்வதோடு மட்டுமல்லாமல் இவங்கை, மலேசியா, பிரான்சு, ஆஸ்திரேலியா எனப் பலநாடுகளுக்கும் சென்று வருகின்றார்.


சபரிமலை ஐயப்பன் கோவில் மகர ஜோதி நிகழ்விலும், ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகதாசி நிகழ்விலும் நேரடி வருணனை செய்தவர்.


மேலும் வானொலி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் சிறப்புரையாற்றிவரும் செந்தமிழாளர்.


இவரின் படைப்புகள் :


@ உள்ளம் கவர்கள்வன் (தொகுப்பாசிரியர்)
@ மகாமகம் 2016
@ இலங்கை கம்பன் விழா மலர்
@ மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேக மலர்
போன்ற நூல்களையும்


மேலும் இதழாசிரியராக "தர்மச்சக்கரம்" என்னும் இதழில் கந்தர் அநுபூதி விளக்கவுரையினை எழுதி வருகின்றார்.


பெற்ற பட்டங்கள் :
திருச்சி தருமையாதீனம் வழங்கிய அருள்நெறி நாவலர் என்ற பட்டமும். அம்பத்தூர் கம்பன் கழகம் வழங்கிய தமிழ்ச்சுடர் பட்டமும், திருத்துறை அறநெறி கழகம் வழங்கிய கம்பன்சீர் பரவுவார் பட்டமும், சென்னை கம்பன் கழகம் வழங்கிய கோதாண்டக்கவுண்டர் நினைவும் பரிசும் குறிப்பிடத் தகுந்தவை.. இவற்றைப் போல் இன்னும்பல இலக்கிய விருதுகளையும்
பட்டம் பெற்ற வாழும் கவிஞராக நம்முடன் வலம்வரும் திருமிகு முனைவர் மாது அவர்களுக்கு பார்வதி என்ற மனைவியும் ஸ்ருதகீர்த்தி, ஸ்வாதி என்னும் இரண்டு புதல்விகளும் உள்ளனர்..


பல்துறை வித்தகராக வளர்ந்து வரும் முனைவர் மாது அவர்கள் மேலும் மேலும் புகழ்பல குவித்துத் தமிழுக்கும் இலக்கியத்திற்கும் இளம்தலைமுறைக்கும் தொண்டாற்றிப் பல்லாண்டு பல்லாண்டு வாழ பைந்தமிழ்ச் சோலையின் வாயிலாகவும், தமிழ்க்குதிர் சார்பாகவும் வாழ்த்தி வணங்குகின்றோம்..!

தமிழர்களே... தமிழர்களே!

ஆரியத்தை வெல்வதற்கு ஆங்கிலர்க்குத் தாழ்திறந்தாய்
பூரிய இந்தியைப் பூட்டிவிட்டாய்-சீரிய
சிந்தையின்றிச் சீழாந் திராவிடத்தை ஏன்கொண்டாய்
தந்தைதாய் இல்லாச் சருகாநீ-கந்தகமே
ஆயிரம் ஆண்டுகளாய் ஆரியத்தை வாளெடுத்துப்
பாயிரத்தெ றிந்ததெலாம் பைந்தமிழே-வாயிருந்தும்
கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தில் சேர்ந்தாயே
தாலிக் குகந்ததுவோ தாய்தமிழா-வேலியென
நின்றாரே மேய்ந்தகதை நீயறிந்தும் வெட்கமின்றிச்
சென்றவர்பால் சேருகின்றாய் தீதிலையோ-கொன்றழிக்கும்
தீப்பகைதாள் தாங்கத் திராவிடத்தார் போனதன்றிக்
காப்பில்லை என்பதனைக் காண்கிலையோ-மூப்பிலா
செந்தமிழச் சொந்தங்களே சேர்வீர் தமிழர்களாய்
எந்நோய்க்கும் இஃதே எதிர்ப்பு
                                                        -ஆதிகவி

நுளம்பு (கொசு) சூழ் உலகு.-

பைந்தமிழ்ப் பாமணி 
 சரஸ்வதி பாஸ்கரன்

உயிர்கொல்லும் நுளம்பழித்து வாழ்வினிலே என்றும்
    உயிரான இளந்தளிரைக் காத்திடுவோம் வாரீர்
பயிராகும் முன்னருமே கருகுகின்ற பாவம்
     பசுந்தளிரைப் பக்குவமாய்ப் பாதுகாத்தல் வேண்டும்
கயிர்கொண்டே இழுக்கின்ற எமனிடமும் நாமும்
     காப்பாற்ற வேண்டுமென்றே வேண்டுகின்றேன் நாளும்
உயிரெல்லாம் செத்துப்போய் இவ்வுலகில் என்றும்
     உறவுகளும் ஒப்பாரி வைப்பரிங்கே காண்பீர் !

கொஞ்சுகின்ற பிள்ளைகளின் கதியதுவும் பாரீர்
     கோலமயில் தாயவளின் கண்ணீரால் நாமும்
வஞ்சிக்கப் படுவதுவும் நிலைதானோ ஈங்கே
     வரமான வாழ்க்கையுமே இல்லைதானோ நமக்கே
அஞ்சனாவின் நிலைதன்னை அறிவோமே நாமும்
    அழுதாலும் தொழுதாலும் மீண்டிடுமா வாழ்வு
பஞ்சுபோன்ற பாலகரை இழந்தவர்கள் எல்லாம்
    பரிதவித்தல் பார்த்திருத்தல் கூடிடுமோ சொல்வீர் !

விழிப்படைவீர் எல்லோரும் ஈங்கின்றே கண்டு
    வியனெனவே தளிர்களையும் காப்பாற்ற ஒன்று
வழிதேடி நிலவேம்பின் சாற்றினையும் தேடி
    வாழ்விற்குத் தந்திடுதல் முறைதானே ஓர்க.
விழியாகக் குழந்தைகளைப் பேணிடுதல் வேண்டும்
    விலகாதும் அவர்நலனைக் காத்திடுதல் வேண்டும்
பழியில்லாச் சமுதாயச் செயலன்றோ இஃதும்
    பக்குவத்தின் மேன்மையதைப் புரிவீரே நீங்கள்

உதிர்கின்ற தளிர்களையும் காத்திடுவீர் சேர்ந்தே
     உதிரத்தில் நுளம்பழித்துப் பேணிடுவீர் சேர்ந்தே
கதிராகும் காலத்தில் பயிர்காத்தல் நன்றாம்
    கடமையென்றே எண்ணுதலும் அறிவீரே திண்ணம்
மதியிழந்து தவிக்காதீர் மண்ணுலகில் என்றும்
    மரணங்கள் நோய்நொடியால் வேண்டாமே என்றும்
விதியெனவே எண்ணாதீர் மானிடரே நீங்கள்
    விரைந்திடுவீர் எல்லோரும் நலன்நோக்கி வாழ்க !

வெற்றி - சிறுகதை

மதுரா

வாழ்த்துகள் ...என்ற ஒலி காதையும் மனசையும் நிறைத்துக் கொண்டிருக்க...

பூங்கொத்துகளையும் மாலைகளையும் சுமக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தான் விஜயன்.

இந்த ஆண்டு டர்ன்ஓவர் மட்டும் ஐந்து கோடி... லாபம் ஒரு கோடி..

கம்பெனி தொழிலாளர்கள் குதூகலமாக கொண்டாடிக் கொண்டிருக்க,

என்னோட எல்லா மூவ்மன்ட்டும் வெற்றிதான்.. என் வெற்றிய யாரும் தடைபோட முடியாது"என்று பெருமையாக,

ஆனந்தம் பொங்க தன் மனைவி ஜெயந்தியிடம் சொல்லிகொண்டிருந்தவன்

ஒர் ஓரமாக சோகமாக அமர்ந்திருந்த தன் செல்ல மகள் 'சைந்தவி' யை பார்த்துவிட்டான். பதறிப்போனவனாய் "என்னாச்சு ஜெயந்தி? ஏன் என் பொண்ணு இப்படி இருக்கா? தவித்தான்.

பார்த்துப் பார்த்து வளர்த்த மகள் பல லட்சம் செலவு செய்து திருமணம் செய்து கொடுத்தான். இப்படி வருத்தமா உட்கார்ந்திருக்காளே..

ஜெயந்தி!! என்ன ஆச்சு?

"உங்க பொண்ணாச்சே எல்லாத்திலையும் ஜெயிக்கணும்னு நினைச்சா....மாப்பிளையோட சின்ன வாய்த்தகராறு இப்ப கோவிச்சுக்கிட்டுஇங்க வந்து உட்கார்ந்திருக்கா....சாதாரண விஷயத்தை ஜெயிக்க நினைச்சு வாழ்க்கையை தோத்துடுவாளோனு எனக்கு பயமாயிருக்கு"

ஜெயந்தி ஒரு தாயாய்க் கலங்கி நின்றாள். ஒரு கணம் திகைத்தவன் சட்டென சுதாரித்து

"வாம்மா சைந்தவி உங்க வீட்டுக்கு போகலாம் மாப்பிளைகிட்ட நான் பேசுறேன் என்ன பிரச்சினை என்றாலும் பேசி சரி செய்திடலாம் "என்றான்.

அப்பா சண்டையே உங்க வெற்றியின் பின்னணி பற்றி தான்..நியாயமான வழியில் எப்போதும் ஜெயிக்க முடியாது.உங்கப்பா குறுக்குவழியில ஜெயிக்கிறார் னு சொல்றார் உங்க மாப்பிள்ளை.

ஆமாம் னு சொல்லிடு மா.

அப்ப நான் தோற்று போயிட்டேனா?

"இங்க பாரும்மா வாழ்க்கை வேறு பிசினஸ் வேறு. வாழ்க்கையை வாழ்ந்து ரசிக்கணுமே தவிர போர்க்களமா மாத்திடக்கூடாது.சில நேரங்களில் ஜெயிக்கறதுக்காகவே தோற்கணும்....வாழ்க்கையில வெற்றி பெறுவதற்கு விட்டுக்கொடுத்தல் பொறுமை ங்ற குறுக்குவழியில தான் போகணும். "ஸ்டூப்ஸ் டு கான்கேர் னு சொல்வாங்க புரிஞ்சிப்பேனு நினைக்கிறேன்"

"அப்பா இதுவும் குறுக்குவழி தான்.ஆனா நியாயமான குறுக்குவழி.எங்க வீட்டுக்கு போகலாம் வாங்க" என்று கிளம்பிய மகளை பார்த்ததும் ஜெயந்தி கணவனின் வெற்றி மூவ்மெண்டை புரிந்துகொண்டு பெருமிதத்தோடு சிரித்தாள்




முடிவு - சிறுகதை

பைந்தமிழ்ச் செம்மல் 
நிர்மலா சிவராசசிங்கம்

அலுவலகத்தில் வேலையில் மூழ்கி இருந்த நந்தினி நேரத்தைப் பார்த்ததும் அதிர்ந்து விட்டாள்

ஓ மாலை ஐந்து மணியாகி விட்டதே என்று தனக்குள் முணுத்து முணுத்தாள் வழமையாக நான்கு மணிக்கே வேலை முடித்து வீட்டுக்குச் சென்று விடுவாள் .இன்று முக்கிய வேலை என்றதால் நேரத்தைக் கவனிக்கத் தவறி விட்டாள் .

ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கி விட்டாள் .இருபது நிமிட நடை தூரத்தில் தான் அவளது வீடு இருந்தது .ஆனாலும் பிந்திச் சென்று விட்டால் கணவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டி வரும் என்று பயத்தில் விரைவாக நடந்து கொண் டு இருந்தாள் .

அவளது எண்ண ஓட்டத்தில் கணவர் சந்துருவின் முகம் தான் நிழலாடிக் கொண்டு இருந்தது .எதற்கு எடுத்தாலும் சந்தேகப் பட்டுக் கொண்டு இருப்பார் .நந்தினி நேர்மையான பெண் .தானுண்டு தன் வேலை என்று இருப்பவள்.அவள் மீது சந்தேகம் கொள்வது சந்துருவின் வழமையான போக்கு . சொற்களால் அவளைக் காயப்படுத்துவதில் சந்துருவுக்கு இன்பம்

விரைவாக நடந்து வந்த நந்தினிக்கு மேல்மூச்சு கீழ் வாங்கியது .வீட்டுக் கதவைத் திறக்கும் போது

.”என்ன தாமதம் யாருடன் கதைத்துக் கொண்டு இருந்தாய”; என்று கேள்வி கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தான் சந்துரு.அவள் மௌனமாக உள்ளுக்குச் சென்றாள் .

கோபத்துடன் சந்துரு அவள் தலையைப் பிடித்து கீழே தள்ளி விட்டான் .தலையில் பலமான அடி பட்டு விட்டது

அவள் கீழே விழுந்தாள் .சந்துரு கோபம் அடங்காதவனாய் கேவலமாக பேசி விட்டு வெளியே சென்றான் .சில நிமிடங்களில் நந்தினி மெல்ல எழும்பி நீராடி நெற்றியில் ஒத்தடம் மெல்லக் கொடுத்தாள் .

