'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8


கவியரங்கத் தொடக்கக் கவிதை


பைந்தமிழ்ச்செம்மல்
தமிழகழ்வன் சுப்பிரமணி

தமிழ் வாழ்த்து
புலவர்க்குத் தனையீந்த பொற்றமிழே! ஊற்றமிழ்தே!
சொலவியலாச் செம்மையினைத் தொண்டுமுதல் கொண்டுள்ள
பலகலைகள் வளர்த்தெடுத்துப் பன்னெடுங்கால் சிறப்பாகத்
தலைமுறையைத் தழைக்கச்செய் தண்டமிழே! வாழியவே!

சோலை வாழ்த்து
மலைக்கவைத்த யாப்புகளை வகுத்தெளிதாய்த் தேனாக்கி
உலகமுழு(து) ஒண்டமிழை ஓங்கச்செய் பைந்தமிழின்
 
பலவிதமாய்ப் பலநாள்கள் காய்காய்கள் கனிகனிகள்
 
அலகிலவாய் அளிக்கின்ற அருஞ்சோலை வாழியவே

பைந்தமிழரசு மரபு மாமணி பாவலர் மா.வரதராசனார் வாழ்த்து

மாவரத மாமணியே மாங்காட்டுத் தமிழ்முனியே
பாவரத்தைத் தருகின்ற பருகுந்தேம் பாவணியே
தா’வரத்தை’ எனக்கேட்க நாவளரும் முன்பேநீர்
ஆவலினைக் கூட்டியுயிர் அரும்பசிக்குச் சோறூட்டி
‘நீவளர்க’ எனவந்து நிற்கின்ற தனிப்பெருமை
யாவளத்தால் யாமுரைப்பேன்? எவ்வாறென் உளமுரைப்பேன்?
பாவளர்க! நிலம்வாழப் பன்னெடுநாள் பைந்தமிழின்
 
காவளர்க! நலம்வாழ்க! கனியுள்ளம் வாழியவே!

அவையடக்கம்
பேரறி வுடையன் என்றெண்ணிப்
   பேதைமை செய்யும் மூடன்போல்
சீரறி வுடைய பெரியோர்முன்
   சிற்றறி வுடையன் வாய்திறந்தேன்
காரறி வேயென் அறிவாகும்
   கருத்தினில் கவியில் பிழைத்தாலோ
பேரறி வாளர் பொறுத்தருள்க
... பிழைகளைந் தென்னை வளர்த்தருள்க

புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து
அழகிய தமிழுக்(கு) ஆண்டுமுறை 
... ஐயன் வள்ளு வன்போற்றி
 
வழங்குதல் கண்டு வரவேற்போம்
... வருக வருக புத்தாண்டே

இன்பம் பொங்கும் புத்தாண்டோ
... இரண்டா யிரத்தோர் ஐம்பஃது
முன்னோர் போற்றி வாழ்த்துவமே
... முறைமை போற்றி வாழ்த்துவமே

பழகு செய்யுள் அக்காலப் 
... பழமை போற்று! பொங்கட்டும்
வழங்கு செய்யுள் இக்காலப்
 
... புதுமை சாற்று! பொங்கட்டும்

பொங்க லோடு புத்தாண்டு 
... போற்றிப் பாடி வாழ்த்துவமே
எங்கும் செய்யுள் நிறையட்டும்
 
... இன்பப் பொங்கல் பொங்கட்டும்


       கவியரங்கத் தலைமைக் கவிதை
புவிநிலவும் நிலைமை சொல்லிப் 
... புதுமையினைப் படைக்க வேண்டிக்
 
கவியரங்கம் வந்தோர் வாழ்க
 
... கவியின்பம் சுவைப்போர் வாழ்க
 
குவித்திருக்கும் குப்பை யன்ன
 
... கொடுந்துயரம் போக்கி வாழத்
 
தெவிட்டாத தமிழைக் கேட்போம்
 
... செவியேறத் தமிழைக் கேட்போம்


நல்லெழுச்சி உள்ளத்தில் நிகழ வேண்டும் 
... நல்லவொரு குமுகாயம் மலர வேண்டும்
 
நல்லதமிழ் செந்நாவில் ஏற வேண்டும்
 
... நாடுநம தென்றெண்ணி வாழ வேண்டும்
 
வல்லவனாய்ச் செய்செயலில் திகழ வேண்டும்
 
... மண்காக்கும் வளம்காக்கும் மானம் வேண்டும்
பொல்லாத செயல்யாவும் அழிய வேண்டும்
 
... பொன்னுலகம் எனுமாறு போற்ற வேண்டும்

அறமில்லாச் செய்கையினைச் செய்ய வேண்டா 
  ஆற்றலினை உள்ளொளித்துத் திரிய வேண்டா
சிறைப்பறவை எனும்நிலைமை நமக்கு வேண்டா
... செறுத்துமனம் வெறுத்தொதுக்கித் திரிய வேண்டா
வறண்டிருக்கும் பாலையென வாழ்க்கை வேண்டா
... வன்முறைகள் ஒருநாளும் வேண்டா வேண்டா
கறுத்திருக்கும் உளம்வேண்டா கவிதை செய்வோம்
... கனவெனவே இருப்பவற்றை நனவாய்ச் செய்வோம்

எப்படித்தான் விடியுமென எண்ணி எண்ணி 
... எழுந்தவுளத்(து) ஆதங்கம் எடுத்துக் கொட்டி
 
இப்படித்தான் விடியுமெனின் விடிவெ தற்கோ?
... இப்படித்தான் விடிவதுவோ? தவறே அன்றோ?
இப்படித்தான் விடிவதுவே சரியே ஆகும்
 
... இப்படித்தான் விடியுமென இடித்து ரைப்பார்
 
இப்படியாய் இருபதின்மர் எழுச்சி பெற்றிங்(கு)
... எப்படித்தான் உரைக்கின்றார் எழுந்து கேட்போம்



 

No comments:

Post a Comment