நேரிசை வெண்பா
1.       கவிஞர் நடராஜன் பாலசுப்ரமணியன்  
நாலும் தெரிந்தவனாய் நல்லது செய்வதற்கும்
காலங் கருதிக் கடனாற்று - ஞாலம்கைக்
கொள்ள யிதுவே குறிப்பென் றிருத்திடு
வள்ளுவன் வாக்கை மனத்து!
நேரிசை ஆசிரியப்பா
2.       கவிஞர் பூங்கா சண்முகம், புதுச்சேரி
ஆலமாய் மாய்த்திடும் கடுங்கொரோனா மாய்க்கச்
சால  நன்றாம்  தனித்தல்  மக்காள்
காலம்  கருதிக்  கடனாற்று
கோலம்  சிறந்து  குவலயம்  மகிழவே.!
அறுசீர் விருத்தம்
3.       கவிஞர் வ.க.கன்னியப்பன்
ஆல காலம் போலநம்மை
    ஆட்டி வைக்கும் கொரோனாவை
ஓலை கொடுத்த னுப்பிவைப்போம்;
    ஒழிந்து போகச் செய்திடுவோம்!
வேலன் என்றுந் துணையிருப்பான்:
    வெற்றி நமக்கு விளைத்திடுவான்!
காலங் கருதிக் கடனாற்று;
    கவலை யெல்லாந் தீர்ந்திடுமே!
4.       கவிஞர் சோமு.சக்தி 
காலங் கருதிக் கடனாற்று 
    காயம் விரைவில் கரைந்தோடும்
ஓல மிடலால் ஒழிந்திடுமா
    ஓயாக் கொரோனா வொட்டுதலும்
ஞால நடப்பில் நாம்கண்ட
    ஞானம் சமூக விலகலுமாம்
சாலப் பொருளைத் தந்துதவி
    சாவைத் தடுத்தாற் சரிதானே !
வஞ்சி விருத்தம்
5.       கவிஞர் அபூ முஜாஹித்
தூல மொருநாட் தேயாதோ?
கோலம் மாறிப் போகாதோ?
ஞாலத் திருளிற் கரையேறக்
காலங் கருதிக் கடனாற்று
6.       கவிஞர் செல்லையா வாமதேவன் 
ஞாலம் புகழ நடைபோடு
காலங் கருதிக் கடனாற்று
ஆலக் கிருமி அதையோட்டச்
சீலந் தனிமை செயலாற்று.
No comments:
Post a Comment