'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Mar 14, 2021

ஆசிரியர் பக்கம்

அன்பானவர்களே! வணக்கம்.

செடிகளோடு களைகளும் வளர்வது செடிகளின் வளமைக்குத்தான் என்பது எப்படி ஏற்கத் தகாததோ அதுபோலத்தான் தமிழோடு பிறமொழிக் கலப்பும்.

இயற்கையாய் மரச்செக்கில் ஆடப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்தலே உடல் நலத்திற்கு ஏற்றது. அதைவிடுத்துத் தூய்மைப் படுத்தித் தருவதாக எண்ணிக் கொண்டு இருக்கின்ற சத்துகளை எல்லாம் எடுத்துவிட்டுத் தேவையற்ற கலப்படங்களை வணிக நோக்கிற்காகச் செய்து விற்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்துதல் உடல் நலத்திற் கேற்றது என்று நம்பிக் கொண்டிருப்பது போலத்தான் தமிழில் பிறமொழிக் கலப்பும்.

தமிழ் முதலில் தோன்றிய இயற்கை மொழி. இயல்பான ஒலிப்புகளைத் தாண்டிச் செய்யப்பட்ட எழுத்துகளால் உருவாக்கப் பட்டவை பிறமொழிகள்.

தமிழில் ஏன் கலப்புக் கூடாது? கலந்தால் அது தமிழாய் இருக்காது. மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்று பிற மொழிகளாய்த் திரிந்துவிடும்.

பேசுவது தமிழாம். அவன் தமிழனாம். ஆனால் பெயர் சூட்டுவது மட்டும் புதுமையாம். பிறமொழிக் கலவையாம். பெயருக்குப் பொருள் புரியவில்லை என்றாலும் அதுவே பொருத்தமாம். இப்படிப்பட்ட மனநிலையை என்னவென்று சொல்வது? இவர்கள் தமிழ்நாட்டினராயினும் தமிழறியாதவர்கள். அடிமைகள்.

வாயில் நுழையாத பெயர்களைச் சூட்டிவிட்டு வாய்க்கு வந்தபடி அழைப்பதில் என்ன பெருமை? இவ்வாறு வாயில் நுழையாத சொற்களைக் கொண்டு துன்பப்படுதல் இயல்பு ஒலிப்பினராகிய நமக்கு ஏன்? எண்ணிப் பார்த்துத் தெளிவு கொள்க.

நம்பிக்கையுடன்

பாவலர் மா.வரதராசன்

No comments:

Post a Comment