திருமணம் முடித்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டது .ஆனால் சந்துரு நந்தினி மீது அன்பு காட்டுவதில்லை .மாறாக இப்படி மிருகத்தனமாகவே நடந்து கொண்டு வருகிறான் .நந்தினி தன்னை விட உயர்ந்த பதவியில் நல்ல சம்பளம் பெறுகிறாள் என்ற காரணமோ தெரியவில்லை .நந்தினி சந்துருவிடம் அன்பாகப் பேசினாலும் அவன் எடுத்து எரிந்து தான் பேசுவான் .குடும்ப உறவிலும் அவனுக்கு ஈடுபாடு இல்லை

நந்தினிக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை .. ஆத்திரம் அடங்கியதும் சந்துரு வீட்டுக்குத் திரும்பியதும் நந்தினி மெல்ல உணவைப் பரிமாறிய படியே “நான் நாளை என் பெற்றோர் வீட்டுக்குப் போகிறேன் .அங்கிருந்து வேலைக்குச் செல்கிறேன் .நீங்கள் உங்களுக்கு விரும்பியவாறு வேறு ஒரு பெண்ணைத்திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழுங்கள”; என்று கூறி விட்டு தன் அறைக்குள் சென்றாள் உள்ளே சென்று பெட்டிக்குள் தன் உடுப்புகளையும் முக்கியமான சில பத்திரங்களையும் எடுத்து வைத்து விட்டு அமைதியாக உறங்கினாள் .இப்போது தான் அவள் மனம் ஆறுதல் அடைந்தது .

மறுநாள் விடிந்ததும் அவள் பெற்றோர் வீட்டுக்குச் சென்றாள் .அங்கு அம்மாவுக்கு இரண்டு வருடங்களாக பட்ட கஷ்டங்களை கூறினாள் . நான் இங்கு தான் இனி இருக்கப் போகிறேன் என்று கூறினாள் .அவளின் அம்மா அதிர்ந்து போனாள்

“.ஏன் அம்மா இதை முதலில் சொல்லவில்லை” என்று கூறி வருத்தம் அடைந்தாள் .

“இப்போது இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பல நிலையங்கள் இருக்கின்றன .சொல்லி இருந்தால் அங்கு செல்வதற்கு வழிகள் சொல்லி இருப்பேன் .மற்றவர்கள் எம்மைப் பற்றி என்ன சொல்லுவார்கள் என்று நினைத்தால் வாழ முடியாது .பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கப் பழக்க வேண்டும் என்று ஆறுதல் கூறினாள் .இப்போது அமைதியாக இரு முடிவு எடுக்கலாம்” என்றாள்

சந்துருவுக்கு நந்தினி சென்றவுடன் வீடு வெறுமையாக இருப்பதை உணர்ந்தான். தன் தவறுகளை உணர்ந்தான் .ஏன் நான் மிருகத்தனமாக இவ்வளவு காலமும் நடந்தேன் என்று நினைத்தவாறு நந்தினியின் பெற்றோர் வீட்டுக்குச் செல்லத் தொடங்கினான்

எங்கே சென்றாய் பேரழகே!

நா.பாண்டியராசா

அன்பே உன்னை மறவேனோ
   அமுத மொழிமை மறப்பேனோ
இன்பச் சுவையை இழப்பேனோ
   இனியப் பொழுதை துறப்பனோ
மென்றுத் தின்ற இதழ்களைதான்
   மெல்ல நழுவ விடுவேனோ
உன்னால் இங்கே சாகிறேனே
   உயிரே நேரில் வருவாயா?

பூவைப் போன்ற உடலழகை
   பூட்டி வைத்தால் பயனுண்டோ?
பூவை நானும் தொட்டிடவே
   பார்வை மட்டும் போதிடுமோ?
தேவைத் தீர வழிச்சொன்னால்
   தேளைப் போல் கொட்டுவதேன்?
பாவை உன்னைக் காணத்தானே
   புவியில் ஆனாய் நான்பிறந்தேன்!

கன்னே உன்னால் உருகுகிறேன்
   கண்மணி பூவே வாயேன்டி
உன்றன் நினைவில் வாடுகிறேன்
   உயிலே சேதி சொல்லேன்டி!
என்றும் என்னை ஆள்பவளே
   எங்கே சென்றாய் பேரழகே!
என்று வருவாய் என்னருகில்
   என்றே நானும் ஏங்குகிறேன் !.

பாரதி..சமுதாயச் சாரதி

ஓசூர் மணிமேகலை

அறம்பாட வந்துதித்த ஆதவனாய்க் கண்டோம்!
   அகிலத்தைத் தன்கவியால் மாற்றியநற் தொண்டன்!
இறவாத புகழதுவைப் பெற்றிட்ட பேறே!
   இவ்வுலகில் புதுமைகளைப் புகுத்திட்ட வேரே!
திறமான உணர்வுகளைத் தீரமுடன் நெஞ்சில்
   திடமாகப் பதித்திட்ட வீரகவி நீதான்!
நிறம்மாறும் பூக்களல்ல நீயளித்த பாக்கள்!
   நிலையாக உள்ளத்தில் கனல்மணக்கும் பூக்கள்!

விடுதலையை உன்போலே விளம்பியவர் இல்லை!
   வீரத்தின் விளைநிலத்தில் விதைத்தாயே சொல்லை!
இடுகின்ற ஆணைகளோ இலக்கினதன் எல்லை
   இனபேதம் ஒழித்தாலே அச்சமொன்று மில்லை!
சுடுகின்ற சொல்லாலே சுதந்திரத்தீ மூட்டி
  சுற்றிவரும் பகைவிரட்டி வெற்றியைநீ காட்டி
தொடுத்திட்டக் கவிப்பூக்கள் அனலாக வீசி
  தொடர்ந்திடுமே காலமெல்லாம் வரலாற்றைப் பேசி!

பாரதியாம் தீப்பிழம்பைப் பக்குவமாய் ஓதி
  படைத்திடலாம் புதுமையினை இப்புவியில் யாரும்!
சாரதியாய்ச் சமுதாயத் தேரோட்டி னானே!
   சரித்திரத்தில் வாழ்கின்ற சத்தியமே வாழி!
ஓரணியாய் இணைந்துநாமும் ஒற்றுமையாய் வாழ
   ஒன்றுபடப் பாடியநம் சிந்துகவி வாழ்க!
காரணியாம் என்றுமவன் கருத்தினையே போற்றி
   கனல்பூத்த நெருப்பான கவிதைகளாய் வாழ்வோம்!

ஆசிரியர் பக்கம்

பெருங்கொடுமைக் காலத்தில் நாம்வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகமே இப்பெருந்தொற்றை ஒழிக்கும் வழியறியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.

ஒருபக்கம் இது உண்மைதானா?என்ற ஐயமும், இன்னொருபக்கம் கொத்துக்கொத்தாக மக்கள் இறந்து வீழ்வதுமாய் ஒரு குழப்பமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

பன்னாட்டரசுகள் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்விற்கான தேவைகளையறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. சிலநாடுகளில் தொற்றைக் கண்டறியும் கருவிகளையும், நோய் வந்துவிட்டால் அதன் சிகிச்சை செலவுகளையும் அரசே பார்த்துக் கொள்கிறது.

நம்நாட்டிலோ… சோதனை தொடங்கி நோய் குணமாகி வீட்டிற்கு வருவதற்குள் சில இலட்ச உரூபா செலவழிகின்றன. வசதிபடைத்தவன் செலவழிக்கிறான். இல்லாதவனுடைய நிலை…?

சில கயவர்கள் மருத்துவமனை என்ற பெயரில் கொள்ளையடிப்பதும், பொய்யான சோதனை முடிவுகளைக் காட்டுவதுமாக இப்பெருங்கொடுமையிலும் கொள்ளையடிக்கும் ஈனத்தைச் செய்கின்றனர்.

நம் அரசோ மருந்துக்கும் வரிபோடுகிறது.

நாம் வைக்கும் வேண்டுகோள் இதுதான்….

மக்களை வாழ விடுங்கள்

அன்புடன்
பாவலர் மா.வரதராசன்.

தமிழ்க்குதிர் - விடை இதழ் - மின்னிதழ் வடிவில்


https://drive.google.com/file/d/1yXydc2NXwhwR4BGjMmGbuQX7GD0kl8GS/view?usp=sharing

தமிழ்க்குதிர் - விடை இதழ்  - முன்னட்டை 


May 16, 2021

ஆசிரியர் நன்னாள்

பாவலர் தங்கமணி சுகுமாரன் 
(கட்டளைக் கலித்துறை)

நல்லுல கத்தினை நன்னெறி தன்னில் நடத்துவதும்
புல்லறி வாளனின் புத்தியைத் தீட்டிப் புதுக்குவதும்
சொல்லறி விப்பதும் நல்லறி விப்பதும் தொண்டெனவே
அல்லும் பகலும் அமைத்துக் கொளுதல் அவரறமே

பெற்றதும் பெற்றோர் பெருங்கடன் யாவும் பெரிதுடனே
முற்றின அத்துடன் முப்பொழு தும்தம் முயற்சியிலே
கற்றவர் ஆக்கக் கடமையை ஆற்றும் கருத்தமைந்தோர்
கொற்றம் புகழ்ந்து குவிவோம் கரங்களைக் கும்பிடவே

பிரம்பினைக் கையில் பிடித்துநல் மாணவப் பிஞ்சுகளைக்
கரம்பிடித் தேதங்கள் கண்மணி போலவே காத்திருந்து
வரம்போடு தங்களை வார்த்தறி வூட்டிதன் வாழ்க்கையிலே
வரம்தரு தெய்வங்கள் மண்மிசை ஆசானை வாழ்த்துதுமே

தொடராதொழிப்போம் தொற்று

பைந்தமிழ்ப் பாமணி இரா.அழகர்சாமி
குறள் வெண்பா


மூக்குடன் வாயையும் மூடினால் நோயதன்
தாக்கம் தணிவைத் தரும்

தருமருந் தெல்லாம் தகைமை தருமோ
அருமருந் தாமடங்கல் ஆம்

அறிந்தோ அறியாமலோ ஆபத்தைத் தீண்ட
உறுகண் பெறுவா யுடன்

உடனே உடலில் உண்டாக்(கு) எதிர்ப்பைத்
தொடராம லோடுமே தொற்று

தொற்றினைத் தொற்றா தொழிக்கலாம் சொல்வதைப்
பற்று படராது பார்

பார்வைக்குக் கிட்டாமல் பாயும் கிருமியினைத்
தீர்க்கத் தனிமையே தீர்வு

தீர்வு கிடைக்காமல் திண்டாடும் மக்களை
யார்வந்து காப்பார் இனி

இனியும் பயமின்றி எல்லோரும் கூடத்
துணியுமே தொற்றும் தொடர்ந்து

தொடர்ந்து நம்மைத் துரத்துமிந் நோய்நாம்
தொடுதல் அதற்கொரு தோது

தோதகன் விட்டவோர் தும்மலால் நோயுன்னை
மோதுமுன் மூடிவை மூக்கு

தோதகன்-ஒழுக்கமற்றவன்
உறுகண்-நோய்

இலக்கணப் பேழை

பேரா.கு.இராமகிருட்டினன்

தான், தாம், தாங்கள் எனும் பெயர்கள்:

தமிழில், தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூவிடம் உண்டு,

தன்மைப் பெயர்கள்: யான்( நான்) , யாம் (நாம்), நாங்கள் ,

முன்னிலைப் பெயர்கள்: நீ,நீர் நீயிர்( நீவிர்), நீங்கள்.

படர்க்கைப் பெயர்கள்: அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை, அவைகள் ( காண்க; நன்னூல்287).

இவை தவிர, 'தான், தாம், தாங்கள்' என்பனவும் படர்க்கைப் பெயர்களாக (படர்க்கைப் பெயர்ப் பதிலிகளாக- தெ.பொ.மீ.)) உள்ளன.

எழுவாயாகப் பயன்படுபவை: நான், நாம், நீ,நீர், நீயிர், நீவிர், தான், தாம், தாங்கள், இவை வேற்றுமை உருபுகளை அவ்வாறே ஏற்கா. திரிந்த வடிவங்களைப் பெற்று வேற்றுமை உருபுகளை ஏற்கும்.

இவை வேற்றுமை உருபேற்கத் திரிந்த வடிவங்களைப் பெறும்:

என், எம்( நம்), நின்,உன், நும், உம், உங்கள், தன், தம், தங்கள். (காண்க நன்னூல் 247.) என்பன.

எ.டு. என்னை, உன்னால்...

அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை

தன் நிலையிலேயே வேற்றுமை உருபுகள் ஏற்கும்.

எ.டு. அவனை, அவளால், அதை, அவைகளை (அவற்றை)...

தான், தாம், தாங்கள் எவ்வாறு பெயர்ப் பதிலிகளாக வரும் ?.

தான் அன்பது அவன், அவள், அது என்பனவற்றுக்கு மாற்றாக வரும்.

தாம் என்பது அவர்,அவை(அவைகள்) என்பனவற்றுக்கு மாற்றாக வரும். தாங்கள் என்பது அவர்கள் , அவை, அவைகள் என்பனவற்றுக்கு மாற்றாக
வரும்.

எ.டு: தான் நல்லவன் என்றான்,

தான் ஐந்தாவது படிப்பதாகக் கூறினாள்,

தான் படுத்தே இருக்கும் அந்த நாய்.,

தாம் பெரியவர் என்பதை அவர் புலப்படுத்தினார்.

தாங்கள் தமிழர் என்று அவ்வூரார் பெருமைப்பட்டனர்.

தான், தாம், தாங்கள் என்பன வேற்றுமை உருபுகள் ஏற்கும்பொழுது தன், தம், தங்கள் என முதல் குறுகி நிற்கும்.

எ.டு: தன், தன்னை, தன்னால், தனக்கு, தன்னிடம்...

தம் தாயை வழிபட்டார். ( தாங்கள் தங்கள் என்பன தற்காலத்தில் முன்னிலையிலும் பயன்படுத்தப்படுகின்றன. எடு: தாங்கள் யார்? தங்கள் பெயர் என்ன?

தம், நம், நும் ஆகியவை சாரியைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன(தெ.பொ.மீ. தமிழ் மொழி வரலாறு பக்.131)

மேலும் ' அவன்தான் கூறினான், அவர்தாம் செய்தார், அவர்கள்தாம் தமிழர்' எனும்பொழுது தான், தாம் என்பன ஒன்றை வலியுறுத்திக் கூறப் பயன்படுகின்றன.

அன்பு தெய்வம் அன்னை (வளையற் சிந்து)

கவிஞர் சொ. சாந்தி

ஐயிரண்டு திங்களாக
அன்னைக்கருக் கூட்டில் - பின்
அவளின்மடிச் சூட்டில் - கண்
அயர்ந்தோம்தா லாட்டில் - அந்த
அன்புமனம் கொண்டவளை
அலங்கரிப்போம் பாட்டில். !

பனிக்குடத்தில் சுமந்தபோதும்
பாசங்குறைய வில்லை - தாய்
பரிவுக்கேது எல்லை - அவள்
பார்வைக்குநாம் கிள்ளை - நாம்
பணியவேண்டும் அவளையன்றி
பாரில்தெய்வ மில்லை..!

காய்ச்சல்பிணி கண்டுவிட்டால்
கண்ணுறக்கம் விட்டு - நமைக்
காக்கப்பாடு பட்டு – அன்னை
காய(ம்) நலங் கெட்டு - உயிர்
கரைந்தாலும் காத்திடுவாள்
கடவுள்நிலைத் தொட்டு..!

கல்சுமப்பாள் மண்சுமப்பாள்
கண்ணீரோடு அன்னை - தன்
கடமையிலேத் தென்னை - நமைக்
கரைசேர்க்கத் தன்னை - தீயில்
கரைந்துருகி யாகினாளே
காலந்தோறும் வெண்ணெய். !

இல்லமதி லுள்ளகடவுள்
ஈடுயிணை யில்லை - அன்னை
இருக்கவுண்டோத் தொல்லை - அவள்
இருக்குமிடம் மல்லை - நாம்
எந்தநாளும் அவளன்பால்
ஈட்டுமின்பம் கொள்ளை..!

சிந்துப் பாடல்களின் சீர்கள்

பாவலர் மா.வரதராசன்.

அன்புடையீர். வணக்கம்.


1.சிந்துப் பாடல்களின் சீர்கள் இரட்டைப்படையில்தான் வரும்....ஒற்றைப்படையில் வராது.

2.வளையற்சிந்து பாடலில் 24 சீர்கள்தாம் வரும். 15 சீர்கள் வரவே வராது.

3. இவற்றையறியாமல் முகநூலில் பிழையாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.(அலைபேசியில் கேட்டது)



"ஐயா....இது சரியா.? நீங்கள் சொல்வது சரியா? " எனப் பைந்தமிழ்ச்செம்மல் மன்னை வெங்கடேசன் என்னைக் கேட்டார்.

முதலிரு கருத்துகள் மட்டும் என்றால் இந்த விளக்கத்திற்கு தேவையேயில்லை. ஆனால், முகநூலில் என்னைத் தவிர வேறு யாரும் கடந்த ஐந்தாண்டுகளில் கற்பிக்கவில்லை என்பதாலும், ஒரு மாணவரின் ஐயத்தைப் போக்குவது ஆசிரியனின் கடமையென்பதாலும் நான் இவற்றிற்கு விளக்கம் சொல்லவேண்டியதாயிற்று.

சிந்துபாடுக என்னும் பயிற்சியைத் தொடங்கும்போதே இவ்வாறான வசவுகள் வரும் என்று எதிர்பார்த்தே ...

""இந்தப் பயிற்சிப் பகுதி புதிதாகப் பாப்புனைவோர் அஞ்சியொதுங்கா வண்ணம் எளிமையாகவும், பாப்புனைய தேவையான குறிப்புகளோடும் தொடரும்.

சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தப் பயிற்சியைக் கொண்டும் கூறப்படுகின்றன."

என்ற முன்குறிப்புடன் வழங்குகிறேன்.

என்சொந்தப் பயிற்சியென்பது அவ்விலக்கணத்தை நான் கற்கப்பட்ட பாட்டையும், பின் ஏற்பட்ட புரிதலையும் உணர்த்தும். அப்புரிதலின்
விளைவாக ஏற்பட்ட தெளிவே என் குழுவில் நான் பாடம் நடத்தும் முறையாகும்.

சிந்துப் பாவியல் நூலைப் படித்தாலோ அல்லது அப்படியே தொடர்ந்தாலோ யாரொருவரும் புரிந்துகொள்ளவியலாது. அதைப் புரிந்து தேர்ச்சிபெற எளிமையும், நல்லாசானும், அவருடைய வழிகாட்டலும் கட்டாயம் தேவை.

சான்றுக்குப் ...

பின்வரும் பகுதியைப் படித்துப் பாருங்கள்.

"சிந்துப் பாடல்கள் தாள அடிப்படையில் அமைக்கப்பட்டு உள்ளதால்தான் மற்ற பாக்களான இயற்பா, சந்தப்பா, வண்ணப்பாக்களுக்கான அசை, சீர், அடி, தொடை, மாத்திரை முதலியன இதற்கு ஒத்துவராமற் போகின்றன.

தாள அடிப்படையில் அமைந்த சிந்துப்பாடல்களில் உள்ள அசைகளையும், சீர்களையும் உணர வேண்டுமெனில் முதலில் தாளத்தையும் அதன் உள்ளுறுப்புகளையும் உணர வேண்டும். தாளம் ஏழு: அவை: துருவம், மட்டியம், ரூபகம், சம்பை, திருபுடை, அட, ஏக என்பனவாகும். இவற்றில்ன் உள்ளுறுப்புகள் மூன்று; அவை: கோல் (இலகு) - சுழி (திருதம்) - அரைச்சுழி (அனுத்திருதம்).

கோல் 1 என்றும், சுழி 0 என்றும், அரைச்சுழி அரைவட்ட வடிவிலும் குறிக்கப்பெறும்.

சுழி இரண்டு எண்ணிக்கையுடையது. அரைச்சுழி ஒர் எண்ண்ணிக்கை உடையது. இவையிரண்டும் எண்ணிக்கையில் மாறாதவை. கோல் மட்டும் இனத்தைப் பொறுத்து எண்ணிக்கை மாறக் கூடியது.

கோலும் இனங்களும் (சாதிகளும்):

மேற்குறித்த ஏழு தாளங்களுக்கும் இனங்கள் உண்டு. அவை மும்மை (திசிரம்), நான்மை (சதுசிரம்), ஐம்மை (கண்ட), எழுமை (மிசிரம்), ஒன்பான்மை (சங்கீரணம்) என ஐந்தாகும். இவற்றின் எண்ணிக்கை முறையே மூன்று, நான்கு, ஐந்து, எழு, ஒன்பது என்பனவாகும்.

ஒரு தாளத்தில் உள்ள கோல் இந்த ஐந்து இனத்துக்குரிய எண்ணிக்கைகளைத் தனித்தனியே பெறும்போது அத்தாளம் ஐந்து வகையாகிறது. இப்படியே ஏழு தாளங்களும் (7 தாளம் x 5 இனம்)= 35 வகையாகும். எடுத்துக்காட்டாகத் திரிபுடைத் தாளம் மும்மை இனமாயின் ‘மும்மையினத் திரிபுடை’ (திசிர சாதித் திரிபுடை) என்று பெயர்பெறும். அதனை ‘1300’ என்று குறிப்பார்கள். இதன் மொத்த எண்ணிக்கை (3+2+2) ஏழாகும். இதே திரிபுடைத் தாளம் நான்மை இனமாயின் நான்மைத் திரிபுடை (சதுசிர சாதித் திரிபுடை) என்று பெயர்பெறும். அதன் குறியீடு ‘1400’ ஆகும். இதன் மொத்த எண்ணிக்கை (4+2+2) எட்டாகும். இப்படியே முப்பத்தைந்து தாளத்துக்கும் கணக்கிட்டுக் கொள்ளவேண்டும்.

வட்டணை (ஆவர்த்தம்)

நான்மை இனத் திரிபுடைத் தாளத்திற்கு நடைமுறையில் ஆதி தாளம் என்று பெயர் வழங்கப்படுகிறது. ஒரு தாளத்தின் முழுநீளம் ஒரு வட்டணை எனப்படும்.

தாளம் போடும் முறை:

கோல் - ஒரு தட்டுத் தட்டி அதற்குரிய எண்ணிக்கை (தட்டுடன் சேர்த்து) எண்ண வேண்டும். சுழி - ஒரு தட்டுத் தட்டித் திருப்ப வேண்டும். அரைச்சுழி - ஒரு தட்டுத் தட்ட வேண்டும்.

சிந்துப் பாடல்களில் பெரும்பாலன ஆதி தாளத்தில் அடங்குமாறு அமைந்துள்ளன. அவற்றைப் பாடும்போது அடியின் முற்பகுதி ஒரு கோலிலும், 14 அடுத்தபகுதி இரண்டு சுழிகளிலும் ‘00’ அடங்குகின்றன. இப்படித் தாளத்தின் ஒரு வட்டணையிலோ, பல வட்டணைகளிலோ ஓரடி அடங்குகிறது.

1 2 3 4

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் . ப ரா சக்தி

5 6 7. 8

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் . . . . .

(அசை நீட்டங்கள் புள்ளிகளால் குறிக்கப்பட்டுள்ளன)

மேற்காட்டிய கோலிற்குரிய நான்கு எண்ணிக்கையில் முதல் அரையடியும், இரு சுழிகளுக்குரிய நான்கு எண்ணிக்கையில் அடுத்த அரையடியும் ஆக ஓர் ஆதிதாள வட்டணையில், இதன் ஓரடி முழுவதும் அடங்குவதைக் காணலாம். எட்டாம் எண்ணிக்கையில் எழுத்துகளே இல்லையென்றாலும் எழாம் இடத்தில் இறுதியாக வரும் அசை எட்டாம் சீராக நீண்டு இசைக்கிறது. இந்த இரண்டு வரிகளும் சேர்ந்து ஓரடி. எனவே இவ்வடியில் 8 சீர்கள் உள்ளன. இதனை எண்சீர்க் கழிநெடிலடி எனலாம். இந்தப் பாடலில் ஒவ்வோரடியும் ஓர் ஆதிதாள வட்டணையில் அடங்குகிறது.

இந்தப் பாடலில் கோடிட்டுக் காட்டியபடி 8 சீர்கள் உள்ளன. ஒற்று நீக்கிய உயிர்நெடில், உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் ஆகிய பதினெட்டு உயிரெழுத்துகள் (சிந்துப்பாடலில் உயிரும் உயிர்மெய்யும் உயிராகவே கொள்ளப்படும்) எட்டு சீர்களாக இசைக்கின்றன.



நண்பர்களே!

இதே முறையில் சிந்து இலக்கணத்தைக் கற்பித்தால் எத்தனை பேருக்குப் புரியும்.? இசைப்பயிற்சி வகுப்புக்குச் செல்வோர்க்கு மட்டுமே புரியும். அதைத்தான் நான் இயல்பாகவும் எளிமையாகவும் வடிவமைத்திருக்கிறேன்.

எப்படி...?

