பைந்தமிழ்ச்
செம்மல் அழகர் சண்முகம்
கழனியில்
நாற்று நட்டுக்
    கதிர்முகம் கண்ட காலம்
பழங்கதை
யாகி நஞ்சை!
    பணிமனை வீடாய்ப் போச்சே
உழவனின்
கோட்டைக் குள்ளே
    உயிர்த்தெழும் களைகள் கூடி
அழகிய
நச்சைத் தூவ
    அழியிதே ஏரின் வேரே                      1
நிலத்தினைக்
கூறு போட்டு
    நிரந்தர மலட்டில் சேர்க்கக்
கலத்திலே
மருந்தை வாங்கிக்
    கருத்தடை செய்து விட்டோம்
வலுத்தவன்
விரித்து வைத்த
    வலைக்குளே வழுக்கி வீழ்ந்து
மலத்தினை
அள்ளிப் பூசி
     மதியினை அழித்துக் கொண்டோம்     2
கொடையெனும்
மாம ழையைக்
    கொடுக்கின்ற மரத்தை வெட்டி
மடையிலே
பாயும் ஆற்றின்
    மணலையும் அள்ளிக் கட்டி
கடையிலே
கொண்டு விற்கும்
    கடையரால் 
சீருங் கெட்டு
நடையினை
இழந்து நாட்டின்
    நலமெலாம் முடங்கிப் போச்சே!             3
பணத்தினைக்
கண்ட தாலே
    பயிர்தொழில் தண்ட மென்ற
குணத்தினைக்
கொண்ட மூடர்
    குழப்பிடும் கார ணத்தால்
பிணங்களில்
போடக் கூடப்
    பிடித்துளி அரிசி யின்றி
மணங்கமழ்
உலகம் நாளை
    மருகியே மயங்கும் பாரீர்            4
ஏரிட
மறந்து போனால்
    இருளெனும் பசியில் சிக்கி
நீரில்லா
மீனாய்த் துள்ளி
    நிலத்திலே காய்ந்து மாய்ந்து
வேரில்லா
மரத்தைப் போல
    விழுதையும் விழுங்கி விட்டு
ஊரில்லா
உலகம் நாளை
    உயிரின்றிச் சுழலும் பாரீர்          5
உழவனை
மறந்து விட்டோம்
    உணர்வையும் உடைத்து விட்டோம்
தொழுதனைத்
துடிக்க விட்டுத்
    தொடர்ச்சியாய்த் தொலைத்து விட்டோம்
அழுதவன்
குரலைக் கேட்க
    அருகிலே யாரு மில்லாப்
பழுதுடை
மானி டத்தால்
    பயிர்த்தொழில் பட்டுப் போச்சே!    6
பச்சிலை
உரமும மட்கும்
    பசுவதன் எருவை விட்டு
மெச்சிட
வேண்டு மென்றே
    மேலையன் கொண்டு தந்த
நச்சினைக்கொட்டி
கொட்டி
    நன்னிலம் கெட்டுப் போக
அச்சினை
முறித்து நோயை
    அழைத்துநாம் உருக்கு லைந்தோம்   7
முயற்சியை
மூல மாக்கி
    முன்னவர் காட்டிச் சென்ற
இயற்கையி
னோடு சேர்ந்தே
    இயங்கிடும் விவசா யத்தை
அயர்விலா
ஆற்ற ஏந்தி
    அழிவிலாப் பாதை காண
தயக்கமில்
லாமல்  கூடித்
    தழைத்திடச் செல்வோம் வாரீர்!     8

No comments:
Post a Comment