'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8


பைந்தமிழ்ச் சுடர் கவிஞர் "இளவல்" ஹரிஹரன் , மதுரை.


·         ஊர்: மதுரை
·         மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுநிலை வணிகவியல் படித்துள்ளார்.
·         ‘குரல்’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார் 
·         1980-ல் பத்திரப் பதிவு துறையில் சார்பதிவாளராகப் பணியில் சேர்ந்து, 2014-ல் மதுரை டி.ஐ.ஜி.யாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்
·         தாகூரின் கவிதைகளை மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டுள்ளார். 
12 நூல்களை வெளியிட்டுள்ளார்.

கவிஞரை வரவேற்றல்

அரியும் அரனும் ஒருவரே! உலகுக்(கு)
அறிவிக் கின்ற அரியர னாரே!
 
திரிவி ளக்காய்த் தெளிபொருள் காட்டி
 
இருளிரி விக்கும் இன்கவி செய்ய
 
வருவீர் வருவீர் வணங்குகின் றோமே!




கவியரங்கக் கவிதை

இறையவனே தமிழுக்கே என்றி ருக்கும்
... இறையவனே குறிஞ்சிக்கோ என்ற ழைக்கும்
இறையவனே மூதாட்டி ஔவை பாட்டி
... இறையவனே என்றழைக்கக் கிளைய மர்ந்த
இறையவனே நாவலினை உதிர்த்துப் போட்ட
... இறையவனே சுட்டதனைச் சுடாத தாக
நிறையவனாய் ஔவைக்குச் சுட்டிக் காட்டி
... நிறைதமிழை எடுத்தியம்ப நின்றான் காப்பே

இப்படித்தான் விடியுமெனில் விடிவெ தற்கோ!
... இங்கிருக்கும் குருடருக்கு விளக்கெ தற்கு
தப்படியாய்த் தடமெனிலோ பயணம் ஏனோ
... தாங்குதற்குத் துணையிலையேல் வாழ்வெ தற்கோ
எப்படியும் வாழ்வதெனில் என்ன வாழ்வோ
... ஏனிந்தப் பிறவியெனில் என்ன சொல்வோம்
முப்போதும் மனிதமிங்கு வாழு கின்ற
... முழுநாளே முதல்நாளாம் விடிய லுக்கே.

சகமனிதர் துயர்நீக்கும் திருநாள் பாரில்
... சாதியிலா நிலையாக்கும் பெருநாள் யாரும்
அகமதிலே வஞ்சமிலா மனங்கொள் நன்னாள்
... ஆணவக்கொ லைகளின்றி விடியும் இந்நாள்
உகந்தபடி விடியலினைக் கொணரும் முன்னால்
... ஊரெல்லாம் கொண்டாடும் வெளிச்சப் பூக்கள்
தகுந்தபடி இப்படித்தான் விடியும் என்னும்
... தத்துவத்தைக் களிப்புடனே வரவேற் போமே
தனித்துவத்தை யிழக்காத விடியல் வேண்டும்
... தமிழ்மொழியின் ஏறறமென விடியல் வேண்டும்
மனிதமன வுயர்வுக்காய் விடியல் வேண்டும்
... மாறாத சமத்துவமாய் விடியல் வேண்டும்
வனிதையரின் உணர்வுக்காய் விடியல் வேண்டும்
... வற்றாத நதிகளுக்காய் விடியல் வேண்டும்
இனியிங்கு விடிகின்ற விடியல் எல்லாம்
... இரைபோடும் விவசாயிக் கென்றே வேண்டும்.

புதுவெளிச்சம் பாய்ச்சுகின்ற விடியல் வேண்டும்
... பூமணக்கும் பாமணக்கும் விடியல் வேண்டும்
இதுவிடியல் என்றுசொல்லும் வண்ணம் வேண்டும்
... இப்படித்தான் வேண்டுமெனும் விடியல் வேண்டும்
மதுக்குளியல் இல்லாத விடியல் வேண்டும்
... மதுரமெனுந் தமிழெழுப்பும் விடியல் வேண்டும்
புதுவிடியல் ஒளிகாட்டும் வாழ்வைக் காட்டும்
... புன்னகையின் சுடரெனவே விடியும் நன்றே!

இப்படித்தான் விடியுமென்னும் கவிய ரங்கில்
... இன்கவிதை இயம்புதற்கு வாய்ப்பு நல்கிச்
செப்பரிய தமிழ்ஞான மரபைத் தந்த
... செந்தமிழர் பாவரசர் வரத ராசர்
கைப்பிடியில் அடங்கியவர் தமிழைக் கற்றுக்
... கவிதையாக்கித் தருவதற்கும் சொல்லித் தந்த
வைப்புநிதி தமிழாக்கி வழங்கும் வள்ளல்
... மரபுமணிக் கிருகரத்தால் நன்றி சொல்வேன்
வாழ்த்துரை

முத்து முத்தாய்ச் சொல்லெ டுத்து
முத்து மாலை கோத்துத் தந்தீர்!
முத்தத் தமிழே மூச்சாய்க் கொண்டு
 
தித்திக் கின்ற கவிதை தந்தீர்!
 
புத்தம் புதிய உலகைப் படைக்க
 
சித்தம் செய்தீர் வாழ்க வாழ்க!
 


No comments:

Post a Comment