'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 15, 2019

மாணவ பக்தி


கவிஞர் சரஸ்வதிராசேந்திரன்

“என்னங்க, பெட்டிக்கடைக்குத் தானே போறீங்க, அப்படியே பச்சை மிளகாய் இருந்தா வாங்கிட்டு வாங்க, சட்னி அரைக்கணும்” கட்டளை இட்டாள் அவர் அன்பு மனைவி.

தெரு கடைசியில் உள்ள பெட்டிக்கடையில் தனக்கு பிளேடும், மனைவிக்கு பச்சை மிளகாயும் வாங்கிக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த அவர் வகுப்பு மாணவன் “ஒரு மஞ்ச் கொடுங்க” என்று வாங்கிக் கொண்டு போனான் காசு கொடுக்காமல்.

அந்த ஆசிரியரோ மறுப்பேதும் சொல்லாமல் அதற்கான காசைக் கடைக்காரரிடம் கொடுத்தார்

எனக்கு வியப்பாக இருந்தது. “என்ன சார்? அவன் வந்து அதிகாரமா வாங்கிட்டு மரியாதைக்குக் கூட, கேட்காம போறான்; நீங்க காசு கொடுக்கிறீங்க, ஏன்?” கேட்டேன்.

என்ன செய்யச் சொல்றீங்க? நானும் என் மனைவியும் மாதம் எண்பதாயிரம் சம்பாதிக்கிறோம், அதைப் பார்த்து இந்த ஊரே எங்களைப் பார்த்து எரியுது. ஆனால் என் நிலைமை... என் வகுப்பிலே பதினேழு பையன்கள் தான் இருக்கிறார்கள்.

அவர்களைக் காலையிலே ஒன்றுகூட்டி என் காரிலேயே அழைச்சுகிட்டு வந்தாத்தான் பள்ளிக்கூடமே வருவாங்க, ஒருநாளைக்கு நான் பள்ளிக்கூடம் போகலைனா கூட, அவங்களும் வரமாட்டாங்க. போய்க் கேட்டா அவங்க பெற்றோரே நீங்க வரலை அதான் ஏன் போகணும்னு இருந்திட்டாங்க. கார் வரலைன்னா எப்படி வருவாங்க?

இவனுங்களை அதட்டவோ, அடிக்கவோ முடியாது, அவனுங்க வரலன்னா என்னை இந்த ஊரை விட்டே மாற்றிவிடுவாங்க, நான் வெளியூரில் போய்க் கஷ்டப்படணும்.

என் வீக்னசை தெரிஞ்சுகிட்டு என்னை மிரட்டியே கடையிலே சாமான் வாங்குவாணுக. மாதம் இவனுளுக்கே ஆறாயிரம் செலவு ஆகுது. செலவை பார்த்தால் முடியுமா ?

நான் மறுத்தேனா, என்னை அடிச்சாரு; ஜாதியைச் சொல்லித் திட்டினாருன்னு புகார் பண்ணுறாங்க. எல்லாம் தலைவிதி. ஆசிரியர் தொழிலுக்கே வந்திருக்க கூடாது. என் வயித்தெரிச்சலை ஏன் சார் கேட்கிறீங்க?” புலம்பியபடியே போனார்.

இங்கே என்ன நடக்குது? குரு பக்திக்கு பதிலா மாணவ பக்தில்ல நடக்குது. கலி காலம்தான், வேறு என்ன சொல்ல?

No comments:

Post a Comment