'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Apr 23, 2021

ஆசிரியர் பக்கம்

அன்பானவர்களே! வணக்கம்.

ஓரினத்தை அழிக்க வேண்டுமாயின் அவ்வினத்தாரின் மொழியை அழித்தால் போதும் என்பர் மொழியியலார். 

கோடிக்கணக்கானோர் பேசுகின்ற, எழுதுகின்ற ஒரு மொழியை அழிக்கவியலுமா? கடைசி மாந்தன் இருக்கும்வரை அம்மொழியின் பேச்சு வழக்கிருக்கும். அம்மொழியின் இலக்கியங்கள் வாயிலாக எழுத்துவழக்கிருக்கும்.

ஆயினும் மொழியை அழித்தலென்பது அதனைச் சிதைப்பதைக் குறிக்கும். சிதைத்தலாவது அதன் தூய்மையான தனித்தன்மையைச் சிதைக்கு மாற்றான் அம்மொழியில் பிறமொழிச் சொற்களைக் கலப்பதாம். 

இது வெளிப்படையான மொழிக்கலப்பின்வழி ஒருமொழியைச் சிதைப்பதாகும்.

மற்றொரு வழியிருக்கிறது. அது... அம்மொழியின் பெயரைத் திரித்தும், அதன் தொன்மையைக் குறைத்தும், அதன் மூலத்தை வேறொரு மொழியாகக் காட்டியும், அம்மொழியுணர்வை வீறுகொளச் செய்யாதிருத்தலும், அவ்வாறு வீறுகொள்வோரை "இனவெறியன், சாதி வெறியன் என்று முத்திரை குத்தித் தனிமைப்படுத்துவதும் என்பனவாகிய பல தீய செயல்முறைகளை உள்ளடக்கிய கொடிய வழியாகும்.

தமிழ்மொழியைப் பொறுத்தவரை அம்மொழியை அழிக்கும் செயல்களில் முதல்வழியை ஆரிய மற்றும் பிறமொழியினர்  செய்து வருகிறார்கள்.

கொடிதான இரண்டாவது வழியை… 

நம்மோடு நம்மவர்போலவே கலந்தும், நம்மொழியைத் தெளிவுறக் கற்றும், ஆனால்  தங்கள் தாய்மொழிப் பற்றை உள்ளத்தில் ஆழப் பதித்தும், தமிழை அழிக்கும் வண்ணம் எத்தகைய இழிசெயலையும் செய்யத் தயங்காத திராவிடரே செய்து வருகிறார்கள்.


தமிழா !  விழித்தெழு!


இனவுணர்வு கொள்.! 

நாம் தமிழினம்.


மொழியுணர்வு கொள்.! 

நம்மொழி தமிழ்


நாட்டுணர்வு கொள்.! 

நம்நாடு தமிழ்நாடு!


வாழிய செந்தமிழ்!  

வாழ்க நற்றமிழர்!  

வாழிய தமிழ்த்திரு நாடு!


அன்புடன் 

பாவலர் மா.வரதராசன்.

No comments:

Post a Comment