'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 14, 2021

நுளம்பு (கொசு) சூழ் உலகு.-

பைந்தமிழ்ப் பாமணி 
 சரஸ்வதி பாஸ்கரன்

உயிர்கொல்லும் நுளம்பழித்து வாழ்வினிலே என்றும்
    உயிரான இளந்தளிரைக் காத்திடுவோம் வாரீர்
பயிராகும் முன்னருமே கருகுகின்ற பாவம்
     பசுந்தளிரைப் பக்குவமாய்ப் பாதுகாத்தல் வேண்டும்
கயிர்கொண்டே இழுக்கின்ற எமனிடமும் நாமும்
     காப்பாற்ற வேண்டுமென்றே வேண்டுகின்றேன் நாளும்
உயிரெல்லாம் செத்துப்போய் இவ்வுலகில் என்றும்
     உறவுகளும் ஒப்பாரி வைப்பரிங்கே காண்பீர் !

கொஞ்சுகின்ற பிள்ளைகளின் கதியதுவும் பாரீர்
     கோலமயில் தாயவளின் கண்ணீரால் நாமும்
வஞ்சிக்கப் படுவதுவும் நிலைதானோ ஈங்கே
     வரமான வாழ்க்கையுமே இல்லைதானோ நமக்கே
அஞ்சனாவின் நிலைதன்னை அறிவோமே நாமும்
    அழுதாலும் தொழுதாலும் மீண்டிடுமா வாழ்வு
பஞ்சுபோன்ற பாலகரை இழந்தவர்கள் எல்லாம்
    பரிதவித்தல் பார்த்திருத்தல் கூடிடுமோ சொல்வீர் !

விழிப்படைவீர் எல்லோரும் ஈங்கின்றே கண்டு
    வியனெனவே தளிர்களையும் காப்பாற்ற ஒன்று
வழிதேடி நிலவேம்பின் சாற்றினையும் தேடி
    வாழ்விற்குத் தந்திடுதல் முறைதானே ஓர்க.
விழியாகக் குழந்தைகளைப் பேணிடுதல் வேண்டும்
    விலகாதும் அவர்நலனைக் காத்திடுதல் வேண்டும்
பழியில்லாச் சமுதாயச் செயலன்றோ இஃதும்
    பக்குவத்தின் மேன்மையதைப் புரிவீரே நீங்கள்

உதிர்கின்ற தளிர்களையும் காத்திடுவீர் சேர்ந்தே
     உதிரத்தில் நுளம்பழித்துப் பேணிடுவீர் சேர்ந்தே
கதிராகும் காலத்தில் பயிர்காத்தல் நன்றாம்
    கடமையென்றே எண்ணுதலும் அறிவீரே திண்ணம்
மதியிழந்து தவிக்காதீர் மண்ணுலகில் என்றும்
    மரணங்கள் நோய்நொடியால் வேண்டாமே என்றும்
விதியெனவே எண்ணாதீர் மானிடரே நீங்கள்
    விரைந்திடுவீர் எல்லோரும் நலன்நோக்கி வாழ்க !

No comments:

Post a Comment