'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2021

இற்றைத் திங்கள் இவரைப்பற்றி

பைந்தமிழ்ச்செம்மல்
உமாபாலன் சின்னதுரை

இலங்கையின் வடபகுதியில் சைவமும் செந்தமிழுஞ் செழித்தோங்கப் பெருஞ்சிறப்புடைத்த பெருநகர் யாழ்ப்பாணம். அந்நகரில் வரலாற்றுப்புகழொடு திகழ்கின்ற முருகன் கோயில் கொண்ட மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சின்னத்துரை உமாபாலன். தமிழும் சைவமும் இருகண்ணெனக் கொண்ட ஆறுமுகநாவலரின் நேரடி மாணாக்கரான உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளையின் (நாவலரின் வழிகாட்டலில் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையின் தலைமையாசிரியராகப் பணிபுரிந்தவர்) வழித்தோன்றலான இவர்,
அரங்க அறிவிப்பாளராக, நாடக எழுத்தாளராக, கவிஞராக, பாடலாசிரியராக, பட்டிமன்றப் பேச்சாளராக அறியப்பட்டவர். இவர் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவராவார்.

1980 – 87ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றிய சின்னத்துரை உமாபாலன், 1987ஆம் ஆண்டு நள்ளிரவுச்சூரிய நாடெனும் நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்ந்திருந்தார். அங்கு லோறன்ஸ்கூக் (Lørenskog) நகரசபையில் தொழில்நுட்பவியலாளராகப் பணிபுரிந்துவரும் இவர், தமிழாசிரியராக, தமிழர் அமைப்புகளின் நிர்வாகியாகத் தமிழ்ப்பணியிலும் ஈடுபாடு காட்டி வருபவர்.

போட்ஸ்பியூர்ட் (Båtsfjord) தமிழ்ச்சங்கம், பின்மார்க் தமிழர் ஐக்கிய முன்னணி, லோறன்ஸ்கூக் தமிழர் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றின் தலைவராக அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தின் லோறன்ஸ்கூக் வளாகப் பொறுப்பாளராக, அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடங்களின் கலைப்பிரிவு இணைப்பாளராகக் கடமையாற்றிய இவர் தற்போது நடேஸ்வரா பழையமாணவர் சங்கம் - ஐரோப்பாவின் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

அண்டம் வலையொளியின் (Andam media) ஊடாகத் தமிழ்ச் சைவம் எனுந்தலைப்பில் தொடர்பதிவுகள் செய்துவரும் இவரது கவிதை நூல்களான தமிழ்ச் சைவம், வாலி காவியம் ஆகியவை விரைவில் வெளியாகவுள்ளன.

நம்முடைய பைந்தமிழ்ச்சோலையின் உறுப்பினரான இவர் சோலையின் பட்டத்தேர்வெழுதிப் பைந்தமிழ்ச்செம்மல் என்னும் உயரிய பட்டம் பெற்றவர்.

இவரது ஆக்கங்கள்:
2011ஆம் ஆண்டு வெளியீடு - மாவை மான்மியம்
(மரபுக்கவிதையிலமைந்த மாவிட்டபுர வரலாற்றுத் தொகுப்பு)

(சாற்றுகவி)

மாவைப் பதிதன்னின் மாணுயர் மக்கள் நலமறிந்து
மாவைக்கோர் மான்மியம் மன்பதை போற்றக் கொடுத்தமைந்த
மாவைப் பதிபிறந்த மாண்பார் உமாபாலன் நம்மனதிற்
காவிற் கனிந்த பழமாய்க் கனிச்சாறாய்க் கூடினனே!
.. .. .. .. ..- பண்டிதர் ம. ந. கடம்பேசுவரன்

2016ஆம் ஆண்டு வெளியீடு - நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள்
(நோர்வேவாழ் தமிழர்களின் வரலாற்றுத் தொகுப்பு 1956 – 2016)


(அணிந்துரை)
பன்னருங் கல்விப் பரம்பரை வந்த
என்னரும் மருகன் மாவைப் பதியின்
சின்னத் துரைமகன் சீர்உமை பாலன்
.. .. ..
செந்தமிழ் கமழும் சீரிய நடையில்
தேனினும் இனிய கவிதைகள் மேவிட
.. .. .. .. .. .. .. .. வெளிவந் ததுவே!
- புலவர் ம. பார்வதிநாதசிவம்

No comments:

Post a Comment