'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 14, 2021

தவிப்பு

 தவிப்பு


அன்பே உன்னால் ஆசைத் தீயை
அகத்தில் வளர்த்து வாடுகிறேன்-அதை
முன்னே முகத்தில் மலரா வண்ணம்
முடியும் வரைநான் மூடுகிறேன்

புதிதாய் வந்தாய் பூத்துச் சொரிந்தாய்
புதுமை புரிந்தாய் பொன்னிலவே - நீ
எதுவோ செய்தாய் என்னை இழுத்தாய்
இயம்பாய் என்றன் இன்னிசையே

என்றோ ஒருநாள் எங்கோ பார்த்தேன்
எப்படிச் சொல்வேன் கனிமொழியே -அவன்
நன்றே எல்லாம் நாடிய அனைத்தும்
நாளும் நடக்கும் மணிமலரே

வந்தாய் வடிவே வரமே தந்தாய்
வளமாய் வாழ்வோ மென்றிருந்தேன்-
புதுச்
செந்தேன் வடியச் சிலநாள் நின்றாய்
சென்றாய் எங்கோ நின்றிருந்தேன்

உள்ளக் கமலம் உன்னால் தானே
ஊறுந் தேனில் நனைகிறது - அது
பள்ளம் நோக்கிப் பாயும் நீராய்
பாவை உன்னை நினைக்கிறது

தவியாய்த் தவித்துத் தலையும் பழுத்துத்
தனியே கிடந்து மாடுகிறேன் - நீ
தமிழாய் எழுந்து தருவாய் மலர்ந்து
சந்தக் கவிதை பாடுகிறேன்

No comments:

Post a Comment