'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 14, 2021

இற்றைத் திங்கள் இவரைப் பற்றி

ஆசிரியராகத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு அதற்குள் அடங்கிவிடாமல் ஆன்மீக சொற்பொழிவாளராக, பட்டிமன்ற நடுவராக, தொகுப்பாசிரியராக, வானொலி வருணணையாளராக, எழுத்தாளராக, நனிசிறந்த மரபு கவிஞராக இன்னும் இன்னும் எண்ணற்ற தனித்திறமையின் மூலமாக எட்டுத்திக்கும் புகழ்பல கொட்டிக் குவிக்கும் இருபத்தோராம் நூற்றாண்டின் தவிர்க்க முடியாத மாபெரும் மனிதர்தான், இந்தமாத நமது தமிழ்க்குதிரின் கதாநாயகராக வலம்வரும் ஐயா திருமிகு முனைவர் இரா.மாது அவர்கள்...


இற்றைத் திங்கள் இவரைப்பற்றி அறிந்துகொள்வோம் வாருங்கள்.


நெல்வளமும், நீர்வளமும், பல்வளமும் மிகுத்துச் செல்லும் காவிரிக் கரையோரமான திருச்சிராப்பள்ளி என்னும் ஊரில், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும், பல இளந்தலைமுறையினரைப் பேச்சுக்கலையில் உருவாக்கியவரும் மேனாள் திருச்சி தேசியக்கல்லூரியின் தமிழ்ப்பேராசியருமான இரா.இராதகிருஷ்ணன் அவர்களுக்கும் திருமதி இரா.புவனேஸ்வரி அம்மையாருக்கும் தவப்புதல்வராகப் பிறந்தவர்தான் முனைவர்.இரா.மாது அவர்கள்.


இளம் வயதிலேயே கல்வி கேள்வியில் வல்வராய்த் திகழ்ந்த அவர் தமிழின் மீது ஆர்வம்கொண்டு முதுகலைத் தமிழையும் மேலும் இளங்கலை கல்வியியல் (பி.எட்) பட்டங்களைப் பெற்று திருச்சி உருமு தனலட்சுமி வித்யாலயாவில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.


மேலும் தனது தீராத கல்வி ஆவலால் "கம்ப ராமாயணத்தில் ஒருமைப்பாடு" என்னும் தலைப்பில் ஆய்வு செய்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் (P.hd) பட்டம் பெற்றுள்ளார்.


பட்டிமன்றம், ஆன்மீக சொற்பொழிவு, மற்றும் கவியரங்கம் எனத் தமிழகத்தின் பல பக்கங்களுக்கும் செல்வதோடு மட்டுமல்லாமல் இவங்கை, மலேசியா, பிரான்சு, ஆஸ்திரேலியா எனப் பலநாடுகளுக்கும் சென்று வருகின்றார்.


சபரிமலை ஐயப்பன் கோவில் மகர ஜோதி நிகழ்விலும், ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகதாசி நிகழ்விலும் நேரடி வருணனை செய்தவர்.


மேலும் வானொலி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் சிறப்புரையாற்றிவரும் செந்தமிழாளர்.


இவரின் படைப்புகள் :


@ உள்ளம் கவர்கள்வன் (தொகுப்பாசிரியர்)
@ மகாமகம் 2016
@ இலங்கை கம்பன் விழா மலர்
@ மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேக மலர்
போன்ற நூல்களையும்


மேலும் இதழாசிரியராக "தர்மச்சக்கரம்" என்னும் இதழில் கந்தர் அநுபூதி விளக்கவுரையினை எழுதி வருகின்றார்.


பெற்ற பட்டங்கள் :
திருச்சி தருமையாதீனம் வழங்கிய அருள்நெறி நாவலர் என்ற பட்டமும். அம்பத்தூர் கம்பன் கழகம் வழங்கிய தமிழ்ச்சுடர் பட்டமும், திருத்துறை அறநெறி கழகம் வழங்கிய கம்பன்சீர் பரவுவார் பட்டமும், சென்னை கம்பன் கழகம் வழங்கிய கோதாண்டக்கவுண்டர் நினைவும் பரிசும் குறிப்பிடத் தகுந்தவை.. இவற்றைப் போல் இன்னும்பல இலக்கிய விருதுகளையும்
பட்டம் பெற்ற வாழும் கவிஞராக நம்முடன் வலம்வரும் திருமிகு முனைவர் மாது அவர்களுக்கு பார்வதி என்ற மனைவியும் ஸ்ருதகீர்த்தி, ஸ்வாதி என்னும் இரண்டு புதல்விகளும் உள்ளனர்..


பல்துறை வித்தகராக வளர்ந்து வரும் முனைவர் மாது அவர்கள் மேலும் மேலும் புகழ்பல குவித்துத் தமிழுக்கும் இலக்கியத்திற்கும் இளம்தலைமுறைக்கும் தொண்டாற்றிப் பல்லாண்டு பல்லாண்டு வாழ பைந்தமிழ்ச் சோலையின் வாயிலாகவும், தமிழ்க்குதிர் சார்பாகவும் வாழ்த்தி வணங்குகின்றோம்..!

No comments:

Post a Comment