திசிரம் - மும்மை -

சதுசிரம் - நான்மை -

கண்ட - ஐம்மை -

மிசிரம் - எழுமை -

என்பனவற்றை,

மூன்றெழுத்து

நான்கெழுத்து

ஐந்தெழுத்து

ஏழெழுத்து

என்றவாறு எழுத்துக் கணக்கிலேயே புரியவைத்திருக்கிறேன். மேலும் ஒரெழுத்தையே அசையாகக் கொள்வது கற்பவர்க்கு குழப்பமுண்டாக்கும் என்பதால் அவற்றையும் நெறிப்படுத்தினேன்.

இரா.தி. இசையில் பயிற்சியுடையவர் என்பதாலும், இசையில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பதாலும் அவர் இசைநோக்கில் அணுகிய சிந்துப்பாடலை நான் சற்றே எளிமைப்படுத்தினேன். அவ்வளவே. மற்றபடி ...இலக்கணமேதும் இம்மியளவும் மாறாது.

அடுத்து...

சிந்துப் பாடல்களில் இரட்டைப்படையில்தான் சீர்கள் வரும்.ஒற்றைப்படையில் வராது.

ஆம். உண்மைதான்.

வளையற் சிந்து

. இதன் சீர் மும்மை நடையினதாக அமைந்திருக்கும். 1,5, 9, 13, 17, 21 ஆம் சீர்களில் மோனை அமைந்திருக்கும் 7, 11, 15, 23 ஆம் சீர்களில் இயைபுத் தொடை அமைந்திருக்கும்.

காட்டு : 24 சீர் அடி

வாரு மையா வளையல் செட்டி

வளையல் விலை கூறும் - சீர்

மகிழ்ந்து மேகை பாரும் - பசி

வன்கொ டுமை தீரும் - எந்த

மாந கரம் பேர்இ னங்கள்

வகை விபரம் கூறும்.

இப்பாடலை நன்கு நோக்குங்கள்.

23 சீர்கள் தாமே உள்ளன? ஏன் ஒற்றைப்படையில் வந்திருக்கிறது.? அப்படியானால் இப்பாடல் பிழையா?

இல்லை. பாடல் சரிதான். 24 ஆவது சீர் இசைநீட்டமாக அமையும். அஃதாவது 23 ஆம் சீரை இன்னும் இருமாத்திரையளவு நீட்டிப் #பாடிக்கொள்ளவேண்டும். ஆனால் எழுதும் போது அந்த இடத்தில் எந்த எழுத்தும் இருக்காது.

மேற்கண்ட விளக்கத்தை நன்றாகப் பாருங்கள்.

7, 11, 15, 23 ஆம் சீர்களில் இயைபுத் தொடை அமைந்திருக்கும்....

என்ற குறிப்பை நோக்குங்கள். 23 ஆவது சீருடன் பாடல் முடியும். 24 ஆவது சீர் எழுத்தேயில்லா இசைநீட்டம் மட்டுமே.

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் /// என்ற பாடலையும் அதன் விளக்கத்தையும் பார்க்க. அதிலும் 8 ஆவது சீரில் எழுத்தேயில்லா இசைநீட்டம் மட்டுமே வரும்.

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் . ப ரா சக்தி

5 6 7 8

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் . . . . .

(அசை நீட்டங்கள் புள்ளிகளால் குறிக்கப்பட்டுள்ளன)

எனவே, பயிற்சியின் எளிமைக்காக அந்த எழுத்தில்லாச் சீரைப் பற்றி நான் குறிப்பிடவில்லை.

இதனைச் சிந்துப்பாவியல் கூறுவதைக் காண்க.

"தனிச்சொல் முன்னரும் அரையிடை இறுதியும்

அடியின் இறுதியும் அமையும் அசைகள்

இரண்டிறந் திசைத்தலும் இயல்பா கும்மே."

(சி.பா. 10)

கருத்து : சிந்துப் பாடல்களில் தனிச் சொல்லுக்கு முன்னரும் அரையடியின் இறுதியிலும், அடியின் இறுதியிலும் அமைந்திருக்கின்ற அசைகள் இரண்டு அசை நீளத்திற்கு மேல் நீண்டு இசைத்தலுமுண்டு

காட்டு : ஓர் ஆதிதாள வட்டணையில் அடங்கும் அடி

ஓம் சக் தி ஓம் சக்தி ஓம் . ப ரா சக் தி

ஓம் சக் தி ஓம் சக்தி ஓம் . . . . .

(அசை நீட்டங்கள் புள்ளிகளால் குறிக்கப் பட்டுள்ளன.)

எட்டாம் எண்ணிக்கையில் எழுத்துகளே இல்லை என்றாலும் ஏழாம் இடத்தில் இறுதியாக வரும் அசை எட்டாம் சீராக நீண்டு இசைக்கிறது. இந்த இரண்டு வரிகளும் சேர்ந்து ஓரடி.

(சி.பா. 28 இன் விளக்கம்)



அடுத்து...

15 சீர்களில் வளையற்சிந்து அமையாது...என்பதற்கான விளக்கம்.

"வளையல் வாணிகம் வழங்கும் பாவகை

எண்சீர் அடிகள் இரண்டினும் மூன்றினும்

தனிச்சொல்லும் இயைபும் தான்மிகப் பெற்றே

ஓரடிக் கண்ணியாய் பேரளவியன்று

மும்மையின் விரைவில் செம்மையாய் நடக்கும்" (சி.பா. 37)


இந்நூற்பாவில்

எண்சீரடிகள் இரண்டினும், மூன்றினும்

என்னும் அடியைக் காண்க.

எண்சீரடிகள் இரண்டு - 16 அடிகள்

எண்சீரடிகள் மூன்று - 24 அடிகள்.

எனவே, 16 சீர்களிலும் வளையற்சிந்து அமையலாம் என்பதை அறிந்துகொள்க.

என்னுடைய பாடத்தில் 15 சீராகக் குறிக்கப்பட்ட ஈற்றசையை எழுத்தில்லா இசைநீட்டமாகப் பாடவேண்டும். வாருமையா வளையற்செட்டி பாடலின் 23 ஆவது சீரை நீட்டிப் பாடுவது போல்.

அவ்வாறாயின் என்னுடைய பாடல் 16 சீர்கள் கொண்டது தானே.?

அன்றியும்,

வாரு மையா வளையற் செட்டி // என்ற பாடலை என் பயிற்சியின்படி 15 சீர்களாகக் காட்டலாம். (எளிமையாகப் புரியும்படி)

1. வாருமையா

2. வளையல்செட்டி

3. வளையல்விலை

4. கூறும் -

5. சீர்

6. மகிழ்ந்துமேகை

7. பாரும் -

8. பசி

9. வன்கொடுமை

10.தீரும் -

11. எந்த

12. மாநகரம்

13. பேரினங்கள்

14. வகைவிபரம்

15. கூறும்.

இந்த முறையில்தான் என் பயிற்சிகள் அமைகின்றன.



அல்லது

என் பாடலை 24 சீர்களாகக் காட்ட முடியும்.

1. சதியெ

2. னவே

3. பிரித்த

4. னரே

5. சாதி

6. யினை

7. இங்கு -

8. மதச்

9. சாய்க்க

10.டையின்

11. பங்கு -

12. துயர்

13. சாய்த்தி

14. டவே

15. தங்கு -

16. நாம்

17.தகர்த்தெ

18.றிய

19.பலத

20.டைகள்

21.தழைத்தி

22.ருக்கு

23.மிங்கு.

24 ........

(24ஆவது சீர்க்குப் புள்ளிகள் வைக்கப்பட்டிருக்கும்)




ஒரு கணித ஆசிரியர் 22×10 என்பதை,

2×10 = 20

2×10= 20

--------

220

--------

என்று மாணவர்க்குச் சொல்லிக் கொடுப்பார்.

இன்னொரு ஆசிரியர் சற்றே எளிதாக, பத்தில் இருக்கும் சுழியத்தை 22 உடன் சேர்த்து

22×10= 220 என்று சொல்லிக் கொடுப்பார்.

வழிமுறை வேறுவேறு. ஆனால் பயனோ ஒன்றே.



நன்று...நண்பர்களே!

ஐயங்கள் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்.

தமிழன்புடன்

மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

இற்றைத் திங்கள் இவரைப்பற்றி

பைந்தமிழ்ச்செம்மல்
உமாபாலன் சின்னதுரை

இலங்கையின் வடபகுதியில் சைவமும் செந்தமிழுஞ் செழித்தோங்கப் பெருஞ்சிறப்புடைத்த பெருநகர் யாழ்ப்பாணம். அந்நகரில் வரலாற்றுப்புகழொடு திகழ்கின்ற முருகன் கோயில் கொண்ட மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சின்னத்துரை உமாபாலன். தமிழும் சைவமும் இருகண்ணெனக் கொண்ட ஆறுமுகநாவலரின் நேரடி மாணாக்கரான உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளையின் (நாவலரின் வழிகாட்டலில் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையின் தலைமையாசிரியராகப் பணிபுரிந்தவர்) வழித்தோன்றலான இவர்,
அரங்க அறிவிப்பாளராக, நாடக எழுத்தாளராக, கவிஞராக, பாடலாசிரியராக, பட்டிமன்றப் பேச்சாளராக அறியப்பட்டவர். இவர் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவராவார்.

1980 – 87ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றிய சின்னத்துரை உமாபாலன், 1987ஆம் ஆண்டு நள்ளிரவுச்சூரிய நாடெனும் நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்ந்திருந்தார். அங்கு லோறன்ஸ்கூக் (Lørenskog) நகரசபையில் தொழில்நுட்பவியலாளராகப் பணிபுரிந்துவரும் இவர், தமிழாசிரியராக, தமிழர் அமைப்புகளின் நிர்வாகியாகத் தமிழ்ப்பணியிலும் ஈடுபாடு காட்டி வருபவர்.

போட்ஸ்பியூர்ட் (Båtsfjord) தமிழ்ச்சங்கம், பின்மார்க் தமிழர் ஐக்கிய முன்னணி, லோறன்ஸ்கூக் தமிழர் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றின் தலைவராக அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தின் லோறன்ஸ்கூக் வளாகப் பொறுப்பாளராக, அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடங்களின் கலைப்பிரிவு இணைப்பாளராகக் கடமையாற்றிய இவர் தற்போது நடேஸ்வரா பழையமாணவர் சங்கம் - ஐரோப்பாவின் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

அண்டம் வலையொளியின் (Andam media) ஊடாகத் தமிழ்ச் சைவம் எனுந்தலைப்பில் தொடர்பதிவுகள் செய்துவரும் இவரது கவிதை நூல்களான தமிழ்ச் சைவம், வாலி காவியம் ஆகியவை விரைவில் வெளியாகவுள்ளன.

நம்முடைய பைந்தமிழ்ச்சோலையின் உறுப்பினரான இவர் சோலையின் பட்டத்தேர்வெழுதிப் பைந்தமிழ்ச்செம்மல் என்னும் உயரிய பட்டம் பெற்றவர்.

இவரது ஆக்கங்கள்:
2011ஆம் ஆண்டு வெளியீடு - மாவை மான்மியம்
(மரபுக்கவிதையிலமைந்த மாவிட்டபுர வரலாற்றுத் தொகுப்பு)

(சாற்றுகவி)

மாவைப் பதிதன்னின் மாணுயர் மக்கள் நலமறிந்து
மாவைக்கோர் மான்மியம் மன்பதை போற்றக் கொடுத்தமைந்த
மாவைப் பதிபிறந்த மாண்பார் உமாபாலன் நம்மனதிற்
காவிற் கனிந்த பழமாய்க் கனிச்சாறாய்க் கூடினனே!
.. .. .. .. ..- பண்டிதர் ம. ந. கடம்பேசுவரன்

2016ஆம் ஆண்டு வெளியீடு - நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள்
(நோர்வேவாழ் தமிழர்களின் வரலாற்றுத் தொகுப்பு 1956 – 2016)


(அணிந்துரை)
பன்னருங் கல்விப் பரம்பரை வந்த
என்னரும் மருகன் மாவைப் பதியின்
சின்னத் துரைமகன் சீர்உமை பாலன்
.. .. ..
செந்தமிழ் கமழும் சீரிய நடையில்
தேனினும் இனிய கவிதைகள் மேவிட
.. .. .. .. .. .. .. .. வெளிவந் ததுவே!
- புலவர் ம. பார்வதிநாதசிவம்

வண்ணப்பாடல்

அரசி.பழனியப்பன்

தனதன தத்தத் தத்தன தத்தத்
தனதன தத்தத் தத்தன தத்தத்
தனதன தத்தத் தத்தன தத்தத் தனதான

தலையெழு துற்றுப் பற்றொடு கொட்டத்
தரசிய லெட்டித் தப்பித முற்றத்
தனநிறை யுற்றுச் சத்தொடு சுற்றித் திரிவாராம்

தறிகெடு மெத்தர்க் குற்றிடு நட்புக்
களமதி லுற்றுப் பத்திமை முற்றித்
தமதுறு கட்சித் தற்குறி வெற்றிக் கலைவாராம்

கலைபல கற்றுச் சொற்றிற முற்றுத்
தலைமையை எட்டச் சத்தியு மற்றுக்
கவலையை உற்றுச் சித்தமொ டுக்கித் திகழ்மேலோர்

களிமன முற்றுக் கற்றது வைத்துத்
தொகுநிதி முற்றத் தெற்றென விட்டுக்
கனிவொடு மக்கட் பொற்பணி மெச்சப் புரிவாராம்

தலையுயர் வுற்றுப் பொற்றர மெட்டக்
களைகளு முற்றத் தட்டிய ழித்துத்
தகுதியில் மிக்கத் தக்கவ ருய்த்துத் துணையாகத்

தலமுறை நிற்றுச் சக்திகொ ழிக்கத்
தருமிறை மொத்தச் சக்திபெ ருக்கித்
தழையருள் கொட்டப் பொற்பினை யுற்றுச் சமுதாயம்

குலமுறை யற்றுப் பொற்றமிழ் வைத்துத்
தலைமுறை தொட்டுத் தக்கன வுற்றுக்
குடிமுறை மொத்தத் தொற்றுமை யுற்றுப் புகழ்சேரக்

கொடியுய ருச்சிக் குற்றிட வெற்பிற்
படைமற முற்றக் கொற்றவர் பற்றக்
கொழிதமி ழெச்சத் துத்திற லுற்றுத் திகழ்வோமே!


