'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Apr 18, 2021

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

கவியரங்க நிறைவு கவிதை

பைந்தமிழ்ச் செம்மல்  நிர்மலா சிவராசசிங்கம்


கதவைத் திறந்துவை


தித்திக்கும் பலகவிகள் கவிஞர் பாடத்  

    தீந்தமிழாள் மகிழ்வுற்று மயங்கி விட்டாள்

அத்தனையும் கண்ணுற்ற ஆசான் உள்ளம் 

    அகமலர்ந்து சொற்களின்றித் தவிப்பில் நின்றார்  

சத்தமிட்டுக் குரலெழுப்பித் தவிப்பைக் கூறச்  

    சான்றோரும் பதைபதைத்து  மௌனித் தாரே

புத்தெழுச்சி தழுவிவந்த பாக்க ளெல்லாம்

    பொன்னாக ஒளிர்ந்துநிற்க மகிழ்வுற் றேனே

     

மனக்கதவைத்  திறப்பதில்லை பலரு மிங்கே 

    மனந்திறந்து சொன்னாலும் கேட்பா ரில்லை 

தினந்தோறும் அதிகரிக்கும் சிக்க லெல்லாம் 

    தீர்ப்பதற்கு வழிகளின்றி அடங்கிப் போகும் 

தனியுரிமை ஆங்காங்குப் பறிக்கும் போது 

    தவிப்புதனில் வாடுவோர்கள் பலரு மிங்கே 

இனியெதற்கு வாழவேண்டு மென்றே மாழ்கி

    ஏக்கத்தில் மடிவோரும் உலகில் உண்டு


இல்லறத்தில் காண்கின்ற குறைக ளெல்லாம் 

   இல்லாளின்  மனக்குறைகள் கேட்கத் தீரும்  

கொல்கின்ற ஐயத்தை வளர்த்தால் துன்பம் 

   குதூகலமும் மறைந்தோடும் வாழ்வில் என்றும் 

நல்லறங்கள் செய்வதற்குச்  செல்வம் வேண்டா 

   நலங்காக்க உதவுகின்ற பண்பு காணும் 

இல்லையென்(று) ஒருபோதும் எண்ண வேண்டா 

   இருப்பதினில் நிறைவுதனைக் கண்டால் போதும்


ஏற்றமுறச்  செயல்யாவும் செய்து விட்டால் 

    இழப்புகளைத் தவிர்த்திடலாம் உலகி லெங்கும் 

போற்றுகின்ற மனத்திடத்தை வளர்த்து விட்டால்

    புதுமைகள் படைப்பவர்கள் பெருகு வாரே

வேற்றுமைகள் மனிதரிடம் காட்ட வேண்டா

    வீண்வம்பு செய்தவரை வீழ்த்த வேண்டா 

மாற்றங்கள் காண்பதற்குத்  துணிந்து நின்றால் 

    மனப்புழுக்கம் என்றெல்லாம் உலகில் உண்டோ


நன்றி


நல்வாய்ப்பை  எனக்களித்த ஆசான் போற்றி 

    நன்றிதனைக்  கூறுகின்றேன் இங்கே நானும் 

சில்லென்ற  தென்றல்போல் தழுவும் பாக்கள்  

    சிந்தைதனை மெல்லென்று தழுவி நிற்கும்        

சொல்லுகிறேன் மனமுவந்து நன்றி தன்னைச்

    சொற்சுவையில் கவிபாடிச் சென்ற தற்கு 

நல்வாழ்த்தை அனைவருக்கும் மகிழ்வாய்த் தந்தேன் 

    நலத்தோடு நெடுங்காலம் வாழ்க வாழ்க!

No comments:

Post a Comment