'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2021

சிந்துப் பாடல்களின் சீர்கள்

பாவலர் மா.வரதராசன்.

அன்புடையீர். வணக்கம்.


1.சிந்துப் பாடல்களின் சீர்கள் இரட்டைப்படையில்தான் வரும்....ஒற்றைப்படையில் வராது.

2.வளையற்சிந்து பாடலில் 24 சீர்கள்தாம் வரும். 15 சீர்கள் வரவே வராது.

3. இவற்றையறியாமல் முகநூலில் பிழையாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.(அலைபேசியில் கேட்டது)



"ஐயா....இது சரியா.? நீங்கள் சொல்வது சரியா? " எனப் பைந்தமிழ்ச்செம்மல் மன்னை வெங்கடேசன் என்னைக் கேட்டார்.

முதலிரு கருத்துகள் மட்டும் என்றால் இந்த விளக்கத்திற்கு தேவையேயில்லை. ஆனால், முகநூலில் என்னைத் தவிர வேறு யாரும் கடந்த ஐந்தாண்டுகளில் கற்பிக்கவில்லை என்பதாலும், ஒரு மாணவரின் ஐயத்தைப் போக்குவது ஆசிரியனின் கடமையென்பதாலும் நான் இவற்றிற்கு விளக்கம் சொல்லவேண்டியதாயிற்று.

சிந்துபாடுக என்னும் பயிற்சியைத் தொடங்கும்போதே இவ்வாறான வசவுகள் வரும் என்று எதிர்பார்த்தே ...

""இந்தப் பயிற்சிப் பகுதி புதிதாகப் பாப்புனைவோர் அஞ்சியொதுங்கா வண்ணம் எளிமையாகவும், பாப்புனைய தேவையான குறிப்புகளோடும் தொடரும்.

சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தப் பயிற்சியைக் கொண்டும் கூறப்படுகின்றன."

என்ற முன்குறிப்புடன் வழங்குகிறேன்.

என்சொந்தப் பயிற்சியென்பது அவ்விலக்கணத்தை நான் கற்கப்பட்ட பாட்டையும், பின் ஏற்பட்ட புரிதலையும் உணர்த்தும். அப்புரிதலின்
விளைவாக ஏற்பட்ட தெளிவே என் குழுவில் நான் பாடம் நடத்தும் முறையாகும்.

சிந்துப் பாவியல் நூலைப் படித்தாலோ அல்லது அப்படியே தொடர்ந்தாலோ யாரொருவரும் புரிந்துகொள்ளவியலாது. அதைப் புரிந்து தேர்ச்சிபெற எளிமையும், நல்லாசானும், அவருடைய வழிகாட்டலும் கட்டாயம் தேவை.

சான்றுக்குப் ...

பின்வரும் பகுதியைப் படித்துப் பாருங்கள்.

"சிந்துப் பாடல்கள் தாள அடிப்படையில் அமைக்கப்பட்டு உள்ளதால்தான் மற்ற பாக்களான இயற்பா, சந்தப்பா, வண்ணப்பாக்களுக்கான அசை, சீர், அடி, தொடை, மாத்திரை முதலியன இதற்கு ஒத்துவராமற் போகின்றன.

தாள அடிப்படையில் அமைந்த சிந்துப்பாடல்களில் உள்ள அசைகளையும், சீர்களையும் உணர வேண்டுமெனில் முதலில் தாளத்தையும் அதன் உள்ளுறுப்புகளையும் உணர வேண்டும். தாளம் ஏழு: அவை: துருவம், மட்டியம், ரூபகம், சம்பை, திருபுடை, அட, ஏக என்பனவாகும். இவற்றில்ன் உள்ளுறுப்புகள் மூன்று; அவை: கோல் (இலகு) - சுழி (திருதம்) - அரைச்சுழி (அனுத்திருதம்).

கோல் 1 என்றும், சுழி 0 என்றும், அரைச்சுழி அரைவட்ட வடிவிலும் குறிக்கப்பெறும்.

சுழி இரண்டு எண்ணிக்கையுடையது. அரைச்சுழி ஒர் எண்ண்ணிக்கை உடையது. இவையிரண்டும் எண்ணிக்கையில் மாறாதவை. கோல் மட்டும் இனத்தைப் பொறுத்து எண்ணிக்கை மாறக் கூடியது.