வண்ணப்பாடல் 2

தானா தானா தானா தானா
தானா தானத் தனதான

வீழா நாடாய் வாழ்வோர் பீடாய்
வீறாய் வாழத் தகுமாறு
மேலாய் ஆள்வோர் தானாள் வாரேல்
மேனாள் போலத் திகழாதோ?

நாளோ கோளோ வேறே தேதோ
நாடா தோடித் தொலையாதோ?
நாவார் தேனாய் மூவா தேவாழ்
தாய்நேர் வேதத் தமிழாலே

வாழ்வோ ரூடே மேல்கீழ் சாதீ
பாரா தோடித் தொலையாதோ?
மாதே ஆனார் தீதே வாழ்நாள்
வாரா தேமப் படுவாரோ?

மேலோய் !பாலா! சீலா! நூலோர்
மேலா யோதத் தகுகோவே!
வேலா! பாராய்! வேலால் தீராய்!
வேளே! தேவப் பெருமாளே!

பாசமே பெரிது

பைந்தமிழ்ப் பாமணி
சரஸ்வதி பாஸ்கரன்

தாய்தந்த பாசத்தால் தரணி ஆளும்
------- தக்கதொரு குடும்பத்தை நாமும் காண்போம் .
காய்க்கின்ற மரம்கூட மறத்தல் உண்டு .
------- கனிவான தாய்க்குநிகர் எவரும் உண்டோ .
சேய்களையும் செம்மையாகக் காக்கும் போக்கில்
-------- செங்குருதிச் சிந்திடவும் தயக்க மின்றி
வாய்நிறைய தன்பெண்டு பெருமை யாவும்
-------- வாழ்வினிலே சொல்லிடவே ஆசை கொள்வாள் !

தந்தையரின் பாசத்தில் மூழ்கிப் போவோம்
-------- தன்னலமும் இல்லாது பிள்ளை தன்னை
விந்தைபல செய்திடுவார் உலகம் தன்னில்
------- வித்தகராய் வளர்த்திடவே பாடு பட்டு
முந்துகின்ற வாழ்வுநெறி முழுதும் போற்ற
-------- முத்தாக பிள்ளைகளைப் பேணு கின்ற
அந்தமிலா வாழ்வினிலே ஆண்மை யோடே
-------- அரவணைக்கும் தந்தையரை எங்கும் காண்போம் !

மகனுடைய பாசத்தால் மலரும் வாழ்வு
-------- மங்காத குடும்பத்தின் மகிழ்ச்சி வெள்ளம் .
அகவையிலே சிறியோனாய் இருந்தும் கூட
------- அகத்தினிலே அன்பினிலே ஆள்வான் வீட்டை .
நிகழ்கின்ற இன்பதுன்பம் அனைத்தும் சீராய்
------- நிறைகின்ற வாழ்வியலை கற்றும் தந்தே
முகவரியை குடும்பத்தில் பதித்தே நிற்பான்
-------- முகிலாகி வான்மழையாய்ப் பாசம் தன்னில் !

விஞ்சுகின்ற மகளினுடைப் பாசம் கண்டு
--------- வியன்பொருளாய்ப் பெற்றோரும் பெருமை கொள்வார் .
பஞ்சுமனம் நிகர்த்ததொரு மென்மை உள்ளம்
------- பரிதவிக்கும் பாசத்தால் கள்ள மின்றிக்
கொஞ்சுகின்ற மொழியாவும் நலத்தை நோக்கி
-------- கோமகளும் சொல்லிடுவாள் உறவை நோக்கி .
தஞ்சமென வாழ்வினிலே தரத்தைப் பார்க்கும்
-------- தாய்தந்தை மகனோடு மகளின் பாசம் !!

உடன்பிறப்பு வழங்குகின்ற பாசத் தாலே
------- உருவாகும் உணர்வான மனத்தின் நேசம் .
கடல்கடந்து வாழ்ந்தாலும் பாசம் தன்னைக்
------- கரைசேர்க்கும் உடன்பிறப்பும் உலகில் உண்டு .
மடல்களுமே வனைந்திடுவான் நலத்தை நாடி
-------- மலர்ந்திடுமே அன்பும்தான் மறுத்த லுண்டோ !
தடங்கல்கள் வந்தாலும் தாவி யோடித்
-------- தடுக்கின்ற அணையாக நிற்பா னன்றோ !

கூட்டாகப் பாசத்தால் வெல்வார் தம்மைக்
-------- குடும்பத்தின் உறவாக பார்ப்போம் நாமும்
தோட்டத்தில் மலர்களுமே பலவும் உண்டு .
-------- தோற்றுவிக்கும் நறுமணத்தில் மாற்ற முண்டோ .
நாட்டத்தால் நல்லறமும் நடப்ப துண்டு .
-------- நன்மைகளும் அதனாலே என்றும் உண்டு .
காட்டுகின்ற பாசத்தில் குறைவு மில்லை .
-------- காலத்தால் பிரிவினைகள் ஏது மில்லை !

பெற்றவர்க்கு ளொளிர்வாயே!

பைந்தமிழ்ச் செம்மல்
செல்லையா வாமதேவன்

வண்ணப்பாடல்

தனந்த தந்த தத்த தத்த
தனந்த தந்த தத்த தத்த
தனந்த தந்த தத்த தத்த தனதானா

மனஞ்சி னந்து புத்தி கெட்டு
மறந்த ரண்டு நட்ட முற்று
மலர்ந்து வந்த மொட்டு வெட்டி - எறியாதே

மனங்க னிந்து சத்தி பெற்று
மருங்கெ ழுந்த யுத்தி பற்றி
மறங்க லந்து கற்று முற்று - மறிவாயே

இனங்க டிந்து சுத்த மற்றும்
இழிந்த சந்தில் வட்ட மிட்டும்
இருண்டு பொன்ற ழித்து விட்டு - மலறாதே

இதங்க லந்து சுத்தி யுற்றும்
இலங்கு மன்பில் அட்டி தட்டி
இயங்கி முந்தி வெற்றி பெற்று = மெழுவாயே

வனந்தி ரிந்து வற்பு முற்று
வயின்பி ரிந்து தொற்று முற்று
வறந்தி ரண்டு பொற்பு மற்று - முழலாதே

வனஞ்சி றந்து பட்டி தொட்டி
வரங்க னிந்து நட்ட மிட்டு
வளங்கு விந்த வத்தி நித்த - முறுவாயே

தனஞ்சி றந்து சட்ட மிட்ட
தடம்பு ரண்டு கொட்ட மொட்டு
தரங்கு றைந்து கெட்டு முட்டி - யழியாதே

தவங்கி டந்து பெற்றெ டுத்த
தலந்தொ டர்ந்து பத்தி யுற்ற
தடம்பொ லிந்து பெற்ற வர்க்கு - ளொளிர்வாயே!

மகிழ்ந்திருப்போம்

பைந்தமிழ்ச்சுடர்
மெய்யன் நடராஜ்

அடுப்பேறிய விறகானது அனலாவது போலே
   அடியோடெமை கரியாக்கிட அடிக்கோடிடும் நோயைத்
தடுப்பூசியை எடுத்தாயினும் தடுத்தேவிட வென்று
   தவித்தேயலை வதுவேயொரு தொழிலானது இன்று
கடுப்பேறிய மனதோடலை யெனவேயிதைத் தந்து
   கரையேறிட முடியாநிலை தனையேநமக் கிட்டு
எடுப்பாரினி நமக்கேதென இறந்தேயழி தற்கு
   இழிவாயொரு பெருநோயினை இறையேன்பரி சளித்தான்?

ஒருநாளிலை யொருநாளிது ஒழிந்தேவிடு மென்றால்
   உயிர்வாழ்வது சுகமேயெனவுளமோடொரு எண்ணம்
வருதேயிதை நிலையாக்கிட வரமாயொரு காலம்
   வருமோவினி யொருபோதிலும் வரலாறென வாழ்வில்
பெருநோயிது பலர்வாழ்வினை பிரியாவிடை செய்து
   பெரிதாகிய தொருசோதனை யிதுமாறிட விட்டு
உருவாகிடு மொருகால மதையேவர மாக்கி
   உயிரோடமை விடுமேயெனி லதுபோதுமெ மக்கே!

வருமோயிலை விடுமோவெனு மனநோயினை தந்து
    வரவானது குறைவாகிட செலவானதை நீட்டி
கருவாடென உயிர்வேரது கரியாகிடச் செய்து
   கரையேறிட முடியாநிலை யதையேதினம் காட்டி
உருவாகிய பிணியாமிது உலகாடிடு மின்றில்
   உறவானதும் பகையாகிட உயிர்வாடுது நாளும்
மருந்தேதெனு மிருந்தாலிதை மறந்தாடிட லாமே
   மறுவாழ்வினை யடைவோமென மகிழ்ந்தேயிருப் போமே!

முருகாதலம்

பைந்தமிழ்ச் செம்மல் 
தமிழகழ்வன் சுப்பிரமணி

தலையெழுத் தாவதென் றாலெழுத் தாவதென் றானீன்றதாங்
கலையெழுத் தாவதென் காலெழுத் தாவதென் கானீன்றதாம்
நிலையெழுத் தாவதென் நீளெழுத் தாவதென் நீயென்னுடைத்
தலையெழும் அல்லலைத் தாளிடு மல்லலைத் தாருமையே 21

தருகென்று வேண்டித் தமிழ்பாடி னேனைத் தரமுயர்த்தி
முருகா தலமென் முனைப்பை யளிப்பாய் முழுமுதலே
உருகா உயிரும் உலகினில் உண்டோ உனையகலேன்
பொருந்து மறிவால் புரிவன தந்தழி பொய்ம்மையையே 22

பொய்யா யுலகில் பொழுதினைப் போக்கும் பொருளெனவோ?
செய்யத் தகாதன செய்யத் துணிவார் செயல்களெலாம்
ஐயோ கொடுமை அறமிலச் செய்கை அழிதலுக்கே
ஐயா அருள்வேலா! ஆறுத லீவாய் அகத்தினுக்கே 23

அகத்திற் பொருந்திணை அத்தும்பை ஆகலான் ஆறுறுத்திப்
பகலவ னாலே பனிபடும் பாடாய்ப் பணித்துறுமா
அகலாத் துயரெலாம் ஆட்டங் கொளச்செய் அருந்தமிழா!
துகளாய்த் தொடங்கி முயல்வான் துணையெனச் சூழ்ச்சியில 24

சூழ்ந்தியான் செய்யத் துணிந்தன யாவும் துயர்விலக்கும்
ஆழ்ந்தியான் செய்ய அகத்தில் மகிழ்வால் அமைதியுளன்
தாழ்ந்துவ ணங்கித் தலைமேல் திருவடி தாங்குவனே
ஆழ்ந்தார்ந் திருக்கும் அடியர்தம் ஆர்வத் தருவிளக்கே 25

விளக்காய் விளங்கி வியனுல கெல்லாம் ஒளியருளும்
அளக்க வியலாப் பெரும்புகழ் கொண்ட அருந்தமிழைப்
பிளக்கும் வகையாய்ப் பிணக்குறு வார்தம் பிழைகளினை
உளங்களைந் தோட்டுக ஓரா நிலையவர் ஊழ்வினையே 26

