'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 14, 2021

காசு பணம் எதற்கு?

 காசு பணம் எதற்கு?


*********************

பறவைகளின் ஒற்றுமையைப் பார்க்கும் வேளை

படம்பிடித்து முகநூலில் பதிவர். ஆனால் 

உறவுகளின் கட்டமைப்பை ஒதுக்கி விட்டு

ஒண்டியென வாழ்வதற்கே ஊக்கம் கொள்வர்

சிறகடித்துப் பறப்பதற்கே சிந்தை தன்னில்

சிற்றின்ப வானத்தில் சேர்ந்து கொள்வர்

நிறம்மாறும் பச்சோந்தி நிலையில் நின்று 

நிதம்மாறும் குணமொன்றே  நெஞ்சில் வைப்பர்.

**

சுயநலத்தின் வழிசெல்ல சொகுசு வாழ்க்கை

சுதந்திரமாய் உள்ளதென்று சொல்லு வார்கள்

வியத்தகுவா னந்தபூக்கள் விளைந்து வாசம்

வீசுவதாய் வேறுசொல்லு வார்கள். மண்ணில்

பயமிகுந்த சூழலொன்று பாய்ந்து வந்து

படபடப்பை யூட்டுகின்ற பீதி வந்தால்

தயக்கமற்று உறவுகளைத் தாவிச் சென்று

தஞ்சமென்று கால்வீழ்ந்து தாங்கக் கேட்பர்.


**

விறகாலே எரிந்தோயும் வேட்கை கொண்டு

விளையாட்டாய் வளர்ந்துவிட்ட வெற்றுத் தேகம்

மறவாமல் ஒருநாளில் மண்ணில் சாயும்

மரபோடு இவ்வாழ்க்கை மறைந்து போகும்

திறவாமல் மனக்கதவை திடமாய்ப் பூட்டித்

திரிகின்ற கடும்போக்குத் தீயை மூட்டிப்

பிறவிக்குப் பயனற்றப் பேராய் வாழப் 

பிடிவாத மென்கின்றப் பீடை யேனோ?

**

எரிகின்ற தீபமென இருந்து நாளும்

இருளென்ற பேயகற்றி இடரும் நீக்கித்

திரிந்திட்ட மகிழ்ச்சிக்குத் தீமை செய்து

திக்கெட்டும் பதைபதைப்பைத் தேக்கி வைக்கத்

தெரியாத நோயொன்று தீண்டித் தீண்டித்

தினந்தோரும் பலபேரைத் தீர்க்கும் வாழ்க்கை

கரிகின்ற வேளையிலும் கருணை யற்று

கண்மூடிக் கிடப்பதற்கேன் காசு பணமோ?

**

மெய்யன் நடராஜ் 

No comments:

Post a Comment