கோலும் இனங்களும் (சாதிகளும்):

மேற்குறித்த ஏழு தாளங்களுக்கும் இனங்கள் உண்டு. அவை மும்மை (திசிரம்), நான்மை (சதுசிரம்), ஐம்மை (கண்ட), எழுமை (மிசிரம்), ஒன்பான்மை (சங்கீரணம்) என ஐந்தாகும். இவற்றின் எண்ணிக்கை முறையே மூன்று, நான்கு, ஐந்து, எழு, ஒன்பது என்பனவாகும்.

ஒரு தாளத்தில் உள்ள கோல் இந்த ஐந்து இனத்துக்குரிய எண்ணிக்கைகளைத் தனித்தனியே பெறும்போது அத்தாளம் ஐந்து வகையாகிறது. இப்படியே ஏழு தாளங்களும் (7 தாளம் x 5 இனம்)= 35 வகையாகும். எடுத்துக்காட்டாகத் திரிபுடைத் தாளம் மும்மை இனமாயின் ‘மும்மையினத் திரிபுடை’ (திசிர சாதித் திரிபுடை) என்று பெயர்பெறும். அதனை ‘1300’ என்று குறிப்பார்கள். இதன் மொத்த எண்ணிக்கை (3+2+2) ஏழாகும். இதே திரிபுடைத் தாளம் நான்மை இனமாயின் நான்மைத் திரிபுடை (சதுசிர சாதித் திரிபுடை) என்று பெயர்பெறும். அதன் குறியீடு ‘1400’ ஆகும். இதன் மொத்த எண்ணிக்கை (4+2+2) எட்டாகும். இப்படியே முப்பத்தைந்து தாளத்துக்கும் கணக்கிட்டுக் கொள்ளவேண்டும்.

வட்டணை (ஆவர்த்தம்)

நான்மை இனத் திரிபுடைத் தாளத்திற்கு நடைமுறையில் ஆதி தாளம் என்று பெயர் வழங்கப்படுகிறது. ஒரு தாளத்தின் முழுநீளம் ஒரு வட்டணை எனப்படும்.

தாளம் போடும் முறை:

கோல் - ஒரு தட்டுத் தட்டி அதற்குரிய எண்ணிக்கை (தட்டுடன் சேர்த்து) எண்ண வேண்டும். சுழி - ஒரு தட்டுத் தட்டித் திருப்ப வேண்டும். அரைச்சுழி - ஒரு தட்டுத் தட்ட வேண்டும்.

சிந்துப் பாடல்களில் பெரும்பாலன ஆதி தாளத்தில் அடங்குமாறு அமைந்துள்ளன. அவற்றைப் பாடும்போது அடியின் முற்பகுதி ஒரு கோலிலும், 14 அடுத்தபகுதி இரண்டு சுழிகளிலும் ‘00’ அடங்குகின்றன. இப்படித் தாளத்தின் ஒரு வட்டணையிலோ, பல வட்டணைகளிலோ ஓரடி அடங்குகிறது.

1 2 3 4

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் . ப ரா சக்தி

5 6 7. 8

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் . . . . .

(அசை நீட்டங்கள் புள்ளிகளால் குறிக்கப்பட்டுள்ளன)

மேற்காட்டிய கோலிற்குரிய நான்கு எண்ணிக்கையில் முதல் அரையடியும், இரு சுழிகளுக்குரிய நான்கு எண்ணிக்கையில் அடுத்த அரையடியும் ஆக ஓர் ஆதிதாள வட்டணையில், இதன் ஓரடி முழுவதும் அடங்குவதைக் காணலாம். எட்டாம் எண்ணிக்கையில் எழுத்துகளே இல்லையென்றாலும் எழாம் இடத்தில் இறுதியாக வரும் அசை எட்டாம் சீராக நீண்டு இசைக்கிறது. இந்த இரண்டு வரிகளும் சேர்ந்து ஓரடி. எனவே இவ்வடியில் 8 சீர்கள் உள்ளன. இதனை எண்சீர்க் கழிநெடிலடி எனலாம். இந்தப் பாடலில் ஒவ்வோரடியும் ஓர் ஆதிதாள வட்டணையில் அடங்குகிறது.

இந்தப் பாடலில் கோடிட்டுக் காட்டியபடி 8 சீர்கள் உள்ளன. ஒற்று நீக்கிய உயிர்நெடில், உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் ஆகிய பதினெட்டு உயிரெழுத்துகள் (சிந்துப்பாடலில் உயிரும் உயிர்மெய்யும் உயிராகவே கொள்ளப்படும்) எட்டு சீர்களாக இசைக்கின்றன.



