'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Mar 14, 2021

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

 12. பைந்தமிழ்ப் பாமணி இரா_அழகர்சாமி

கவிஞர் அழைப்பு

பண்பில் சிறந்த கவிஞரிவர்

  பாக்கள் சுவையாய்ப் பலதருவார்

அன்பாய் அவையில் கவிபாட

  அன்னைத் தமிழால் அழைக்கின்றேன்

 

அழகர்சாமி ஐயா வருக

அருந்தமிழ் பாக்கள் தருக

 

தமிழ்த்தாய் வாழ்த்து

ஆய மொழிகள் அனைத்திற்கும் தாயாகி

நேயமுடன் நெஞ்சில் நிறைபவளே-தூயமொழி

உன்னை விடுத்தே உயிர்வாழும் யாவரையும்

கண்ணிலா தாராய்க் கருது!

 

அவைவாழ்த்து

அருமைக் கவிச்சரம் ஆக்கிப் படைத்தே

பெருமைகள் சேர்க்கும் பைந்தமிழ்ச் சோலையின்

அவைக்குத் தலைவராய் ஆனநற் செம்மலாம்

சிவராச சிங்கம் சிறப்புடன் வாழ்க!

 

கதவைத் திறந்துவை

முடைநாற்றம் வீசுகின்ற சமுதா யத்தில்

     மூச்சடக்கி வாழ்ந்ததெல்லாம் போதும்! நம்மை

இடைவந்து கெடுக்கின்ற மதத்தின் பேரால்

     இனிக்கின்ற பலகதைகள் கொண்டு வந்தே

கடைவிரித்தப் பொய்ச்சரக்கை விற்க வந்த

     கயவர்களின் வலைக்குள்ளே வீழ்தல் வேண்டா

மடைதிறந்த வெள்ளமென வெளியில் வந்தே

     மனஞ்சொன்ன வழிவாழும் முறைதான் நன்றே!

 

இருளென்னும் போர்வைக்குள் இருந்து கொண்டே

     இடருக்கும் சுடருக்கும் பேதம் இன்றிப்

பொருளற்ற வாழ்க்கையினை வாழ்தல்  நம்மைப்

     பொறுப்பற்ற இடந்தேடி நகர்த்திச் செல்லும்

விருப்புக்கும் வெறுப்புக்கும் பேதம் இன்றி

     வேண்டாத வாழ்க்கையினை வாழ்வோர் எல்லாம்

இருப்பைத்தான் ஓர்நாளில் இழப்பர் அந்த

     இடர்களையக் கதவுகளைத் திறப்பீர் இன்றே!

 

இதயத்தின் கதவுகளைத் திறந்து வைத்தால்

     இன்பங்கள் வரவாகி நெஞ்சில் நிற்கும்

உதயத்தின் பொழுதாக இனிக்கும் வாழ்வை

      உணர்கின்ற அக்கணமே இன்பம் பொங்கும்

மதமென்னும் குகைக்குள்ளே அடிமைப் பட்டு

     மாயவலைப் பேச்சினிலே மயக்கங் கொண்டே

இதமான வாழ்கையினை இழக்க வேண்டா

     இதயத்தின் கதவுகளைத் திறப்பீர் இன்றே!

 

அண்டிவரும் உறவுகளைப் புறத்தே தள்ளி

     ஆகாத வன்மமதை நெஞ்சில் ஏற்றி

மண்டையிலே கனத்தோடு வாழும் வாழ்க்கை

     மகிழ்ச்சியினை ஒருபோதும் தருவ தில்லை

சண்டைகளே சரித்திரமாய் மாற மாற

     சகமாந்தர் நேசங்கள் விளைவ தேது

அண்டையிலே உள்ளோரின் அன்புக் காக

     அகக்கதவை அன்போடு திறப்போம் நாமே!

 

வாழ்த்து

முடைநாற்றம் வீசுகின்ற சமுதா யத்தில்

    மூச்சடக்கி வாழ்ந்ததெல்லாம் போது மென்றார்

இடைவந்து கெடுக்கின்ற மதத்தின் பேரால்

    இன்னல்கள் கொண்டுவந்து சேர்ப்பா ரென்றார் 

விடைகளின்றிச் சிக்கலினில் வாழ்வோ ரெல்லாம்

    வெலவெலத்து மனக்கதவை மூடி நிற்பர்

அடுத்தடுத்து மனக்குறைகள் பலவும்  சொன்னார்

    அகக்கதவைத் திறந்துவைத்து வாழ்த்துவோமே

No comments:

Post a Comment