'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 14, 2021

பாரதி..சமுதாயச் சாரதி

ஓசூர் மணிமேகலை

அறம்பாட வந்துதித்த ஆதவனாய்க் கண்டோம்!
   அகிலத்தைத் தன்கவியால் மாற்றியநற் தொண்டன்!
இறவாத புகழதுவைப் பெற்றிட்ட பேறே!
   இவ்வுலகில் புதுமைகளைப் புகுத்திட்ட வேரே!
திறமான உணர்வுகளைத் தீரமுடன் நெஞ்சில்
   திடமாகப் பதித்திட்ட வீரகவி நீதான்!
நிறம்மாறும் பூக்களல்ல நீயளித்த பாக்கள்!
   நிலையாக உள்ளத்தில் கனல்மணக்கும் பூக்கள்!

விடுதலையை உன்போலே விளம்பியவர் இல்லை!
   வீரத்தின் விளைநிலத்தில் விதைத்தாயே சொல்லை!
இடுகின்ற ஆணைகளோ இலக்கினதன் எல்லை
   இனபேதம் ஒழித்தாலே அச்சமொன்று மில்லை!
சுடுகின்ற சொல்லாலே சுதந்திரத்தீ மூட்டி
  சுற்றிவரும் பகைவிரட்டி வெற்றியைநீ காட்டி
தொடுத்திட்டக் கவிப்பூக்கள் அனலாக வீசி
  தொடர்ந்திடுமே காலமெல்லாம் வரலாற்றைப் பேசி!

பாரதியாம் தீப்பிழம்பைப் பக்குவமாய் ஓதி
  படைத்திடலாம் புதுமையினை இப்புவியில் யாரும்!
சாரதியாய்ச் சமுதாயத் தேரோட்டி னானே!
   சரித்திரத்தில் வாழ்கின்ற சத்தியமே வாழி!
ஓரணியாய் இணைந்துநாமும் ஒற்றுமையாய் வாழ
   ஒன்றுபடப் பாடியநம் சிந்துகவி வாழ்க!
காரணியாம் என்றுமவன் கருத்தினையே போற்றி
   கனல்பூத்த நெருப்பான கவிதைகளாய் வாழ்வோம்!

No comments:

Post a Comment