'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Apr 18, 2021

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

18. பைந்தமிழ்ச் சுடர் வே.அரவிந்தன்


முதுகலை இயற்பியல் துறை மாணவன்

வசிப்பிடம் : கருமலை (கிருட்டிணகிரி மாவட்டம்)


கவிஞர் அழைப்பு


நற்றமிழ்ப் பாக்கள் நன்றென வடிக்கும் 

    நற்றமிழ்க் கவிஞரிவர் 

பற்பலர் போற்றப் பணிவுடன் நடக்கும் 

    பைந்தமிழ்ச் செல்வரிவர் 

சொற்சுவை சேரக் கவிதைகள் இயற்றிச் 

    சுடரென ஒளிருபவர் 

அற்புதம் நிறைந்த கவியினைத் தரவே 

    அரங்கினுள் அழைக்கின்றேன் 


பைந்தமிழ்ச் சுடர் அரவிந்தன் வருக வருக


தமிழ் வணக்கம்

தித்திக்கும் தீம்பாகே! தீதில்லா மாத்தேனே!

புத்திக்குள் நின்றாளும் பொய்க்காநல் முத்தன்ன

சித்தத் தெளிவே! செழுமைமிகு தாயே!

வித்தைக்குள் செய்வாய் விருந்து.


தலைமை மற்றும் அவை வணக்கம்

பைந்தமிழ்ச் செம்மலம்மை பாதம் பணிந்துநல்

பூந்தமிழால் செய்யுமோர் பொன்வணக்கம் மேவுமவைச்

சான்றோரை ஏற்றியுடன் சாற்றும் வணக்கமாம்

யான்செய் வரியால் அழைத்து.


கதவைத் திறந்து வை

ஓரோட்டை ஓட்டவுடன் ஒன்பதோட்டைப் பிண்டம்

    ஓவென்ற ழுதுருளுமாம் உளதாகக் காட்டப்

பாரோடு சேர்க்கும்நல் பாட்டொன்றைக் கூவிப்

    பாழ்மனமும் அறிந்தேங்கும் பாலுண்டும் ஓயும்

தேரோடு வாழ்வெனினும் திறந்தவாயை மூடச்

    செய்பூட்டும் ஒன்றில்லை செய்வருமிங் கில்லை

காரோடு நீரொப்பக் கரைந்தொழுகிக் கொட்டிக்

    கடல்சேர்ந்தும் சாகும்பின் கடைவான்பு கும்மே..


ஓட்டையிதை அடைக்கத்தான் ஓலைகளும் செய்தார்

    உருவெடுத்தார் செய்தாரோ உத்தமமாய்க் காத்தார்

மூட்டையிதைப் பெருக்கத்தான் மூட்டைகளைச் சேர்த்தார்

    மூளைக்குள் கிடத்துங்கால் முணுமுணுத்து ரித்தார்

காட்டையடைக் காலத்தைக் கணக்கினிலே வைத்தார்

    காலத்தைச் சுட்டியிங்குக் களித்துப்பேர் வைத்தார்

நாட்டிலின்னும் திறக்கவேண்டும் நாளைநாளை இன்னும்

    நலம்வாழ மருந்தோடு நற்கதவுந் தானே...


நாளுக்கோர் உறவாகி நலம்தேடிச் சேரும்

    நல்லுலகில் புதிதொன்றாய் நாடியிங்கே கூடும்.

தாளுமேது வென்றறியாத் தாகக்கூட் டத்தில்

    தகிக்கும்நோய் கூடிவந்து தாம்பங்கு கேட்கும்

தேளுமாகி விடமூட்டும் தேகமொன்றும் பெற்றுத்

    தேடியோடி அமிழ்தில்லை தேசத்தே இன்று

மூளுமித்தி ரைநீக்க முழுமுதலி றையே

    மூடியவிக் கதவையுந்தன் முன்திறப்பா யாமே


நன்றி நவிலல்


செவிமடுத்த சான்றோர்க்குச் செப்பி நகர்ந்தேன்

கவிகேட்டீர் எந்நன்றி காண்.


வாழ்த்து


மனத்தினிலே உள்ளவற்றை அவையின் முன்னால் 

    மளமளென வீறுகொண்டு பொழிந்து விட்டார் 

சினந்தவழ நல்மருந்து மில்லை யென்றார் 

    திரைமறைவில் நடக்கின்ற கூத்தும் சொன்னார் 

வினைத்தூய்மை பெற்றுவிட்டால் நடக்கும் நன்மை 

    விருப்பங்கள் நிறைவேற மனிதம் வாழும்

மனிதங்கள் தூய்மையாக மொழிந்தார் பாக்கள் 

    மகிழ்வுறவே நாமெல்லாம் வாழ்த்து வோமே 

No comments:

Post a Comment