'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2020

புலம்பெயர் நாடும் வாழ்வும்... 12


பைந்தமிழ்ச் செம்மல்
இணுவையூர் வ.க.பரமநாதன்

டென்மார்க்கிலிருந்து...

நீர்மேலாண்மை

தமிழினத்தின் உச்ச அறிவியலாக விளங்கிய நீர்மேலாண்மை பற்றி இவ்வுலகாருக்கு எடுத்தியம்பும் நிலை மாறி வெளிநாட்டவர் கையாளும் நீர்மேலாண்மை பற்றி எழுதும் நிலை  ஏற்பட்டதை எண்ணி வருந்துகிறேன்.

டென்மார்க் நாட்டில் நிலத்தடி நீர் ஏராளமாக உள்ள போதிலும், எவரும் சுயவிருப்போடு கிணறு தோண்டுவது இயலாத செயலாகவே காணப்படுகின்றது. அப்படியாயின் டென்மார்க்கில் குழாய்க்கிணறுகள் இல்லையா எனும் வினா தோன்றும். ஆம் உண்டு என்னும் பதிலே விடையாகக் கிடைக்கும். விவசாயம் செய்பவர்களுக்குப் போதியளவு நீரினைப் பெறுமளவிற்குக் குழாய்க் கிணறுகள் தோண்டுவதற்கு அனுமதியுண்டு. அரசின் அனுமதியின்றித் தோண்டினால் கடும் நடபடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும். 10 மீற்றர்வரை அரசு அனுமதிக்கும் பகுதிகளில் மட்டும் அப்பகுதி உள்ளூராட்சி மன்றில் அனுமதி பெற்றுக் கிணறுகளைத் தோண்டலாம்.

இவ்வாறு பெறப்படும் நீர் வீட்டுத் தோட்டம், பூ மரங்கள், பழ மரங்கள் போன்றவற்றுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது. குடிநீராகப் பயன் படுத்தக் கூடாது. இனி இது பற்றிக் கூடுதலான தகவல்களைப் பார்ப்போம்.

வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவு நீர் நிலத்தடிப் பெருங்குழாய்கள் மூலமாகச் சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றது. இந்நீரானது பெரும் தொட்டிகளில் நிரப்பப்பட்டுச் சுத்திகரிக்கப்படும். இவ்வாறு மறுசுழற்சி செய்யப்பட்ட நீரானது சிறு கால்வாய்கள் வழியாகச் சுற்றுப் புறங்களுக்குக் கடத்தப் படுகின்றது. இவ்வாறு சுத்திகரித்த நீர், நீரடி நீரின் அளவினை மேன்படுத்தும் என்பதில் ஐயமில்லை. பெரிய நகரங்களில் இச்செயற்பாடுகள் அதிகமாகக் காணப்படுகின்றது. அதிக அளவிலான மக்கள் வாழும் பெருநகரங்களில் தண்ணீர்ப் பயன்பாடு அதிகமாகவேயுள்ளது.

குடிநீர்: நிலத்தடி நீரிலிருந்து குடிநீர் தயாரிக்கப்படுகிறது. நீரானது பிராண வாயு ஏற்றப்பட்டு முறையான வடிகட்டலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மக்களின் தேவைக்கு வழங்கப்படுகின்றது. ஒவ்வோர் நகராட்சி சபையின் கட்டுப்பாட்டில் இயங்கும் நீர்வழங்கு நிறுவனமானது சபையின் பூரண அனுமதியுடனே நீர் வழங்கலினை மேற்கொள்கின்றன.
கழிவு நீர்: கழிவு நீரானது வீடுகள், தொழிற் சாலைகள், வணிக நிறுவங்கள் மற்றும் பணிமனைகளிலிருந்து  வருகின்றது. கழிவுநீரைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சரியான முறையில் சுத்திகரிக்கின்றன. இதனால் நீரில் காணப்படும் மாசுபடுத்திகள் நீக்கப்பட்டுச் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில்  மாற்றப்படுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் ஓடைகள், ஏரிகள், கடல் மூலமாக வெளியேற்றப்படுகிறது  அல்லது மண்ணில் நேரடியாகச் சேர்க்கப்படுகிறது.

இங்கு அதிகமான பனிப்பொழிவும், மழையும் உள்ள காரணத்தால் வீதியோரக் கால்வாய்கள் மற்றும் நீர் ஓடைகள் மூலமாக நீர் ஓடுவதற்குத் தடையில்லாமல் இருப்பதற்காக அக்காலப் பகுதிகளில், சரியாகச் சொல்வதாயின் ஒவ்வோராண்டும் சீரமைக்கப்படும். எதிர்பார்க்கும் அளவினை மீறி மழைபெய்யும் காலங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்படுவதுண்டு. 

குடிநீர் வழங்கல் மிகச்சரியாகவே நடைமுறைப் படுத்தப்படுகின்றது. ஒவ்வோர் வீட்டுரிமையாளரும் அதற்கான ஒரு தொகைப் பணத்தினைச் செலுத்த வேண்டும். இதற்காக வீட்டினுள் நீர் வழங்கும் குழாயுடன் பயன்படுத்தப்படும் நீரினை அளவு செய்யும் கருவி இணைக்கப்பட்டிருக்கும். இதன் அளவீடுகள் சுயமாகவே நகராட்சி நீர்வழங்கு சபைக்குக் கிடைக்கும். ஆயின் அவ்வீட்டார் பயன்படுத்திய நீருக்கான பணத்தினை அரசிற்குச் செலுத்த வேண்டும். அதே போல் எவ்வளவு நீர் பயன்படுத்தினார்களோ அதேயளவு நீர் கழிவு நீராக வெளியேற்றப்பட்டதாகக் கருதப்பட்டு, இக்கழிவுநீர் சுத்திகரிப்புச் செலவுக்கென இன்னுமோர் தொகையானது அறவிடப்படுகின்றது.

நீர்மேலாண்மைத் தொழில்நுட்பம்: 6 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாட்டில் நீர்மேலாண்மை பற்றிய தொழில் நுட்பங்களினைக் கையாளும் வகையில் 350 நிறுவனங்கள் இயங்குகின்றன.  இந்நிறுவனங்களில் 18.000 பேர் பணி செய்கின்றார்கள். 2015ஆம் ஆண்டுக் கணக்கில் 16.8 மில்லியன் டொலர் பெறுமதியான தொழில்நுட்பக் கருவிகளை ஏற்றுமதி செய்துள்ளது. விசையியக்கக் கருவி, அடைப்பான், வடிப்பான் (pumps, valves, filters) போன்றவற்றினையே இந்நிறுவனங்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கின்றன. இவை டென்மார்க் நாட்டின் கால நிலைகளுக்கு அமைவாகச் செயலுறும் திறன் வாய்ந்தவை, மேலும் 2025ஆம் ஆண்டளவில் உற்பத்தியைப் பெருக்கி ஏற்றுமதியினை இரட்டிப்பாக்குவதற்கான திட்டங்களை வகுத்துள்ளது. இது போன்ற செயற்பாடுகளும் திட்டங்களும் மிக அதிக அளவில் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.  எனினும் குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் இப்பகுதியில் சேர்த்துள்ளேன்.

எது எவ்வாறாயினும் குடிநீர்ப் பிரச்சனைகள் இங்கு எழுவதில்லை. மேலும் தரமான குடிநீர் ஒவ்வோர் குடிமகனுக்கும் கிடைக்கும் வழிகளை அரசு உறுதி செய்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்க வொன்றாகும்.

No comments:

Post a Comment