ஊழ்வினை யாவும் உமதருட் பார்வை ஒளிபடவே
வாழ்வினை மேன்மை வழியிற் செலுத்தும் வளத்துடனே
ஆழ்வினை தன்னில் அகம்பொருந் தட்டும் அதுமகிழ்வு
பாழ்வினை யாற்றாப் பணிவுடை நெஞ்சம் படைத்தருள்வாய் 27

படைவீட் டெழுந்து பகைதீர்த் தருளும் பகலவனே!
தடைவீட் டிருந்து தடுத்தாண் டருள்க தமிழமுதம்
உடைவீட் டினிலே உவகை பெருக உமதடியார்
அடைவீட் டெழுக அவருளங் கொள்வதென் ஆழ்வதுவே! 28

ஆழ்ந்தொரு செய்கை அகத்தில் நிறைத்தியான் ஆற்றுதற்காய்ச்
சூழ்ந்து முனைவேன் சுடர்நெடு வேலோய்! துணையிருந்து
வீழ்ந்து விடச்செய் வினையெலாம் போக்குக மீப்பயனாய்
வாழ்ந்து மறைந்தார் வழிநிலை ஆய்ந்தெழ வாழ்த்துகவே 29

வாழ்த்துக ஊக்குக வாய்மலர்ந் தென்னை வருவழியில்
தாழ்த்தும் உளமொடு தாக்கும் கருத்துறை தன்னலத்தார்
ஆழ்த்துமச் சூழ்வலை ஆயன வெல்லாம் அறுத்தெறிந்தவ்
வீழ்த்தும் நிலைகளை யான்கடந் தேறும் விளைவருளே!   30

------ நிறைவுற்றது-----

பாலையில் பாடுகிறேன்

பைந்தமிழ்ச்சுடர் 
அபூ முஜாகித்

பாலையில் பாடுகிறேன்
பாடம் படிக்கையிலே உனது
பார்வை படம்பிடித்தேன்
கூடச் சுவரிலெலாம் உனது
கோலம் வரைந்துவைத்தேன்

வேதத் திருக்கையிலும் உனது
பாதம் பணிந்திருந்தேன்
சீதத் தமிழழகே உன்னில்
சிந்தை பறிகொடுத்தேன்

சோலைப் பசுங்கிளியே துயிலும்
சோகக் கதைசொல்லவா
பாலைப் பெருவெளியில் எனது
பாதை தொடர்கதையா

ஆனந்த மோகனமே என்னை
ஆளும் மலர்ச்சரமே
ஏனிந்த மௌனமன்பே என்னை
இன்னலில் வாட்டுவதேன்

மோகனம் பாடுகிறேன் உன்னை
மூச்சிலும் வாங்குகிறேன்
தாகத் துடன்தமிழை என்றும்
தாங்கியே வாழுகிறேன்

சித்திரைக் குயிலெனவே உந்தன்
சித்தத்தில் கூவுகிறேன்
சத்தமிலா திருந்தால் எந்தன்
சங்கதி என்னவென்பேன்

உருளும் விழிகளினால் எழிலாய்
ஓவியம் தீட்டுகிறாய்
அருளுமுன் ஆசியினால் அதிசய
ஆனந்தம் பாடுகிறேன்

பூமழை போலஉந்தன் புதிதொரு
புன்னகை பார்த்திருந்தேன்
பாமக ளோடிவிட்டாய் அதனால்
பாலையில் பாடுகிறேன்

காத்திருத்தல்

பைந்தமிழ்ச் செம்மல்
நிர்மலா சிவராசசிங்கம்

நெஞ்சத்தில் வந்தவளே என்னைநீ நித்தமும்
கெஞ்சிட வைப்பதே னோ

காதலின் தீபத்தை ஏற்றிய பெண்ணே
நோதலில் மாய்ப்பதே னோ

நானுன்னைச் சந்திக்க ஆர்வத்தால் வந்ததும்
நாணத்தால் கண்களை மூடிவிட் டாய்

நடமாடிடும் அழகேதினம் வருவாயென மனமேகிட
நல்வாக்குச் சொல்லாமல் ஓடிவிட் டாய்

கன்னியுன் எண்ணமே என்றனின் நெஞ்சத்தில்
காற்றாய்த் தீண்டவே மாள்கின்றே னே

கனியேதினம் மனவாசலில் ஒளிவீசிட வருவாயென
கற்பனை வாழ்வினில் வாழ்கின்றே னே

என்றனின் காதலை ஏற்றதும் உன்றனின்
எண்ணத்தில் என்றென்றும் நானிருப்பேன்

இனியாவது மகிழ்வாயெனை நலமேதினம் தருவாயென
இன்பத்தில் நானென்றும் காத்திருப்பேன்

ஆசிரியர் பக்கம்

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து. (குறள் 551)

"குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்" என்கிறார் ஐயன்.

மிகக்கொடிய நோய்த்தொற்றால் இந்தியா அழிந்துகொண்டிருக்கிறது. எங்குப் பார்ப்பினும் பிணக்குவியல். பிணங்களைக் குப்பையை வீசுவதுபோல் ஆற்றில் வீசும் இழிநிலை. கணக்கின்றி எரிக்கும் பிணங்களன்றி இவை எரிக்கவியலாமல் வீசிச்சென்ற கொடுமை.

ஒரு மாநில. முதல்வர் மாட்டுக்குப் பரிவுகாட்டி மாந்தரை மறக்கிறார். இன்னொருவர், யாகம் செய்கிறார். இன்னொருவரோ பாதிப்பேருக்கு அறிவியல் மருத்துவமும், பாதிப்பேருக்கு காயத்ரி மந்திரமும் சொல்லிச் சோதனை செய்கிறார். இவர்களையும், மக்களையும் வழிநடத்திக் காப்பாற்ற வேண்டிய அரசன் ஆட்சி செய்யும் கட்டடம் கட்டிக் கொண்டும், யோகாசனம் செய்துகொண்டுமிருக்கிறார்.

ஆனால் இதுநாள் வரை மக்களுக்காக இறங்கி வேலை செய்யாமல் காணொலி மூலமே ஆட்சி செய்கிறார். தன் கையாலாகாத் தன்மையை மறைத்துக் கொண்டு அதற்கு மக்களைப் பலிகொடுக்கும் இந்த ஆட்சியும், அரசும் இன்னும் நீடிப்பதென்பது, எரியும் தீயில் இறங்குவதொக்கும்

.மற்ற நாடுகள் முதல் அலையிலிருந்து தக்க பாடம் கற்றுக்கொண்டு இரண்டாம் அலையில் மீண்டெழுந்துவிட்டன. ஆனால், நாமோ உலகமே கான்றியுமிழும் ஒரு ஆட்சியை இன்னும் தூக்கி வீசாமல் வைத்துக் கொண்டிருக்கிறோம். அல்லது அஞ்சியொடுங்கிக் கிடக்கிறோம்.

மக்களே! உண்மையை உணர்வதெப்போது?

விழித்தெழுவோம்! விடியல் காண்போம்!

அன்புடன்
பாவலர் மா.வரதராசன்.

தமிழ்க்குதிர் மேழம் 2052 முன்னட்டை


தமிழ்க்குதிர் மேழம் 2052


https://drive.google.com/file/d/1jDWVDVvmnz1ok1EwZw4D8OwA-qF8JT7Z/view?usp=sharing




Apr 23, 2021

தமிழ்க்குதிர் - மீனம் 2052 - மின்னிதழ்


 

ஆசிரியர் பக்கம்

அன்பானவர்களே! வணக்கம்.

ஓரினத்தை அழிக்க வேண்டுமாயின் அவ்வினத்தாரின் மொழியை அழித்தால் போதும் என்பர் மொழியியலார். 

கோடிக்கணக்கானோர் பேசுகின்ற, எழுதுகின்ற ஒரு மொழியை அழிக்கவியலுமா? கடைசி மாந்தன் இருக்கும்வரை அம்மொழியின் பேச்சு வழக்கிருக்கும். அம்மொழியின் இலக்கியங்கள் வாயிலாக எழுத்துவழக்கிருக்கும்.

ஆயினும் மொழியை அழித்தலென்பது அதனைச் சிதைப்பதைக் குறிக்கும். சிதைத்தலாவது அதன் தூய்மையான தனித்தன்மையைச் சிதைக்கு மாற்றான் அம்மொழியில் பிறமொழிச் சொற்களைக் கலப்பதாம். 

இது வெளிப்படையான மொழிக்கலப்பின்வழி ஒருமொழியைச் சிதைப்பதாகும்.

மற்றொரு வழியிருக்கிறது. அது... அம்மொழியின் பெயரைத் திரித்தும், அதன் தொன்மையைக் குறைத்தும், அதன் மூலத்தை வேறொரு மொழியாகக் காட்டியும், அம்மொழியுணர்வை வீறுகொளச் செய்யாதிருத்தலும், அவ்வாறு வீறுகொள்வோரை "இனவெறியன், சாதி வெறியன் என்று முத்திரை குத்தித் தனிமைப்படுத்துவதும் என்பனவாகிய பல தீய செயல்முறைகளை உள்ளடக்கிய கொடிய வழியாகும்.

தமிழ்மொழியைப் பொறுத்தவரை அம்மொழியை அழிக்கும் செயல்களில் முதல்வழியை ஆரிய மற்றும் பிறமொழியினர்  செய்து வருகிறார்கள்.

கொடிதான இரண்டாவது வழியை… 

நம்மோடு நம்மவர்போலவே கலந்தும், நம்மொழியைத் தெளிவுறக் கற்றும், ஆனால்  தங்கள் தாய்மொழிப் பற்றை உள்ளத்தில் ஆழப் பதித்தும், தமிழை அழிக்கும் வண்ணம் எத்தகைய இழிசெயலையும் செய்யத் தயங்காத திராவிடரே செய்து வருகிறார்கள்.


தமிழா !  விழித்தெழு!


இனவுணர்வு கொள்.! 

நாம் தமிழினம்.


மொழியுணர்வு கொள்.! 

நம்மொழி தமிழ்


நாட்டுணர்வு கொள்.! 

நம்நாடு தமிழ்நாடு!


வாழிய செந்தமிழ்!  

வாழ்க நற்றமிழர்!  

வாழிய தமிழ்த்திரு நாடு!


அன்புடன் 

பாவலர் மா.வரதராசன்.

Apr 18, 2021

மழை வரமாமே!

பைந்தமிழ்ச் செம்மல்
செல்லையா வாமதேவன்

தான தனதன தான தனதன
தான தனதன தனதானா

கோடை யெழுகதி ரோடு படமிடு
கோர வெயிலது கொடிதாமே
கோப முறுவிழி யோடு முகிலுறு
கோல மெரிதழ லுருவாமே

வாடை வருவழி யோடு குளிரையு
வாரி வருவது சுகமாமே
வாதை ஒருவழி யாக விடைபெற
வான மொழியது திருவாமே

பீடை குறையவு மோடை நதியொடு
பீடு நிறையவு முருகாதோ
பீலி நடமிடு பீலி தருவிடை
பேடை யிணையுடன் இதமாமே

மூடை நிறைவுறு மாறு வயலுறு
மூடு விளைவொடு கனியாமே
மோடு நிலையுற மோதி இடியொடு
மோலி யணிமழை வரமாமே!

( பீலி - மயில், மலை
மூடை - தானியக்கோட்டை
மோடு - பெருமை, மேடை
மோலி – கிரீடம் )

கரடிகுளம் வள்ளிமுத்தார் காக்கைவிடு தூது

பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து
பகுதி – 12

கொங்கை இரண்டும் குவிந்தமுகிழ் கோங்கரும்பு
செங்கை விரிந்தவிதழ்ச் செங்கழுநீர்ப் பூவாகும்

பார்க்குவிழி பூங்குவளை பாதம் அனிச்சமலர்
வேர்க்கும் முகமதுவோ வெண்பனித் தாமரை

வட்ட இதழிரண்டும் வண்ணத்துப் பூச்சியொட்டா
மொட்டவிழ் செம்பருத்தி! மோகம் உயிர்த்தெழுப்பும்

ஏழுவகைப் பூச்சுமந்(து) ஏந்திழையாள் ஊர்ந்துவர
வாழும் நிலம்வியக்கும் வையகம் கண்மயக்கும்..!

அந்த மலர்போலும் மங்கைதன்னைக் கண்டெந்தன்
நொந்த நிலையெடுத்து நீயியம்(பு)..! ஆமாம்

கரடிகுளம் வள்ளிமுத்தார் காதலுக்குத் தூதாய்
வரும்நிலை சொன்னவுடன் மைவிழியாள் கண்விரியும்..!

பொய்யில்லை அன்பில் புரட்டில்லை என்பதவள்
மெய்தோன்றும் மாற்றம் மிகத்தெளிவாய்க் காட்டிநிற்கும்..!

