'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Apr 18, 2021

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

17.   கவிஞர் சொ.சாந்தி


கவிஞர் அழைப்பு


அன்பில் பண்பு கலந்திருக்கும்

    அறிவில் உயர்வு நிறைந்திருக்கும்

என்றும் முகத்தில் சிரிப்பிருக்கும்

    எதிலும் ஏற்றம் கலந்திருக்கும்

கன்னித் தமிழால் பாட்டியற்றக்

    களிப்பாய் வந்து சேர்ந்தவராம்

இன்பத் தமிழால் அழைக்கின்றேன்

   இனிதே வந்து கவிதருக


கவிஞர் சொ.சாந்தி வருக வருக


கதவைத் திறந்து வை


சுற்றிலு மாயிரம் கதவுக ளிருக்கச்

    சூழ்நிலைக் கைதிகள் நாம்

வெற்றிக் கதவுகள் மூடுகின் றாரே

    வேதனை கூட்டலில் தான்! 1


தட்டத் திறக்கும் கதவில் எல்லாம்

    தாளினை இடுகின்றார் - பலர்

முட்டி மோதிய போராட்டத்தில்

    உயிரினை விடுகின்றார்..! 2


காத்துக் கிடப்பின் கனியும் வீழும்

    நம்பிக் கிடக்கின்றோம்

பூத்து வெடிக்கும் இலவம் கண்டு

    பொத்தெனச் சாய்கின்றோம். ! 3


கல்விக் கதவில் திண்டுக்கல்பூட்டு

    உடைத்திட வாருங்கள்

கல்லணை போடும் கல்விக் குருடனைக்

    கல்லால் அடியுங்கள்..! 4


பச்சை வயலுடன் பக்கக் குழாய்கள்

    பாதகம் தொடர்ந்திடுமோ..?

இச்சைகொண்ட இனிய தொழிலுக்கு

    எண்ணெய்க் கதவுகளோ..? 5


வயலில் பதியும் அயலான் பாதம்

    அறுபட வேண்டாமோ..?

ஆதிக்கக் கதவை அடித்து நொறுக்க

    அறுவடை பிழைக்காதோ..? 6


வேற்று மொழியெனும் இரும்புக் கதவால்

    தமிழும் சிறைப்படுமோ.,?

மாற்று நிலையினை இரும்பினைத் தகர்த்துத்- தமிழ்

    இரிடியம் உடைபடுமோ.? 7


எத்தனை காலம் இத்தனை கொடுமை

    என்றிது விடிந்திடுமோ..?

எத்தர்கள் அழிக்க எழுச்சிகள் வேண்டும்

    இன்றேல் மடிந்திடுவோம். ! 8


கதவைத் திறவாய் என்றே கெஞ்சிட

    சன்னலும் திறக்காது

கையில் எடுப்பாய் கன்னக் கோலாம்

    தைரியம் இழக்காது..! 9


மூடிய கதவுகள் யாவு முடைத்திட

    முயல்வோம் துணிவோடு

விடியல் பெருக்கி வெற்றிகள் எட்ட - வரும்

    வெளிச்சங்கள் நம்மோடு. ! 10


வாழ்த்து


எத்தனை காலம் இத்தனை கொடுமை

    என்றிது விடியுமென்றார்

எத்தரை  அழிக்க எழுச்சிகள் வேண்டும்

    இன்றேல் மடியுமென்றார்

புத்துயிர் பெற்றுப் புதுமைகள் தோன்றப்

    புவியினி ஒளிர்ந்திடுமே

முத்தெனப் பாக்கள் மிளிர்ந்தன இங்கே

    முந்தியே  வாழ்த்துவமே  

No comments:

Post a Comment