13. பைந்தமிழ்ப் பாமணி ஷேக் அப்துல்லா அ
கவிஞர் வரவேற்றல்
உண்மை நிலையை உலகத்தார்
உணரும் கருத்துப் பலதருவார்
பண்பில் சிறந்த கவிஞரிவர்
பணிவாய்ப் பயிற்சி தினம்பெறுவார்
எண்ணம் எண்ணும் கருத்துகளை
எளிதாய்ப் பாவில் எடுத்துரைப்பார்
அன்பாய் அவையில் கவிபாட
அன்னைத் தமிழால் அழைக்கின்றேன்
ஷேக் அப்துல்லா ஐயா வருக
அன்னைமொழி சிறக்கும் பாக்கள் தருக
◆கதவைத் திறந்து வை◆
ஒன்றென்ற உண்மையதை உள்ளுணர வேற்றுமை
நன்மனத்துள் ஓடிவிடும்! நன்மைகளே ஊற்றெடுக்கும்!
எண்ணம் விழிப்பில் எழுதுவதே வாழ்க்கையதில்
கண்கொண்டு பார்க்க, கதைகளல்ல; காணும்
பிரபஞ்சம் ஒன்று பிறவியின் தூக்கங்
கரவொலி கேளாக் கடுமுறக்கங் கொண்டின்
இறந்தபின் எவ்விதமும் இல்லை! அதுபோல்
திறனெல்லாம் வாரா! திகழ்ந்ததுவே காண்பாய்!
அருளிருந்தால் பேரின்பம்! அன்றேல் உணர்வில்
இருக்கும் எரிநெருப்பின் எல்லாங் கொடுக்கும்!
விழித்து வதைக்கும்! விரைக! கிடைத்த
செழிப்பான தோற்றத்தில் செம்மை மனிதனாய்ச்
சீர்தூக்கி மேம்படுத்து! செய்திடாதே துன்பங்கள்!
பாரதனில் பாழான பண்பில்லாப் பார்வையால்
நிம்மதி கெட்டு நிலத்திலும் வானிலும்
உம்மதியாற் சீற்றங்கள் உண்டாக ஏது
புரியாமற் சூழ்வெள்ளம் போன்ற
பலவும்
தெரிந்து விடாநிலையில் துன்பத்தில் ஆழ்த்திவிடும்!
போதையில் மூழ்கிப் புரியும் புதுமைகள்
காதைத் திருகிக் கருணைகாட்டாக் கூட்டத்தில்...
எப்படி? எல்லா இருப்பில் இருப்பதெல்லாம்
ஒப்பில்லா வொன்றென உன்னுள் உணர்வாய்!
நிலையில்லாத் தோற்றத்தில் நேரான பார்வை
நிலையதைக் கொள்ளத் திறந்துவிடு நின்னுள்!
மனக்கதவைப் புத்தாண்டு மத்தாப்புப் பூக்க!
மனத்துள் மனிதம் மலரட்டும் மாண்புடன்!
மானிடர் தைத்திருநாள் மண்வளங்கள் கொண்டாட்டம்!
காணிகள் தோறும் கலைநிகழ்வின் காட்சிகள்!
கண்கொள்ளா ஆட்டங்கள்! கற்பித்துப் போனதிற்
கொண்டே மனிதனாகிக் கொள்!
வாழ்த்து
மனத்தில் மனிதம் மலர்ந்துவிட்டால்
மண்ணில் புனிதம் பிறந்துவிடும்
சினத்தில் செய்யும் செயலெல்லாம்
திருத்தம் காணும் என்றுரைத்தார்
நினைவில் வந்த கருத்துகளை
நிறைவாய்த் தந்தார் மன்றினிலே
இனிதாய்க் கேட்டு மகிழுங்கள்
இன்பம் பொங்க வாழ்த்துவமே
No comments:
Post a Comment