'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2021

ஆசிரியர் பக்கம்

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து. (குறள் 551)

"குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்" என்கிறார் ஐயன்.

மிகக்கொடிய நோய்த்தொற்றால் இந்தியா அழிந்துகொண்டிருக்கிறது. எங்குப் பார்ப்பினும் பிணக்குவியல். பிணங்களைக் குப்பையை வீசுவதுபோல் ஆற்றில் வீசும் இழிநிலை. கணக்கின்றி எரிக்கும் பிணங்களன்றி இவை எரிக்கவியலாமல் வீசிச்சென்ற கொடுமை.

ஒரு மாநில. முதல்வர் மாட்டுக்குப் பரிவுகாட்டி மாந்தரை மறக்கிறார். இன்னொருவர், யாகம் செய்கிறார். இன்னொருவரோ பாதிப்பேருக்கு அறிவியல் மருத்துவமும், பாதிப்பேருக்கு காயத்ரி மந்திரமும் சொல்லிச் சோதனை செய்கிறார். இவர்களையும், மக்களையும் வழிநடத்திக் காப்பாற்ற வேண்டிய அரசன் ஆட்சி செய்யும் கட்டடம் கட்டிக் கொண்டும், யோகாசனம் செய்துகொண்டுமிருக்கிறார்.

ஆனால் இதுநாள் வரை மக்களுக்காக இறங்கி வேலை செய்யாமல் காணொலி மூலமே ஆட்சி செய்கிறார். தன் கையாலாகாத் தன்மையை மறைத்துக் கொண்டு அதற்கு மக்களைப் பலிகொடுக்கும் இந்த ஆட்சியும், அரசும் இன்னும் நீடிப்பதென்பது, எரியும் தீயில் இறங்குவதொக்கும்

.மற்ற நாடுகள் முதல் அலையிலிருந்து தக்க பாடம் கற்றுக்கொண்டு இரண்டாம் அலையில் மீண்டெழுந்துவிட்டன. ஆனால், நாமோ உலகமே கான்றியுமிழும் ஒரு ஆட்சியை இன்னும் தூக்கி வீசாமல் வைத்துக் கொண்டிருக்கிறோம். அல்லது அஞ்சியொடுங்கிக் கிடக்கிறோம்.

மக்களே! உண்மையை உணர்வதெப்போது?

விழித்தெழுவோம்! விடியல் காண்போம்!

அன்புடன்
பாவலர் மா.வரதராசன்.

No comments:

Post a Comment