'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Mar 14, 2021

இற்றைத் திங்கள் இவரைப் பற்றி

பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்


வண்ணம் பலபாடி வாகை பலசூடி

எண்ணம்போல் வாழ்வு மினிதாக - உண்ணிறை

அக்காஅய் பல்லாண் டகமகிழ் வெய்திடச்

சொக்கனைச் செய்வேன் துதி!

என மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் அவர்களால் வாழ்த்தப்படுபவர், சிறந்த மரபு பாவலர், எவ்வண்ணமும் பாடும் செவ்வண்ணத் தரசியாம் பைந்தமிழ்ச்செம்மல் சியாமளா ராஜசேகர் அவர்கள்.


அவர் 1960ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய பெற்றோர் சு.பாண்டியன் – பத்மாவதி அவர்கள். அவருடைய கணவர் ரா.ராஜசேகர் அவர்கள். இவர்களுக்கு மூன்று ஆண்பிள்ளைகள். மூவருக்கும் திருமணமாகிவிட்டது, 3 பேரன், 2 பேத்திகள் உள்ளனர். அவர் சென்னை இராயபுரத்தில் வசித்து வருகிறார்.

சிறுவயது முதலே இவருடைய தந்தை பக்தி இலக்கியங்களை ஊட்டி வளர்த்தார். இவருக்குள் இருக்கும் எழுத்துத் திறமைக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் திருமதி. ப்ரியா கிஷோர் அவர்கள். வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டிகளில் கலந்து கொண்டு எண்ணற்ற பரிசுகள் வாங்கியுள்ளார். பல வார, மாத இதழ்களிலும் பரிசுகள் பெற்றுள்ளார். இவர் எழுதிய சிறுகதைகள் பரிசுக்குரியனவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவரது கவிதைகளுக்குக் களம் தந்து வளர்த்தது எழுத்து.காம்(2013). அங்குக் கிடைத்த ஊக்கமே இவரைத் தொடர்ந்து எழுத வைத்தது. இதுவரையில் 1800-க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். முதலில் இவர் விளையாட்டாக  எழுதப் பழகியது வெண்பா! எழுத்து.காம் தளத்தில் நட்புகளின் ஊக்குவிப்பும், பாராட்டும் மரபின்மேல் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. மரபு கவிதை ஆர்வத்தை இவருள் விதைத்தது அன்பு மகன் பைந்தமிழ்ச் செம்மல் விவேக்பாரதி எனப் பெருமையோடு சொல்வார்.

முகநூல் இவரது மரபு ஆர்வத்தை மேலும் தூண்டியது. சந்தவசந்தம் என்ற குழுமத்தில் கவிவேழம் இலந்தை இராமசாமி ஐயா அவர்களிடம் பயிற்சி பெற்றார்.

பைந்தமிழ்ச்சோலை இவரை முழுமையாக ஆட்கொண்டது. பாவலர் மா. வரதராசன் அவர்கள் பயிற்றுவித்த பல்வகைப் பாக்கள், பாவினங்கள், முயன்று பார்க்கலாம், முடிந்தால் எழுதுங்கள் என்னும் தலைப்பிலான அரிதான பாக்கள், சிந்துப் பாக்கள், சந்தப் பாக்கள், வண்ணப்பாக்கள் என எல்லாவற்றிலும் சிறந்து விளங்கி மரபு பயின்று வருகிறார். வண்ண இலக்கணம் பயிற்றுவித்த குருவான பாவலரே வண்ணத்தரசி என்று அன்போடு அழைக்கும் அளவுக்கு அரிதின் அரிதான வண்ணமும் இவருக்கு வசமாயிற்று.  திருப்புகழில் மிகுந்த நாட்டமிருந்ததால் வண்ணப்பாடல்கள் இவரை எளிதில் ஈர்த்தன.

“என்கடன் பணிசெய்து கிடப்பதே” என்ற சான்றோர் வாக்கிற்கிணங்க ஓடோடித் தமிழ்ப்பணியாற்றுமிவர் பைந்தமிழ்ச்சோலை உறுப்பினராகவும், அதன் எண்பேராயத்தில் ஒருவராகவும், பயிற்றுவிக்கும் துணையாசிரியர்களுள் ஒருவராகவும் தமிழ்த்தொண்டு செய்து வருகிறார்.