வாலைக் குமரியவள் வாள்விழியில் தோயாமல்
ஆலைக் கரும்பெனநான் ஆனநிலை ஆங்குச்சொல்..!

மாலை வருவதற்குள் மான்விழியாள் சூடிவைத்த
மாலை மலரேனும் வாங்கிவா..! நானோ

மனையாளின் பொன்விரலில் மாட்டிவைத்த பொன்செய்
கணையாழி கண்ட இராமன்போல் காத்திருப்பேன்..!

ஏங்கிநிற்கும் என்னுள்ள ஏக்கத்தை தீர்க்கமலர்
வாங்கிவந்தால் காக்கையே உன்னை வரவேற்று..!

நெய்யைக் கலந்தநெல் சோற்றில் பருப்பூற்றிக்
கையிற் பிசைந்து கவளம் பலவைப்பேன்..!

வாழையிலை வைத்து வகைவகைச் சோற்றோடு
நாளையிளம் காலை நனிவிருந்து செய்துவைப்பேன்..!

செந்தழல் வாட்டிச் செழுங்கறி ஆட்டிறைச்சி
பொன்கலம் வைத்துப் புசித்துண்ண நான்தருவேன்..!

வெங்கலக் கும்பாவில் வேகவைத்த இட்டலியை
உண்ணென்று சட்டினியை உட்கலந்து கூரைவைப்பேன்..!

கோழிக் குழம்பும் கொதித்துவெந்த முட்டையொடு
நாழி வரகரிசிச் சோற்றையும் நான்வைப்பேன்

ஆட்டிறைச்சி மாட்டிறைச்சி மீன்நண்டு பன்றியொடு
காட்டிறைச்சி பற்பலவும் காட்டியுனை நானழைப்பேன்..!

வெங்காயம் பூண்டு மிளகொடு சீரகமும்
செம்மையுடன் சேர்த்துப் புளிச்சாறும் செய்துவைப்பேன்..!

எட்டுக் கலம்நிறைய எல்லா உணவமைத்துத்
தொட்டுண்ணக் கூட்டும் துவையல் பலசமைத்து

அன்பும் கலந்தமைத்த ஆசை விருந்திதுவாம்
துன்பம் விலக்கியென்றன் தூய உளத்தோடு

காகாகா என்றழைப்பேன் காக்கை விருந்துண்ண
வாவாவா என்றழைப்பேன் வள்ளிமுத்து செய்விருந்தால்..!

வாயும் வயிறும் நிரம்பியுன்றன் கூட்டமெல்லாம்
நோயும் நொடியும் விலகிக் களிப்புடன்

நூறாண்டு நூறாண்டு வாழ்க நுவலுதமிழ்
சீராண்ட தன்மைபோல் சேர்ந்து..!

தூது முற்றும்...!

முருகாதலம் - காரிகை

பகுதி – 2
பைந்தமிழ்ச் செம்மல்
தமிழகழ்வன் சுப்பிரமணி

வழிபடும் ஆர்வலர் வாழ்வுக்(கு) அணியென வாய்ப்பவனே!
விழிபட வேண்டி விருப்பொடு நின்றேன் விளைப்பவனே!
அழிபடல் இன்றி அகிலத்தார் உள்ளத்(து) அடியிருந்து
செழிபட வேண்டும் இயற்கைவே ளாண்மை சிறந்துலகே! 11

சிறந்து விளங்கவென் சிந்தனைக் குன்றன் றிருவருளைத்
திறந்து விடுக சிறுதுளி யேனும் செவியுணரும்
வறந்திரு காலம் வரந்தந் தருளும் வடிவழகா!
திறந்தந் தருள்க செயலறி யேனிச் சிறியவனே! 12

சிறுபரு வத்திருந் தென்னுடைச் சிந்தை செதுக்கிவழி
உறுபரு வத்தே உடையன வாக்கி ஒளிர்பவனே!
உறுசெயல் யாவும் உயருளச் சூழ்ச்சியில் ஓங்குதலுக்(கு)
அறுமுக வேலா! அருள்தரும் வேளா! அருமணியே! 13

மணிமா மயிலினில் மாவுல கெல்லாம் வலம்வரவே
கிணிகிணி கிண்கிணி யென்றொலி கேட்டுக் கிளர்ந்தெழுவேன்
அணிமொழி யாளின் அகத்தைக் களவுசெய் ஆருயிர!
கணிநீ யெனவழி காட்டிக் கனிதலின் கள்ளமிலேன் 14

கள்ள மிலாது கரும்பாய் இனிக்கக் கடத்தியுமிவ்
வுள்ளம் படும்பா(டு) உணர்வு படும்பா(டு) உணர்ந்தனையோ
கொள்கை முரணால் கொளாது நடக்கும் குடிமையினைத்
தெள்ளிய பாதையில் தேற்றி அருளுக தென்னவனே 15

தென்மொழி யானே திறலுடை யானே திருக்குமர!
இன்மொழி யாலுனை ஏத்தி மகிழ இருள்விலக்கும்
நன்மொழி யானே நலம்வேண் டினனே நயந்தியைந்த
பின்மொழி வேறு பிறக்குமோ நாவில் பெருமையனே 16

பெருங்குழப் பத்தைப் பெயர்த்து விழச்செய் பெருந்திறனை
அருளுக வேந்தே அருவி யெனுநின் னருள்விழியால்
பெருந்திர ளாகப் பெருந்திற லோடு பிணக்குடையார்
வருவது கண்டவர் தோள்கள் வருந்தப் பொருதவனே! 17

பொருப்பினைக் காக்கும் பொறுப்புடை யோனாய்ப் பொருந்தியகம்
விருப்புற் றமர்ந்து வினைதீர்த் தருளி விளைவளிக்கும்
ஒருதனிச் செம்மல் உயர்தமிழ்ச் செல்வன் உளங்கனிந்த
அருந்தவச் சேயோன் அமர்க்களம் வென்றான் அமரருக்கே 18

அமர முனிவர்தம் அல்லல் அகற்றி அவனியிலே
தமராய் வருவாரைத் தாங்கி அருளுந் தமிழவனே!
உமது கழனாடி ஊக்கந் தனைத்தேடி ஓடிவந்தேன்
எமது வழக்கை எடுத்தருள் வாயே எழிலவனே! 19

எழீஇ லெனுஞ்சொற்(கு) இலக்கண மாய இறையவனே
பொழீஇ லமர்ந்தாயைப் போற்றிக்கொண் டோடி வருபவர்தம்
இழீஇ நிலைமாற்றி இன்பெ னமுதூட்டி ஏற்றவரைத்
தழீஇக் கொளுந்தேவே! தாம்நினைப் பாரோ தலையெழுத்தே! 20

(தொடரும்)

மனக்கண்ணாடி

கவிஞர் இரா. இரத்திசு குமரன்

பெயர்ப்பலகையில் உயர்தர சைவ மற்றும் அசைவ உணவகம் என்று பொறிக்கப்பட்ட கட்டிடத்திற்குள் நந்தாவும் அவனுடைய நண்பன் ராஜீவ்காந்தியும் நுழைந்தார்கள். வாடிக்கையாளர்கள் எப்பொழுதும் வந்து செல்லக்கூடிய பரபரப்பான உணவகம்தான் அது. உணவு ஆர்டர் எடுப்பதிலும் உணவைக் கொண்டுவந்து டேபிளில் அலங்கரிக்கவும் வைட்டர்ஸ் பிஸியாக இருந்தனர். ஒவ்வொரு டேபிளிலும் நான்கு இருக்கைகள் எனப் பத்து டேபிள்களுக்கு நாற்பது இருக்கைகள் இருந்தன. ஒவ்வொரு டேபிள்களிலும் பேச்சு சத்தம் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தது. மீன், காடை, கோழி, ஆடு, மாடு எனப் பாகுபாடு பார்க்காமல் அனைத்தும் கிடைக்கும் இந்த சமத்துவ உணவு விடுதிதான் அந்தப் பகுதியில் மிகவும் பிரபலமானது. பேருந்து நிலையத்திலிருந்து தள்ளி இருந்தாலும் உணவு பிரியர்கள் நடந்து வந்துகூட அந்த உணவகத்தில் சாப்பிட்டுப் போவார்கள். அறையின் இடது புறம் நடுப்பகுதியில் உள்ள ஒரு டேபிளில் இரண்டு இருக்கைகள் காலியானதும் பேருந்தில் இருக்கைக்கு இடம் பிடிப்பதுபோல் வேகமாய்ப் போய் அமர்ந்தனர் எதிர் எதிரே நந்தாவும் ராஜீவும்.

"நீ என்ன சாப்பிடற?" நந்தா தன் நண்பனைக் கேட்டான்.

"எனக்கு சாம்பார் சாதம் போதும். நேத்துதான் வீட்ல நான்வெஜி சாப்பிட்டேன் ". பசி எடுக்கவில்லை மூன்று வேளையும் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற சம்பிரதாயத்துக்காக சாப்பிடுபவன் போல பதில் அளித்தான் ராஜீவ்.

"இங்க காடை நல்லா இருக்கும். ஒன்னு சைடு டிஷ் மாதிரி தொட்டுக்கோ." நந்தா ஒரு தட்டில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த இரண்டு டம்பளர்களை நிமிர்த்தி வைத்துக்கொண்டே பரிந்துரைத்தான்.

"ஹே... அத பாக்கவே பாவமா இல்ல? குட்டி பேர்ட்ஸ். அத எப்படி சாப்பிட மனசு வருது உங்களுக்கெல்லாம்."? இறக்கும் குஞ்சுக்காகப் பரிதாபப்படும் தாய்ப்பறவையின் முகத்தைப் போல அவன் முகம் உணர்வுகளை வெளிப்படுத்தியது.

"நீ பழக்கப்பட்ட பிராணியோட கறி சாப்பிடும்போது உனக்கு எப்படி மனசு வருதோ அதே மாதிரி தான் மக்களுக்கு அவங்கவங்க பழக்கப்பட்ட பிராணியை சாப்பிடும் போது மனசு வருது." சிறு புன்னகையுடன் இரண்டு தோள்பட்டைகளையும் மேலே தூக்கி அசைத்து சாதாரணமாக கூறினான்.

ம்ம்ம்ம்... என்று தலையை அசைத்துக்கொண்டு "நம்ம உணவு நம்ம கேரக்டர வடிவமைக்கறது இல்லனு தெரியும்.

பியூர் சைவமா இருக்கலாம். பட் அதனாலே செயலும் சைவமா இருக்கும்னு சொல்லிட முடியாதுல?" எனத் தானக்குத்தானே இராஜீவ் பேசிக் கொள்வதுபோல் மெதுவாகப் பேசினான். அதனால் அது யாருடைய காதிலும் விழவில்லை.

அவர்கள் இருவருக்கும் ஆர்டர் செய்த உணவு பரிமாறப்படுகிறது. உணவு உட்கொண்டிருக்கும் சமயத்தில் இராஜீவ் நந்தாவிடம் கேட்டான். "நீ ஏதோ ஆர்ட்டிகள் எழுதப் போறதா சொன்னியே?" டாபிக்கை மாற்றினான் இராஜீவ்.

"தப்பு செய்யறவங்க மனநிலை எப்படி இருக்குங்கிறத பத்தி ஆராய்ச்சி கட்டுரை எழுத ஆசை. ஆனா இத யார வச்சி ஆராய்ச்சி செய்யறது. யார்கிட்ட போய் நாம கேட்க முடியும். குற்றம் செஞ்சவங்க யாராகிலும் இருந்தாங்க அப்படின்னா நீ சொல்லு நாம ஒரு இண்டர்வியூ மாதிரி வச்சுப் பேசலாம்." சீரியசாக நந்தா தன் நினைப்பை வெளிப்படுத்தினான்.

“எனக்கு அந்த அளவுக்கு பழக்கமில்லை. நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா. பேசாம நீயே குற்றவாளியாக முயற்சி பண்ணு. அப்புறம் உனக்கு எழுதுறதுக்கு ரொம்ப ஈசியா இருக்கும்." நக்கலாகச் சிரித்து கொண்டே சொன்னான் இராஜீவ்.

“நான் அதுமாதிரி குற்றம் ஏதும் செய்ய மாட்டேன். தப்பு எதுவும் செய்யுறது இல்லையே." தீர்க்கமான குரலில் ஆணித்தரமாக அடித்துக் கூறினான் நந்தா.

அவன் சற்று வேகமாக அடித்து விட்டான் என்பது போல. அவனுக்கு பக்கத்தில் இருந்த நான்கு பேரில் இரண்டு பேராவது அவனை உற்று நோக்கியே இருந்தனர்.

சிறிது நேரத்தில் நண்பர்களின் மதிய உணவு முடிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பிறகு சந்திப்பதாக சொல்லிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினார்கள்.

