'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8


01.                பைந்தமிழ்ச் சுடர்
பஃக்ருதீன் இப்னு அம்துன்

• பெயர்: ஹ. பஃக்ருத்தீன்
• புனைபெயர்: இப்னு ஹம்துன்
• பணி: விமான நிறுவனமொன்றில் முதுநிலை கணக்கு அதிகாரி
• வார இதழ்கள், மாத இதழ்கள், இணைய இதழ்களில் கவிதைகள் யாத்துள்ளார்.
• ரியாத் தமிழ்ச் சொல்வேந்தர்களுள் ஒருவர். ரியாத் தமிழ்ச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர். மேனாள் துணைத் தலைவர்.
• தமிழ் நுண்கலை மனமகிழ் மன்றத்தின் இணை செயலாளர்


கவிஞரை வரவேற்றல்

அள்ளக் குறையா அமிழ்தான செந்தமிழை 
அள்ளிப் பருகி அருந்தேன்கூ(டு) - உள்ளிருக்கும்
 
தேனீயாய்க் காக்கின்ற தேவா! தருவீர்கார்
 
வானீயும் வண்ணமரும் பா

பைந்தமிழ்ச் சுடர் பஃக்ருத்தீன் அவர்களே வருக
பண்முத்து பலவற்றைத் தருக

*** *** *** ***

இறை வாழ்த்து:

எல்லா உலகும் இயல்பாய்ப் படைத்தளித்து
நல்லவை கெட்டவை நாடவிட்டு - வல்லமையாய்
வாய்மையை ஈற்றில் வழங்கும் அருள்நிறை
தூய்மை இறைக்கே துதி.




தமிழ் வாழ்த்து:

தாய்மொழிக் கெல்லாமும் தாய்மொழி ஆனவளும்
வாய்மொழியாய் வல்லெழுத்தாய் வாழ்பவளும் - சேய்களெல்லாம்
மூத்தாலும் செந்தமிழாள் மூப்பின்றிப் பேரிளமை
காத்துப் புகழொளிர்வாள் காண்

தலைவர் வாழ்த்து:

அமிழ்தின் இனிதாம் அருந்தமிழ்ப் பேரால்
தமிழ்முழங்கும் நல்ல தலைவர் - அமைதியும்
ஆழமும் ஆற்றலும் ஆகத் தமிழகழ்வன்
வாழுங்கள் பைந்தமிழ் வார்த்து.

அவை வாழ்த்து

பூவனம் ஒன்றில் புதுமை மலர்களென
யாவரும் வாச(ம்)வர யாத்தனர் - ஆவலுறும்
பாவரங்கில் ஆழாக்குத் பூத்தேன் அளித்தார்க்குப்
பாவலனென் அன்புபா ராட்டு.

இப்படித்தான் விடியும்

எப்படித்தான் விடிந்திடுமோ என்றுறங்கும் ஏழை 
... எப்படியும் விடியட்டும் என்றேய்க்கும் ஏய்ப்பர்
அப்படியும் இப்படியும் அல்லாடுங் கோழை
... அரசியலால் மேலேறும் ஆதிக்க மேய்ப்பர்
தப்படிகள் வைக்கின்ற தன்னாய்வுத் தோழர்
... தவறுகளைச் செரித்துவிடும் தருக்கமில்லா மாந்தர்
செப்படியாய் வித்தைகளைச் செய்கின்ற மோழை
... சாற்றுகிறார் தன்னிலையைச் செய்திகளின் ஊடே..

கதிரெழுந்தும் விடியாமல் கண்மூடிக் கொள்வோர்
... காட்சிகளில் தன்னலமே காட்டுதற்கு நிற்போர்
புதிர்மனத்தால் பொல்லாங்கைப் பாசத்தில் சேர்ப்போர்
... புகழ்மணக்க யாதொன்றும் புரிகின்ற தீயோர்
விதிவசத்தில் தன்னிருப்பை வைத்துள்ள மற்றோர்
... விளங்கட்டும் தன்னுள்ளில் விடிவென்னும் தோற்றம்
நதியெனவே முன்னேற்றம் நம்போக்கில் கொண்டால்
... நாடெல்லாம் செழித்துவிடும் நம்பிக்கை கண்டே

ஆள்பலத்தால் பணபலத்தால் ஆட்டுவிக்கும் யாரும்
... அப்பலங்கள் மாறுவதை அறிந்திருத்தல் ஞானம்
தேள்கடித்து மாண்டவரும் தெருக்களிலே உண்டு
... தீக்குளித்து வென்றவரும் தேசத்தில் உண்டு
நாள்வகையால் முடங்குவதோ நல்லவரின் தொண்டு
... நாற்றிசையும் கொடிபறக்க நடப்பதுவே நன்று.
வாள்வலிமை ஆயுதங்கள் வைத்தவர்க்கும் தேடல்
... வாழ்வினிமை அறிந்தவர்க்காம் வையத்தின் ஏடே

ஆதலினால் வாழ்வினிக்க ஆகுவன செய்வோம்
... அடிப்படையில் பிறர்நலனை ஆராய்ந்து நெய்வோம்
மோதலெனில் தீமையினை மோதித்தான் சாய்ப்போம்
... முன்வந்து வெல்கின்ற முழக்கங்கள் காய்ப்போம்
காதலுடன் நன்மைகளைக் கைக்கொள்ளும் ஆள்கள்
... காலத்தில் தம்பெயரால் கலைசிற்பம் ஆவார்
நாதமுறும் இன்னிசையாய் நிறையட்டும் ஆறு.
... நலம்பெறவே செய்கின்ற நாட்டங்கள் பாடு
*** *** *** ***

வாழ்த்துரை

பேரழகில் மயக்குகின்ற பேதையென வருங்கவியைச்
சீரழகில் கோத்தளித்த செம்மையினைப் போற்றுகிறேன்
 
ஊரழகை உள்ளத்தில் ஒளிரவிட்டுக் கவிசொன்னீர்
ஆரழகி தமிழ்போல அகிலத்தில் வாழியவே!

No comments:

Post a Comment