7. பைந்தமிழ்ச்செம்மல் நெடுவை இரவீந்திரன்
கவிஞர் அழைப்பு
முயற்சி நாளும் எடுக்குமிவர் 
    முத்தாய்ப் பாக்கள் பலதருவார்  
பயிற்சி தொடர்ந்து செய்வதனால் 
    பட்டம் பெற்றுச்  செம்மலானார் 
வியக்க வைத்த பாவலரே
    விரைந்து வருக கவிபாட
உயர்ந்த அரங்கில் உம்கவிகள் 
    ஒலித்து முத்தாய் ஒளிரட்டும்
நெடுவை ஐயா வருக ! 
நெஞ்சம் மகிழக் கவிதருக!
தமிழ் வாழ்த்து
பொங்கல் கவியரங்கம் போற்றும் முகநூலில்
சங்கக் கவிகளைப்போல் தண்டமிழ் -பொங்கிவர
எந்நாவில் ஏறி யிசையோடு கேட்போரின்
செந்தமிழாய்க் காதேறிச் சிந்து.
தலைமை மற்றும் அவை வாழ்த்து
நேர்போற்றும் பாவலர் நிர்மலாவின் பாட்டரங்கில்
தார்சாற்றி வாழ்த்தித் தலைசாய்த்துச் - சீர்கோத்துப்
பாடவந்தேன். பைந்தமிழ்ப் பாக்களைக் கேட்கவந்த
ஊடகத்தோர் வாழ்க; உவப்பு!
கதவைத் திறந்து வை
பற்று மற்ற ஆளுங் கொற்றன் 
    பற்றி யேந்திப் போவார்
எற்ற முள்ள வீரக் கோனும்
    ஏழ்மைப் பக்கம் சார்வார்
குற்றஞ் செய்து மாட்டிக் கொண்டால் 
    கொள்ளும் வீடு நீயே
உற்றார் என்று பாரா தோரை 
    உன்றன் கூட்டில் சேர்ப்பாய்
ஏட்டை மாற்றிச் சட்டம் செய்தும் 
    ஏழை வாழ்வை நைப்பார்
வேட்டை செய்து சேர்த்த சொத்தை 
    வீணாய் ஏற்றி வைப்பார்
கோட்டை ஒன்றே கொள்கை யென்று 
    கூட்டுச் சேர்ந்து நிற்பார்
நாட்டில் கொள்ளை கொண்ட தெல்லாம் 
    நாடு மாற்றி விற்பார்
ஆறு கொள்ளும் மண்ணை வெட்ட 
    ஆழ மாகிப் போகும்
ஆறு மின்றி நீரும் மாறி 
    அத்து மீறி ஏகும்
சோறு தந்த ஏரோன் இல்லம் 
    சோகத் தோடு வாடும்
மீறு கின்ற தீய சக்தி 
    மெல்ல மாட்டக் கூடும்
சேவை செய்வேன் என்று சொல்லித்
    தேடித் தேடிப் பார்ப்பார்
ஆவ லோடு மாடு சேர
    அண்டை நாட்டில் சேர்ப்பார்
சேவ லன்ன கூண்டி லேற்றித்
    தேரி லுன்னில் சாய்ப்பார்
காவல் காக்கும் நீயும் வாசற்
    கால்தி றந்து வைப்பாய்
நன்றி
பூவேறும் வண்டுகளாய்ப் பொங்கிவரும் பைந்தமிழில்
பாவேறும் பாவரங்கில் பாக்கேட்க வந்தோரே
நாவேறும் தீந்தமிழை நன்மரபில் தந்தவரே
யாவர்க்கும் கைகுவித்(து) எந்நன்றி சொல்வேனே
வாழ்த்து
உலகில் நிலவும் அநீதிகளை
    ஒதுக்கி வைத்தல் நலமென்றார்
கலக்க மின்றி ஏழைவாழக்
    கதவைத் திறக்க வேண்டுமென்றார்
நிலவும் குறைகள் பலவற்றை
    நெஞ்சம் வருந்தக் கவிதந்தார்
பொலிவாய்க் கொடுப்போம் வாழ்த்துதனைப்
    புகழ்ந்து போற்றி  மகிழ்வோமே  
No comments:
Post a Comment