'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2021

பாலையில் பாடுகிறேன்

பைந்தமிழ்ச்சுடர் 
அபூ முஜாகித்

பாலையில் பாடுகிறேன்
பாடம் படிக்கையிலே உனது
பார்வை படம்பிடித்தேன்
கூடச் சுவரிலெலாம் உனது
கோலம் வரைந்துவைத்தேன்

வேதத் திருக்கையிலும் உனது
பாதம் பணிந்திருந்தேன்
சீதத் தமிழழகே உன்னில்
சிந்தை பறிகொடுத்தேன்

சோலைப் பசுங்கிளியே துயிலும்
சோகக் கதைசொல்லவா
பாலைப் பெருவெளியில் எனது
பாதை தொடர்கதையா

ஆனந்த மோகனமே என்னை
ஆளும் மலர்ச்சரமே
ஏனிந்த மௌனமன்பே என்னை
இன்னலில் வாட்டுவதேன்

மோகனம் பாடுகிறேன் உன்னை
மூச்சிலும் வாங்குகிறேன்
தாகத் துடன்தமிழை என்றும்
தாங்கியே வாழுகிறேன்

சித்திரைக் குயிலெனவே உந்தன்
சித்தத்தில் கூவுகிறேன்
சத்தமிலா திருந்தால் எந்தன்
சங்கதி என்னவென்பேன்

உருளும் விழிகளினால் எழிலாய்
ஓவியம் தீட்டுகிறாய்
அருளுமுன் ஆசியினால் அதிசய
ஆனந்தம் பாடுகிறேன்

பூமழை போலஉந்தன் புதிதொரு
புன்னகை பார்த்திருந்தேன்
பாமக ளோடிவிட்டாய் அதனால்
பாலையில் பாடுகிறேன்

No comments:

Post a Comment