நண்பர்களே!

இதே முறையில் சிந்து இலக்கணத்தைக் கற்பித்தால் எத்தனை பேருக்குப் புரியும்.? இசைப்பயிற்சி வகுப்புக்குச் செல்வோர்க்கு மட்டுமே புரியும். அதைத்தான் நான் இயல்பாகவும் எளிமையாகவும் வடிவமைத்திருக்கிறேன்.

எப்படி...?

திசிரம் - மும்மை -

சதுசிரம் - நான்மை -

கண்ட - ஐம்மை -

மிசிரம் - எழுமை -

என்பனவற்றை,

மூன்றெழுத்து

நான்கெழுத்து

ஐந்தெழுத்து

ஏழெழுத்து

என்றவாறு எழுத்துக் கணக்கிலேயே புரியவைத்திருக்கிறேன். மேலும் ஒரெழுத்தையே அசையாகக் கொள்வது கற்பவர்க்கு குழப்பமுண்டாக்கும் என்பதால் அவற்றையும் நெறிப்படுத்தினேன்.

இரா.தி. இசையில் பயிற்சியுடையவர் என்பதாலும், இசையில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பதாலும் அவர் இசைநோக்கில் அணுகிய சிந்துப்பாடலை நான் சற்றே எளிமைப்படுத்தினேன். அவ்வளவே. மற்றபடி ...இலக்கணமேதும் இம்மியளவும் மாறாது.

அடுத்து...

சிந்துப் பாடல்களில் இரட்டைப்படையில்தான் சீர்கள் வரும்.ஒற்றைப்படையில் வராது.

ஆம். உண்மைதான்.

வளையற் சிந்து

. இதன் சீர் மும்மை நடையினதாக அமைந்திருக்கும். 1,5, 9, 13, 17, 21 ஆம் சீர்களில் மோனை அமைந்திருக்கும் 7, 11, 15, 23 ஆம் சீர்களில் இயைபுத் தொடை அமைந்திருக்கும்.

காட்டு : 24 சீர் அடி

வாரு மையா வளையல் செட்டி

வளையல் விலை கூறும் - சீர்

மகிழ்ந்து மேகை பாரும் - பசி

வன்கொ டுமை தீரும் - எந்த

மாந கரம் பேர்இ னங்கள்

வகை விபரம் கூறும்.

இப்பாடலை நன்கு நோக்குங்கள்.

23 சீர்கள் தாமே உள்ளன? ஏன் ஒற்றைப்படையில் வந்திருக்கிறது.? அப்படியானால் இப்பாடல் பிழையா?

இல்லை. பாடல் சரிதான். 24 ஆவது சீர் இசைநீட்டமாக அமையும். அஃதாவது 23 ஆம் சீரை இன்னும் இருமாத்திரையளவு நீட்டிப் #பாடிக்கொள்ளவேண்டும். ஆனால் எழுதும் போது அந்த இடத்தில் எந்த எழுத்தும் இருக்காது.

மேற்கண்ட விளக்கத்தை நன்றாகப் பாருங்கள்.

7, 11, 15, 23 ஆம் சீர்களில் இயைபுத் தொடை அமைந்திருக்கும்....

என்ற குறிப்பை நோக்குங்கள். 23 ஆவது சீருடன் பாடல் முடியும். 24 ஆவது சீர் எழுத்தேயில்லா இசைநீட்டம் மட்டுமே.

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் /// என்ற பாடலையும் அதன் விளக்கத்தையும் பார்க்க. அதிலும் 8 ஆவது சீரில் எழுத்தேயில்லா இசைநீட்டம் மட்டுமே வரும்.

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் . ப ரா சக்தி

5 6 7 8

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் . . . . .

(அசை நீட்டங்கள் புள்ளிகளால் குறிக்கப்பட்டுள்ளன)

எனவே, பயிற்சியின் எளிமைக்காக அந்த எழுத்தில்லாச் சீரைப் பற்றி நான் குறிப்பிடவில்லை.

இதனைச் சிந்துப்பாவியல் கூறுவதைக் காண்க.

"தனிச்சொல் முன்னரும் அரையிடை இறுதியும்

அடியின் இறுதியும் அமையும் அசைகள்

இரண்டிறந் திசைத்தலும் இயல்பா கும்மே."

