'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2020

நடுப்பக்க நயம் - கம்பனைப் போலொரு… பகுதி – 2


மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

இலக்கியம் என்பது அவ்விலக்கியம் எழுந்த காலத்துக் கண்ணாடியாகும். அக்கால மக்களின் வாழ்வியலையும், பண்பாட்டுக் கூறுகளையும் படம்பிடித்துக் காட்டுபவை அக்கால இலக்கியங்களே! அதனாலன்றோ சங்க இலக்கியங்களை நம் தமிழினத்தின் அடையாளமாகச் சொல்லி நாம் பெருமைப்படுகிறோம்.

களப்பிரரின் ஆட்சிக் காலத்தைத் 'தமிழகத்தின் இருண்டகாலம்' என்பர் வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால், வரம்பற்ற கொடுமையால் இன்னலுற்று, வாழ்வின் அறநெறி பிறழ்ந்து மக்கள் சீரிழந்த காலத்தில்தான் வாழும் முறைமையைக் காட்டி, மக்களின் சிக்கலைத் தீர்த்து, வாழும் நெறியை எடுத்துக் கூறிய அறநூல்களான பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின. அந்தக் காலக்கட்டம்தான் தமிழ்நாட்டுக்குப் பொற்காலம். அந்தப் பொற்காலத்தில் தோன்றிய திருக்குறள் உள்ளிட்ட அறநூல்கள் மலைமேலிட்ட விளக்காக நின்று நமக்கு வாழும் முறையைக் காட்டி இன்றைக்கும் ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன.

நாட்டு மக்கள் அயலானிடத்தில் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் விடுதலை வேட்கையைப் பரப்பியதால் சுப்பிரமணியன் "மகாகவி பாரதியானார்". கடவுளைப் பாடிக் கொண்டிருந்த காலத்தில் அறியப்படாத கனகசுப்புரத்தினம், இந்தி நுழைப்புக் காலச் சூழலில் இந்தியை எதிர்த்துத் தமிழெழுச்சியைப் பாடியதால் "பாவேந்தராக" அறியப்பட்டார். எனவே, இலக்கியங்களைச் சுவைப்பதற்கும், அவற்றை ஆய்வதற்குமான ஏது "காலநிலையாகும்".

ஒரு படைப்பு எழுத்துகளை மட்டும் தாங்கி வருவதில்லை. அது எழுதப்பட்ட காலத்தின் நிலையை, மக்களின் வாழ்வியலை, அரசியலைத் தாங்கிவரும். வரவேண்டும். அந்த எழுத்தின் கர்த்தாவான எழுத்தாளன் இந்தப் பொருண்மைகளின் மூல நாடியாக நின்று தன் மனக்கதவைத் திறந்து எழுத்துகளின் வடிவத்தில் அந்தப் படைப்பைப் படைக்க வேண்டும். அவையே நல்ல இலக்கியமாகும். காலத்தை வென்று நிற்கும் படைப்பாகும்.
இதே வழியில்தான் நாம் கம்பராமாயணத்தையும் பார்க்க வேண்டும். அக்காப்பியம் எழுந்த காலம், அக்காலத்து மக்கள் பண்பாடு, வாழ்வியல், இறை நம்பிக்கை, சமூகப் பழக்க வழக்கங்கள் இன்ன பிறவற்றை யெல்லாம் மனத்தில் கொண்டும், அவை அக்காப்பியத்தில் எப்படி பயன்கொள்ளப்பட்டன என்பதையும் சீர்தூக்கிப் பார்த்துப் போற்றவோ, தூற்றவோ வேண்டும்.

கம்பராமாயணத்தையும், கம்பனையும் வெறுப்பவர்கள் கூறும் கரணியங்கள் பின்வருவன:
  1. கம்பராமாயணம் தமிழ்க்காவியமன்று. அது ஆரியச் சார்புடையது.
  2. கம்பர் ஆரியர்தம் கடவுளைத் (வைணவத்தைத்) தமிழ்நாட்டில் பரப்பினார்.
  3. ஆரியரின் அடிவருடியாகித் தமிழ்ப் பண்பாட்டைக் கெடுத்தார்.
  4. ஆரிய இராமனை உயர்த்தித் தமிழனாம் இராவணனைத் தரம்தாழ்ந்த கொடுமையான அரக்கனாகக் காட்டினார்.
  5. அளவுக்கு மீறிய காமச்சுவை மிகுந்த பாடல்களை எழுதியுள்ளார்.
  6. மொத்தமுள்ள 11,000 பாடல்களில் மூன்றில் ஒருபங்கே பாடல்கள். மற்றவை தேவையற்ற பிதற்றல்கள்.
(எனக்குத் தெரிந்து இவ்வளவுதான். வேறு ஏதேனும் இருப்பின் அதையும் குறிப்பிட்டால் அவற்றிற்கும் விளக்கம் தருகிறேன்.)

நிற்க... இப்போது நாம் விளக்கப்புகுவோம்.!
ஆனால் அதற்கு முன், கம்பரை எதிர்ப்பவர்கள் யார்? அவர்களின் பின்புலம் என்ன? அதற்கான ஏதுக்கள் எவை? என்பவற்றையும் நாம் யார்? நம்மினம் எது? நம் நாடு எது? நம் கொள்கை என்ன? என்பனவற்றிற்கும் முதலில் விடைதேட வேண்டிய கட்டாயத்தில் இந்த விளக்கத்தைத் தொடர்கிறேன்.
...வளரும்...       

No comments:

Post a Comment