'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2021

மகிழ்ந்திருப்போம்

பைந்தமிழ்ச்சுடர்
மெய்யன் நடராஜ்

அடுப்பேறிய விறகானது அனலாவது போலே
   அடியோடெமை கரியாக்கிட அடிக்கோடிடும் நோயைத்
தடுப்பூசியை எடுத்தாயினும் தடுத்தேவிட வென்று
   தவித்தேயலை வதுவேயொரு தொழிலானது இன்று
கடுப்பேறிய மனதோடலை யெனவேயிதைத் தந்து
   கரையேறிட முடியாநிலை தனையேநமக் கிட்டு
எடுப்பாரினி நமக்கேதென இறந்தேயழி தற்கு
   இழிவாயொரு பெருநோயினை இறையேன்பரி சளித்தான்?

ஒருநாளிலை யொருநாளிது ஒழிந்தேவிடு மென்றால்
   உயிர்வாழ்வது சுகமேயெனவுளமோடொரு எண்ணம்
வருதேயிதை நிலையாக்கிட வரமாயொரு காலம்
   வருமோவினி யொருபோதிலும் வரலாறென வாழ்வில்
பெருநோயிது பலர்வாழ்வினை பிரியாவிடை செய்து
   பெரிதாகிய தொருசோதனை யிதுமாறிட விட்டு
உருவாகிடு மொருகால மதையேவர மாக்கி
   உயிரோடமை விடுமேயெனி லதுபோதுமெ மக்கே!

வருமோயிலை விடுமோவெனு மனநோயினை தந்து
    வரவானது குறைவாகிட செலவானதை நீட்டி
கருவாடென உயிர்வேரது கரியாகிடச் செய்து
   கரையேறிட முடியாநிலை யதையேதினம் காட்டி
உருவாகிய பிணியாமிது உலகாடிடு மின்றில்
   உறவானதும் பகையாகிட உயிர்வாடுது நாளும்
மருந்தேதெனு மிருந்தாலிதை மறந்தாடிட லாமே
   மறுவாழ்வினை யடைவோமென மகிழ்ந்தேயிருப் போமே!

No comments:

Post a Comment