'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8


பைந்தமிழ்ச்சுடர் மதுரா

• புனைபெயர்: மதுரா
• இயற்பெயர்: தேன்மொழி ராஜகோபால்
• குடும்பத்தலைவி
• படிப்பு: முதுகலை ஆங்கில இலக்கியம்
• மரபு கவிதை, புதுக்கவிதை, நவீன மீமொழிக் கவிதை, ஹைக்கூ, தெலுங்கு வடிவ நானிலு என எல்லா வகைக் கவிதைகளும் எழுதிவருகிறார்
 
• சிறுகதைகள் பல எழுதியிருக்கிறார். கோகுலம், மங்கையர்மலர், தினமலர் போன்ற பிரபல இதழ்களிலும் சிற்றிதழ்களிலும் மின்னிதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன.
• இவருடைய நாற்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் தற்போது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கவிஞரை வரவேற்றல்

நனிதேன் அருந்தும் வண்டாக
... நாந யக்கும் தமிழுண்டு
பனியாய் உள்ளப் பாங்கோடு
... பண்பில் ஓங்கும் சிறப்போடு
கனிப்பா பலவும் கைக்கொண்டு
... காப்பி யங்கள் படைக்கின்றார்
இனிக்க வினிக்கப் பாவியற்றும்
... இனிய கவிஞர் வாழியவே

பைந்தமிழ்ச்சுடர் மதுரா அவர்களே வருக!
பைந்தமிழ்க் கனிச்சுவையைத் தருக!

தமிழ் வாழ்த்து (எழுசீர் விருத்தம்)

பொன்னாய் மணியாய்ப் பொலிவாய்ச் சிறந்து 
... புதிதாய் மிளிரும் தமிழே
என்னில் கரைந்தென் இதயம் நிறைந்த
 
... எழிலாம் இனிய மொழியே
மண்ணில் செழித்து மனிதம் வளர்க்கும்
 
... மகத்து வமேநீ வருவாய்
உன்றாள் பணிந்தேன் உணர்வில் கலந்தேன்
 
... உயர்வை உடனே தருவாய்


இப்படித்தான் விடியும் (எழுசீர் விருத்தம்)

எண்ணஞ் சிறந்திங் கேற்றம் பெறவே 
... எளிமை வாழ்வு சிறப்பாம்
திண்ணங் கொண்டு திறமாய் வாழத்
 
... தெளிவு வேண்டு மென்றும்
வண்ணங் காட்டும் வாழ்வில் கூட
 
... வறுமை மெல்ல வரலாம்
மண்ணி லெதுவும் மடியா தில்லை
... மரித்துப் பிறக்கு மெல்லாம்.

காற்றும் கூடக் கடுமை காட்டிக்
... கதற வைக்கும் உயிரை!
தேற்றும் உதவி தேடும் மனிதம்
 
... தெளிவாய்ப் புரியும் மனமே
சீற்ற மென்றும் சிறப்பு தருமோ
 
... சினமும் நம்மை அழிக்கும்
போற்ற வேண்டும் புவியை நாளும்
 
... பொறுமை காத்தல் இனிதே

இயற்கை வழியில் இடரைத் தவிர்த்தே 
... இனிதாய் வாழ நினைத்தால்
செயற்கை மறுத்துச் செய்யும் செயல்கள்
 
... செழிக்கச் செய்யும் புவியை
உயர்வைத் தேடி உழைக்க விழைந்து
 
... உண்மை நேர்மை கொண்டால்
பெயரைக் காத்துப் பெருமை பெறலாம்
 
... பேறாய் வாழ்வும் சிறக்கும்.
பணத்தை மறுத்துப் பதவி வெறுத்துப் 
... படைப்போம் புதிதாய் உலகை!
குணத்தை உயர்த்தக் குன்றி லேறும்
 
... குலமும் தழைக்கும் நன்றாய்
கணக்காய் வாழ்ந்து கடமை செய்து
 
... காப்போம் புவியைக் கருத்தாய்
சுணக்க மின்றிச் சுழலும் பூமி
 
... சுடராய் விடியும் பொழுதும்


வாழ்த்துரை

சுடர்கொண் டெழுந்த விளக்காக
இடர்தீர்க் கின்ற இன்பாவால்
மடமை கொளுத்தும் மாமதுரா!
படரும் ஒளியாய்! வாழியவே!


No comments:

Post a Comment