'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Apr 18, 2021

குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 26

1. கவிஞர் பா.இந்திரன்

பச்சிளம் பிள்ளையைப் பாரிலே கோபமாய்க்

குச்சியால் குத்தும் குணத்தோரை - அச்சமிலா

உச்சமாய் நிற்கும் உணர்வாம் அவர்களே

நச்சரவு போல்வார் நசுக்கு


2. கவிஞர் பொன்.இனியன்  பட்டாபிராம்

வனைத்தன வேயுரைக்கும் வன்கணா ரெல்லாம்

மனைகெழீஇ மன்றில் பழிப்பார் - எனைத்தானும்

இச்சகம் பேசி யிருந்துற வாடுவார்

நச்சரவம் போல்வார் நசுக்கு


3. கவிஞர் தில்லை வேந்தன்

கூடி இருந்து குழிபறித்துத் தள்ளியதை

மூடிக் கதையும் முடித்துப்பின் - ஓடியொளி

பச்சைப்புல் உள்ளே பதுங்கி மறைந்திருக்கும்

நச்சரவு போல்வார் நசுக்கு!


4. கவிஞர் "சங்கத்தமிழ் வேள்"

எதிரிற் புகழுரைத் தில்லாத போழ்து

குதறி யிகழ்வர் குசலர் - இதயமற்றுச்

சச்சரவை யெஞ்ஞான்றுஞ் சாற்று மிழிவான

நச்சரவு போல்வார் நசுக்கு!


5. கவிஞர் சுந்தரா

தன்னால் உழைத்துயரும் தன்மையிலார்; வென்றோரைப்

பின்னால் இழித்துப் பிழைபேசி - முன்னாலே

இச்சகமும் பேச இளித்தபடி வந்துநிற்பார்

நச்சரவு போல்வார் நசுக்கு!


6. கவிஞர் ஷேக் அப்துல்லாஹ் அ

அச்சமில்லா ஆணவத்தி லாளுமவர் மாற்றுவராந்

துச்சமுயி ரென்பர் தமிழ்மக்கள்! - மிச்சமின்றி

யச்சந் தமிழ்நாட்டின் பேர்மாற்றி னல்லலாம்

நச்சரவு போல்வார் நசுக்கு!


7. கவிஞர் அபூ முஜாகித்

உச்சியிலே யெம்மை உயர்த்தி யிருத்திடுவார்

நிச்சலனை யெண்ணி நினைந்தெழுவார் - நிச்சயித்துத்

துச்சமென நல்மனத்தைத் தூக்குஞ் சுழியரவர்

நச்சரவு போல்வார் நமக்கு


8. கவிஞர் செல்லையா வாமதேவன்

மெச்சி முகத்தில், மிதிப்பார் முதுகிற்றான்

துச்சமாய் மற்றோர்முன் தூற்றுவார் - அச்சமின்றிச்

சச்சரவு மூட்டிச் சமரசம் தேனென்பார்

நச்சரவு போல்வார் நசுக்கு 

No comments:

Post a Comment