ஒரு வாரம் கடந்தது. மதிய உணவு முடித்துவிட்டு இளைப்பாற ஓய்வு எடுப்பதற்காக நந்தா வீட்டிலேயே இருந்தான். தன் வீட்டில் காலிங்பெல் சத்தம் ஒலித்தது. யார் என்று அவன் எழுந்து திறந்து பார்த்தான். தன் வயதை ஒத்த ஓர் ஆள் நின்று கொண்டிருந்தான். அயர்ன் போட்ட முழுச்சட்டை வெளிர் இளம் சிவப்பு நிறத்தில் டக் இன் செய்து இருந்தது. கருப்பு பெல்ட் அணிந்திருந்தான். கால் சட்டையின் நிறம் சரியாகச் சொல்லிவிடும் அளவுக்குப் பளிச்சிடவில்லை. சட்டை பாக்கெட்டில் ஒரு பால் பாயிண்ட் பேனா இருந்தது.

“மே ஐ கம் இன் சார்?" என்று அந்த மனிதன் அனுமதி கேட்டான்.

"வாங்க. நீங்க யாரு? என்ன வேணும்?" என்று இயல்பான தோரணையில் விசாரித்தான் நந்தா.

"சார், நான் உங்கள பார்க்கத்தான் வந்தேன். உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்."

"ம்ம்ம் சரி உள்ள வாங்க" என்று தனது அறைக்குள் அழைத்தான்.

"நீங்க தப்பா நினைக்கலனா உங்கக்கிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லலாமா?" சற்றுத் தயக்கத்துடன் அந்த திடீர் விருந்தாளி கேட்டான்.

"தாராளமாக சொல்லுங்க. நான் தப்பா நினைக்க மாட்டேன்." பெருந்தன்மை முன் பின் தெரியாதவர்களிடம் இயல்பாக வருவதை நந்தா உணர்ந்தான்.

"போன வாரம் நீங்க ஒரு ஹோட்டலுக்கு உங்க பிரண்டு கூட சாப்பிட வந்தீங்க இல்லையா? அப்போது நீங்க பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். குற்றவாளிகளைப் பற்றி நீங்க எழுதறதுக்கு ஆசைப்படுவதாகப் பேசிட்டு இருந்தீங்க இல்லையா..." சிறுகுழந்தை குழைவதுபோல தொடர்ந்துகொண்டே இருந்தான் வந்தவன்.

"ஆமாம். உண்மைதான்."

"அப்படியென்ன வித்தியாசமான ஒரு விருப்பம் உங்களுடையது" எனக் கேட்டுவிட்டு, பதிலை உடனே எதிர் பார்க்காதவன் போல் அருகில் இருந்த நாற்காலியை இழுத்து அதில் அமர அனுமதி கேட்டான் அந்த மனிதன்.

“ஐ ஆம் சாரி. ஏதோ ஞாபகத்துல உங்கள நிக்க வச்சே பேசிக்கிட்டு இருந்துட்டேன். வெரி சாரி. தாராளமாக உட்காருங்க" கையை நாற்காலியின் திசையில் காண்பித்தான் நந்தா.

"நான் மனிதர்களின் உணர்வுகளைப் பற்றி எழுதுவதில் விருப்பம் உடையவன் ஒவ்வொரு மனிதனும் தவறு செய்கிறான். குற்றங்கள் நிகழ்கின்றன. அவன் திருந்த வேண்டும். மேலும் குற்றம் செய்யும் மனிதனின் அணுகுமுறைகளை ஆராய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம் தான். " யாரும் கொண்டிராத விசித்திர விருப்பம் தான் கொண்டிருப்பதாகத் தன்னைத் தனிமைப்படுத்தி நினைத்துக்கொண்டான் நந்தா. பேசும் தோணியும் மாறியது.

"நீங்கள் குற்றம் மற்றும் குற்றம் புரிபவர்கள் உணர்வுகளைப் பற்றி எழுதுவதால் குற்றம் புரிபவர்கள் திருந்துவார்கள் என்று உங்களால் நிச்சயம் கூற முடியுமா?" கேள்வியின் தடிமன் அதிகரித்தது. வந்தவரின் மொழியும் மாறியது.

இந்த இளைஞன் ஏன் இப்படிக் கேள்விகள் கேட்கிறான் என்று ஏதும் புரியாதவனாய் அமைதியாய் பதிலளித்தான் நந்தா.

“எல்லோரும் திருந்திவிடுவார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் தான் திருந்தி விட்டதாக ஏதாகிலும் ஒரு மனிதன் கூறினாலும் அது எனக்கு கிடைக்கும் பெரிய வெற்றிதான்" என்று தீர்க்கமாக கூறினான் நந்தா.

குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? அருகிலிருந்த தண்ணீர்க் குவளையைப் பார்த்துக் கேட்டான் அந்த ஆள். தனது அருகே இருந்த குவளையை நீட்டினான் நந்தா.

மடமடவெனக் குடித்துவிட்டு அமைதியானான் அவன். இருவரும் சற்று நேரம் மௌனம் காத்தனர். ஒருவர் மற்றவர் முகத்தைப் பார்க்க விரும்பாதவர்கள் போல வேறு எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தனர்.

"நானும் குற்றவாளி தான். நானும் தவறு செய்பவன் தான். ஆனால் நான் என்ன தவறு செய்கிறேன் என்று இப்போது நான் உங்களிடம் கூற விரும்பவில்லை. ஆனால் என்னுள் ஏற்படக்கூடிய உணர்வுகளை நிச்சயம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் நீங்கள் அனுமதித்தால்..." அனுமதியைப் பிடுங்கினான்.

"நீங்கள் குற்றவாளியா? குற்றம் செய்தவரா? என்ன குற்றம்? " சற்றுப் பதற்றமான குரலில் கேள்விகள் வெளிவந்தன.

நந்தாவின் முகம் மாறுவதைக் கண்ட அந்த இளைஞன். சிரித்துக்கொண்டே "நீங்கள் பதற்றப்படும் அளவுக்கு அது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை. ஆனாலும் ஒவ்வொரு முறையும் அதைச் செய்யும் போது நான் பல உணர்வுகளை வித்தியாசமாக உணர்கிறேன். அதை யாரிடமாவது சொல்லி விடவேண்டும் என எப்போதிலிருந்தே துடித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அன்று இது பற்றிப் பேசியபோது உங்களைச் சந்தித்து உங்களிடம் இதை நான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன்."

“சரி பேசுங்கள். குற்றம், தப்பு என்று உங்களுக்கு தெரியுது பிறகு ஏன் அதைத் தொடர்ந்து செய்கின்றீர்கள் ?"

"அதுவும் சேர்ந்துதான் எனது வாழ்க்கை என்றாகிவிட்டது அதை அவ்வளவு எளிதாக என்னால் விட்டுவிட முடிவதில்லை."

"அதை நீங்களாகத்தான் தேர்வு செய்தீர்கள் அல்லவா?"

"அது அப்படியே நிகழ்ந்தது அதை நான் பற்றிக்கொண்டேனா அல்லது அது என்னைப் பற்றிக் கொண்டதா? எனத் தெரியவில்லை." நாற்காலியின் வலது கையின் நுனியில் தன் வலது உள்ளங் கையால் தட்டினான்.

"அதை விடுவதாக உத்தேசம் இருக்கிறதா?" நந்தாவின் விரிந்த கண்கள் கேள்வியின் முடிவில் சுருங்கின.

"தெரியவில்லை. எதிர்காலத்தில் விட்டுவிட வேண்டும் என்று தோன்றுகிறது" கண்கள் தொடக்கத்தில் சுருங்கி இறுதியில் அகலமாக விரிந்தன.

"அப்படியானால் நல்லதுதான்." மூச்சுக்காற்று முழுமையாக உள் இழுத்து வெளியில் விட்டான் நந்தா.

"நீங்க அன்னைக்கு ஹோட்டல்லே பேசியதிலிருந்து எனக்குள் ஒரு பெரிய குழப்பம் உண்டானது . உண்மையில் உங்க வாழ்க்கையில நீங்க எந்தத் தப்பும் செஞ்சது இல்லையா ?" பேசும் தோணி இயல்பானது.

"நான் அப்படி எந்தப் பெரிய தப்பும் செஞ்சதா எனக்கு நினைவு இல்லை. என் மேல எந்தப் புகாரும் வந்ததில்லையே." பதிலும் இயல்பானது.

"அப்படிங்களா சரி.. சரி..

என்னைப் பற்றி நீங்க மத்தவங்கக்கிட்ட சொல்லுவீங்களா? நம்முடைய சந்திப்பு சீக்ரெட் ஆகவே எப்போதுமே இருக்கணும்னு நினைக்கிறேன். நீங்கள் எனக்கு வாக்குறுதி கொடுக்க முடியுமா?"

"நிச்சயமா... நீங்க என்ன நம்பலாம்."

தன்னிடம் இருந்த செல்போனை எடுத்து அதில் குறுஞ்செய்தி வந்திருப்பதுபோல் அதை வாசிக்க ஆரம்பித்தான் அந்த ரகசிய மனிதன் . தன் முகம் மாறியது. " ஒரு நிமிஷம் இருங்க சார்." போன் செய்தான். "என்ன நிஜமாவா? சரி இன்னும் ஒன் அவர்ல பஸ் ஸ்டாண்ட்ல இருப்பேன். அங்க வெயிட் பண்ணு."

"இது நான் நடக்கும்னு நினைச்சேன். சாரி சார் நான் இப்ப கிளம்பனும். நான் உங்களைப் பிறகு முடிஞ்சா வந்து பார்க்கிறேன் சார் . ஒரு மணி நேரத்திற்குப் பிறகு படிங்க சார் ". ஒரு கடிதத்தை நந்தாவின் கையில் திணித்துவிட்டு விர்ரென்று வெளியே சென்று விட்டான்.

ஒரு மணி நேரம் கழிந்தது. பேப்பரைத் திறந்து பார்த்தான் நந்தா. "மன்னித்துவிடுங்கள். இனி உங்களைக் காண வரமாட்டேன். அதனால் சில விஷயங்களைக் கடிதத்தில் சொல்கிறேன். சில குற்ற உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பதே நல்லதுதான். எல்லா குற்றங்களையும் தவறுகளையும்ஒத்துக்கொள்ளும் மனிதன் இதுவரையில் பூமியில் வந்ததாக எனக்கு தெரியவில்லை.எல்லா உணர்வும் எல்லோருக்கும் பொதுவானதுதான்.இது எனக்குத்தான் என எடுத்துக்கொள்ளவோ, இது எனக்கானது இல்லை என ஒதுக்கி விடவோ யாராலும் முடியாது. என்னுடைய குற்றங்களை உங்களிடம் முழுமையாக வெளிப்படுத்த முடியாது என எனக்குத் தெரியும். ஐம்பது பைசா மிட்டாயைக் கடையில் திருடினேன். சொந்த வீட்டிலே உண்டியல் உடைத்தேன். இப்போது அதைப்பற்றி நினைத்துச் சிரிக்கிறேன். பருவத்தில் பாலின ஆராய்ச்சி கொண்டேன் . அது இயல்புதானே எனத் தேற்றிக் கொண்டேன். பெற்றோர்களிடம் கோபமாய்ப் பேசியுள்ளேன் . அவர்கள் மறந்துவிட்டனர். ஆனால் என்னால் முடியவில்லை. சிலரிடம் பொய் பேசியுள்ளேன். தவிர்க்க முடியவில்லை என்பதனால்... வீடுகளில் புகும் பாம்புகள் பலவற்றைக் கொன்றுள்ளேன். அப்போது வேறு வழி இல்லை என்பதால் எனக்கு வலிக்கவில்லை. இன்னும் பல இதுபோன்று நம் வாழ்வில் நடந்திருக்கும். குற்றங்களை நான் நியாயப்படுத்தவில்லை. ஏனெனில் பெரிய குற்றங்கள் திடீரென நடந்துவிடலாம். ஆனால் குற்றம் செய்யும் உணர்வு தானாக முளைத்துவிடுவதில்லை. நல்லது செய்யும் உணர்வும் அதே போலத்தான். இந்தக் கடிதம் என் நினைவாக எப்போதும் வைத்திருங்கள்.

நன்றி
இப்படிக்கு,
****

பெயர் இருக்கவேண்டிய இடத்தில் கையெழுத்து இடப்பட்டிருந்தது. பெயர் புரியவில்லை. நந்தா அதைத் தெரிந்துகொள்ள மெனக்கெடவில்லை. அலமாரியின் கண்ணாடி முன் நடந்து வந்துவிட்டிருந்தான் நந்தா. அதில் இரண்டு முகங்கள் தெரிவதைக் கண்டு அமைதியானான். நண்பனுக்கு போன் செய்து கேட்டான் "ஹலோ ராஜீவ் ... நல்லத அதிகமா செய்யுற ஆளுங்க உனக்குத் தெரிஞ்சா சொல்லேன். அவங்களப் பத்தி எழுதலாம்னு தோணுது ".