(சி.பா. 10)

கருத்து : சிந்துப் பாடல்களில் தனிச் சொல்லுக்கு முன்னரும் அரையடியின் இறுதியிலும், அடியின் இறுதியிலும் அமைந்திருக்கின்ற அசைகள் இரண்டு அசை நீளத்திற்கு மேல் நீண்டு இசைத்தலுமுண்டு

காட்டு : ஓர் ஆதிதாள வட்டணையில் அடங்கும் அடி

ஓம் சக் தி ஓம் சக்தி ஓம் . ப ரா சக் தி

ஓம் சக் தி ஓம் சக்தி ஓம் . . . . .

(அசை நீட்டங்கள் புள்ளிகளால் குறிக்கப் பட்டுள்ளன.)

எட்டாம் எண்ணிக்கையில் எழுத்துகளே இல்லை என்றாலும் ஏழாம் இடத்தில் இறுதியாக வரும் அசை எட்டாம் சீராக நீண்டு இசைக்கிறது. இந்த இரண்டு வரிகளும் சேர்ந்து ஓரடி.

(சி.பா. 28 இன் விளக்கம்)



அடுத்து...

15 சீர்களில் வளையற்சிந்து அமையாது...என்பதற்கான விளக்கம்.

"வளையல் வாணிகம் வழங்கும் பாவகை

எண்சீர் அடிகள் இரண்டினும் மூன்றினும்

தனிச்சொல்லும் இயைபும் தான்மிகப் பெற்றே

ஓரடிக் கண்ணியாய் பேரளவியன்று

மும்மையின் விரைவில் செம்மையாய் நடக்கும்" (சி.பா. 37)


இந்நூற்பாவில்

எண்சீரடிகள் இரண்டினும், மூன்றினும்

என்னும் அடியைக் காண்க.

எண்சீரடிகள் இரண்டு - 16 அடிகள்

எண்சீரடிகள் மூன்று - 24 அடிகள்.

எனவே, 16 சீர்களிலும் வளையற்சிந்து அமையலாம் என்பதை அறிந்துகொள்க.

என்னுடைய பாடத்தில் 15 சீராகக் குறிக்கப்பட்ட ஈற்றசையை எழுத்தில்லா இசைநீட்டமாகப் பாடவேண்டும். வாருமையா வளையற்செட்டி பாடலின் 23 ஆவது சீரை நீட்டிப் பாடுவது போல்.

அவ்வாறாயின் என்னுடைய பாடல் 16 சீர்கள் கொண்டது தானே.?

அன்றியும்,

வாரு மையா வளையற் செட்டி // என்ற பாடலை என் பயிற்சியின்படி 15 சீர்களாகக் காட்டலாம். (எளிமையாகப் புரியும்படி)

1. வாருமையா

2. வளையல்செட்டி

3. வளையல்விலை

4. கூறும் -

5. சீர்

6. மகிழ்ந்துமேகை

7. பாரும் -

8. பசி

9. வன்கொடுமை

10.தீரும் -

11. எந்த

12. மாநகரம்

13. பேரினங்கள்

14. வகைவிபரம்

15. கூறும்.

இந்த முறையில்தான் என் பயிற்சிகள் அமைகின்றன.



அல்லது

என் பாடலை 24 சீர்களாகக் காட்ட முடியும்.

1. சதியெ

2. னவே

3. பிரித்த

4. னரே

5. சாதி

6. யினை

7. இங்கு -

8. மதச்

9. சாய்க்க

10.டையின்

11. பங்கு -

12. துயர்

13. சாய்த்தி

14. டவே

15. தங்கு -

16. நாம்

17.தகர்த்தெ

18.றிய

19.பலத

20.டைகள்

21.தழைத்தி

22.ருக்கு

23.மிங்கு.

24 ........

(24ஆவது சீர்க்குப் புள்ளிகள் வைக்கப்பட்டிருக்கும்)




ஒரு கணித ஆசிரியர் 22×10 என்பதை,

2×10 = 20

2×10= 20

--------

220

--------

என்று மாணவர்க்குச் சொல்லிக் கொடுப்பார்.

இன்னொரு ஆசிரியர் சற்றே எளிதாக, பத்தில் இருக்கும் சுழியத்தை 22 உடன் சேர்த்து

22×10= 220 என்று சொல்லிக் கொடுப்பார்.

வழிமுறை வேறுவேறு. ஆனால் பயனோ ஒன்றே.



நன்று...நண்பர்களே!

ஐயங்கள் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்.

தமிழன்புடன்

மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

No comments:

Post a Comment