பல நல்லோர்களின் நட்பு முகநூலில் கிடைக்கப் பெற்றதை வாழ்வின் வரமாகக் கருதுகிறார். ‘புலம் மிக்கவரைப் புலமை தெரிதல் புலம் மிக்கவர்க்கே புலனாம்’ என்பது உண்மையன்றோ? முகநூல் குழுமங்களில் பல கவியரங்கங்களில் கலந்து கொண்டுள்ளார். சிலவற்றில் தலைமை தாங்கியுள்ளார்.

திருப்பூரில் நடைபெற்ற பைந்தமிழ்ச்சோலை மூன்றாம் ஆண்டு விழாவில் தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல்முறையாகப் பாவலர் மா.வரதராசன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற சிந்துப் பாட்டரங்கத்துக்குத் தலைமையேற்று இனிமையாக நடத்திக் கொடுத்தார்.

பொதிகை தொலைக்காட்சியில் இசைக்கவி ரமணன் அவர்கள் தலைமையில் "வாழ்க நீ எம்மான்" என்ற நிகழ்ச்சியில் காந்தியடிகளின் கைத்தடியாகக் கவிதை பாடியுள்ளார்.

பம்மல் கண்ணதாசன் தமிழ்ச் சங்கமும், சிங்கப்பூர் லிஷா இலக்கிய மன்றமும் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கண்ணதாசன் விழாவில் கவி பாடியுள்ளார்.

2020-டிசம்பர் 11-ல் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற ஜதிபல்லக்கு நிகழ்ச்சியில் மகாகவிக்குப் போர்த்திய சால்வையும் பொற்கிழியும் இவருக்குப் போர்த்தப்பட்டது. 27 ஆண்டுகளில் இந்தப் பெருமையைப் பெறும் முதல் பெண் கவிஞர் இவர் என்று கவிமாமணி ரவி கல்யாணராமன் அவர்கள் தெரிவித்தார்.

கவிவேழம் இலந்தை இராமசாமி ஐயா அவர்களை நேர்க்காணல் கண்டுள்ளார். அது “மிட்டாய்ப் பெட்டி" என்னும் மின்னிதழில் வெளிவந்துள்ளது.

எண்ணங்களை வண்ணங்களால் இழைத்து அரும்புதையலாய் இவர் ஆக்கித் தந்துள்ள "வண்ணப்புதையல்" என்னும் முதல் நூல் 150 வண்ணப் பாடல்களுடன் விரைவில் வெளிவரவுள்ளது.

"நற்பாப்புனை நன்மணி" என்று முதலில் பட்டமளித்து ஊக்கப்படுத்தியவர் புதுவை அகன் என்னும்  முனைவர் அமிர்தகணேசன் அவர்கள்! இன்றும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர். தொடர்ந்து பல்வேறு முகநூல் குழுக்களில் பல விருதுகள் பெற்றுள்ளார். 


பட்டங்கள்:

·        பைந்தமிழ்ச் செம்மல் ( 2016)

·        ஆசுகவி

·        நற்றமிழ் ஆசான்

·        சந்தக் கவிமணி  ( 2019)

·        கவிச்சுடர் (படைப்பு)

·        வீறுகவியரசர் முடியரசனார் விருது ( 2019 )

மேலும் “தமிழன்பன் வாழ்நாள் சாதனையாளர் விருது” ( மரபு வகைமை ) பெறவுள்ளார்.

தேடித்தேடிக் கற்றுச் செந்தமிழைப் பிழையறப் பேசிப் பாடி உள்ளத்தில் வைத்துப் போற்றும் பைந்தமிழ்ச்செம்மல் சியாமளா ராஜசேகர் அவர்கள் எல்லா வளமும் நலமும் பெற்றுத் தமிழன்னையின் புகழைத் தரணியெங்கும் கொண்டு செல்லும் ஒப்பற்ற பணிசெய்ய நாமும் உவகையுடன் வாழ்த்துவோம்.

2 comments:

  1. பைந்தமிழ்ச் செம்மல் , பாவலர் , கவிச்சுடர் , மரபு மாமணி திருமதி சியாமளா ராஜசேகர் அவர்கள் மேலும் பல விருதுகள் பெற்றிடவும் , கவியுலகில் பல சாதனைகள் படைக்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் !

    ReplyDelete